கே.பி.ஜானகியம்மாள் : தேச பக்த செந்தாரகை எஸ்.கே.பொன்னுத்தாய்
ஏழ்மையான குடும்பத்தில் 1917-இல் பிறந்த ஜானகியம்மாள், தனது இனிய குரல் வளத்தால் இளம் வயதிலேயே பழனியப்பா பிள்ளை பாய்ஸ் நாடகக் குழுவில் முதல் பெண் நடிகையாக சேர்ந்தார். ஆங்கிலேயர் ஆட்சி ஒழிய வேண்டும் என்ற ஆவேசத்துடன், தேசபக்தி பாடல்களைப் பாடி மக்களிடம் சுதந்திர உணர்வை தூண்டினார். விஸ்வநாததாஸ் அவர்களுடன் யாரும் நடிக்க முன்வராத போது சாதி வேறுபாடுகளைக் கடந்து அவருடன் இணைந்து நடித்து புரட்சிக்கு வித்திட்டார்.
ஆங்கிலேயரை எதிர்த்த முதல் பெண் போராளி
1936-இல் காங்கிரஸ் கட்சி உறுப்பினரான ஜானகியம்மாள், சாதிய ஒடுக்குமுறை, பெண் விடுதலை, சமத்துவம் போன்ற கருத்துக்களை வலியுறுத்தி பேசினார். 1939-இல் நேதாஜி மதுரை வந்தபோது, அதிகாரப்பூர்வ காங்கிரஸ் தலைவர்கள் புறக்கணித்த நிலையில், ஜானகியும் குருசாமியும் மதுரை நகர காங்கிரஸ் சார்பில் தமுக்கத்தில் பிரம்மாண்டமான வரவேற்பு அளித்தனர். 1940-இல் மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை உருவாக்கப்பட்டபோது, என்.சங்கரய்யா, ஐ.வி.சுப்பையாவுடன் ஜானகியம்மாளும் இணைந்தார்.
சிறையும் போராட்டமும் - தோளில் சுமந்த தியாகங்கள்
“கம்யூனிஸ்ட் என்பது பாட்டும் பேச்சும் மட்டுமல்ல, தியாகமும் செய்ய வேண்டும். இன்று பிரசங்க மேடை, நாளை தூக்கு மேடை. இன்று கழுத்தில் மாலை, நாளை கழுத்தில் சுருக்குக் கயிறு” என்ற உறுதியுடன் போராடினார். பொன்மலையில் “நிமிர்ந்து சண்டை போடு தோழா” என்ற பாடலைப் பாடியதால் கைது செய்யப்பட்டு தென்னிந்தியாவில் முதல்முதலாகக் கைது செய்யப்பட்ட பெண் அரசியல் தலைவரானார். சிறையில் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டும், மனமுடையாமல் 1941, 1948, 1962, 1964 ஆகிய ஆண்டுகளிலும் சிறை சென்றார். அங்கும் போராட்டங்களைத் தொடர்ந்தார்.
நகைகள் விற்று நடத்திய தொழிலாளர் போராட்டம்
1940-இல் மதுரை ஹார்வி மில் தொழிலாளர்களின் போனஸ் கோரிக்கைக்காக 22 நாட்கள் சிறை சென்றார். வங்காளத்தில் பஞ்சம் மக்களை வாட்டிய போது மதுரையின் வீதிகளில் இறங்கி நிவாரணப் பொருட்களை சேகரித்து அனுப்பினார். பணமில்லாத நிலையிலும் தனது நகைகளை விற்று திருப்பரங்குன்றம் மொட்டயரசு முகாம் செலவுகளுக்கு உதவினார். 1947-இல் நடந்த மதுரை நகர்மன்ற தேர்தலில் 26-ஆவது வார்டு உறுப்பினராகவும், 1967-இல் மதுரை கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் வெற்றி பெற்றார். நிலவுடைமை எதிர்ப்பில் விவசாயிகளின் தலைவி மதுரை மாவட்டத்தில் 150க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் சங்கத்தை உருவாக்கி, நிலப்பிரபுக்களிடமிருந்து குத்தகை விவசாயிகளுக்கு நிலத்தைப் பெற்றுக் கொடுக்கும் போராட்டத்தில் முன்களப் போராளியாய் நின்றார். துவரிமான், மாயாண்டிபட்டி, பாசிங்காபுரம், பொதும்பு போன்ற கிராமங்களில் விவசாயிகளுக்கு நிலத்தைப் பெற்றுக் கொடுத்ததோடு, விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வுக்காகவும் போராடினார். பெண்ணுரிமைக்கு குரல் கொடுத்த பெண்மணி 1970-இல் பெண்கள் இயக்கத்தை வலுப்படுத்தும் பணியில் தமிழகம் முழுவதும் களப்பணி செய்த ஜானகியம்மாள், 1974-இல் தமிழக ஜனநாயக மாதர் சங்கத்தின் முதல் மாநாட்டில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசு வழங்கிய சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான தாமிரப்பட்டயத்தையும், ஓய்வூதியத்தையும் “சுதந்திரத்திற்காகப் போராடியது என் கடமை” என கர்வத்தோடு நிராகரித்து எளிமையின் சின்னமாக வாழ்ந்தார். 1992 மார்ச் 1-இல் காலமான ஜானகியம்மாள், இன்றும் தமிழகம் முழுவதும் “அம்மா” என போற்றப்படும் புரட்சித் தலைவி. எளிமையும், தியாகமும், மக்கள் நேயமும் நிறைந்த அவரது வாழ்க்கை, இன்றைய போராளிகளுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு!