articles

img

மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகவே பாஜக-வின் முடிவு ஆரம்பமாகிவிட்டது..!

பெங்களூரு, மே 14- 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகவே பாஜக-வின் முடிவு துவங்கி விட்டது என்று நாட்டின் மூத்த அரசியல் தலைவர்கள் பலரும் கணிப்பு வெளியிட்டுள்ளனர். கர்நாடகத் தேர்தல் முடிவுகளின் பின்னணியில் இந்த மதிப்பீட்டை முன்வைத்துள்ள அவர்கள், “பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், ஊழல் மற்றும் பகைமைக்கு எதிரான நேர்மறை இந்தியாவை மக்கள் விரும்புகிறார்கள் என்பதையே கர்நாடகத் தேர்தல் முடிவுகள் பிரதிபலித்துள்ளன” என்றும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மோடியால் அனைத்தும் சாத்தியம் என்ற முழக்கம் பொய்த்தது

“கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் போக்கு 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் சூழலை பிரதிபலிக்கின்றன. பாஜக-வை தோற்கடிப்பது ஒன்றே எங்களின் நோக்கமாகும். கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, ராஜஸ்தான், தில்லி, ஜார்கண்ட், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் தற்போது பாஜக ஆட்சியில் இல்லை. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் காங்கிரஸ் கட்சிக்கு கர்நாடகத்தில் வெற்றி பெற உதவி உள்ளது என்பது எனது தனிப்பட்ட கருத்து. கர்நாடகத்தில் பாஜக முன்வைத்த ‘மோடி ஹை தோ மம்கின் ஹை’ (மோடி இருந்தால் அனைத்தும் சாத்தியம்) என்ற முழக்கத்தை மக்கள் நிராகரித்துள்ளனர். ஒரு தனி நபர் அனைத்து அதிகாரங்களையும் வைத்திருப்பதை மக்கள் நிராகரிக்கிறார்கள் என்பது இதன்மூலம் தெளிவாகி உள்ளது” என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

வெறுப்பு அரசியலை மக்கள் நிராகரித்துள்ளனர்

“கர்நாடக மக்கள் வெறுப்பு அரசியலை நிராகரித்து அன்புமிக்க அரசியலை ஏற்றுக்கொண்டு இருக்கின்றனர்; அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

அனுமனின் சூலாயுதம் பாஜக மீதே பாய்ந்துவிட்டது

“கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பஜ்ரங் தளத்தை தடை செய்வதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. இதைத் தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி கடுமையாக சாடினார். மேலும், கடவுள் அனுமன் கோஷமிட்டு பிரசாரம் செய்த பாஜக-வுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களையும் விமர்சித்தார். இவைதான் கர்நாடகத்தில் பாஜக-வின் வீழ்ச்சிக்குக் காரணம்.  அனுமனின் சூலாயுதம் பாஜக-வின் மேலேயே விழுந்துள்ளது. இது பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தோல்வி. கர்நாட கத்தில் இப்போது என்ன நடந்துள்ளதோ, அது 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் நடக்கும்” என்று சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) கட்சியின் மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி., தெரிவித்துள்ளார். “மோடி அலை ஓய்ந்து, இப்போது நாடு முழுவதும் எங்கள் (எதிர்க்கட்சிகளின்) அலை வந்து கொண்டிருக்கிறது” என்றும் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

பாஜக-வின் பணம், ஆள்பலத்தை மக்கள் எதிர்த்து நின்றுள்ளனர்

மக்கள் பிரச்சனையை திசைத்திருப்பும் முயற்சிகள் இனி பலிக்காது“கர்நாடகத்தில் காங்கிரஸுக்கு அழுத்தமான வெற்றியை அளித்த மக்களுக்கு வாழ்த்துகளும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு மாநிலத்தின் பேரவைத் தேர்தல் என்பதைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்ட இத்தேர்தல் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை  மதிப்புகளை நிலைநிறுத்தியதோடு மேலாதிக்க கொள்கைகள், பாகுபாடுகளால் நாட்டுக்கு ஆன சேதங்களைத் தடுத்துள்ளது. இரட்டை இயந்திர அரசு என கூறிக்கொண்ட பாஜகவின் பணபலம் மற்றும் ஆள்பலத்தை கர்நாடக மக்கள் எதிர்த்து நின்றுள்ளனர்” என்று காங்கிரஸ் மூத்தத் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

நேர்மறை இந்தியாவிற்கான புதிய துவக்கமே தேர்தல் முடிவுகள் 

“பாஜக-வின் எதிர்மறையான, வகுப்புவாத, ஊழல் கறைபடிந்த, முதலாளிக்கான, பெண்கள், இளைஞர்களுக்கு எதிரான, சமூகத்தைப் பிளவுபடுத்தும் மற்றும் தனிமனித துதி பாடும் அரசியலின் முடிவுக்கான தொடக்கமாக கர்நாடகத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன” என்று உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜவாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். மேலும், “பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம்,  ஊழல் மற்றும் பகைமைக்கு எதிரான- நேர்மறை இந்தியா வுக்கான புதிய தொடக்கம் இது” என்றும் அகிலேஷ் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் பிரச்சனையை திசைத்திருப்பும் முயற்சிகள் இனி பலிக்காது

“மக்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசாமல் அவர்களின் கவனத்தை திசைத் திருப்பும் அரசியல் முயற்சிகள் இனி பலனளிக்காது என்பதை கர்நாடகா தேர்தல் வெற்றி காட்டுகிறது. இமாசலப் பிரதேசம், கர்நாடகாவில் இதை பார்த்தோம். தங்களின் பிரச்சனைகளை விவாதித்து அதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்” என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா கூறியுள்ளார்.

கர்நாடக அணுகுமுறை மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும்

“ஏழைகளுக்கான நலத்திட்டங்களும், மதச்சார்பற்ற நிலைப்பாடும் கர்நாடகத்தில் காங்கிரஸுக்கு வரலாற்று வெற்றியைப் பெற்றுத்தந்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் உரிய பாடங்களைக் கற்று, தேசிய அரசியலிலும் காங்கிரஸ் முறையாக கவனம் செலுத்த வேண்டும். மோடி  வெல்ல முடியாதவா் அல்ல. அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றிணைந்தால் அடுத்த ஆண்டில் பாஜக- வின் ஆட்சிக்கு முடிவெழுதலாம்’ என இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் எம்.பி., பினோய் விஸ்வம்தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு மகிழ்ச்சியான புதிய நம்பிக்கை ஒளி பிறந்துள்ளது

‘பாஜக வழக்கம்போல் வகுப்புவாத எண்ணங்களைத் தூண்டி கர்நாடகத் தேர்தலில் வெல்லத் திட்டமிட்டது. ஆனால், பாஜக-வின் திட்டமிட்ட பரப்புரையை ஓரம்கட்டிய மக்கள், முன்னேற்றத்துக்கான சிக்கல்களை முன்னிறுத்தி பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸுக்கு வெற்றியை வழங்கி யுள்ளனர். மக்களவைத் தேர்தலுக்கு முன்னா் கர்நாட கத்தில் காங்கிரஸ் பெற்றுள்ள இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. புதிய நம்பிக்கை ஒளி தெரிகிறது’ என ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி கூறியுள்ளார்.

பிளவுவாத அரசியலை நிராகரித்த மக்களுக்கு நன்றி

“மோசமான மற்றும் பிளவுபடுத்தும் அரசியலை நிராகரித்தமைக்காக கர்நாடக மக்களுக்கு நன்றி; முதலீடுகள் ஈர்ப்பு மற்றும் தேச நலனுக்கான உள்கட்டமைப்புகள் உருவாக்கத்தில் ஹைதராபாத்தும், பெங்களூருவும் ஆரோக்கியமாக போட்டியிடும். கர்நாடகத்தில் அமைந்துள்ள காங்கிரஸ் அரசுக்கு வாழ்த்துகள்” என்று பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவரும், தெலுங்கானா அமைச்சருமான கே.டி.ராமா ராவ் தெரிவித்துள்ளார்.

பாஜக-வின் குப்பையான தந்திரங்கள் இனியும் பலிக்காது

“ஆட்சியில் இருக்கும் போது பாஜக-வினர் தங்களின் வேலையை செய்ய மாட்டார்கள். ஆனால் பிரச்சாரத்தின்போது குப்பையான பிரச்சனைகளை கிளறி வெற்றி பெற முயற்சிப்பார்கள். இனியும் இதுபோன்ற தந்திரங்கள் பலிக்காது என்பதை பாஜக உணர வேண்டும்” என்று தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்து தெலுங்கானாவில் டெபாசிட் கூட பாஜகவுக்கு கிடைக்காது

கர்நாடகா பாஜக தோல்வி குறித்து தெலுங்கானா நிதியமைச்சர் ஹரீஷ் ராவ் அளித்துள்ள பேட்டியில், “இது தென்னிந்தியாவின் கதை. அதாவது, பாஜக-வின் பிடியில் இருந்து தென்னிந்தியா விடுபட்டு விட்டது. பாஜகவின் வீழ்ச்சி தென்னிந்தியாவில் இருந்து தொடங்கி விட்டது. தெலுங்கானாவில் பாஜகவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்” என்று எச்சரிக்கை செய்துள்ளார்.

கர்நாடகத் தோல்வியால் காஷ்மீரில் இனி பாஜக தேர்தல் நடத்தாது

“கர்நாடகாவில் தோல்வி அடைந்துள்ளதால், காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலை நடத்தும் தைரியம் பாஜக-வுக்கு இப்போது இருக்காது” என்று ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான உமர் அப்துல்லா கூறியுள்ளார். காஷ்மீரில் கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப்பின் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படாத நிலையில், அங்கு விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என பாஜக தவிர்த்து, காஷ்மீரின் அரசியல் கட்சிகள் பலவும் ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.