மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை தாமதப்படுத்துவதன் மூலம் மோடி அரசு எல்லை மறு நிர்ணயத்தை வேகமாக மேற்கொள்ள முடியும் என கணக்குப் போடுகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் இதனை அனுமதிக்கக் கூடாது.
நல்வாழ்வு திட்டங்களை செயல்படுத்துவது உள்ளிட்ட பல நோக்கங்களுக்காக மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு அவசியம். இந்தப் பணி நிறைவு பெற்றால் உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பலன் பெறும் மக்கள் தொகையை அதிகரிக்கலாம். அதே போல மானிய உணவுப் பொருட்களால் பலன் பெறும் மக்கள் எண்ணிக்கையும் 100 மில்லியனுக்கும் கூடுத லாக அதிகரிக்கும். ஒரு கட்சியின் தேர்தல் உத்திக்காக அத்தியாவசிய உரிமைகளை பெறுவதற்கு கோடிக்க ணக்கான மக்கள் காத்து நிற்க வேண்டுமா?
பாஜகவின் வஞ்சக சூழ்ச்சி!
2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏன் தாமதமாகிறது? பாஜக அதை வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறது. ஏனெனில், எல்லை நிர்ணயம் (Delimitation Excercise) நடவடிக்கையை துரிதப் படுத்தி அதன் மூலம் 2029 தேர்தலில் லாபம் அடைய வஞ்சக கணக்கு போடுகிறது புரியவில்லையா?
அரசியல் அமைப்பின் 84ஆவது திருத்தம் கூறுவது என்ன? 2026க்கு பிறகு செய்யப்படும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் எல்லை நிர்ணயம் செய்யப் பட வேண்டும் என வரையறுக்கிறது. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2024 அல்லது 2025-இல் நடந்தால் எல்லை நிர்ணயம் அதற்கு பிறகு நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக காத்திருக்க வேண்டும். அதாவது 2030களில். எனவே பாஜக 2029 தேர்தலுக்கு முன் எல்லை நிர்ணயம் செய்ய விரும்பினால் 2026 அல்லது 2027 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பை தொடர்ந்து இழுத்தடிக்க வேண்டும். ஏனெனில் 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026க்கு பிறகு நடந்ததாக தகுதி பெறாது.
தேன்கூட்டை கலைத்தது போல!
ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் தொகையின் அளவை பொறுத்து நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையும் இருக்க வேண்டும். முடிந்தவரை அனைத்து தொகுதிகளிலும் ஒரே அளவு மக்கள் தொகை அளவை கொண்டுள்ளதற்கான காலமுறை (Periodical) முயற்சிகளை வரைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசியல் அமைப்பின் 81ஆவது பிரிவு கூறுகிறது. 1973-இல் மாநிலங்களுக்கு இடையி லான எல்லை நிர்ணயம் கடந்த முறை செய்யப் பட்டது. அதோடு ஒப்பிடும் பொழுது 1971 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்ததிலிருந்து வேகமாக மக்கள் தொகை வளர்ச்சி கண்ட மாநிலங்க ளுக்கு ஆதரவாக மக்களவைத் தொகுதிகளின் சம நிலையை மாற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தென் மாநிலங்களில் தொகுதிகள் குறையலாம். வட மாநிலங்களில் அதிகரிக்கலாம். தேன் கூட்டை கலைத்தது போன்ற நிலை உருவாகலாம். தென் மாநிலங்களில் சில கிளர்ச்சி செய்யலாம். ஆனால் இதை நிறைவேற்ற முடிந்தால் பாஜகவிற்கு நன்மை பயக்கும். ஏனெனில் வடக்கில் அது ஆதரவுத் தளம் ஒப்பீட்டளவில் வலிமையாக உள்ளது.
2026க்கு முன்னர் மக்கள் தொகை கணக் கெடுப்பை சரியான நேரத்தில் முடிக்க பாஜகவை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வலியுறுத்த வேண்டும். இதன் மூலம் பாஜகவின் சதித் திட்டத்தை ஓரள வுக்கு முறியடிக்கலாம்.
சிறப்புரிமையை துஷ்பிரயோகம் செய்யும் பாஜக!
மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே நடத்த வும், எல்லை நிர்ணயத்தை தள்ளிப் போடவும் வலி யுறுத்த வேண்டும். இந்த பிரச்சனை உச்சநீதிமன் றத்திற்கு கொண்டு செல்லப்படலாம். மக்கள் தொகை கணக்கெடுப்பு தேதியை நிர்ணயிப்பது சட்டப் பூர்வமாக ஒன்றிய அரசின் சிறப்பு உரிமையாகும். ஆனால் அதே நேரத்தில் 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பை ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒத்திவைப்பது அந்த சிறப்பு உரிமையை துஷ்பிர யோகம் செய்வதாகும். மக்களின் அடிப்படை உரி மையை மீறுவதாகும்.
மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை உடனே அமல்படுத்து!
ஆனால் இங்கேயும் ஒரு சிக்கல் உள்ளது. அது பெண்கள் இட ஒதுக்கீடு தொடர்பானது. கடந்த செப்டம்பரில் நிறைவேற்றப்பட்ட அரசியல் அமைப்பின் 106ஆவது திருத்தம் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீட்டை பெண்களுக்கு வழங்குகிறது. (2023 க்குப் பிறகு எடுக்கப்படும் முதல் மக்கள் தொகை கணக்கெ டுப்பு தொடர்புடைய புள்ளி விவரங்களை வெளி யிட்ட பிறகு அதே நோக்கத்திற்காக எல்லையை நிர்ண யம் செய்யப்பட்ட பிறகு) பிரிவு 5-இன் கீழ் இது நடைமுறைக்கு வர உள்ளது.
அரசியல் சட்டத்தின் 84ஆவது திருத்தம் வலி யுறுத்தும் எல்லை நிர்ணய நடவடிக்கைகளுக்கு பிறகு தான் மகளிர் இட ஒதுக்கீடு தொடங்கும் என்பது தான் இன்று வரை உள்ள புரிதல். அதாவது விரை வில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் மகளிர் இட ஒதுக்கீடு அமலாக்கம் தாமதமாகலாம் (எல்லை நிர்ணயம் தாமதப்படுத்தப்படும் பட்சத்தில்) எவ்வாறாயினும் மகளிர்க்கான இட ஒதுக்கீடு அதன் சொந்த எல்லை நிர்ணய நடவடிக்கையின் அடிப்ப டையில் (மகளிர் மட்டும் தொகுதிகள் என்ற பெயரைத் தவிர வேறு எதுவும் இல்லாமல்) தொடரலாம். இந்த அர்த்தமும் பிரிவு 5-இன் கீழ் உள்ள “இந்த நோக்கத்திற்காக” என்னும் விவரிப்பில் அடங்கி யுள்ளது.
எதிர்க்கட்சிகள் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள்!
1. மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே ஒன்றிய
அரசு நடத்த வேண்டும்.
2. 106 ஆவது திருத்தத்தின் கீழ் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
3. பிறகு 84 ஆவது திருத்தத்தின் கீழ் எல்லை நிர்ணய
நடவடிக்கை எடுக்கப்படலாம் (அதாவது 2030இல்)
இந்த வரிசைக்கிரமத்தில் கோரிக்கைகள் வைப்பதை யாரும் தடுக்க முடியாது.
எல்லை நிர்ணயத்தால் பாஜகவிற்கு என்ன லாபம்?
ஜூன் 4க்கு முன்பு வடமாநிலங்களில் அமோக ஆதரவும் தெற்கில் மிக குறைவாகவும் இருந்ததால் அதற்கு ஆதாயம் போல தோன்றியது.ஆனால் இன்று கதை மாறிவிட்டது. வடக்கில் பாஜக இழந்தாலும் தெற்கில் சில வெற்றிகளை பெற்றுள்ளது. இருந்தா லும் எல்லை நிர்ணயம் தனக்கு சாதகமாக இருக்கும் என பாஜக கருதுவதைப் போல் தோன்றுகிறது.
மாநிலங்கள் முழுவதிலும் உள்ள 543 மக்கள வைத் தொகுதிகள் மாநிலங்களின் தற்போதைய மக்கள் விகிதாச்சாரத்தில் மறுபகிர்வு செய்யப் பட்டாலும் அரசியல் கட்சிகள் பெறும் இடங்களின் எண்ணிக்கையை அது எப்படி பாதிக்கும்? தேஜகூ பெற்ற இடங்களின் பங்கு 54 சதவிகிதத்தில் இருந்து 57% ஆக 3% புள்ளிகள் வரை உயரலாம். அதேபோல இந்தியா கூட்டணி பெறும் இடங்களில் பங்கு 2 சதவீதம் புள்ளிகள் குறையலாம். தேஜகூ 294 க்கு பதிலாக 309 இடங்களைக் கொண்டு இருக்கலாம். ஆனால் எல்லை நிர்ணயம் தெற்கில் பாஜகவுக்கு எதிரான பின்னடைவை ஏற்படுத்தும் என்பதும் இந்த கருத்தாக்கத்தின் மறுபக்கம். எனவே 2029க்கு முன்பாக எல்லை நிர்ணயத்தை அது செய்யலாம் அல்லது தள்ளியும் போடலாம்.
எப்படி இருந்தாலும் மக்கள் கணக்கெடுப்பை ஒத்திவைப்பதை நியாயப்படுத்தும் பேச்சுக்கே இடமில்லை. பெண்கள் இட ஒதுக்கீடு இதனால் மறுக்கப்படுகிறது. கோடிக்கணக்கான மக்களின் அத்தியாவசிய உரிமைகளும் தட்டிப் பறிக்கப்படு கிறது. ஒரு கட்சியின் தேர்தல் அறுவடைக்காக இவை ஏன் காத்திருக்க வேண்டும்?
கட்டுரையாளர் : ராஞ்சி பல்கலைக்கழகத்தின்
பொருளாதாரத் துறையின் வருகைப் பேராசிரியர்.
நன்றி : தி இந்து 19/6/24
தமிழில் : கடலூர் சுகுமாரன்