மதுரையில் ஜூலை 23 ஞாயிறன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஆற்றிய உரை
பல நாடுகளில் கூட்டாட்சி என்பது பிரதானமாக மாநிலங்கள் என்ற கட்டமைப்பை மையப் படுத்தியே இருக்கிறது. ஆனால் இந்தியாவில் கூட்டாட்சி என்பது நாட்டின் பிரத்யேகமான - தனித் தன்மையாக இருக்கக்கூடிய ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற கோட்பாட்டை அங்கீகரித்ததன் அடிப்படையி லேயே உருவானது. உலகிலேயே இந்தியாவில்தான் ஒரு வளமான, ‘வேற்றுமையில் ஒற்றுமை’ எனும் கலாச்சாரம் இருக்கிறது. இந்த வளமிக்க கலாச்சாரத்தை பாது காப்பது என்பது, இங்கே இருக்கும் ஒவ்வொரு தனித்தனி வேற்றுமைகளுக்கும் கலாச்சாரங்களுக்கும் சமமான உரிமைகளையும், அந்தஸ்தையும் உறுதி செய்து அவற்றை அங்கீகரிப்பதன் மூலமே சாத்தியாமாகும்.
மணிப்பூர் உதாரணம்
ஆனால் துரதிருஷ்டவசமாக, இன்று மணிப்பூரில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? இரட்டை என்ஜின் என்று தங்களை அழைத்துக் கொள்ளக்கூடிய ஒன்றிய மோடி - மணிப்பூர் பாஜக அரசுகள் அந்த மாநிலத்தை நேர்எதிர் திசையில் இழுத்துச் செல்கின்றன. அங்கே உள்ள பல்வேறு இனக்குழுக்களின் அடையாளங்களை அங்கீகரிப்பதற்கு மாறாக, பாஜக அரசு அந்த மக்களை தனித்தனியாக பிரிவினை செய்து, அணிதிரட்டுவதற்கு முயற்சி செய்கிறது. எப்படி நாட்டின் பல பகுதிகளில் இந்து- முஸ்லிம் என பிரிவினை செய்து தனித்தனியாக அணிதிரட்ட முயற்சித்ததோ அதேபோல மணிப்பூரில் இந்து- கிறித்தவர் என பாகுபாடு செய்து அணி திரட்ட முயல்கிறது. அப்படி வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களிடையே மத மற்றும் இனரீதியாக வெறுப்புணர்வை யும், பகைமையையும் உருவாக்கி அணிதிரட்டியதன் விளைவாகவே இன்று மணிப்பூரில் ஒரு பயங்கரச் சூழல் ஏற்பட்டுள்ளது. மணிப்பூர் இன்றைக்கு, இந்தியாவின் கூட்டாட்சி மீதும் இந்தியாவின் பன்மைத்தன்மை மீதும் பாஜக அரசு நடத்துகிற கொடிய தாக்குதலின் அடையா ளமாக மாறியிருக்கிறது.
மாநிலங்கள் இல்லாமல் இந்தியா இல்லை
விடுதலைப் போராட்டம் முடிந்த காலகட்டத்தில் ஒரு கேள்வி எழுந்தது. பல விதமான வேற்றுமைகள் நிலவும் இந்திய நாட்டை எப்படி ஒன்றுபட்ட நாடாக மாற்றுவது, ஒற்றுமையை எப்படி தொடர்ந்து பேணுவது என்ற கேள்வி விவாதிக்கப்பட்டது. ஒற்றுமையை தொடர்ந்து நீடிக்கச் செய்வதற்கு பொருத்தமான அரசியல் கட்டமைப்பு எது என்றும் விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக அரசியல் நிர்ணய சபை மிகப் பெரும் விவாதத்தை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக நிறைவேற்றப்பட்ட நமது அரசி யலமைப்புச் சட்டத்தின் முதல் பிரிவே, ‘இந்தியா, பாரதம் என்பது, மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்’ என்று வரையறை செய்யப்பட்டது. எனவே இந்தியா ஓர் ஒன்றிய மாக நீடிப்பதற்கு அடித்தளமாக இருப்பவை மாநிலங்க ளே. மாநிலங்கள் இல்லாமல் இந்தியா இல்லை. இதுதான் இந்திய கூட்டாட்சியின் அடிநாதம். சட்டமியற்றும் அதிகா ரம், நிர்வாக அதிகாரம்,நிதி அதிகாரம் உள்பட ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே அதிகாரங் கள் பகிர்வு செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் தான் இந்திய கூட்டாட்சி இயங்குகிறது. அந்த அதிகாரப் பகிர்வு இன்று அப்பட்டமாக மீறப்படுகிறது. மோடி அரசு நடத்துகிற இந்த தாக்குதல் வெறுமனே அதிகார மீறல் தொடர்பானதாக இல்லை. மாறாக, அது ஒரு தத்துவார்த்த மோதலாக நடக்கிறது. இந்த மோதல், அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கி ஒற்று மையை வலுப்படுத்துவதற்கும், குறிப்பிட்ட சில தரப்பு மக்களை வெளியில் தள்ளி வேற்றுமையை அதிகரிப்ப தற்கும் இடையிலான போராட்டமாக மாறியுள்ளது.
விடுதலையின் கனவு
சுதந்திரப் போராட்டத்தின் போது எப்படிப்பட்ட இந்தியா மலர வேண்டும், சுதந்திர இந்தியாவின் தன்மை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டுமென்ற கருத்து மோதல் எழுந்தது. சுதந்திரப் போராட்டமே எதிர்கால இந்தி யாவின் குணாம்சத்தை வரையறை செய்தது. அனைத்து மொழிகள், அனைத்து மக்களின் அடையாளங்கள், பாரம்பரியங்கள், கலாச்சாரங்கள், மதப்பிரிவுகள் உள்பட மக்களிடையே இருந்த ஒவ்வொரு வேற்றுமையையும் அங்கீகரித்து, மதித்து, ஒன்றிணைத்து, அவை ஒவ்வொன் றும் சமமாக நடத்தப்பட வேண்டுமென்பதே விடுதலை யின் கனவாக இருந்தது. அப்போது நடந்த விவாதத்தில் முக்கியமானது, இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் இந்துக்களாக இருப்பதால் இது இந்துக்களின் நாடு என்று அறியப்பட வேண்டும் என்ற ஒரு கருத்து - அதாவது மற்ற அனைவரையும் வெளியேற்றுவது என்ற கருத்து ஒரு தரப்பில் எழுந்தது. ஆனால் நமது சுதந்திரப் போராட்டம் மிகவும் தீர்மானகரமான முறையில் இந்தியா என்பது அனைவரையும் ஒன்றிணைத்த, அனைத்து பிரிவினை ரையும் உள்ளடக்கிய நாடுதான் என்பதைப் பிரகடனம் செய்தது. அன்றைக்கு இந்த கருத்தை ஏற்காத, சம்மதிக் காத, எதிர்த்து நின்ற நபர்கள்தான் - மதவாதிகள்தான் - இன்றைக்கும் அந்தக் கருத்தை எதிர்த்து நிற்கிறார் கள். நாடு விடுதலையடைந்து 75 ஆண்டுகள் ஆன பின்பும் அவர்கள் இந்தியா எனும் இந்த மகத்தான மதச்சார் பற்ற ஜனநாயக நாட்டினை தங்களது கனவான பாசிசத் தன்மை கொண்ட இந்துத்துவா ராஜ்ஜியமாக மாற்ற விரும்புகிறார்கள். இந்த மோதலின் ஒரு பகுதியாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அனைத்து அடித் தளங்கள் மீதும் அவர்கள் கடுமையான தாக்குதலை கட்ட விழ்த்து விட்டிருக்கிறார்கள். இன்றைக்கு நீங்களும், நானும், ஒட்டு மொத்த இந்திய மக்களும் எதிர்கொண்டி ருக்கிற முதன்மையான சவால் இதுதான்.
கடந்த காலப் போராட்டங்கள்
கடந்த காலத்தில் ஒன்றிய அரசுக்கும் மாநில அர சாங்கங்களுக்கும் இடையேயான உறவில் பலப் பிரச்ச னைகள் இருந்தன என்பது உண்மையே. 1959-இல் கேர ளாவில் தோழர் இஎம்எஸ் தலைமையிலான அரசாங் கத்தை கலைத்த போதிலும் சரி, அதைத் தொடர்ந்து பல மாநில அரசுகளை கலைத்த போதிலும் சரி, அன்றைக்கு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசாங்கத் தின் அணுகுமுறையை எதிர்த்து நாங்கள் வலுவான போ ராட்டங்களை நடத்தினோம். நாடாளுமன்ற ஜனநாய கத்தின் அடிப்படையில், அன்றைய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாங்கள் விமர்சித்தோம். போராடி னோம். அதே நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படை யில் இப்பிரச்சனைக்கான தீர்வுகளையும் எல்லோரும் விவாதித்தோம். அதனடிப்படையில் தான் மாநில உரிமை கள் தொடர்பான சர்க்காரியா கமிஷன் அமைக்கப் பட்டது. மாநில உரிமைகளுக்காக அன்றைய காலகட்டத் தில் தொடர்ச்சியான மாநாடுகள், கூட்டங்கள் நடந்தன. ஜோதிபாசு, கலைஞர், என்.டி.ராமாராவ் போன்ற தலைவர்கள் இந்தக் கூட்டங்களில் பங்கேற்று பேசினார் கள். ஆனால் அந்த ஆணையத்தின் பரிந்துரைகள் நிறை வேற்றப்படவில்லை. இந்தப் பிரச்சனையை நாங்கள் நாடாளுமன்றத்தில் இருந்த காலத்திலும் எழுப்பினோம். மன்மோகன்சிங் அரசு வந்தபிறகு எங்களது தொடர் வற் புறுத்தலின் அடிப்படையில் 2007ல் பூஞ்சி கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த ஆணையமும் பல பரிந்துரை களை அளித்தது. இத்தகைய முரண்பாடுகளும், தீர்வு களை நோக்கிய பயணமும் அமைந்திருந்தது.
முற்றிலும் வேறுபட்ட சூழல்
ஆனால் இப்போது முற்றிலும் வேறுபட்ட சூழலை நாம் எதிர்கொள்கிறோம். இப்போது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளையே தகர்க்கக்கூடிய தாக்கு தல் நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் அந்த வேறுபட்ட சூழல். மதச்சார்பற்ற இந்தியாவின் அடித்தளங் களை தகர்த்து, மிகத் தீவிரமாக மனிதர்களுக்குள் சகிப் பின்மையை வளர்த்து, வெறுப்புணர்வை அதிகப்படுத்தி, ஒருவருக்கொருவர் மோதி மாய்க்கும் பாசிசத் தன்மை கொண்ட இந்துத்துவா ராஜ்ஜியத்தை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை தற்போது ஆட்சியாளர்கள் மேற் கொண்டிருக்கிறார்கள். இதை நிகழ்த்த வேண்டுமா னால் அவர்களுக்கு வலுவான, முழுமையான அதிகா ரங்கள் கொண்ட ஒரு மத்திய அரசு - ஒற்றை ஆதிக்க அரசு தேவைப்படுகிறது. ஒற்றை அதிகாரம் கொண்ட அரசு இல்லாமல் பாசிசத் தன்மை கொண்ட ஆட்சிய திகாரத்தை நீடிக்கச் செய்ய முடியாது. எனவே இவர்க ளுக்கு கூட்டாட்சி என்பது கசக்கிறது. அதை தகர்க்க வேண்டியது அவசியம் என்று கருதுகிறார்கள். எனவே இப்போது நடந்து கொண்டிருப்பது மதச்சார்பற்ற இந்தி யாவை பாதுகாப்பதற்கான ஒரு வலுவான தத்து வார்த்தப் போரே ஆகும்.
சிதைக்கப்படும் நான்கு தூண்கள்
இந்த மோதலின் ஒரு பகுதியாக இன்றைய மத்திய ஆட்சியாளர்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் நான்கு அடிப்படையான தூண்களை தகர்க்க முயல்கிறார்கள்: 1. மதச்சார்பற்ற ஜனநாயகம், 2. பொருளாதார இறை யாண்மை, 3. சமூக நீதி, 4. கூட்டாட்சி. ஜனநாயகத்தின் மீதான தாக்குதலை நாடாளு மன்றத்திலே நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் நிலவரம் பற்றி நாடாளு மன்றத்தில் பேச மறுக்கிறார். நாடாளுமன்றம் துவங்குவ தற்கு முன்பு வெறும் இரண்டே இரண்டு நிமிடம் மட்டும் மணிப்பூர் பிரச்சனைகள் பற்றி வெளியில் பேசுகிறார். அவர் விரைவில் தேர்தல் நடக்கப்போகிற மத்தியப் பிரதே சம், சத்தீஷ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் தனது கட்சி யின் வெற்றி குறித்து கவலைப்படுகிறாரே தவிர மணிப்பூரில் இந்த நிமிடம் வரை அமைதியை மீட்ப தற்கும், இயல்பு நிலையை கொண்டு வருவதற்கும் எந்தத் திட்டமும் மேற்கொள்ளவில்லை. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிப்பதற்கும் இவர்கள் தயாராக இல்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களை செவிமடுப்பதற்கும் மறுக்கிறார்கள். கேள்வி எழுப்பினால் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மூலமே நாடாளுமன்ற நடவடிக்கையை முடக்கு கிறார்கள். கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரும் இப்படித்தான் முடக்கப்பட்டது. அப்போது, மிகப் பெரும் ஊழல் மற்றும் கொள்ளை அடித்துள்ள அதா னிக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே உள்ள உறவை சர்வதேச ஊடகங்கள் அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து அதை விவாதிக்க வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் கேட்ட போது, ஆளுங்கட்சியினர் மூலம் நாடாளு மன்றம் திட்டமிட்டு முடக்கப்பட்டது. மொத்தத்தில் நாடா ளுமன்றத்திற்கும், நாட்டு மக்களுக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் என்ற நிலையிலிருந்து பாஜக அரசு நழுவுகிறது.
பொருளாதார இறையாண்மையைப் பொறுத்தவரை, மோடி அரசு தேசத்தின் சொத்துக்கள் அனைத்தையும் திட்டமிட்டு சூறையாடுகிறது. அனைத்தையும் கார்ப்ப ரேட் பெரு முதலாளிகளுக்கு தாரை வார்க்கிறது. சமூக நீதியைப் பொறுத்தவரை, தலித் மக்கள் மற்றும் பழங்குடி மக்கள் மீதான தாக்குதல்களுக்கு எல்லையே இல்லை என்ற நிலை இவர்களது ஆட்சியில் நிலவு கிறது. அதேபோல கூட்டாட்சித் தத்துவத்தின் மீது நடக்கும் தாக்குதலையும் நாம் எதிர்கொண்டிருக்கிறோம்.
ஒற்றை ஆதிக்க ஆட்சி
இந்த தாக்குதல்களின் அடிப்படை நோக்கம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மேற்கண்ட தூண்களைத் தகர்ப்பதன் மூலம் ஒரே கட்சியின் தலைமையிலான ஒற்றை ஆட்சி என்ற நிலையை உரு வாக்குவதுதான். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் ஒரே நாடு- ஒரே தேர்தல், ஒரே நாடு - ஒரே வரி, ஒரே நாடு - ஒரே மொழி என்று துவங்கி அனைத்திலும் நாடு முழுவதற்கும் ஒரே வடிவம் என்ற நிலையை ஏற்படுத்த மோடி அரசு முயற்சிக்கிறது. ஒரே ரேசன் கார்டு, ஒரே வாக்குரிமை என்று அடுத்தடுத்து முன்வைக்கிற இவர்களது இலக்கு ஒரே நாடு - ஒரே அரசாங்கம்- அதாவது மத்திய அரசாங்கம், ஒரே நாடு - ஒரே தலைவர் என்ற நிலையை உருவாக்குவதுதான். நாம் அவர்களுக்குச் சொல்கிறோம்: ஒரே நாடு என்பது இந்தியா எனும் குடியரசுதான்; இந்தியா எனும் மாநிலங்க ளின் ஒன்றியம்தான்; மாநிலங்கள் இல்லாமல் இந்தியா என்கிற நாடு சாத்தியமில்லை. எனவே மாநிலங்களின் ஒன்றியம்தான் இந்தியா என்கிற தன்மையை பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது.
பாஜகவின் ஆளுநர்கள்
இந்தக் கூட்டத்திலே மதிமுக சார்பில் தமிழக ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெறுகிற கையெழுத்து இயக்கத்தின் ஒரு பகுதியாக என்னிடம் கையெழுத்து கேட்டார்கள். ஆளுநர்களும், துணை நிலை ஆளுநர்களும் பாஜகவின் அரசியல் நிகழ்ச்சி நிரலை இங்கே அமல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த முயற்சிக்கிறார்கள்.
மாநிலத் துறைகளில் ஆக்கிரமிப்பு
அரசியலமைப்புச் சட்டம் மிகத் தெளிவான முறையில் ஒன்றிய அரசுப் பட்டியல், மாநிலப் பட்டியல், பொதுப் பட்டியல் என வரையறை செய்துள்ளது. மாநில பட்டியலில் மாநில அரசின் உரிமைகளாக வரையறை செய்யப்பட்டுள்ள உரிமைகளை - குறிப்பாக மாநில அரசு சட்டமியற்றும் அதிகாரம் உள்ளிட்டவற்றை மத்திய ஆட்சியாளர்கள் முழுமையாக பறிக்க முயல்கி றார்கள். மாநில பட்டியலில் உள்ளவற்றை ஆக்கிர மிக்கிறார்கள். பொதுப்பட்டியலில் உள்ள கல்வித்துறை யில் மாநிலங்களுடன் எந்தவிதமான ஆலோசனையும் இல்லாமல் புதிய கல்விக்கொள்கையை அறிவித்து அமலாக்குகிறது ஒன்றிய அரசு. அதேபோல பொதுப் பட்டியலில் உள்ள விவசாயத்துறையில் மிக முக்கிய மான சட்டங்களை மாநிலங்களுடன் எந்தவித ஆலோச னையும் மேற்கொள்ளாமல் நிறைவேற்றுகிறது ஒன்றிய அரசு. கூட்டுறவுத் துறையானது முழுக்க முழுக்க மாநிலப் பட்டியலில் உள்ள ஒன்றாகும். ஆனால் அதிலும் கூட மத்திய அரசே ஆக்கிரமித்து சட்டமியற்றுகிறது.
நிதி அதிகாரம் பறிப்பு
இதுபோன்ற அதிகார ஆக்கிரமிப்பும் அத்துமீறலும் பல்வேறு துறைகளில் நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக நிதித்துறையில் மாநிலங்களின் அதிகாரம் முற்றாக பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 15ஆவது நிதி கமிஷன் ஒன்றிய அரசாங்கத்தின் வரி வருவாயில் 42 சதவீதம் மாநில அரசின் பங்காக அளிக்கப்பட வேண்டுமென்று கூறுகிறது. ஆனால் கடந்த பட்ஜெட்டில் கூட வெறும் 30.4 சதவீதம் நிதிதான் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தால் கட்டா யம் என்று வலியுறுத்தப்பட்டுள்ள இந்த அம்சத்தைக் கூட மோடி அரசு அப்பட்டமாக மீறுகிறது.
மொழித் திணிப்பு, கலாச்சாரத் திணிப்பே!
அதேபோல இந்தி திணிப்பு என்பது மிக மோசமான முறையில் அமலாக்கப்படுகிறது. முன்பு ஒரு சமயம் மார்க்சிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் களில் ஒருவரும், கேரளாவின் முன்னாள் முதலமைச்ச ருமான தோழர் இ.கே.நாயனாருக்கு ஒன்றிய அரசாங் கத்திடமிருந்து இந்தியில் கடிதம் வந்தது. அதற்கு அவர் மலையாளத்தில் பதில் எழுதினார். ‘உங்களுக்கு இந்தியில் கடிதம் எழுத உரிமை இருக்கும் என்றால் எனக்கு மலையாளத்தில் பதில் எழுத உரிமை இருக்கிறது’ என்று பதிலடி கொடுத்தார். அதேபோல ஒருமுறை கலைஞரும் தனக்கு இந்தியில் வந்த கடிதத் திற்கு தமிழில் பதில் அனுப்பினார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணை 22 மொழிகளுக்கு தேசிய மொழி என்ற அந்தஸ்து அளித்திருக்கிறது. ஒவ்வொரு மொழியும் சம அந்தஸ்து பெற்றவை. இந்த உரிமையை மறுத்து இந்தியைத் திணிப்பது என்பது அதன் வழியாக கலாச்சா ரத்தை திணிப்பது என்பதே ஆகும். கலாச்சாரம் என்று அவர்கள் குறிப்பிடுவது இந்துத்துவா கலாச்சாரம். மாறாக, இந்து கலாச்சாரம் அல்ல. இந்துத்துவா கலாச்சாரம் என்பது பல்வேறு வேறுபட்ட தன்மைகளைக் கொண்ட, கலாச்சாரங்கள் மற்றும் பழக்க வழக்கங்களை கொண்ட மக்களின் உரிமைகளை மறுத்து, அவர்களது இயல்பான பண்புகளை அழித்து ஒற்றைக் கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டுமென வற்புறுத்துவதாகும். அதன் குறி யீடாகத்தான், மற்ற மொழிகளை எல்லாம் அழித்து அந்த இடத்தில் இந்தியை நிறுவ அவர்கள் மேற்கொள்ளும் முயற்சி.
எது இந்து கலாச்சாரம்?
இதை எந்த விதத்திலும் ஒப்புக்கொள்ளாதது இந்து கலாச்சாரம். இந்து மதத்திலேயே பல சமூகங்களின் குடும்பங்களில் சகோதரியின் மகளைத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. அதே இந்துமதத்தில் சில சமூகங்களில் இது தவறு என்று அனுமதி மறுக்கப்படுவதும் உள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களில் தாய்மாமன் மகளை திருமணம் செய்து கொள்ளும் நடைமுறை உள்ளது. வட இந்தியாவில் இதை அனுமதிக்க மாட்டார்கள். இந்து மதத்திலேயே இப்படி பலவிதமான நடைமுறைகள் உள்ளன. ஆனால் பாஜக ஆட்சியாளர்கள் இந்த பன்முகப் பண்புகளை, கூறுகளை ஒழித்துக் கட்டி, நாடு முழுவதும் ஒரே விதமான பழக்கவழக்கங்களை வலி யுறுத்தும் இந்துத்துவா கலாச்சாரத்தை - ஒற்றைக் கலாச்சாரத்தை திணிக்க முயல்கிறார்கள். எனவே தற்போது நடந்து கொண்டிருப்பது கடந்த காலத்தைப் போல கூடுதல் உரிமைகளைக் கோரும் ஒரு வழக்கமான போராட்டம் அல்ல. அதை விட மிகப் பெரிய ஒரு யுத்தம். மாநிலங்களுக்கு கூடுதல் உரிமைகளை கோருவது மட்டுமல்ல, இந்த நாடு பாதுகாக்கப்பட வேண்டும், நாட்டின் அரசியலமைப் புச்சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும். மாநிலங்களின் உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும், மாநிலங்களின் ஒன்றியம் என்ற கட்டமைப்பு பாது காக்கப்பட வேண்டும். இந்த நோக்கத்துடன்தான் 26 அரசியல் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் பாட்னா விலும் அதைத் தொடர்ந்து பெங்களூரிலும் நடந்தது. அந்தக் கூட்டத்தின் ஒருமித்த, உறுதியான பிரகடனமாக இந்தியாவை பாதுகாப்பதே முதன்மைக் கடமை என்று அறிவித்தோம். அதனால்தான் இந்த அணிக்குப் பெயரே ‘இந்தியா’ என்று சூட்டினோம்.
அரசியலமைப்புச் சட்டத்தில் எப்படிப்பட்ட இந்தியா என்று நாம் வரையறை செய்துள்ளோமோ அப்படிப்பட்ட இந்தியாவாகவே தொடர்ந்து நீடிப்பதற்கு 2024 பொதுத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அதிகாரத்திலிருந்து தூக்கியெறியப்பட வேண்டி யது அவசியமாகும். ஆட்சியதிகாரத்தில் இருந்து அவர் களை உடனடியாக வெளியேற்ற வேண்டியது முக்கியமா னதாகும். அதனால்தான் பெங்களூரு கூட்டத்தில் பேசும் போது நான் குறிப்பிட்டேன், “இந்த அணியின் ஒற்றுமையும், குறிக்கோளும் இந்தியாவின் வெற்றிக்காக இருக்க வேண்டும்” என்று. எனவே இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதி செய்ய தமிழ்நாடு பக்கபலமாக நிச்சயம் இருக்கும் என்று நம்புகிறேன்.
தமிழில் : எஸ்.பி.ராஜேந்திரன்