சாதிய ஒடுக்கு முறையை ஒழித்துக் கட்டவும் சாதியற்ற சமத்துவ சமூகத்தை படைத்திடவும் பட்டியலின பழங்குடி மக்களுக்கான இந்த மாநாட்டில் அய்யா வைகுண்டரையும் வள்ளலாரையும் பெருமைப்படுத்தி இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மனதார வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன். காரணம், அன்றைய திருவாங்கூரில் அரச பயங்கர வாதத்திற்கு எதிராக தன்னுடைய பெரும்பான்மை சமுதாயம் விடுதலை அடைந்த பிறகு, நீ இங்கிருந்து போய்விடு என்று சொன்னபோது, 18 சாதிகளும் ஒன்றாக வாழுகிற உரிமை யை தந்தால் மட்டும் போவேன் என்று அனைத்து சாதிகளின் உரிமைக்காக குரல் கொடுத்தவர் அய்யா வைகுண்டர். சாதியும்-பேயும்! இங்கு சாதி இருக்கிறது என்று சொல்கிறார்கள். பேய் இருக்கிறது என்று பேசுகிறார்கள். பேயை விரட்டுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அந்த பேயை யாரும் பிடித்து தந்தது கிடையாது. இன்னமும் ஆயிரம் ஆண்டுகள் ஆனா லும் பேய்விரட்டுபவன் இருப்பான். ஆனால், இந்த சமு தாயத்தில் பேய் இருக்கிறது. அதுபோல தான் சாதியும் பேயும் இருந்து கொண்டிருக்கிறது. சாதியை பேய் என்று சொன்னவர் ஐயா வைகுண்டர். அவர் வழியில் வந்தவன் நான்.
இறைவன் இடதுசாரி!
இடதுசாரிகள் இறைவன் என்பதை யாராவது மறுக்க முடியுமா? ஈசன் இடதுசாரி இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா? ஆனால், ராமனை சிலையாக்கிவிட்டனர். எனவே, அவனை தொட முடியாது. நமது சமத்துவம், சகோதரத்துவம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் அனைத்து சமயங்களும் இடதுசாரிகள். எல்லா சமய தலைவர்களும் வலதுசாரிகள். தற்போது எல்லா சமயங்களும் வலதுசாரி தலைவர்கள் கையில் இருக்கிறது. அதனை இடதுசாரிகள் கைப்பற்ற வேண்டும். அது நமது உரிமை. வாருங்கள் கோயிலுக்குச் செல்லுவோம். கோவில்கள் அனைத்தும் நமக்கானது. நாட்டில் ஆட்சி செய்பவர்களுக்கு சாதியும் இருக்கக் கூடாது. மதமும் இருக்கக்கூடாது. தமிழ்நாட்டில் ஆட்சி செய்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னுக்கு சாதியும் இல்லை, மதமும் இல்லை. ஆனால், மொழி மட்டும் இருக்கிறது. இது ஒரு பொற்காலம். இந்த காலத்தில் சாதிக்கவில்லை என்றால் எப்போது அது முடியும்? எனவே கோவிலுக்குச் செல்லுவோம். கோயிலுக்குள் இருந்து ஆரி யத்தையும் அந்நியத்தையும் வெளியேற்றுவோம், தமிழை மீட்டெடுப்போம்.
வெல்லவும்-கொல்லவும் முடியாது!
என்னை வெல்ல முடியாமல் கொல்ல முயன்றவர்களி டமிருந்து முழுமையாக பாதுகாத்தவர்கள் இடதுசாரி அமைப்புகளும் அதன் தோழர்களும்தான். இந்த மண்ணில் இடதுசாரி சிந்தனையை விதைக்க வேண்டும் என்பது எனது சமயம் எனக்கு தந்த கடமையாகும். அதை செய்து கொடுக்க வேண்டும் என்பதற்காக இடதுசாரி அமைப்புகள் ஒன்று சேர்ந்து அரசிடம் பாதுகாப்பு வாங்கி கொடுத்ததற்கு இந்த தருணத்தில் நன்றி உடையவனாக கடமைப்பட்டிருக்கிறேன் நான். அதற்கு நன்றி சொல்லத்தான் இந்த மாநாட்டிற்கு நான் வருகை தந்தேன்.
மநுவை விரட்டுவோம்!
மதவாதிகள், சாதியென்று மக்களை ஒதுக்க நினைக்கிறார் கள். அத்தகைய மநுதர்ம, வர்ணாசிரமத்தை தமிழ்நாட்டில் இருந்து வேரறுக்க வேண்டும். இதற்காக நாம் செய்ய வேண்டியது, சாதி என்கின்ற பாம்பு கோவிலுக்குள் இருக்கிறது. அதை கருவறைக்குள் இருந்தும் வெளியேற்ற வேண்டும். இதை இடதுசாரிகளால் மட்டுமே செய்ய முடியும். இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்கிற பொற்காலத்தை இடதுசாரிகளால் மட்டுமே உருவாக்க முடியும்.
- பால பிரஜாபதி அடிகளார்
சாதியத்தை வேரறுப்போம்!
சாதியற்ற சமத்துவ சமூகத்தை படைப்போம் என்ற உயர்ந்த கனவோடு உணர்வுப் பூர்வமாக போராடி வருகிற இயக்கம் செங்கொடி இயக்கம். இது இன்றைய நேற்றைய கனவல்ல, கம்யூனிஸ்டுகளின் நூற்றாண்டுக் கனவாகும். இதை நிறைவேற்றுவதற்கு நாட்டில் வேறு எந்த இயக்கமும் செய்யாத அளவுக்கு உயர்த்தியாகத்தையும் செய்திருக்கிறோம். சாதியை ஒழிப்பது என்பது மனிதர்களுக்குள் மனமாற்றம் ஏற்பட்டால் ஒழிந்து விடும் என்று நாங்கள் நம்பவில்லை. அறிவியல்ப் பூர்வமாக, மார்க்சிய சித்தாந்த த்தின் அடிப்படையில் சிந்திக்கிறோம். அதனால்தான் சாதிகள் இருப்பதற்கான காரணங்களை ஒழிக்காமல் இந்த மண்ணில் சாதியை ஒழிக்க முடியாது என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அதற்காகத்தான் களமாடி வருகிறோம். சாதி என்பது பண்பாட்டுத் தளத்தில் செயல்படுவது மட்டுமல்ல. மேலானவர்கள், கீழானவர்கள் என்று மனிதர் களை பிளவுபடுத்தி வைத்திருப்பது வெறும் கோட்பாடு மட்டுமல்ல, பெருவாரியான உழைக்கும் மக்களை நிலங்களில் இருந்து, கல்வியிலிருந்து, உடைமைகளில் இருந்து அப்புறப்படுத்தி உழைப்பை சுரண்டுவதற்காகவே சாதி இருக்கிறது என்ற புரிதல் எங்களுக்கு இருக்கிறது. சாதி ஒழிக்கப்பட வேண்டும் என்றால் சாதி இருப்பதற்கான காரணத்தை முதலில் ஒழிக்க வேண்டும். தமிழ்நாட்டில் எங்கு சாதி ஆணவப் படுகொலை நடந்தாலும், சாதியின் பெயரால் ஒரு உயிர் பறிக்கப்பட்டா லும், குடிசைகள் கொளுத்தப்பட்டாலும் அந்த இடத்தில் கம்யூனிஸ்டுகளின் பாதம் தான் முதலில்படும்!
- கே.சாமுவேல்ராஜ்,
மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலே செங்கொடி!
நாடு முழுக்க பட்டியலின மற்றும் பழங்குடி மக்கள் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முன்னேற விடாமல் பல்வேறு வடிவங்களிலும் தடுத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக, மோடி பிரதமரான பிறகு வன்கொடுமை என்பது பல்வேறு வடிவங்களில் தலை விரித்தாடுகிறது. இதன் மூலம், ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்வளைகளை நெரித்து வருகிறது இந்துத்துவா கூட்டம். அதே நேரத்தில், தமிழ்நாட்டில் அருந்ததிய மக்களின் கால் நூற்றாண்டு கால கோரிக்கையான உள் ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அதை நாங்கள் மறக்கவே முடியாது. கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு, அருந்ததியினர் மக்களை கண்டு கொள்ளவே இல்லை. இதன் விளைவு உடுமலைப்பேட்டை சங்கர், சேலம் கோகுல்ராஜ் என்று ஆணவப் படுகொலைகள் அதிகரித்தன. தனது சொந்த மகளை, சகோதரியை படுகொலை செய்யும் சாதிவெறி தலைவிரித்தாடியது. இதை தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வைத்த கோரிக்கையை கண்டு கொள்ளவில்லை. ஆனால் திமுக அரசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இதை நிறைவேற்றி தருவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
- கு. ஜக்கையன், நிறுவனத் தலைவர், ஆதித்தமிழர் பேரவை.
செங்கொடிக்கு தோல்வியே கிடையாது!
சாதியம் என்பது இருந்துவிட்டுப் போகட்டும்; சாதிய வன்கொடுமைகள் தான் இருக்கக் கூடாது என்று கூறுவது தவறு. இது அறிவியலுக்கு புறம்பானது. பகுத்தறிவுக்கும் ஒத்து வராதது மனித நாகரிகத்துக்கும் எதிரானது. இந்தியாவில் மதங்கள் எத்தனை வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இந்தியாவிற்கு ஒரே மதம் என்பது மட்டுமே இருக்கக் கூடாது என்று அம்பேத்கர் அரசியல் சாசன சபையில் கூறினார். அன்றைக்கு அதனை நேருவும் ஏற்றுக் கொண்டார். பன்முகம் கொண்ட ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டிய காலச் சூழலில் நமது காலத்தின் குரலாக செங்கொடி இயக்கம் உள்ளது. இதுதான் மனிதகுலத்தை வெல்லும். இந்த இயக்கத்திற்கும் செங்கொடிக்கும் தோல்வியே இல்லை.
- மு.வீரபாண்டியன், மாநில துணைப் பொதுச் செயலாளர், சிபிஐ.
சமத்துவ கீதம் இசைத்த காலம்!
இந்திய துணைக் கண்டத்தின் சமூக வரலாறை எடுத்துக் கொண்டால், சாதி என்பது ஒரு மனிதனை கேவலப்படுத்தியது, இழிவுபடுத்தியது, அவமானப்படுத்தியது, அடக்குமுறைக்கு ஆளாக்கியது. அதன் உச்சபட்சமாக சாதிய ரீதியாக பிளவை ஏற்படுத்தியது. இந்த பிளவு என்பது ஒன்றல்ல இரண்டல்ல, மண்டல் குழு அறிக்கை 7000 பிரிவுகளை உருவாக்கியதை சுட்டிக்காட்டியுள்ளது. தமிழ்நாட்டில்,சாதி இருக்கலாம், தீண்டாமையை ஒழித்தால் போதும் என்கிற புரிதலுக்கு வந்துவிடக் கூடாது. சாதியை ஒழிப்பதன் மூலம் தான் சமூக சமத்துவ சமுதாயத்தை நிலை நாட்ட முடியும். வள்ளலார் காலம் முதல் சாதிக்கு எதிரான மிகப்பெரிய சமர் நடந்து கொண்டு தான் வருகிறது. அதனால்தான் மனித சமத்துவத்தை உருவாக்க சாதியை ஒழிக்க பெரியாரும் போராடினார்.
- துரை.சந்திரசேகரன், பொதுச்செயலாளர் திராவிடர் கழகம்.
சாதிய உணர்ச்சியை கிள்ளி எறிய வேண்டும்!
சாதி மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு பகுத்தறிவை வளர்த்த இந்த மண்ணில், சாதி வெறியர்களின் அட்டூழியத்துக்கு தமிழ்நாடு இடமளித்துவிட்டது. இது ஒரு மோசமான நிலையாகும். 19 மாவட்டங்களில் 114 பட்டியலின ஊராட்சித் தலைவர்களிடம் ஒரு தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் தமிழ்நாடு முழுவதும் 30 வகையான தீண்டாமைக் கொடுமை நடந்து கொண்டிருக்கிறது . 11 தலைவர்கள் ஊராட்சி மன்றத் தலைவர் நாற்காலியில் அமர முடியவில்லை. 45 ஊராட்சி மன்றங்களில் தலைவர்கள் கோவிலுக்கு உள்ளே நுழைய முடியவில்லை. விடுதலை நாளில், குடியரசு நாளில் 12 ஊராட்சிகளில் தேசியக் கொடியை ஏற்றக்கூடிய உரிமை பட்டியலின ஊராட்சித் தலைவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. இதுதான் இன்றைய தமிழ்நாட்டின் நிலைமை. சுதந்திரம் அடைந்தும் பழங்குடி மக்களுக்கு முழுமையான விடுதலை கிடைக்கவில்லை. எனவே சாதிய உணர்ச்சியை வேரோடு கிள்ளி எறிய வேண்டும்.
- மு.செந்திலதிபன், அரசியல் ஆய்வு மையச் செயலாளர், மதிமுக
சாதி பேதமற்ற சமத்துவம்!
இன்றைக்கும் நாட்டில் நாள்தோறும் எதாவது ஒரு பகுதியில் சாதிய அடக்கு முறையும் வன்புணர்வும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதனால் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் பாதுகாப்பை இந்த மாநாடு உறுதிப்படுத்துகிறது. 1957-இல் சமூக விடுதலைக்கு வித்தாகிப் போன இமானுவேல் சேகரன் பெயரில் ஒரு இயக்கத்தை ஆரம்பித்து பேராசான் காரல் மார்க்சின் தத்துவத்தையும், பெரியாரின் அரசியலையும் ஏற்றுக் கொண்டு மானுட விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கிறோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் இந்த மாநாடு சாதியற்ற வர்க்க பேதமற்ற சமத்துவத்தை படைப்பதற்கு உந்து சக்தியாக அமையும்.
- வீ.பி.வேல்முருகன், முதன்மைச் செயலாளர், தியாகி இம்மானுவேல் சேகரன் பேரவை.
ஆதிவாசி மக்களை ஓட்டாண்டியாக்கும் பாஜக அரசு!
தமிழ்நாட்டில் பழங்குடி மக்களின் பிரச்சனைகள் ஏராளமாக இருக்கின்றன. நாடு முழுவதும் அந்த மக்கள் இன்றைக்கு ஒன்றிய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையால், இந்திய அரசியல் சாசனம் அந்த மக்களுக்கு வழங்கி இருக்கக்கூடிய பல்வேறு உரிமைகளை பறிக்கக்கூடிய நிலையைப் பார்க்கிறோம்.
மணிப்பூரில் கலவரத்தை தூண்டிவிட்டதும் அதனை விசிறி கொண்டுவீசி வருவதும் அங்கு ஆட்சி செய்து வரும் பாஜக அரசு என்பதை மறந்து விடக்கூடாது.
அதிகாரிகள் அலட்சியம்!
நாடு முழுக்க வசித்து வரும் பழங்குடியின மக்களுக்காக கொண்டுவரப்பட்ட மிக சிறப்பான சட்டம் தான் வனஉரிமை பாதுகாப்பு சட்டம் 2006. கிட்டத்தட்ட 15 ஆண்டு காலமாக அந்தச் சட்டம் நடைமுறையில் இருந்தாலும் அது செம்மை யாக அமல்படுத்தப்படவில்லை என்பது தான் நாடு முழு வதும் இருக்கும் நிலைமை. இதில் தமிழ்நாடு விதிவிலக்கல்ல. அந்தச் சட்டத்தை அமல்படுத்த வேண்டிய அதிகாரிகள் மிகுந்த அலட்சியத்துடனும் அக்கறையற்ற முறையிலும் நடந்து கொள்கிறார்கள். இந்த பிரச்சனைக்குத் தீர்வுகாண, நமது முதலமைச்சரை சந்தித்தபோது, உடனடியாக மாநில அளவிலான அதிகாரிகள் கூட்டத்தை நடத்தினார். அதன் தொடர் நடவடிக்கையாக, இந்த வன உரிமை பாதுகாப்புச் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்பதற்காக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. இருந்தாலும் அதை அதிகாரிகள் உரிய அக்கறையுடன் கவனிக்கவில்லை என்பதுதான் இன்று வரை உள்ள நிலைமையாகும். அந்த வன உரிமைச் சட்டத்தின் படி 40,000 பேர் மனு கொடுத்திருந்த போதும் வெறும் 8000 பேருக்கு மட்டுமே சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய புதிய அவதாரம்!
மலைகளில் வசிக்கக்கூடிய மக்களுக்கு வனம் சொந்தம் என்று வந்திருக்கக்கூடிய ஒரே ஒரு சட்டம்தான் 2006 வன உரிமைச் சட்டம். அந்தச் சட்டத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் வசிக்கும் ஆதிவாசி மக்களுக்கு நில உரிமையை பெற்று கொடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிற இந்த நிலையில், ஒன்றிய பாஜக அரசாங்கம் அந்தச் சட்டத்தை நீர்த்துப்போக செய்யும் வகையில் பல்வேறு புதிய புதிய சட்டங்களை புதிய புதிய அரசாணை களை புதிய புதிய திருத்தங்களை நிறைவேற்றி வருகிறது. சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வனச்சட்டம் 1980 இல் 17 திருத்தங்களை கொண்டு வந்துள்ளனர். இந்தச் சட்டத்தை கொண்டு வந்ததே, வனம் இல்லாத பணிகளுக்கு வனத்தை பயன்படுத்தக் கூடாது, வனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்குத் தான். ஆனால் அந்த சட்டத்தின் நோக்கத்தையே குழி தோண்டி புதைக்கும் வகையில் தான் பாஜக அரசு திருத்தங்களை கொண்டு வந்திருக்கிறது. இந்த திருத்தங்கள் மூலம், ஏற்கனவே ஆதிவாசி மக்களுக்கு சாதகமாக இருக்கக்கூடிய வன உரிமைச் சட்டம் 2006 ஒன்றும் இல்லாமல் போகும் நிலையை உருவாக்கி இருக்கிறது.
மாநிலத்தின் உரிமை பறிபோகிறது!
கிராம சபைக்கு அதிகாரம் இல்லை. மாநில அரசாங்கங்களுக்கு அதிகாரம் இல்லை. ஒன்றிய அரசாங்கம் நினைத்தால் எந்த ஒரு வன நிலத்தையும் அதில் இருக்கக்கூடிய கனிம வளங்களையும் பெரு முதலாளிகளுக்கு வழங்க முடியும் என்கிற மோசமான திருத்தத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். பாஜக ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கையால் மாநில அரசுகளின் உரிமைகளும் மக்களின் உரிமை களும் பறிபோகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எல்லோரும் சேர்ந்து எதிர்க்கவில்லை என்றால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது.
-பெ. சண்முகம்,
மத்தியக் குழு உறுப்பினர், சிபிஐ(எம்)
பாஜகவுக்கு எதிராக மாற்று அணியை உருவாக்குவோம்!
இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் அனைத்தையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வழி மொழிகிறது. 2015 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக சீத்தாராம் யெச்சூரி தேர்வு செய்யப்பட்டார். அதனை வாழ்த்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிக்கை ஒன்று வெளியிட்டது. இந்தியாவை மதவாத சக்திகள் சூழ்ந்து இருக்கும் இந்த நேரத்தில் இடதுசாரி இயக்கம் ஒடுக்கப்பட்ட மக்களின் இடையே உள்ள நெருக்கத்தை பலப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தோம். அதேபோல் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் அரசாங்க வேலை இல்லை, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம் ஆகிவிட்டது. இடஒதுக்கீடு கண் துடைப்பாக உள்ளது. தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என வரலாற்று தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். அதனையும் வரவேற்று இதற்கு செயல் வடிவம் அளிக்க போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது விடுதலை சிறுத்தைகள் கட்சி. தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் ஆட்சி நடத்தி வரும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், 2024 மக்களவை பொது தேர்தலில் ஒரு மாற்று அணியை வடிவமைப்பதில் ஒரு முக்கிய பங்கு வகித்து வருகிறார். இந்த நிலையில் தனியார் துறையில் இடஒதுக்கீடு கோரிக்கையை வலுப்பெற செய்ய வேண்டும்.
- ரவிக்குமார் எம்.பி., துணைப் பொதுச் செயலாளர், விசிக
சமர் புரியும் செங்கொடிப்படை!
தமிழ்நாட்டில்,30 ஆண்டுகளுக்கு முன்பு, சாதியக் கட்சியில் இருந்தபோது வெட்டுக்குத்து என்று வாழ்நாள் முழுவதும் காலத்தை கழித்து விடுவோமோ என்ற அச்சம் ஏற்பட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வாழ்க்கையை நகர்த்தி வரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக போராடுவது, ஆதிக்கம் செலுத்தி அடிமைப்படுத்துவது என்ற நிலையை மாற்ற வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒன்றிணைந்து அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற அடிப்படையில், தனியாக கட்சி ஆரம்பித்து சுமார் கால் நூற்றாண்டு காலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், திமுக போன்ற கட்சிகளுடன் பயணித்து வருகிறேன். நாட்டில் சமூகத்தில் எங்கெல்லாம் ஆதிக்கம் தலை தூக்குகிறதோ? எங்கெல்லாம் அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறதோ? எங்கெல்லாம் கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள் தொழிலாளி வர்க்கத்தை சுரண்டுகிறதோ, காவல்துறை, ராணுவம் உள்ளிட்ட அரசு இயந்திரங்கள் எங்கெல்லாம் அப்பாவி மக்களை துன்புறுத்துகிறதோ, அந்த இடத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வீதிக்கு வந்து தன் ரத்தத்தை சிந்தி வழக்குகளை சுமந்து கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்காக களத்தில் நின்று போராடும் மாபெரும் இயக்கம் தான் செங்கொடி இயக்கம்.நாட்டில் பாசிசம் தலை தூக்கிய போது சங்பரிவார் கூட்டத்தின் கொட்டம் தலை விரித்து ஆடியபோதும் செங்கொடி இயக்கம் அதன் தோழர்களும் களத்தில் நின்று நேருக்கு நேர் சமர் செய்கிற ஒரு மக்கள் படைதான் இந்தச் செங்கொடிப் படை.
தி.வேல்முருகன் எம்எல்ஏ, நிறுவனத் தலைவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சி.