பாஜக தலைவர் அண்ணாமலை அவ்வப்போது விட்டுவிட்டு நடத்தி வந்த யாத்திரை பல்லடத்தில் ஒரு வழியாக வேறு வழியின்றி முடிவடைந்திருக்கிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி பாஜக- ஆர்எஸ்எஸ் முன்னோடிகளான சாவர்க்கர், குருஜி கோல்வால்க்கர், ஹெட்கேவர், தீனதயாள் உபாத்யாயா போன்றவர்களின் ‘அருமை பெருமைகளை’ எடுத்துரைப்பதற்கு பதிலாக அதிமுக தலைவர்களான எம்ஜிஆரை யும் ஜெயலலிதாவையும் புகழ்ந்து தள்ளி யுள்ளார். எம்ஜிஆர் பிறந்த கண்டிக்கு போனதாகவும் இப்போது அவர் பணியாற்றிய தமிழக மண்ணுக்கு வந்துள்ளேன் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். கண்டியைச் சொல்லி இங்கு ஏதாவது கிண்ட முடியுமா என்று முயன்று பார்க்கும் அவர் எம்ஜிஆர் நல்லாட்சி நடத்திய தாகவும் அவருக்குப் பிறகு ஜெயலலிதா மட்டுமே நல்லாட்சி கொடுத்தார் என்றும் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பாஜக “கழகங்கள் இல்லா தமிழகம், கவலையில்லா தமிழகம்” என்று குறுக்கும் நெடுக்குமாக ஓடிப் பார்த்த பிறகும் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என வற்றிப் போன குளங்களை சுற்றிச் சுற்றி வந்த போதும் எதுவும் நடக்கவில்லை.
பாஜக தலைவர் அண்ணாமலை சில மாதங்களுக்கு முன்பு ஜெயலலிதா ஊழல் வழக்கில் ‘ஏ1’ என குற்றம்சாட்டப்பட்டவர் என்றார். அதிமுகவினர் அனைவரும் கொந்தளித்தனர். ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் 1991 - 96 கால ஆட்சிதான் மிக மோச மானது என்பதை ஏற்கிறீர்களா என்று கேட்டதற்கு அண்ணாமலை முன்னாள் முத லமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப் பட்டுள்ளனர். அதனால் தான் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருக்கிறது என்றார். இதைத்தொடர்ந்து அண்ணாமலை யைக் கண்டித்து அதிமுக மாவட்டச் செயலாளர் கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாஜகவுடன் கூட்டணியையும் முறித்துக் கொண்டனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, ஏனைய அதிமுக தலைவர்களோ, பாஜக தேசிய தலைமையையோ, ஒன்றிய ஆட்சியையோ இன்றுவரை விமர்சிப்பதில்லை. இப்போது எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவை புகழ்ந்து பேசினாலாவது தமிழ்நாட்டு மக்கள் ஏமாறுவார்களா என்று பிரதமர் கறுப்பு - வெள்ளை கால படம் ஓட்டுகிறார். எம்ஜிஆர் ஆட்சிக்காலத்திலே தான் மண்டைக்காடு கலவரம் நடைபெற்றது. இதன் பின்னணியில் இருந்தது ஆர்எஸ்எஸ் அமைப்பு தான் என்பதை இதுகுறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட வேணுகோபால் கமிஷன் உறுதி செய்துள்ளது. மக்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்கவும் ஒற்றுமையை பாதுகாக்கவும் தவத்திரு குன்றக்குடி அடிகளாரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக இருந்த தோழர் ஆர்.உமாநாத்தும் அங்கு சென்று அமைதிப்படுத்தினர். மண்டைக்காடு கலவரம் குறித்து 1982 மார்ச் மாதம் சட்டமன்றத்தில் நடந்த விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய எம்ஜிஆர் இவ்வாறு கூறியுள்ளார் :
“மதவாதிகள் அவர்களின் கொள்கை எதுவாக இருந்தாலும் மக்களை ஒற்றுமைப் படுத்துவதாக இருக்க வேண்டும். மதவாதிகள் மக்களைப் பிளவுபடுத்த நினைப்பதை இந்த அரசு அனுமதிக்காது. இந்து முன்னணி என்ற பெயரால் பேரணி நடத்துகிறார்கள். இந்தப் பேர ணியால் நாட்டுக்கு நன்மையா? சிந்திக்க வேண்டும். இந்து முன்னணிக் காரர்களுக்கு யோசனை சொல்லும் மடாதிபதிகளுக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இது போன்ற செயல்களை அரசு அனுமதிக்காது. குன்றக்குடி அடிகளார் நடந்து கொள்வது போல் மற்ற மடாதிபதிகள் நடந்து கொள்ள வேண்டுமே தவிர மற்ற வழிமுறைகளில் இறங்கக் கூடாது. அச்சுறுத்தல் பயிற்சி கொடுக்கிறார்களே - அதை அரசு ஏற்றுக் கொள்ளாது. குறிப்பாகச் சொல்கிறேன். ஆர்எஸ்எஸ் தனது பயிற்சிகளை நிறுத்தியாக வேண்டும். ஏற்கெனவே என்சிசி, சாரணர் பயிற்சிகள் இருக்கின்றன. அந்தப் பயிற்சியே போதும். ஆர்எஸ்எஸ்-சின் இந்தப் பயிற்சிகள் தேவையில்லை. ”
இதுதான் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-சுக்கு எம்ஜிஆர் கொடுத்த சான்றிதழ். இதன் பிறகு எம்ஜிஆர் தில்லி சென்ற போது தமிழ்நாடு இல்லத்தில் இந்துத்துவா அமைப்பினர் அவரைச் சூழ்ந்து கொண்டு கலகம் செய்தனர். அதுபற்றியும் 17.2.1983 அன்று பத்திரிகை யாளர் சந்திப்பில் எம்ஜிஆர் பேசினார். ஆர்எஸ்எஸ் இயக்கம் தடை செய்யப்படுமா? என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எம்ஜிஆர் அளித்த பதில் என்ன தெரியுமா? “தில்லியில் நான் தமிழ்நாடு மாளிகையில் இருந்து ஒன்றிய அமைச்சர்களைப் பார்க்கப் புறப்பட்ட நேரத்தில் முன் அறிவிப்பு இல்லாமல் ‘இந்து மஞ்ச்’ என்ற பெயரில் 45 வயதுக்காரர்கள் என் முன்னால் நின்றுகொண்டு, தமிழ்நாட்டில் 5 ஆர்எஸ்எஸ்-காரர்கள் சுடப்பட்டதாகச் சொன்னார்கள். ‘எம்ஜிஆர் ஒழிக’ என்று கோஷம் போட்டார்கள். அவர்கள் நடந்து கொண்ட முரட்டுத்தனமான செயலைப் பார்க்கும்போது இதுதான் ஆர்எஸ்எஸ் இயக்கமா என்று நினைக்கத் தோன்றியது. இதுதான் ஆர்எஸ்எஸ் என்றால் அது இந்த நாட்டுக்கும், தமிழ்நாட்டுப் பண்புக்கும் ஒத்து வராது. என்னைத் தடுக்கும் அளவிற்கு மட்டமாக நடந்துகொண்டார்கள். இந்து மதத்தை இப்படியெல்லாம் காப்பாற்றிவிட முடியாது. தமிழ்நாட்டில் இவ்வளவு கீழ்த்தரமான அனுபவம் எனக்கு இதுவரை நடந்ததில்லை. இதைப் பார்த்த பிறகு அந்த அமைப்பின் மீது எனக்கு பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது.” இதுதான் மோடியின் குருபீடமான ஆர்எஸ்எஸ் குறித்து, எம்ஜிஆர் கொண்டிருந்த மதிப்பீடு.
எம்ஜிஆர் தனது படங்களில் மதவெறிக் கருத்துக்களை ஒருபோதும் சொன்னதில்லை. மாறாக பாஜக போன்றவர்களின் போலி பக்தியை பல படங்களில் அம்பலப்படுத்தி யுள்ளார். நினைத்ததை முடிப்பவன் என்ற திரைப்படத்தில் “கண்ணை நம்பாதே” என்று தொடங்கும் பாடலில் “ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே ருத்ராட்சப் பூனை களாய் வாழுறீங்க, சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே ஏமாற்றி கொண்டாட்டம் போடுறீங்க” என்று பாடி நடித்துள்ளார்.இந்தப் பாடலின் அனைத்து வரிகளும் பாஜகவுக்கு அப்படியே பொருந்தும். இதுஒருபுறமிருக்க பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்ததுதான் செய்த மிகப்பெரிய தவறு என்றும் இனி அந்தத் தவறை செய்யமாட்டேன் என்றும் மெரினா கடற்கரை கூட்டத்தில் ஜெய லலிதா கூறினார். 2014 மக்களவைத் தேர்த லில் மோடியா? இந்த லேடியா? என்று கேள்வி எழுப்பினார். அந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி முன் வைத்த குஜராத் மாடலை ஜெய லலிதா கடுமையாக விமர்சித்தார். பொது விநி யோக திட்டத்திற்கான உணவுப் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பதில் குஜராத் 63 சதவீதம் என்று குற்றம்சாட்டினார். 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்த லின் போது ஓசூரில் பேசிய நரேந்திர மோடி சென்னையில் வெள்ளம் வந்த போது ஜெய லலிதா எந்த உதவியும் செய்யவில்லை என்றார். தமிழ்நாட்டில் லஞ்ச லாவண்யம் தலைவிரித் தாடுகிறது. இந்த லஞ்சத்தினால் தமிழ்நாடே முற்றிலும் பாதித்துப் போயிருக்கிறது என்றார். அப்போது லஞ்ச லாவண்யத்தில் ஊறிக்கிடக் கிறது என்று குற்றம்சாட்டிய ஜெயலலிதா ஆட்சி யை இப்போது பல்லடம் வெயிலில் காயவைத்து நல்லாட்சி என்கிறார் பிரதமர் மோடி. பல்லடம் பேச்சில் தன்னுடைய பத்தாண்டு கால ஆட்சியின் சாதனைகள் என்று எதையும் கூற முடியாத பிரதமர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை நல்லாட்சி என்கிறார். ஆனால் எத்தனை யாத்திரை போனாலும், எத்தனை மாத்திரை சாப்பிட்டாலும் தமிழ்நாட்டில் பாஜக ஒரு போதும் வேர் பிடிக்க முடியாது.