articles

பல மீன் ஊருணியும் பண்பாட்டுப் பன்மையும் - அ. குமரேசன்

பல மீன் ஊருணியும் பண்பாட்டுப் பன்மையும்

பூமி  அழகாக இருப்பது கடல்களாலா, காடுகளாலா, ஆறுகளாலா?  புத்துயி ர்ப்போடு இருப்பது தாவரங்களாலா, விலங்குகளாலா, நுண்ணுயிரிகளாலா? குழந்தைகளும் சொல்வார்கள் –இவை யனைத்தும் கலந்திருப்பதால்தான் என்று. இயற்கைப் பன்மைத்துவம் போலவே இன்றி யமையாதது, மனிதர்களது பண்பாட்டுப் பன்மைத்துவம். இது குறித்த விழிப்புணர்வை விரிவாக்குதல் உரையாடலையும் பரிமாற்றங்களையும் ஊக்குவித்தல், உலக அமைதியை நிலை நாட்டுவதில் பண்பாட்டின் பங்கை எடுத்துக் காட்டுதல் என்ற நோக்கங்களுடன் ஐ.நா. கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பு (யுனெஸ்கோ) 2005இல் ‘உலக பண்பாட்டுப் பன்மைத்துவ நாள்’ தீர்மானத்தை நிறைவேற்றியது. அதற்கடுத்த ஆண்டிலிருந்து மே 21 அன்று இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பற்பல பண்பாடுகள் உள்ள சமுதாயங் களில்  மரியாதையும் ஒத்துழைப்பும் பரிவும் அக்கறையும் மேலோங்குகின்றன. இதோ இதற்கோர் உடனடிச் சான்று: பஹல்காம் தாக்குதல்களைத் தொடர்ந்து மதம், மாநிலம், மொழி என்ற வேறுபாடுகளைக் கடந்து இந்திய மக்கள் ஒரே மனிதராக எழுந்தார்கள், பயங்கரவாதத்திற்கு எதிராக நின்றார்கள். அந்தப் பதற்றத்துக்குள் ஊடுருவி பகைமை அரசியலைக் கிளறிவிட முயன்றவர்களை ஒதுக்கினார்கள்.

சான்றாக சில நாடுகள்

 

பொருளாதாரத்தை எடுத்துக்கொண்டாலும், பண்பாடுகள் செழித்திருக்கும் நாடுகளுக்கு நம்பிக்கையோடு முதலீடுகள் வருகின்றன. சுற்றுலா உள்ளிட்ட தொழில்களும் வணிகங்களும் வளர்கின்றன. பலவகை நுகர்பொருள்கள், நவீன வசதிகள் சேர்கின்றன. ஒரு வட்டாரத்தில் வேறு வட்டாரத்து ஆடைகள் புழக்கத்திற்கு வருவதன் பின்னாலிருப்பது வெறும் சந்தை ஏற்பாடு மட்டுமல்ல, அவற்றின் அழகு அல்லது நடமாட்ட வசதியை மக்கள் ஏற்பதும்தான். தமிழகப் பெண்களிடையே சுடிதார், பேண்ட், சட்டை பரவலானதில் அவை இலகுவானவை, பாதுகாப்பானவை என்ற உணர்வும் உண்டல்லவா? பண்பாட்டுப் பன்மைத்துவத்தை மதிக்கிற சமுதாயம்  அனைத்து சமூக வாழ்க்கை முறைகளையும் உள்ளணைத்து வரவேற்பதாக இருக்கும். சுரண்டலே மூச்சாகக்  கொண்ட முதலாளித்துவ சமுதாய அமைப்பிலேயே கூட இதுவொரு முற்போக்கான கூறு.  இதில் குறிப்பிடத்தக்கதாக கனடா நாட்டை உலகம் சுற்றிகள் கூறுகிறார்கள். அதற்கான குடியேற்றக் கொள்கையின் அடிப்படையில் “பன்முகப் பண்பாட்டுப் பாதுகாப்புச் சட்டம்”, “இனப் பாகுபாட்டு தடைச் சட்டம்” என உள்ளன. ஒப்பீட்டளவில் ஆஸ்திரேலியா  சிறப்பான குடியேற்ற விதிகளைக் கொண்டிருக்கிறது. அதற்கு ஆதாரமாக “பன்முகப் பண்பாட்டு ஆஸ்திரேலியா” என்ற கொள்கை வரையறுக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் சில வெள்ளையின மேலாதிக்கவாதக் குழுக்கள் பாகுபாடு பேசுவதும், அவ்வப்போது தாக்குதல்கள் நடப்பதும் செய்திகளாகின்றன. ஆனாலும் ஒட்டுமொத்த சமுதாயம் அவர்களைப் புறக்கணிக்கிறது. “குடிமை உரிமைகள் சட்டம்” இனம், நிறம், மதம், பாலினம், தேசியம் என்ற அடிப்படைகளில் பாகுபடுத்தப்படுவதைக் குற்றமாக அறிவித்திருக்கிறது. முக்கியமான ஒரு திட்டம், குடியேற்றவாசிகள் குறைவாக உள்ள நாடுகளிலிருந்து வருவோருக்கு நிலையான குடியுரிமை வழங்குவதாகும். இப்போது இத்தகைய உரிமைகளில் கை வைக்கும் முயற்சிகள் நடந்தாலும் அது எளிதானதாக இல்லை. சிங்கப்பூரின் இன ஒருமைப்பாடு, இருமொழிக் கல்வி, இங்கிலாந்தின் சமூக சகவாழ்வுக் கொள்கை, இன உறவுகள் சட்டம் ஆகியவையும் நல்ல தளங்களாக அமைந்துள்ளன. இவ்வாறு வேறு சில நாடுகளும் எடுத்துக்காட்டுகளாகக்கூடும்.

சோசலிச நாடுகளில்

சமத்துவத்தை அடிப்படை லட்சியமாகக் கொண்ட சோசலிச நாடுகளின் முக்கியமான பணியே பண்பாட்டுப் பன்மைத்துவத்தைப் பாதுகாப்பதுதான். ஏகாதிபத்தியத் தூண்டுதலோடு சில குழுக்கள் பிரிவினைக் கலவரங்களில் இறங்குகிற, அரசுகள் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்கிற செய்திகள் வருவதுண்டு. ஆனால், ஒற்றைத்துவ ஆதிக்க நோக்கத்தோடு பெரும்பான்மை இனம்–மதம்–மொழி சார்ந்தோர் சிறுபான்மையினரை ஒதுக்குவதும், அதற்கு ஆட்சியாளர்கள் ஒத்துழைப்பதுமான காட்சிகள் இல்லை. அண்மைக் காலமாக இந்நாடுகளில் மதம் சாராதவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. சீனாவில் 56 இனப் பிரிவுகள் இருக்கின்றன. 90 சதவீதத்தினரான ஹான் சைனீஸ் மக்களுடன் திபெத்தியர், உய்குர், மோங்கோல், ஜூவாங், மஞ்ச்சு உள்ளிட்ட இதர பிரிவினர் இணக்கமாக வாழ்கின்றனர். பல்வேறு மொழிகள், மரபுகள், விழாக்கள், உணவுகள், உடைகள் சீனாவின் பன்மைத்துவத்தை அழகாகப் பிரதிபலிக்கின்றன. கியூபா சமுதாயம் பூர்வீகக் குடிகளின் மரபுகளோடு ஆப்பிரிக்க, ஸ்பானிய தாக்கங்களின் கலவையான பண்பாட்டைப் பேணுகிறது. பெரும்பான்மை மதம் ரோமன் கத்தோலிக்கம். சாண்டேரியா என்ற மதமும் பரவலாகப் பின்பற்றப்படுகிறது. இரு பிரிவினருமே இரு பிரிவு ஆலயங்களுக்குச் செல்வார்கள். பிராட்டஸ்டண்ட், இஸ்லாம், பௌத்தம், பஹாய் மதங்களைப் பின்பற்றுவோரும் இருக்கிறார்கள். எல்லாப் பிரிவினருமே விரும்பிச் செயல்படுத்துகிற  பாரம்பரியமான ஒற்றைப் பண்பாடு ஒன்று உண்டு –ஊரே கூடி ஆடும் நடனம்! 54 இனப் பிரிவுகள் வாழும் வியட்நாமில், கின் (வியட்) மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஹமாங், சாம், டே உள்ளிட்ட சிறுபான்மை இனத்தவர்கள் மொழி, உடை, இதர பாரம்பரியங்களின் பன்முக அழகைப் பராமரித்து வருகிறார்கள். கொரிய மக்கள் ஜனநாயகக் குடியரசில் ஆகப் பெரும்பாலோர் (99 சதவீதம்) கொரிய இனத்தவர். “கடவுள் அறியப்படாதது, அறிய முடியாதது” என்று கருதும் ‘கடவுள் கருத்தற்றவர்கள்’ 58 சதவீதத்தினரும், கடவுள் மறுப்பாளர்கள் 15 சதவீதத்தினரும் உள்ள இந்நாட்டில் சியோண்டோ, ஷாமன், பௌத்தம், கிறிஸ்துவம் சார்ந்த சிறுபான்மை மதத்தினரும் தங்களின் நம்பிக்கைகளோடு இருக்கிறார்கள். லாவோஸ் நாட்டில்   ‘லாவோ லூவும்’ (தாழ்நில சமூகம்) பிரிவினர் மக்கள்தொகையில் பாதியாக இருக்கின்றனர். இவர்களுடன் ‘லாவோ தியோங்’ (மேட்டுநில சமூகங்கள்), லாவோ சுங் (மலைவாழ் பழங்குடிகள்) உள்ளிட்ட 49 இனக்குழுக்கள் உள்ளன. தேரவாத பௌத்தம் பெரும்பான்மை மதம் (65 சதவீதம்). பூர்வீகக் குடிகள் சார்ந்த மதங்களும், கிறிஸ்துவம், இஸ்லாம் மதங்களும் உள்ளன. பாரம்பரிய நெசவும் இசையும் நடனமும் லாவோ பண்பாட்டுடன் ஒருங்கிணைந்தவை.

இந்தியக் கனி

பண்பாட்டுப் பன்மைத்துவத் தடங்கள் இந்தியாவின் வரலாறு நெடுக அழுத்தமாகப் பதிந்திருக்கின்றன. பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்கள், வாழ்க்கை முறைகள் சார்ந்த மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தில் விளைந்த கனிதான் சுதந்திர இந்தியா. கீழடி, சிந்துவெளி என்று தொடங்கித் தழைத்த நாகரிகங்கள் பங்களித்திருக்கின்றன. தடகளத்தில் ஓடுகிறவர்களுக்கு அதில் தோண்டப்படும் குழிகள் தடையாவது போல, ஒற்றைக் கலாச்சாரவாதிகளின் அத்துமீறல்கள் சவால்களாகின்றன. அவற்றைத் தாண்டி இந்திய மக்கள் நாட்டையும் பாதுகாத்து, பன்மைத்துவப் பண்பாட்டையும் உயர்த்துகிறார்கள். அந்த அடித்தளத்தில் ஊன்றப்பட்டதுதான் இந்திய அரசமைப்பு சாசனம். நம்பிக்கைச் சுதந்திரம், கருத்து வெளிப்பாடு, பண்பாட்டுப் பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை இந்தப் பாரம்பரியத்திலிருந்தே அரசமைப்புச் சாசனம் உறுதிப்படுத்துகிறது. 22 அலுவல் மொழிகள் அங்கீகரிக்கப்பட்டிருப்பதற்கும் இதுவே அடிவாரம். இது பற்றி ஒரு கருத்தரங்க மேடையில் உரையாளர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, அவையில் அருகே  அமர்ந்திருந்த ஒரு பெரியவர், “பல மீனு கிடந்தா ஊருணி; பல மனுசர் இருந்தா ஊரு,” என்று சர்வ சாதாரணமாகச் சொல்லி வியக்க வைத்தார். நிகழ்வு முடிந்ததும் அவருடன் பேச்சுக்கொடுக்க எண்ணியிருந்தேன், ஆனால் முன்னதாகவே எழுந்து போய்விட்டார். கிராமங்களில் தேடினால் இப்படி ஏராளமாகக் கிடைக்கும். ஆதிக்கவாதிகளின் செயல்களோ மிரள வைக்கின்றன. சாதித் தூய்மை, பாலினப் பாகுபாடு, மதவாதம் என்று எத்தனை அடையாள அரசியல் மிரட்டல்கள்! உணவையும் அரசியலாக்கினார்கள். ஒன்றிய ஆட்சியில் இருக்கிறவர்களே வீசுகிற பன்மைத்துவ ஒவ்வாமை வார்த்தைகளைக்  கேட்கிறோம். சட்டங்களுக்கு இந்தியில் பெயர் சூட்டும் அகங்காரத்திலும், கல்வியில் மும்மொழித் திணிப்பு மூர்க்கங்களிலும் இருப்பது பன்மைத்துவப் பகைமையே அல்லவா? பஹல்காம் வெறியாட்டத்தைத் தொடர்ந்து பயங்கரவாதிகளின் பதுங்கிடங்களைத் தாக்கிய, நாடே வரவேற்ற நடவடிக்கைக்கு “சிந்தூர்” என்று மதத்தோடு இணைக்கிற பெயர் சூட்டப்பட்டது. சுமங்கலிகளின் மங்கலச் சின்னம் நெற்றியில் வைக்கும் பொட்டில் இருக்கிறதென்ற, அந்தப் பெயரின் பழமை அடையாளமும் பெண் சுதந்திரத்திற்கு எதிரான ஒற்றைத்துவத் திணிப்புதான். நாடு முழுவதுக்கும் வரப்போவதாக ஒன்றிய ஆட்சியாளர்கள் கூறுகிற பொது சமூகச் சட்டம், உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது.  அது சிறுபான்மை மக்களின் பண்பாட்டு அடையாளங்களையும், அனைத்துப் பெண்களின் இணைத் தேர்வுச் சுதந்திரத்தையும் பறிக்கிறது, மண வாழ்க்கை குறித்து  முடிவு செய்வதை அதிகாரிகளிடம் விடுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இயக்கங்களும், மனித உரிமை அமைப்புகளும் சுட்டிக்காட்டியுள்ளன.

வரலாற்றுப் புத்தகத்தில்

உலக வரலாறு எனும் புத்தகம் திறந்தே இருக்கிறது. மூன்று கண்டங்களுக்கு விரிந்து 600 ஆண்டுகள் நிலைத்திருந்தது ஓட்டோமான் பேரரசு. கடைசிக் காலத்தில் ஒற்றைக் கலாச்சார வெறியோடு பன்முகப் பண்பாடுகளைக் கொடூரமாக ஒடுக்கிய அந்தப் பேரரசு 1922இல் காணாமல் போனது. 51 ஆண்டுகாலம் ஐரோப்பாவில் வலிமையாகக் கோலோச்சிய ஆஸ்ட்ரோ-ஹங்கேரிய பேரரசு, முதலாம் உலகப்போர் முடிவடைந்ததோடு தகர்ந்துபோனது. அதற்கொரு முக்கியமான காரணம் ஜெர்மன், ஹங்கேரியக் கலாச்சாரங்கள் மற்ற தேசிய இனங்களின் பண்பாட்டு உரிமைகளை ஒடுக்கியதேயாகும். இந்திய மண்ணில் மௌரியர், குப்தர், சோழர், தில்லி சுல்தானகம், விஜயநகரம், முகலாயர் என  பல பேரரசுகள், பல தலைமுறைகள் தொடர முடிந்ததற்கு ஒரு காரணம் வெவ்வேறு பகுதி மக்களின் பண்பாட்டு அடையாளங்களை அனுமதித்ததுதான் (அனல்வாத–புனல்வாத அநீதி போன்றவை விதிவிலக்கு).   அவற்றின் வீழ்ச்சிக்குக் காரணம் உள் பலவீனங்களும் வெளிநாட்டவர் படையெடுப்புகளும்தான்.  இதைப் பற்றியெல்லாம் நிதானமாக அமர்ந்து விவாதிப்பதற்கோ, அனைவரும் ஏற்கத்தக்க சரியான கொள்கைகளை வகுப்பதற்கோ தேவைப்படுவது –அது எங்கே என்று தேட வைப்பது– ஜனநாயகப் பண்பாடு. ஆகவே, பண்பாட்டுப் பன்மைத்துவத்தைப் பழுதின்றிப் பாதுகாக்கிற பொறுப்பு, முற்போக்கு இயக்கங்களோடு சேர்ந்து, இதுவரையில் அதைப் பாதுகாத்து வந்திருக்கிற இந்திய மக்களின் தோள்களுக்கு வந்திருக்கிறது.