articles

img

சமூகத்தின் அச்சாணி வர்க்கங்களை அணிதிரட்டிய தோழர் கே.வரதராஜன் - வே.தூயவன்

சமூகத்தின் அச்சாணி வர்க்கங்களை அணிதிரட்டிய தோழர் கே.வரதராஜன் - வே.தூயவன்

டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்தவர், பொதுப்பணித் துறையில் டிசைனர் வேலை, நிரந்தர அரசுப் பணி, கை நிறைய சம்பளம். வருமானத்திற்கு இவரை நம்பி இருக்கும் சாதாரணக் குடும்பம். எனினும் மார்க்சிய தீபத்தை நெஞ்சில் ஏத்தியதால், அத்தனையையும் விட்டுவிட்டு, கணநேரத்தில் முடிவெடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் முழு நேர ஊழியராக ஐக்கியமானார். அவர்தான் தோழர் கே.வி. என்றழைக்கப்படும் தோழர் கே.வரதராசன். இன்றும் நம்மோடு வாழ்ந்திருக்க வேண்டியவர். இப்போது இருந்திருந்தால் வயது 80-ஐ நெருங்கியிருக்கும். கெடு வாய்ப்பாக, 2021ஆம் ஆண்டு கொரோனா பொது முடக்கக் காலத்தில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மே 16ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் காலமானார். ஸ்ரீரங்கத்தில் ஏழை வைதீகக் குடும்பத்தில் பிறந்தவர். அப்பா கோயிலில் உணவு தயாரிப்பவராக பரிசாரகர் வேலை செய்தவர். நியாயமான சம்பள உயர்வு கோரிய நிலையில், மிரட்டலுக்குப் பணிந்து கொடுக்காமல் உறுதியாக நின்றதால், கோயில் நிர்வாகத்தால் வேலை நீக்கம் செய்யப்பட்டவர். அவரது பிள்ளை அல்லவா வரதராசன்? எனவேதான் மார்க்சியமே சமூகத்தின் பிணி போக்கும் மாமருந்து என்றுணர்ந்த தருணத்தில் தன் வாழ்க்கையை கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியராக அர்ப்பணித்தார். இயக்கத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட பொறுப்பு எதுவாக இருந்தாலும் அதில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் தோழர் வரதராசன். மார்க்சிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்டச் செயலாளராக இருந்த காலத்தில் ஏழை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் ஆகிய கிராமப்புற மக்களை அணிதிரட்ட வேண்டும் என ஏராளமான  வர்க்கப் போராட்டங்களை முன்னெடுத்தவர். இந்த போராட்ட காலத்தில் அரியலூரில் இவரைக் கொலை செய்ய முயற்சி நடந்து அதில் சாதூர்யமாகத் தப்பினார். இவரது அர்ப்பணிப்பு மிக்க இயக்கப் பணி காரணமாக, இயல்பாக அடுத்தடுத்த பொறுப்புகளுக்கு தேர்வானார். கட்சியின் மாவட்டச் செயலாளர், மாநில செயற்குழு உறுப்பினர், மத்தியக்குழு உறுப்பினர், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் என உயர்ந்தார்.  இந்தியாவில் நடத்த வேண்டிய மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு  தொழிலாளி, விவசாயி வர்க்க ஒற்றுமை தான் அச்சாணி. எனவே கிராமப்புற ஏழை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களை அணி திரட்டுவதற்கு தன் முழு கவனத்தையும், பங்களிப்பையும் செலுத்தியவர் தோழர் கே.வி. என்பதை இப்புத்தகத்தை வாசிக்கும்போது புரிந்து கொள்ள முடிகிறது.  தீண்டாமைக் கொடுமை உள்ளிட்ட சமூக ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராட வேண்டும் என்று செயல்பட்டவர். தத்துவத் தெளிவு மிக்கவர். அவர் எழுதிய, “இந்திய தத்துவ தரிசனம்”, “சாதி, வர்க்கம்” என்ற இரு நூல்களும், வாசிப்பதற்கு எளிமையாக, தெளிவான புரிதலையும் ஏற்படுத்தக் கூடியவையாகும்.  அவர் மட்டுமின்றி அவரது மனைவி, மகன், மகள் என குடும்பத்தினர் அனைவரும் கட்சி உறுப்பினர்கள் ஆவர். அவர் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும். நகைச்சுவையோடு தம்மைச் சுற்றி இருப்பவர்களை சிரிக்க வைத்துக் கொண்டே  இருப்பார். எல்லா தோழர்களையும் எந்த பாரபட்சமும் இல்லாமல் சமமாக நடத்துவார். அவரை அறிந்து அவரோடு பழகிய ஒவ்வொருவருக்கும் சொல்வதற்கு ஓர் அனுபவம் நிச்சயம் இருக்கும். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல, “செங்கொடி ஏந்திய பன்முக வித்தகர் தோழர் கே.வரதராசன்” என்ற புத்தகம் சிறியதாக இருந்தாலும் தோழர் கே.வரதராசன் வாழ்வைப் பற்றிய செறிவான செய்திகளைக் கொண்டிருக்கிறது. கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களின் வரலாறுகளைப் பதிவு செய்த தோழர் என்.ராமகிருஷ்ணன் இந்த நூலை எழுதத் தொடங்கி விபரங்களைச் சேகரித்திருக்கிறார். அவர் காலமான நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர், புறநகர் மாவட்டக் குழுக்கள் அவர் எழுதிய விபரங்களுடன் புத்தகத்தை முழுமைப்படுத்தி இருக்கின்றனர். இளைய தலைமுறையினர் அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது. செங்கொடி ஏந்திய பன்முக வித்தகர் தோழர் கே.வரதராஜன்   ஆசிரியர்: என்.ராமகிருஷ்ணன்