articles

img

அகில இந்திய மாநாடு 3

செங்கொடி மேடையில் செந்தமிழ் முழக்கம்

“அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மையவர்” - என்பது வள்ளுவர் வாக்கு தமிழக அரசியலில் பேச்சுக்கலை என்பதை பல்வேறு அரசியல் இயக்கங்கள் திறம்படப் பயன்படுத்தி வந்துள்ளன. விடுதலைப் போராட்ட காலத்தில் மக்களிடம் சுதந்திர உணர்வைத் தட்டி எழுப்பக்கூடிய பல பேச்சாளர்கள் இருந்தனர். அதன்பின்பு திராவிட இயக்கம் மேடைக்கலையை மிகுந்த ஆற்றலுடன் பயன்படுத்தியது. பொதுவுடைமை இயக்கத்திலும் பல தேர்ந்த பேச்சாளர்கள் இருந்துள்ளனர். தற்போதும் இருந்து வருகின்றனர். ஒவ்வொரு கட்சிக்கும் வருகிற கூட்டம் என்பது தனித்தனியான தன்மை கொண்டவை. கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் பொறுத்தவரை பெரும்பாலும் கூட்டத்திற்கு வருபவர்கள் உழைப்பாளர்கள் மற்றும் எளிய மக்கள். அவர்களுக்கு புரியும் வகையில் தலைவர்களின் உரை அமையும். கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டங்களில்தான் வெற்று ஆரவாரங்கள், சவடால்கள், அருவருக்கத்தக்க ஆபாசப் பேச்சுக்கள் இல்லாமல் சர்வதேச அரசியல் முதல் உள்ளூர் பிரச்சனைகள் வரை பேசப்படும். துவக்கத்தில் வாலிபர் சங்கம் தொடங்கி பின்பு கட்சி மேடைகள், தமுஎகச கலை இரவுகள், சட்டமன்றம், இலக்கியக்கூட்டங்கள் என என்னுடைய பேச்சுலகமும் விரிந்து வந்துள்ளது. நான் குடியிருந்த பகுதி மதுரை கோட்ஸ் என்று தற்போது அழைக்கப்படுகிற அன்றைக்கு ஹார்விமில் என்று அழைக்கப்பட்டு வந்த பகுதி. புட்டுத்தோப்பு பகுதிக்கு அன்றைக்கு வராத அரசியல் தலைவர்களோ, தொழிற்சங்கத் தலைவர்களோ இல்லை. வீட்டிற்கும், திலகர் திடல் என்று அழைக்கப்பட்ட சந்தை திடலுக்கும் ஏறத்தாழ ஒரு கிலோமீட்டருக்கு உட்பட்டதாக இருக்கும். அங்கும் மிகப்பிரபலமான தலைவர்கள் வந்திருக்கிறார்கள்.  மிகச்சிறிய வயதில் எமது தந்தையின் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் நேசித்தேன். தலைவர்களின் பிரச்சாரமும் அதற்கு முக்கியமான காரணம்.  60 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் நானும் ஒரு பிரச்சாரகனாக மாறினேன்.  1971 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மதுரை மேற்குத் தொகுதியில் தோழர் என்.சங்கரய்யா, கிழக்குத் தொகுதியில் தோழர் வி.வீரபத்ரன், மத்தியத் தொகுதியில் தோழர் வி.கார்மேகம், திருப்பரங்குன்றத்தில் தோழர் ஜானகியம்மாள் ஆகியோர் போட்டியிட்டனர். நாடாளுமன்றத்திற்கு தோழர் பி.ராமமூர்த்தி போட்டியிட்டார். அதுசமயம், சிம்மக்கல் பகுதியில் தோழர் வி.கார்மேகத்தையும், தோழர் பி.ஆர். அவர்களையும் ஆதரித்துப் பேசினேன். தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் அதில் பங்கேற்றார். நான் பேசியதை உற்றுக் கவனித்தார். புதிய பாணியில் அமைந்த என் பேச்சுக்கு இளைஞர்களிடம் ஒரு ஈர்ப்பு இருந்தது.  செல்லூர் கைநெசவு தொழிலாளர் சங்கத்தின் அலுவலக ஊழியராகவும், மதுரை பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் அதே பணியிலும் ஈடுபடுத்தப்பட்டி ருந்தேன். இத்தேர்தலில் தோழர் சங்க ரய்யாவுக்கு உதவியாளனாகவும், பகல் வேளைகளில் வேன் பிரச்சாரத்திலும், மாலை நேரங்களில் அவர் பேசும் பொதுக்கூட்டங்களில் பேசக்கூடியவனாகவும் இருந்தேன்.  எனது மாணவப் பருவத்தில் என்னை ஈர்த்த தலைவர்கள் அன்றைய திமுகவில் இருந்த சொல்லின் செல்வர் என்றழைக்கப்பட்ட ஈ.வி.கே.சம்பத் மற்றும் கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.  எனது பேச்சிலும் அந்தத்தன்மை இருக்கும். மாற்றாரைத் தாக்குவது, மனம் நோகச் செய்வது, நம்மோடு இருப்பவர்களை மகிழ வைப்பது அதன் உள்ளடக்கமாக இருக்கும். தேர்தல் முடிந்த பிறகு மண்டையன் ஆசாரி சந்தில் இருந்த  கட்சி அலுவலகத்தில் முன்னணி ஊழியர்களுக்கான கூட்டம் நடைபெற்றது.  ஊழியர் கூட்டத்தில் தோழர் ஏ.பி. எனது பேச்சைக் குறிப்பிட்டார்: “நல்ல குரல். சிறந்த சொல் வளம், நமது கருத்துக்களை நன்கு கொண்டு செல்கிறார். ஆனால், நான் ஒரு கருத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நம் தோழர்களை மகிழ்விக்கிற முறையில் தான் அவரது பேச்சு இருந்தது. மாற்றாரை வெல்லக்கூடிய வகையில் இல்லை. ஒரு கம்யூனிஸ்ட் அத்தகைய முறையில் தான் தனது பிரச்சாரத்தை அமைத்துக்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டார். வாழ்த்தும், வழிகாட்டும் கருத்தும் அதில் இருந்தது. இதை நான் கூறுவது அன்றைய கம்யூனிஸ்ட்  தலைவர்கள் புதிய தோழர்களுக்கு காட்டிய வழிமுறை அப்படிப்பட்டது. அன்றைய தலைவர்களும் இப்படியே இருந்தார்கள். தனிநபர் தாக்குதல் கடுகளவும் இருக்காது. தொழிலாளி வர்க்கத்தை ஆளும் வர்க்கம் ஒட்ட ஒட்டச் சுரண்டிய காலத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். தொழிலாளர்களை சாதி, மதம், மொழி கடந்து வர்க்கம் என்கிற முறையில் உணர வைத்து சங்கங்களில் இணைத்தார்கள். அவர்களது பிரச்சாரத்தில் வர்க்க போதனை இருக்கும்.  விவசாயிகளையும் அதேபோன்று திரட்டினர். தோழர் பி.ராமமூர்த்தி, திலகர் திடலில் பேசும் போது உலக அரசியலிலிருந்து வருவார். இந்தியப் பொருளாதாரம் அதில் இடம்பெறும். ஏகாதிபத்திய எதிர்ப்பு அனல் பறக்கும். தமிழக அரசியலும் தவறாமல் வரும். அது கட்சிப் பிரச்சாரமா, அரசியல் வகுப்பா என்று தனித்துச் சொல்ல முடியாமல் அமைந்திருக்கும். ஆயிரக்க ணக்கான தொழிலாளர்கள் அமைதியாக செவிமடுப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். தோழர் சங்கரய்யா ஒன்றைச் சொல்வார். எத்தகைய அடக்குமுறை நம்மீது தொடுக்க ப்பட்டாலும் நம் கருத்தை அஞ்சாமல் கூறவேண்டும் என்பார். தோழர் ஜானகியம்மாள் விவசாயத் தொழிலாளர் நலனுக்காக ஆவேசமாக மேடைகளில் பேசுவார். தோழர் ஐ.மாயாண்டி பாரதி, அரசு என்றால் என்ன? அதன் அடக்குமுறைக் கருவிகள் எவை, எவை? என்பதைத் தோழர் லெனின் வடிவில் எளிமையாக  விளக்குவார்.  தோழர் கே.ரமணி 1964இல் உருவாக்கப்பட்ட கட்சித் திட்டத்தை களைப்பின்றி, சலிப்பின்றி ஒவ்வொரு மேடையிலும் கூறுவார். தோழர் என்.வரதராஜன் அமைதியாக ஆற்றொழுக்குப் போன்ற நடையில் அரசியலை விளக்குவார். தோழர் எஸ்.ஏ.தங்கராஜன் நகைச்சுவையோடு சுவைபட கருத்துக்களை விளக்குவார்.நெல்லை பாலவிநாயகம் மார்க்சிய இயக்கவியலை சலிப்பின்றிக் கூறுவார்.  வி.பி.சிந்தன் அவர்களின் பேச்சில் வித்தியாசமான ஈர்ப்பு இருக்கும். இன்னும் எண்ணற்ற தோழர்கள் திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் போல் இருந்தனர். உயர்மட்டத் தலைவர்கள் தான் என்பதில்லை. அனைத்து மட்டங்களிலும் அவ்வாறே இருந்தனர். மொத்தத்தில், மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே என்று இராமலிங்க அடிகளார் கூறியதைப் போன்று இதுவரை தமிழக மக்கள் அறியாத கருத்துக்களை மேடைகளில், வகுப்புகளில் கொண்டு சென்றவர்கள் கம்யூனிஸ்டுகள். வர்க்க போதனை இருந்தது. பெண்ணடிமைத்தனத்திற்கு எதிரான கருத்தும், வாலிபர், மாணவர்களுக்கு புத்தறிவை புகட்டும் போக்கும் இருந்தது.  டி.ஒய்.எப்.ஐ. என்கிற அமைப்பை `டைஃபி’ என்று தோழர்கள் கூறுவதுண்டு. இதனை முதலில் கூறியவர் தோழர் ஆர்.உமாநாத். அவரைச் சொல்லும் போது பாப்பா உமாநாத் அவர்களைத் தவிர்க்க முடியாது. எளிய தமிழில் சிறந்த உதாரணங்களை கொண்டு வருவதில் வல்லவர். ஒரு பஞ்சாலைத் தொழிலாளியின் மைந்தனாக இருந்த எனக்கு துரோணாச்சாரியர்களாகத் திகழ்ந்தவர்கள் பலர்.  ஏற்கெனவே சொன்ன நிர்ணயிப்புகளோடு மேலும் ஒரு முக்கியமான கருத்தையும் தெரிவிக்கிறேன். தனி நபர் தாக்குதல் என்பது சிறிதளவும் இல்லாத பண்புடைய பிரச்சாரம் கம்யூனிஸ்ட் மேடைகளில் இருக்கும். இந்தப் பண்பை வளர்த்ததில் கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு  மாபெரும் பங்கு உண்டு. கலை இலக்கியத்தை, சங்க இலக்கியங்களை மகாகவி பாரதியை, பட்டுக்கோட்டையை பாட்டாளி வர்க்கத்திடம் கொண்டு சென்று  செங்கொடி மேடைகளில் செந்தமிழ் முழக்கம் செய்த தோழர் ஜீவா அவர்களின்பேச்சு பொதுவுடைமை இயக்க மேடைப் பேச்சுக்கு இலக்கணம் வகுத்த ஒன்றாகும்.