ரஷ்ய எழுத்தாளரும் கல்வியாளருமான அனடோலி வாசிலியேவிச் லுனாச்சார்ஸ்கி 1875 நவ.23 அன்று உக்ரைனில் (அப்போது ரஷ்யா) பிறந்தார். லெனினின் நம்பகமான நண்பர், தலைசிறந்த கருத்தியலாளர்களில் ஒருவர், விஞ்ஞானி, பத்திரிகையாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் இவர்.
1898 இல் தனது புரட்சிகர நடவடிக்கைகளுக்காக நாடு கடத்தப்பட்ட லுனாச்சார்ஸ்கி, சமூக ஜனநாயகக் கட்சியின் போல்ஷ்விக் குழுவில் சேர்ந்தார். பின்பு, போல்ஷ்விக் பத்திரிகையான முன்னேற்றம் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். வெளிநாடுகளில் உள்ள ரஷ்ய மாணவர்கள், அரசியல் அகதிகளுக்கு கல்வி கற்பித்தார்.
1905 ரஷ்யப் புரட்சியின் போது, இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1909 இல் மாக்சிம் கார்க்கியுடன் இணைந்தார். ஏ.போக்டனோவ் உடன் சேர்ந்து, ரஷ்ய தொழிற்சாலை தொழிலாளர்களுக்காக ஒரு மேம்பட்ட பள்ளியைத் தொடங்கினார். 1917 ஆம் ஆண்டு ரஷ்யாவில் லெனின் மற்றும் டிராட்ஸ்கியுடன் சேர்ந்தார். பின்பு சோவியத் மக்களின் முதல் கல்வி ஆணையராக நியமிக்கப்பட்டார். இது வரலாற்று கட்டிடங்கள் மற்றும் கலைப் படைப்புகளை அழிவிலிருந்து பாதுகாக்க அவருக்கு உதவியது. 1933 இல் லுனாச்சார்ஸ்கி ஸ்பெயினுக்கான சோவியத் தூதராக நியமிக்கப்பட்டார்.
லுனாச்சார்ஸ்கி பாரம்பரியம் மற்றும் சமகால இலக்கியம், ஓவியம், இசை, சிற்பம் குறித்து சுமார் 1500 கட்டுரைகளை எழுதியுள்ளார். இளம் சோவியத் சமுதாயத்தின் கலாச்சார வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க காரணியாக இருந்தன இவரது படைப்புகள். இவரின் பல நாடகப் படைப்புகளில் மூன்று மட்டும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்த அனடோலி லுனாச்சார்ஸ்கி, 1933 டிசம்பர் 26 அன்று மறைந்தார்.