நாடு தழுவிய அளவில் மார்ச் 28, 29 தேதி களில் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டம் முந்தைய போராட்டங்களைக் காட்டிலும் பெரிதாக அமைந்தது, கவனத்தை ஈர்த்தது, மக்களிடையே பேசப்பட்டது. ஐஎன்டியுசி, ஏஐடியுசி, எச்எம்எஸ், சிஐடியு, ஏஐயுடியுசி, டியுசிசி, சேவா, ஏஐசிசிடியு, தொமுச, யுடியுசி ஆகிய 10 மத்திய தொழிற் சங்கங்கள், வங்கி, காப்பீடு, மத்திய-மாநில அரசு ஊழியர் அமைப்புகள் என துறைவாரியான 70 அகில இந்திய சம்மேளனங்களின் கூட்டமைப்பு இந்த வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்திருந்தது. சுமார் 25 கோடி தொழிலாளர்கள் பங்கேற்ற அந்தப் போராட்டம் குறித்து அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளி யானது. 12 மையமான கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தம் நடைபெற்றது. வேலைநிறுத்தச் செய்திகள் வெளியானது போல, தொழிலாளர்களின் கோரிக்கைகளில் நியாயம் இருக்கிறதா இல்லையா என்ற விவாதங்கள் முன்னுக்கு வரவில்லை. போராட் டத்திற்கு ஆதரவான இயக்கங்கள் நடத்தக்கூடிய பத்திரி கைகளில் மட்டுமே கோரிக்கைகளை விளக்கும் கட்டு ரைகளும் சங்கத் தலைவர்களின் பேச்சுகளும் வந்தன.
கெடுபிடிகளை மீறி...
தனிப்பட்ட ஒரு துறை அல்லது நிறுவனத்தின் தொழிலாளர்களது கூலி உயர்வு, போனஸ் போன்ற கோரிக்கைகள் இப்போராட்டத்தில் எழுப்பப்பட வில்லை. விவசாயிகள், முறைசாராத் தொழிலாளர்கள் உள்பட அனைத்து உழைப்பாளிகளுக்குமான கோரிக் கைகள் எழுப்பப்பட்டன. ஒப்பந்தத் தொழிலாளர்க ளுக்காக நிறுவனங்களின் நிரந்தரத் தொழிலாளர் கள் குரல் கொடுத்தார்கள். வருங்காலத் தொழிலாளர்க ளின் உரிமைகளைப் பாதுகாக்கிற உணர்வும் அந்தக் குரலில் இருக்கிறது. தொழிலாளர்கள் அணி திரள்வதற்கு எதிரான சட்டக் கெடுபிடிகளையும், “வேலைக்கு வராவிட்டால் ஊதியம் இல்லை,” என்ற எச்சரிக்கைகளையும், வேலைநிறுத்தத் த்தில் பங்கேற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற மிரட்டல்களையும் மீறி அத்தனை கோடிப் பேர் போராட்டக் களம் இறங்கினார்கள். மதவாத அடிப்படை யில் உழைப்பாளிகளைக் கூறுபோடும் அரசியல் சூழலைப் புறக்கணித்து அவர்கள் கைகோர்த்தார்கள்.
விமர்சன அம்பு
ஆயினும், கோரிக்கைகள் பற்றிப் பேசாமல், வேலைநிறுத்தத்தை விமர்சிக்கும் கருத்துகள் வெளிப் படுத்தப்பட்டன. பொதுவாக, பொதுமக்களுக்குப் பாதிப்பு என்ற கோணமே அந்த விமர்சனங்களில் முன்னுக்கு வந்தது. இப்போதல்ல, எப்போதுமே வேலை நிறுத்தங்களுக்கு எதிராக எய்யப்படும் முதல் அம்பு இதுவாகத்தான் இருக்கும். ‘இந்தியா டுடே’ பத்திரிகையில் ‘ஸ்டிரைக் அகெய்ன்ஸ்ட் ஸ்டிரைக்ஸ்’ (‘வேலைநிறுத்தங்களுக்கு எதிரான தாக்குதல்’ அல்லது ‘வேலைநிறுத்தங்களுக்கு எதிரான வேலைநிறுத்தம்’) என்ற கட்டுரை வந்துள்ளது. பத்திரிகையாளர் ஜீமன் ஜேக்கப் எழுதியுள்ள அக்கட்டுரையில், கேரளத்தி லேயே வேலைநிறுத்தத்திற்குப் பரவலாக எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. எழுத் தாளர் பால் ஜக்காரியா, “கதவடைப்புகள், திடீர் வேலை நிறுத்தங்களால் கேரளம் அலுத்துப்போயிருக்கிறது. அவற்றால் நமக்கு என்ன பலன் கிடைக்கிறது,” என்று கேட்டிருக்கிறார். “போராட்டங்களை நடத்துவோருக்கு அது குறித்த கண்ணோட்டங்கள் இருக்கலாம். ஆனால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு வேறு மாற்று எதுவும் இல்லாமல் போகிறது,” என்கிறார் அவர். புதிய அணுகு முறையோடு நடத்தப்படும் கற்பனை வளமிக்க போராட்ட வடிவங்கள் தேவை எனக் கூறும் அவர், 2019ல், சபரிமலை வழக்கு தீர்ப்பைச் செயல்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்தபோது அதை எதிர்த்துக் கிளம்பியவர்களைக் கண்டித்தும், உரிமையை வலி யுறுத்தியும் வழிபாட்டில் பாலின சமத்துவத்திற்காக நடைபெற்ற 630 கி.மீ. நீள ‘வனிதா மதில்’ (பெண்க ளின் சுவர்) போன்ற இயக்கங்களை வரவேற்கிறார். “போராட்டப் பண்பாட்டைக் கைவிடுவது கேர ளத்தை, அராஜகங்கள் பொறுத்துக்கொள்ளப்படும் சில வட மாநிலங்களைப் போல் மாற்றிவிடும்,” என்று கூறியிருக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணன். கேரளத்தின் சமூக-அரசியல் விழிப்புணர்வை வளர்த்ததில் போராட்டங்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது எனக்கூறியுள்ள அவர், “தொழிலாளர்கள் சுரண்டப்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம். அவர்கள் அடிமைகளைப் போல் நடத்தப்படுவதை அனுமதிக்க முடியாது. அவர்களுடைய உரிமைகள் அச்சுறுத்தலு க்கு உள்ளாகிறபோது எதிர்த்துப் போராடுகிறோம்,” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கேரளத் தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் போராட் டத்தில் ஆர்வத்தோடு பங்கேற்கவே செய்கிறார்கள் எனக்கூறும் ஜீமன் ஜேக்கப், “கலாச்சாரரீதியாகக் கேரளம் உருவெடுத்து வருகிறது. வளைகுடா நாடுக ளில் வேலைவாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து, உலகமயமாக்கப்பட்ட இணைந்த தலை முறை கேரளத்தில் வளர்ந்து வருகிறது. ஆனால் கேர ளத்தின் ரத்தத்தில் போராட்டம் இருக்கவே செய்கிறது. வரலாற்றுரீதியாக செல்வாக்கு செலுத்தி வந்துள்ள போராட்ட வடிவங்கள் விடைபெற்றுக்கொண்டிருக் கின்றன என்றால், எதிர்ப்பின் அகராதியில் புத்தாக் கத்துடன் கூடிய சொற்கள் வந்துகொண்டிருக்கக் கூடும்” என்று கட்டுரையை முடித்திருக்கிறார். ஆக, பொதுமக்களுக்குப் பாதிப்பு, கிடைக்கிற பலன் என்ன என்ற இரண்டு வாதங்கள்தான் வேலைநிறுத்தப் போராட்டங்களுக்கு எதிராக முன்வைக்கப்படுகின்றன. கால மாறுதலுக்கேற்பப் போராட்ட வடிவங்களில் மாற்றம் தேவை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
பாதிப்புக்கு யார் பொறுப்பு?
பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த உழைப்பாளிகள் அல்லாமல் “பொதுமக்கள்“ என்ற தனிப் பிரிவு இருக்கி றதா என்ன? இத்தகைய நாடுதழுவிய போராட்டங்கள் தொழிற்சங்கங்களால் இன்று அதிகாலையில் முடிவு செய்து திடீரென நடத்தப்படுபவை அல்ல. பல மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டு, அறிக்கை கள், பொதுக்கூட்டங்கள், அடையாள ஆர்ப்பாட்டங்கள் என தொடர்ச்சியான பல்வேறு நடவடிக்கைகள் மூலம் நினைவூட்டப்பட்டு நடத்தப்படுகின்றன. ஆட்சியாளர் கள் அதையெல்லாம் கண்டுகொள்ளாதிருப்பதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால் “பொதுமக்களில்” கணிசமான பிரிவினர் இதையெல்லாம் கவனத்தில் கொள்வதில்லை என்பதுதான் சோகம். உண்மையில் “பொதுமக்களுக்கு’’ ஏற்படும் பாதிப்புக்குக் காரணம், வேலைநிறுத்தமே வழி என்ற முடிவுக்குத் தொழிலாளர்களைத் தள்ளிவிடும் அரசின் கொள்கைகள்தான். ஆகவே பாதிப்புக்குப் பொறுப் பேற்க வேண்டியது அரசாங்கம்தான். சங்கங்களுக்கி டையே அணுகுமுறை வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், பொதுக் கோரிக்கைகளில் உருவான கருத் தொற்றுமையின் அடிப்படையில், தொழிலாளர்களி டையே கொண்டுசெல்லப்பட்ட அரசியல் விழிப்பு ணர்வு, வர்க்க உணர்வின் காரணமாகவே இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் வேலைநிறுத்தத்தில் பங் கேற்றிருக்கிறார்கள். இத்தனை கோடி தொழிலாளர்க ளுக்கு ஏற்பட்டிருக்கிற அரசியல், வர்க்க உணர்வு இதர மக்களையும் தொற்றிக்கொள்ளச் செய்யும் இயக்கங் கள்தான் தேவை. அரசின் கொள்கைகள் அதை நோக்கி மக்களை நெட்டித் தள்ளும் என்பதில் ஐயமில்லை.
சமூக இயக்கம்
வேலைநிறுத்தப் போராட்டங்களால் கிடைக்கிற பலன் என்ன? வட்டார அளவில் ஆங்காங்கே நிறுவ னங்களின் தொழிலாளர்கள் நடத்தும் வேலை நிறுத் தங்களாவது பேச்சுவார்த்தை, உடன்பாடு என்று முடிகின்றன. ஆனால் பொதுவான கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்படும் நாடுதழுவிய வேலைநிறுத் தங்களின் விளைவு என்ன? விவசாயிகளின் வீரஞ்செறிந்த நெடும் போராட்டம், அவர்கள் எதிர்த்த வேளாண்சட்டங்கள் விலக்கிக் கொள்ளப்படுவதில் முடிந்ததை மறப்பதற்கில்லை. தொழிலாளர்களின் 12 அம்சக் கோரிக்கைகளைப் பொறுத்தவரையில் ஒன்றிய பாஜக அரசு அசைந்துகொடுக்கத் தயாராக இல்லை என்ற போதிலும், 25 கோடிப் பேர் பொதுநோக்கத்திற் காக அச்சுறுத்தல்களையும் இழப்புகளையும் தாங்கிக் கொண்டு போராட்டத்தில் குதித்தார்கள் என்பதை எளிதாக ஒதுக்கிவிட முடியாது என்கிறார்கள் சங்கத் தலைவர்கள். இதுவொரு சமூக இயக்கம் என்கிறார் சிஐடியு அகில இந்திய செயலாளர்களில் ஒருவரான ஆர். கரு மலையான். “நாட்டின் மக்கள்தொகையில் இவ்வளவு கணிசமான பகுதியினர் திரண்டிருக்கிறார்கள் என்பது ஒரு முக்கியமான சமூகச் செயல்பாடு. ஆகவேதான் ஊடகங்களால் இதைப் புறக்கணிக்க முடியவில்லை. உலக அளவிலுமே கூட அரசாங்கங்களும் ஊடகங்க ளும் இதை உற்றுநோக்கியிருக்கின்றன. தேசிய நலன் சார்ந்த கோரிக்கைகளுக்காகத் தொழிலாளர்கள் போராடுவது அனைத்து நாடுகளிலும் நிகழ்ந்து வந்தி ருக்கிறது. அப்படிப்பட்ட சில போராட்டங்களில் உடனடி பலன் கிடைக்கவில்லையே என்று தோன்றலாம்; அதற்குக் காரணம் அந்தக் காலகட்டங்களில் ஆட்சியில் இருந்தவர்களின் கொள்கைதான். மோடி அரசு இதைக் கவனத்தில் எடுத்துக்கொண்டாக வேண்டும், இல்லை யேல் அதற்குரிய தண்டனை அவரது அரசுக்கு கிடைக்கும்,” என்கிறார் அவர்.
“நூறு மீட்டர் ஓடியாகிவிட்டது, அதற்கு என்ன பரிசு என்பது போல இதைப் பார்க்க முடியாது. பொருள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள உழைப்பாளர் சக்தியில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியினர் பங்கேற்பது ஒரு சமூக இயக்கம். உலகமயமாக்கலில் இப்படிப்பட்ட பொது இயக்கங்களுக்கு எதிரான கருத்துகள் பரப்பப்படுவதும் நடக்கிறது. வேலைநிறுத்தத்தால் பலன் என்ன, பொது மக்களுக்குப் பாதிப்பு என்றெல்லாம் கூறி, ஆளும் வர்க்கங்களுக்கு சாதகமாக, பொது இயக்கங்களை இழிவுபடுத்துகிற வேலையும் காலங்காலமாக நடந்து வந்திருக்கிறது. கார்ப்பரேட் மயமாகியுள்ள பல ஊட கங்களும் அப்படிப்பட்ட போராட்ட எதிர்ப்புக் கருத்துக ளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. ரஷ்யாவில் லெனினுக்கு எதிரான வெறுப்புக் கருத்துகளை ஜார் அரசு பரப்பவில்லையா? இந்தியாவில் காந்திக்கு எதி ரான வெறுப்புக் கருத்துகளை பிரிட்டிஷ் அரசு பரப்பத் தானே செய்தது? இப்போதும் அதுதான் நடக்கிறது. ஆனால் உழைப்பாளிகள் அரசியல் விழிப்புணர் வோடு இணைவதைத் தடுத்துவிட முடியாது,” என்கிறார் கருமலையான். புரட்சிகரமான சமூக மாற்றங்களை நாடுவோருக்கு, நாடு தழுவிய வேலைநிறுத்தம் ஒரு சமூக இயக்கம் என்ப தன் பொருள் புரியும். போராட்ட வடிவங்களில் புதிய மாற்றங்கள் தேவை என்ற கருத்து பொதுவாக ஏற்கத் தக்கதுதான். அமைப்புகளுக்குள் அது பற்றிப் பேசப்படு கிறது. இயக்கங்களின் வளர்ச்சிப் போக்கில் அத்த கைய புதிய போராட்ட வடிவங்கள் உருவாகும் என எதிர் பார்க்கலாம். ஆனால், வேலை நிறுத்தம் வெறுமனே ஒரு போராட்ட வடிவமல்ல. அது ஒரு வழி. நியாயத்தை நிலைநாட்டுவதற்கான, இறுதியான வழி. உணர்வு பெற்ற உழைப்பாளிகள் அந்த வழியில் செல்வதை, கால மாறுதல்களைக் காட்டி மாற்றிவிட முடியுமா என்ன?