கண்ணகி நீதி கேட்ட மதுரையில், மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாட்டை நடத்துகிறோம். மதுரையிலிருந்து பாஜக-விற்குச் சொல்கிறோம். நீங்கள் இழைக்கும் அநீதிகள், செய்யும் அக்கிரமங்களை 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தீயிட்டுப் பொசுக்குவார்கள். மதச்சார்பின்மை, மக்கள் ஒற்றுமை, கூட்டாட்சித் தத்துவம், மாநில உரிமைகள் பாதுகாப்பை வலியுறுத்தும் மாநாடு இது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிறைவேற்றியுள்ள தீர்மானங்கள் தமிழகத்திலுள்ள, அனைத்துக்கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே! மாநில உரிமைகள் என்பது முதல்வருக்கோ, அமைச்சர்களுக்கோ அதிக அதிகாரங்கள் வேண்டுமெனக் கேட்பதல்ல; அனைத்து மக்களுக்கும் உரிமைகள், சம வாய்ப்புகள், சம உரிமைகள் வழங்க வேண்டும் என வலியுறுத்துவதாகும்.
மணிப்பூர் மக்களை பாஜக அரசு மோத விடுவதற்குக் காரணம் மணிப்பூர் மலைப் பகுதிகளில் கிடைக்கும் கனிமவளங்களை அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளுக்கு விற்பதற்குத்தான். மோடி அரசு திட்டமிட்டுத் தமிழகத்தைப் புறக்கணிக்கிறது. எய்ம்ஸ் பணி ஒற்றைச் செங்கல்லோடு நிற்கிறது. ரயில்வே திட்டங்கள் புறக்கணிக்கப்படுகிறது. புறவாசல் வழியாகத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசின் நடவடிக்கைகளில் மூக்கை நுழைக்கிறார். அவர் திருந்தமாட்டார். ஏனெனில் அவர் ஆர்.எஸ்.எஸ். பள்ளியில் படித்தவர். பாஜக உறுப்பினர். ஒன்றிய அரசு ஆர்.என்.ரவியைத் திரும்பப் பெற வேண்டும். எதிர்க்கட்சிகளையும், ‘‘இந்தியா’’ அணியை முடக்கவும் பாஜக அமலாக்கத்துறையை ஏவிவிடுகிறது. ‘‘சீப்பை’’ ஒளித்து வைத்து விட்டால் திருமணம் நின்று விடும்” என நினைக்கிறது பாஜக. தண்டவாளத்தில் படுத்துக் கொண்டு ஒரு ஓணான் ரயிலை நிறுத்தி விடலாம் என்று கனவு காண்பது போலானது இது. தமிழகத்தில் ஜூலை 28-ஆம் தேதி பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ளப்போவதாகக் கூறுகிறார். இதில் மோடியும், அமித்ஷா-வும் பங்கேற்க உள்ளனர். இவர்களுக்கு வெண்சாமரம் வீசத் தயாராக உள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. அண்ணாமலை நடத்தும் யாத்திரைதான் பாஜக அரசின் இறுதி யாத்திரை.