articles

img

இந்தியா ஒன்றுபடும்! இந்தியா வெல்லும்!!

பாஜகவின் ஊழலுக்கு எதிரான போராட்டம் : கார்கே

“இந்த போராட்டம் ஹேமந்த் சோரன், கெஜ்ரிவால் போன்ற தனிநபர்களுக்கானது அல்ல. நாட்டையும், நாட்டு மக்களையும் காக்கவும், அரசியல் சட்டத்துக்காகவும் நடத்தப்படும் போராட்டம் ஆகும். முக்கியமாக பாஜகவின் ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆகும். பிரதமர் மோடிக்கு ஜனநாயகம் தேவையில்லை, அவர் சர்வாதிகாரத்தை மட்டுமே நம்புகிறார். ஒருவேளை பாஜக அரசியல் சட்டத்தை உருவாக்கியிருந்தால், பெண்களை வாக்களிக்கக் கூட அனுமதித்து இருக்க மாட்டார்கள். ஆனால் பண்டித ஜவஹர்லால் நேருவும், பாபா சாகேப் அம்பேத்கரும் வயது வந்தோருக்கான வாக்குரிமையைக் கொண்டு வந்து, பெண்ணோ ஆணோ, அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையை அளித்தனர்.  இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, பணவீக்கம் உயர்வு பிரச்சனை, விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ஆகியவற்றை பெறுவதற்கான போராட்டமே 2024 மக்களவை தேர்தல் என்பதால், “இந்தியா” கூட்டணியுடன் அனைவரும் ஒற்றுமையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.

இந்தியா ஒன்றுபடும், இந்தியா வெல்லும் : சீத்தாராம் யெச்சூரி

“ஊழல் மற்றும் சர்வாதிகாரத்தில் இருந்து நீங்கள் விடுதலை பெற வேண்டுமானால், மதச்சார்பற்ற முன்னணியான “இந்தியா” கூட்டணியை ஆதரிக்க வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசினார். மேலும் “ஜூடேக பாரத், ஜூதேக இந்தியா (இந்தியா ஒன்றுபடும், இந்தியா வெல்லும்)” என்ற முழக்கத்தை எழுப்பினார். யெச்சூரியுடன் “இந்தியா” கூட்டணி  தலைவர்களும், தொண்டர்களும் முழக்கங்களை எழுப்ப தில்லி ராம் லீலா மைதானம் அதிர்ந்தது.

பாசிச செயல்திட்டத்தால் எங்களை ஆள முடியாது : து.ராஜா

“தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி எழுத முயற்சிக்கிறார்கள். பாசிச செயல்திட்டத்தால் நாட்டை ஒருபோதும் ஆள முடியாது. நாடு ஒரு பேரழிவை எதிர்கொள்கிறது, அதை நாம் ஒற்றுமையாக, ஒன்றாக இணைந்து காப்பாற்ற வேண்டும்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் து.ராஜா அழைப்பு விடுத்தார்.

அறிவிக்கப்படாத அவசரநிலை : மு.க.ஸ்டாலின்

“பாஜக விரக்தியில் தவறு செய்து வருகிறது. “இந்தியா” கூட்டணி உருவான பிறகு “இந்தியா” என்ற வார்த்தையே பாஜகவுக்கு கசப்பாக மாறியது. “இந்தியா” கூட்டணித் தலைவர்கள் அனைவரையும் இந்த நாட்டின் எதிரிகளைப் போல நடத்தத் தொடங்கியது பாஜக தலைமை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை கவிழ்ப்பது மற்றும் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை போன்ற மத்திய அமைப்புகளை கட்டவிழ்த்து விடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் பாஜகவில் இணைந்தவர்கள் மீதான வழக்குகள் கைவிடப்படுகின்றன. அதாவது பாஜகவிற்கு எதிராக நிற்கத் துணிந்தவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். இது அறிவிக்கப்படாத அவசரநிலை. ஹேமந்த் சோரன், கெஜ்ரிவால் கைதுகள் பாஜகவை எதிர்த்துப் போராடுவதற்கான எங்களின் உறுதியை வலுப்படுத்துகின்றன” என, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின்  செய்தியை திமுக சார்பில் திருச்சி சிவா பொதுக்கூட்ட மேடையில் வாசித்தார்.

ஜனநாயகம், அரசியலமைப்பை அழிக்க முயற்சி : சரத் பவார்

“மோடி அரசு தில்லி முதல்வர் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் பல மாநிலத் தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்த நடவடிக்கை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் மற்றும் அரசியலமைப்பை அழிக்க மேற்கொள்ளும் முயற்சிகள் ஆகும். ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை காப்பாற்றுவது நமது பொறுப்பு ஆகும். “இந்தியா” கூட்டணிக்கு மக்களாகிய நீங்கள் வாய்ப்பு அளித்தால், நாங்கள் ஒரு சிறந்த தேசத்தை உருவாக்குவோம்” என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உறுதி அளித்தார்.

தேர்தலில் மேட்ச் பிக்சிங் செய்ய மோடி முயற்சிக்கிறார் : ராகுல்

“பாஜக இத்தேர்தலில் 400 எம்பிக்களுடன் நாடாளுமன்றத்தில் அமர்வோம் என்று முழங்குகிறது. இந்த முழக்கம் மேட்ச் பிக்சிங் செய்தால் மட்டுமே சாத்தியமாகும். “மேட்ச் பிக்சிங்” என்ற வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? “மேட்ச் பிக்சிங்” என்பது நடுவரை கைக்குள் கொண்டு வந்து, ஆட்டக்காரரை விலைக்கு வாங்கி, கேப்டனை மிரட்டி ஒரு போட்டியில் வெற்றி பெறுவது ஆகும். ஐபிஎல் போட்டிகளில் நடுவர்களுக்கு அழுத்தம் ஏற்படும்போது விளையாட்டு வீரர்கள் விலைபோகின்றனர். கேப்டன்கள் மிரட்டப்படுகிறார்கள். நம் முன்னால் இப்போது மக்களவைத் தேர்தல் உள்ளது. இதில் நடுவர்களை பிரதமர் மோடி தேர்வு செய்கிறார். நம் அணியின் இரண்டு கேப்டன்களை ஏற்கெனவே கைது செய்துள்ளனர். காங்கிரஸ் மிகப்பெரிய எதிர்க்கட்சி. ஆனால் எங்களின் அனைத்து கணக்குகளையும் தேர்தல் அறிவிப்பு வெளியான பின்னர் முடக்கியுள்ளனர். இது எந்த மாதிரியான தேர்தல் எனத் தெரியவில்லை. பிரதமர் மோடி இந்த நாட்டின் சில தொழிலதிபர்களுக்காக தேர்தல் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அரசமைப்பை ஏழைகளிடமிருந்து பறிக்கிறார். மக்களாகிய நீங்கள் முழு பலத்துடன் வாக்களிக்கவில்லை என்றால், மோடியின் மேட்ச் பிக்சிங் வெற்றி பெற்றுவிடும்; அது வெற்றி பெற்றால் அரசியலமைப்பு அழிந்து விடும்” எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் மோடியை வீழ்த்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசினார்.

எதற்கும் பயப்பட மாட்டோம் : தேஜஸ்வி

“அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகள் பாஜகவின் அடியாட்கள். எனது தந்தை லாலு பலமுறை மத்திய அமைப்புகளால் துன்புறுத்தப்பட்டுள்ளார். தற்போது நான், எனது தாயார், எனது சகோதரிகளும் துன்புறுத்தப்பட்டு வருகிறோம். இதற்கெல்லாம் பயப்பட மாட்டோம். சிங்கங்கள் (கெஜ்ரிவால், சோரன்) கூண்டில் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் பல சிங்கங்கள் வெளியே உள்ளன. இறுதி வரை போராடுவோம்” என ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி கூறினார்.

பாஜகவை விரட்டி  அடிப்போம் : அகிலேஷ்

“பாஜக 400 இடங்களை கைப்பற்றும் என்று பாஜகவினர் கொக்கரிக்கிறார்கள். உண்மையில் 400 இடங்களை வெல்லக் கூடிய அளவுக்கு மக்கள் ஆதரவு இருந்தால் அரவிந்த் கெஜ்ரிவாலையும், ஹேமந்த் சோரனையும் ஏன் கைது செய்ய வேண்டும்? நான் உங்களிடம் (மக்கள்) முறையிடுகிறேன். பாஜகவை தோற்கடித்து அவர்களை விரட்டி அடியுங்கள். உங்கள் வாக்கு மூலம் மட்டுமே இந்த நாட்டைக் காப்பாற்ற முடியும். உங்கள் வாக்குகளால் மட்டுமே நமது அரசியலமைப்பு, இடஒதுக்கீடு மற்றும் பிடிஏ பிரிவில் உள்ள 90% மக்களைக் காப்பாற்ற முடியும் (பி - பிச்சர் என்றால் பிற்படுத்தப்பட்டோர், டி - தலித், மற்றும் ஏ - அல்பசங்க்யாக் என்றால் சிறுபான்மையினர்). மோடிக்கு விவசாயிகளை சந்திக்க நேரமில்லை. ஆனால் பிரியங்கா சோப்ராவை சந்திக்கவோ, அக்சய் குமாருக்கு பேட்டி கொடுக்கவோ நேரமிருக்கிறது” எனக் கூறினார்.

கல்பனா, சுனிதா எனது சகோதரிகள் : உத்தவ் தாக்கரே

“இது மக்களவை தேர்தல் பிரச்சாரப் பேரணி அல்ல. எனது மற்றும் எங்களது இரு சகோதரிகளான கல்பனா (சோரன் மனைவி) மற்றும் சுனிதாவை (கெஜ்ரிவால் மனைவி) ஆதரிக்கவும், சர்வாதிகார பாஜக இரு சகோதரிகளின் கணவர்களை சிறையில் அடைத்ததால் ஒட்டுமொத்த நாடும் அவர்களுக்கு ஆதரவளிக்கிறது என்பதை அவர்களிடம் சொல்லவுமே இங்கு வந்துள்ளேன். மத்திய அமைப்புகள் பாஜகவின் பங்காளிகள். “இந்தியா” கூட்டணி எழுச்சி பெற்று ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. பாஜக ஒரு வாஷிங் மெஷின் கட்சி. ஊழல் செய்தவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் அக்கட்சியில் சேர்ந்த பிறகு ‘சுத்தமாகி’ விடுகின்றனர்” என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டினார்.

சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்! : கல்பனா சோரன்

“எங்களின் ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியினரின் வரலாறே ஒரு போராட்டமாகும். இன்று இந்தியாவின் 50 சதவீத பெண்கள் மற்றும் 9 சதவீத பழங்குடியினரின் குரலாக உங்கள் முன் நிற்கிறேன். பாஜகவின் சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர மக்களாகிய நீங்கள் அனைவரும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வந்துள்ளீர்கள் என்பதற்கு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றுகூடல் சாட்சியாக உள்ளது” என, சிறையில் உள்ள ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா பேசினார்.

கொடுங்கோன்மை எடுபடாது : சுனிதா கெஜ்ரிவால்

“முதல்வர் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக கோருகிறது. அவர் ராஜினாமா செய்ய வேண்டுமா? அவரது கைது நியாயமா? என பல்வேறு கேள்விகள் எழுகின்றன. கொடுங்கோன்மை வேலை செய்யாது. கெஜ்ரிவால் ஒரு சிங்கம். அவரை நீண்ட காலம் சிறையில் வைக்க முடியாது” என தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா பேசினார்.  மேலும் கெஜ்ரிவால் கொடுத்த மடலையும் சுனிதா படித்தார். 

 

ராம்லீலா மைதானத்திற்கு அணி அணியாகத் திரண்டு வந்த மார்க்சிஸ்ட் கட்சியினர்.