articles

img

தியாகி பாலுவின் திருப்பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும்

இந்திய விடுதலைக்குப் பின்பு, நிலப்பிரபுக்களுக்கு எதிரான இந்திய நாட்டின் விவசாயிகளின் வீரமிக்க போராட்டத்தின்போது அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர் தூக்கு மேடை தியாகி தோழர் பாலு. தோழர் பாலு 1920 ஆம் ஆண்டு கருவேப்பிலை கிராமத்தில் பிறந்தார். பாலுவின் வயது 10 ஆக இருக்கும்போது அவரது பெற்றோர் மதுரையில் குடியேறினர். பாலு மில் வேலையில் சேர்ந்தார். மில் வேலை பார்த்து வந்த போதே அவருக்கு திருமணம் முடிந்தது. அதன் பிறகே காவல் துறையில் சேர்ந்தார். அதே காலத்தில் ஐதராபாத் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று ஹைதராபாத் நிஜாமிற்கும், அவரது படைப்பிரிவினரான ரஜாக்கர்களுக்கும் எதிராக கம்யூனிஸ்டுகள் தலைமையிலான தெலுங்கான விவசாயிகள் ஆயுதம் தாங்கிய கொரில்லாப் போரைத் துவங்கினர். புரட்சியை சமாளிக்க முடியாத மன்னர் கையறு நிலையில் இருந்தார். கம்ய+னிஸ்ட்கள் நாட்டின் ஒரு பிரிவை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதை விரும்பவில்லை அன்றைய மத்திய அரசு. உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேலின் உத்தரவுப்படி இந்தியப்படைகள் தாக்குதல் தொடுத்தன. இச்சமயத்தில் புரட்சியாளர்கள், மத்திய அரசை நிபந்தனையோடு ஆதரிப்பதாகவும் ஆயுதங்களையும் ஒப்படைக்கத் தயார் என்றும் கூறினர். ‘கைப்பற்றிய நிலங்களை விவசாயிகளுக்கே கொடுத்து விட வேண்டும்” என்ற கோரிக்கையை ஏற்க மறுத்த காங்கிரஸ் அரசு 3000 கம்ய+னிஸ்ட்டுகளையும், அவர்களுக்கு துணை நின்ற மக்களையும் சுட்டுக் கொன்று இரத்த ஆறை ஓட விட்டனர். புரட்சியாளர்களை நெஞ்சுக்கு நேரே சுட்டு வீழ்த்த வேண்டும் என்று போலீசாருக்கு தெளிவாக கட்டளையிட்டனர். ஒவ்வொரு நாளும் சிறையில் புரட்சியாளர்களுக்கு எதிராக வன்முறை ஏவப்பட்டது.    பாலு தெலுங்கானா செல்ல மறுத்ததோடு மற்ற காவலர்களுக்கும் தெலுங்கானா போராட்டத்தின் உண்மைகளை விளக்கி, புரட்சியாளர்களிடம் கனிவோடு நடந்து கொள்ள வேண்டினார். இதனால் பாலு காவலர் குடியிருப்பைக் காலி செய்து வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து கட்சி வேலைகளில் முழு மூச்சோடு இறங்கினார். விளைவு பாலு, சாமுவேல், டேவிட் ராஜாமணி, மொட்டையன், மருது, ஜோசப் ஆகியோர் மீது பொய்யாக கொலை வழக்கு புனையப்பட்டது. விசாரணையின் முடிவில் மதுரை செஷன்ஸ் நீதிமன்றம் 6 பேரும் குற்வாளிகள் என்றும், அனைவருக்கும் தூக்கு தண்டனை எனவும் அறிவித்தது.  தூக்கு தண்டனை விதித்த பிறகு அனைவரும் வெளிச்சத்தையோ, பிற எவற்றையோ பார்க்க முடியாதபடி 8’ ஒ 8’ அளவுள்ள கொட்டடிக்குள் அடைக்கப்பட்டனர். தண்டனையைக் கேள்விப்பட்ட கைதிகள் ஒட்டு மொத்தமும் உண்ணா நோன்பு ஏற்றனர். இதை சிறை அதிகாரிகளால் பொறுக்க முடியவில்லை. தடியடி நடத்தி ஒற்றுமையை சீர்குலைக்கும் செயலில் ஈடுபட்டனர். ஆனாலும் ஒற்றுமை குலையவில்லை. இப்போராட்டத்தில் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி சதி வழக்குகளில் சிறைப்பட்டிருந்த அனைத்துத் தோழர்களும் உறுதியோடு நின்றனர். வெறுங்கைகளோடு உறுதியாக இருந்த தோழர்களின் மண்டைகள், கை கால்கள் உடைக்கப்பட்டன. தூக்கு தண்டனை பெற்ற அனைவரும் உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். பாலுவுக்கு தூக்கு தண்டனை உறுதியானது. ஏனையோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஆயுள் தண்டனை பெற்றவர்கள் சேலம் சிறைக்கு மாற்றப்பட்டனர். பாலுவுக்காக உலக சமாதான இயக்கங்கள், உலக தொழிற்சங்கங்கள், ஜனநாயக நிறுவனங்கள், கருணை இல்லங்கள், மத நிறுவனங்கள், தர்ம ஸ்தாபனங்கள் என பல அமைப்புகளும் கருணை மனுக்களை கவர்னருக்கும், ஜனாதிபதிக்கும் அனுப்பின. அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இறுதியாக 20.02.1951ஆம் ஆண்டு கவர்னராக இருந்த பவநகர் மகாராஜாவும் கருணை மனுவை நிராகரித்தார். இதனால் தூக்கு தண்டனை என்பது உறுதியாயிற்று. அதுவும் 2 நாட்களில் அதாவது 22.02.1951 அன்று என அதிகாரிகள் முடிவெடுத்தனர். பாலுவை தூக்கிலிடுவதால் கம்யூனிஸம் வீழ்ந்து விடும் என கனவு காண்கின்றனர். ஆனால், எனது மரணம் அவர்களது கனவைத் தகர்த்தெறியும் என முழங்கினார். கடைசியாக அவரது மனைவி வீரம்மாள், சில மாதங்களே ஆன தனது மகள் சரோஜினியுடன் சென்றார். சிறைக்கம்பிகளின் மீது தலையைப் புதைத்து தேம்பி தேம்பி அழுதார். பாலு சற்று நேரம் பார்த்து விட்டு, ‘அழாதே, ஒரு மாபெரும் லட்சியத்திற்காக கணவன் உயிரைக் கொடுத்தான் என்று பெருமை கொள். குடும்பத்தினைக் கட்சி காப்பாற்றும்” என உற்சாகமூட்டினார். உரத்த குரலில் தோழர்களே! ‘ இறுதியாகச் சொல்கிறேன் அனைவரும் உலக சமாதானத்திற்கும், பாட்டாளி மக்களின் நல்வாழ்விற்காகவும் பாடுபட வேண்டும் என்று அறை கூவல் விடுக்கின்றேன்.” என்று கூறி பாலு பாட ஆரம்பித்தார்.

செங்கொடி ஏந்தி வாரீர் திரண்டு வாரீர் தோழர்களே.....

..............................................................
செங்கொடி என்றதுமே - எனக்கோர்
ஜீவன் பிறக்கு தம்மா - அது
..................................................................

 எனப் பாடினார்.     புரட்சி ஒங்குக!  கம்ய+னிசம் ஜிந்தாபாத்!  என்று முழங்கி விட்டு தூக்கில் மடிவது என்னோடு முடியட்டும் என்றும் உரத்து முழங்கினார். ‘தோழர்களே, பாலு வாழ்க என்பதற்கு பதிலாக புரட்சி ஓங்குக!  தொழிலாளி வர்க்க ஒற்றுமை ஓங்குக” என்று சொல்லுங்கள் என்று கூறி விட்டு ‘புரட்சி வாழ்க” என்று முழக்கமிட்ட படியே தூக்குமேடைக்குச் சென்றார். தோழர்களும் அவர் கூறியபடியே முழக்கமிட்டனர். இதன் எதிரொலி சிறையின்  வெளியே கூடி நின்ற பல்லாயிரக்கணக்கான தோழர்களும் முழக்கமிட்டனர். தூக்கில் இடுவதற்கு முன்பு கருப்பு துணியால் அவரது முகத்தை மூடினர். ஆரம்பத்தில் இருந்த அதே உற்சாகத்தோடு பொதுவுடமை ஓங்குக என முழக்கமிட்டு விட்டு, தூக்கு மேடை ஏறினார். ொதுவுடமை இலட்சியத்திற்காக தனது இன்னுயிரை அர்ப்பணித்த தியாகி பாலுவின் திருப்பெயர் என்றென்றும் திலைத்திருக்கும்.

- கட்டுரையாளர், வை. ஸ்டாலின்
சிபிஐ(எம்) மதுரை மாநகர் 
மத்தி-1 பகுதிச் செயலாளர்.