articles

img

ஒன்றிய மாநில அரசுகளின் ஒருதலைபட்ச முடிவுகளினால் நலிவடைந்து வரும் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் -எம்.ஜெயபால்

இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளாகவே பெரும் நிறுவனங்களின் நலனுக்காகவே தொழில்கள் கட்டமைக்கப்படுகின்றன. ஏற்றுமதி இறக்குமதி கொள்கைகள், நாட்டின் ஏகபோக  நிறுவனங்களின் கனவை நனவாக்கும் முறையிலேயே சட்டங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன. உதாரணத்துக்கு இறக்குமதி கொள்கைகளில் ஜவுளி உற்பத்திக்கு தேவைப்படும் பைபர்களுக்கு (நூல் இழைகள்) இந்தியாவில் உள்ள பெருநிறுவனங்களுக்கு சாதகமாக ஒன்றிய ஆட்சியாளர்கள் கட்டுப்பாடு விதித்தனர்.

பைபர்கள் தர கட்டுப்பாடு (QCO)

தரக்கட்டுப்பாட்டு ஆணைகள் (Quality Control Orders ) மற்றும் இந்திய தர நிர்ணயம்  (Bureau of Indian Standards) என இரண்டு சட்டங்களை உடனடியாக அமல்படுத்தி சர்வதேச நாடுகள் மேற்கண்ட சான்றிதழ்களை பெற்றால் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்ய இயலும் என அமல்படுத்தினர். இதன் எதிரொலியாக சர்வதேச நாடுகளின் விலைகளை விட கிலோவுக்கு பாலிஸ்டர் பைபர் 20 ரூபாயும் விஸ்கோஸ் பைபர் 25 ரூபாயும் கூடுதலாக கடந்த 2023 முதல் வாங்கி வரும் நிலை ஏற்பட்டது.

கடனாளி ஆன தொழில்முனைவோர்

இதன் எதிரொலியாக நாட்டில் உள்ள 5.5 கோடி ஸ்பிண்டல் திறன் உள்ள நூற்பாலைகளும், விசைத்தறி, ஆட்டோ லூம்கள் (தானியங்கி நூற்பாலை), ஆயத்த ஆடை நிறுவனங்கள் என உற்பத்தி செய்யும் ஜவுளி ரகங்கள் அனைத்தும் சர்வதேச விலைகளை விட கிலோவுக்கு 20 முதல் 25 ரூபாய் அதிகமாக இருப்பதினால் போட்டியிட இயலாமல், ஏற்றுமதி செய்து வந்த நிறுவனங்களும் உள்நாட்டிலேயே போட்டியிட்டதினால் சந்தையின் தேவையை விட வரத்து அதிகரித்து உற்பத்தி செய்யும் பொருட்களின் விலை சரிந்து ஆயிரக்கணக்கான தொழில் முனைவோர்கள் மூலதனத்தை இழந்து கடனாளியாக வெளியேறும் நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து ஜவுளித் துறையினர் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியும் அதைப் புறக்கணித்ததுடன், தற்போது ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் மட்டும் எந்த QCO, BIS சான்றிதழ் இல்லாமல் இறக்குமதி செய்து கொள்ளலாம் என அனுமதி அளித்து உள்ளனர். உலகிலேயே அதிக மக்கள் தொகை உள்ள மிகப்பெரிய சந்தை இந்தியா ஆகும். அதே போல 90% ஜவுளி உற்பத்தியாளர்கள் உள்நாட்டில் விற்பனை செய்பவர்களே. சர்வதேச சந்தை விலையை விட உள்நாட்டு மக்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும் என்ற தொழில் கொள்கை பெரு நிறுவனங்களுக்கு சாதகமானதே. 

இதை மாற்றி அமைக்காத வரை 145 கோடி மக்களும் 40 லட்சம் ஜவுளி தொழில் முனைவோர்களும் கொண்ட ஜவுளித்துறையில் 15 கோடி ஜவுளி தொழிலாளர்களும் தொடர்ந்து வேலை வாய்ப்பையும் சர்வதேச ஜவுளி துறையினருடன் போட்டியிட இயலாமல் வர்த்தக வாய்ப்பையும் இழந்து வருகின்றோம்.

நாடு முழுவதிலும் அதிக எண்ணிக்கையில் உள்ள சிறுகுறு நடுத்தர நிறுவனங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தராமல், பெரிய நிறுவன அமைப்புகளின் தரவுகளை கொண்டு தொழில் கொள்கைகளில் மாற்றம் செய்வது என்பது  முதுகு தண்டுவடத்தையே (Spinal Cord) மாற்றம் செய்வதற்கு ஒப்பாகும்.

கடந்த பத்தாண்டுகளில் குறுசிறு நடுத்தர நிறுவனங்களிடம் ஆலோசனை பெறாமல் தொழில் கொள்கைகளில் பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக முடிவுகளை மேற்கொண்டதே தொழில் முனைவோர்களின் இன்றைய அனைத்து பின்னடைவுகளுக்கும் முக்கியக் காரணம்.

மின் கட்டண உயர்வு

மாநில அரசு, மாநில மக்கள் நலன் கருதி செய்யும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் வரவேற்பை பெற்று உள்ளது. குறிப்பாக, “33 மாதங்களில், பல்வேறு மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு 6,569.75 கோடி மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் மொத்தம் 115,16,292 பெண்கள் ரூ. 1,000 பெறுகிறார்கள். பேருந்து பயணத் திட்டத்தின் கீழ் பெண்கள் 445 கோடி முறை அரசுப்பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்திருக்கிறார்கள். மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 1 கோடி பேர் பயனடைந்துள்ளனர். 16 லட்சம் மாணவர்கள் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தில் பயன் பெறுவதாக அறிவிப்பும் ஆன் லைன் மூலம் கட்டிட அனுமதி பெறலாம் என்ற சட்டங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்று உள்ளன.

அதே சமயம் தமிழக மின்வாரியம் கடந்த 2022 செப்டம்பர் மாதம் 26.73 % கட்டணத்தை உயர்த்தியது. அதை தொடர்ந்து பத்தே மாதங்களில் மீண்டும் 2.1 % கட்டணத்தையும் தற்போது 4.83% கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.

ஆக 23 மாதங்களில் 33.74% கட்டணத்தை உயர்த்தியது தமிழக தொழில்துறையினருக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக எல்டிசிடி (LTCT) எனப்படும் தாழ்வழுத்த மின்சாரத்தை குறு சிறு நடுத்தர தொழில் முனைவோர்களே பயன்படுத்தி வருகின்றனர்.

மின்வாரியத்தில் தாழ்வழுத்த மின்சாரத்தை பெற்ற தொழில் முனைவோர்களின் எண்ணிக்கை

LT Industries
Category              No. of Industries          % of Industries
0-50 கிலோவாட்    268039    85%
250-100கிலோவாட்    20475    7%
100-112கிலோவாட்    24351    8%
மேல் 112கிலோவாட்    778    0.25%    
    313643

2024 ல் தமிழகத்தில் உள்ள பதிவு செய்த தொழில்முனைவோர்கள்:

குறு நிறுவனங்கள் -26,48,884

சிறுநிறுவனங்கள் -58591

நடுத்தர நிறுவனங்கள்-5248

பதிவு செய்யாத 50 லட்சத்துக்கு மேற்பட்ட சுய தொழில் செய்பவர்களும் மாநிலத்தில் உள்ளனர்.

நாட்டிலேயே தமிழகம் குறுசிறு நடுத்தர தொழில் முனைவோர்கள் அதிகம் உள்ள 3வது மாநிலம் ஆகும்.

அதிக வேலை வாய்ப்பை கிராமப் புறங்களிலும் நகர்ப் புறங்களில் வழங்கி வரும் குறுசிறு தொழில் துறையினருக்கு கடும் சுமையை ஏற்படுத்தும் விதமாக 23 மாதங்களில் 33.74% கட்டணத்தை உயர்த்தியதுடன், தொழிற்சாலைக்கு வெளியே உள்ள பொது டிரான்ஸ்பாரத்தில் இருந்து தான் எல்டிசிடி மின் இணைப்பை பெற்று வருகின்றனர். 15.3.2003 முதல் இணைப்பு கட்டணத்துக்கு மினிமம் 100 ரூபாய் எனவும் ஃபிக்சட் (Fixed) சார்ஜ் 30 ரூபாய் என அனைவருக்கும் ஒரே அளவில் 10.8.2017 வரை கட்டணத்தை மின்வாரியம் பெற்று வந்தது. செலுத்தி வந்தோம்.

பிறகு 1.8.2010 இல் ஃபிக்சட் சார்ஜ்  (Fixed charge) ரூ.30 என, ஒரு கிலோ வாட்டுக்கு பயன்படுத்தினாலும் பயன்படுத்தாவிட்டாலும் மினிமம் மாதாந்திர கட்டணம் ரூ. 40 செலுத்திவிட்டு அதை யூனிட் கட்டணத்தில் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்ற திட்டத்தை அமல்படுத்தினர்.

தொடர்ச்சியாக 1.4.2012 இல் திரும்பப்பெற இயலாத ஃபிக்சட் சார்ஜ் அமல்படுத்தினர். அதை தொடர்ந்து 11.8.2017 பிறகு கிலோ வாட் ஒன்றுக்கு 35 என திரும்பப் பெற இயலாத கட்டணத்தை விதித்தனர்.

112 கிலோ வாட் எல்டிசிடி மின் இணைப்பை பெற்றவர் 112×35-3920 ரூபாய் மற்றும் யூனிட் கட்டணம் 6.35 பைசா என 2022 ஆகஸ்ட் வரையில் மாத மாதம் செலுத்தி வந்தோம். 2022 செப்டம்பர் மாதம் யூனிட் கட்டணத்தை 7.50 ஆக உயர்த்தியதுடன் டிமாண்ட் சார்ஜ் என கூறப்படும் நிலை கட்டணத்தை ரூ.35 இருந்து 433 % உயர்த்தி 150 எனவும், அடுத்த பத்தே மாதத்தில் 153 எனவும், மூன்றாவது முறையாக 23 மாதத்தில் 160 என உயர்த்தியதால், 112x160 = ரூ.17,920 என தொழிற் சாலையை இயக்கினாலும் இயக்காவிட்டாலும் செலுத்த வேண்டிய கட்டாயம் தமிழக தொழில் துறையினருக்கு ஏற்பட்டு உள்ளது. இத்துடன் வங்கி கடன் பெற்று எங்கள் கூரையின் மீது அமைக்கப்படும் சோலார் மின் உற்பத்திக்கு நெட்ஒர்க் சார்ஜ் என யூனிட் ஒன்றுக்கு எல்டிசிடிக்கு 76 பைசாவும், எச்டி (HT) நுகர்வோர்களுக்கு 1 ரூபாயும் மின்வாரியத்துக்கு செலுத்தி வருகின்றோம். 

மற்ற மாநிலங்களில் சோலார் மின் உற்பத்திக்கு மானியம் அளித்து ஊக்குவிக்கும் போது தமிழகத்தில் ஏன் சோலார் மூலம் மின் உற்பத்தி செய்கின்றீர்கள் என ‘அபராதம்’ விதிப்பது போல, எங்கள் முதலீட்டில் உற்பத்தி செய்யும் மின்சாரத்துக்கு கட்டாய வசூல் செய்து வருகின்றனர். எங்களின் போட்டி மாநிலங்களில் யூனிட் ஒன்றுக்கு 2 முதல் 3 ரூபாய் வரை மானியம் வழங்கி வரும் வேளையில், அதற்கேற்ப தொழில் கொள்கைகளை மாற்றாமல், தொடர்ந்து மின்கட்டணத்தை உயர்த்துவது என்பது எங்களை நலிவுறச் செய்து வருகின்றது. (அட்டவணை கீழே)

மேற்கண்டவாறு நமது போட்டி மாநிலங்களில் மின்கட்டணம் குறைவாக உள்ள போது, எவ்வாறு நாம் போட்டியிட இயலும்?

ஏற்கனவே சர்வதேச சூழல் காரணமாக தொழில்கள் நடத்த இயலாத நிலையில், அரசு உதவாமல் மூன்று முறை மின்கட்டணத்தை உயர்த்தியதை கைவிட வேண்டும். வரலாறு காணாத டிமாண்ட் சார்ஜ் உயர்த்தியதை ரத்து செய்ய வேண்டும்; எங்கள் கூரையின் மீது சோலார் பேனல் அமைத்து உற்பத்தி செய்யும் மின்சாரத்துக்கு நெட்வொர்க் சார்ஜ் ரத்து செய்ய வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. கடந்த இரண்டாண்டுகளில் பல்வேறு போராட்டங்களை முதல்வர் அவர்களின் கவனத்தை ஈர்க்க செய்து வருகின்றோம்.

கடைசியாக நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் முதலமைச்சர் அவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அன்று, தேர்தல் முடிந்ததும் பேசிக் கொள்ளலாம் என்றார்கள். மாவட்ட பொறுப்பு அமைச்சர்களும் எங்களிடம் வாக்கு சேகரிக்க வந்த போதும் இதே உறுதியை அளித்தனர். தேர்தலில் 40/40 பெற்று வரலாறு காணாத வெற்றி கிடைத்தது. அதே மகிழ்ச்சியில் தொழில் முனைவோர்களின் கோரிக்கையை ஏற்று செய்து தருவார்கள் என்று இருந்த வேளையில் 4.83% சதவீதம் மீண்டும் மின்கட்டணத்தை உயர்த்தியது என்பது, தமிழகத்தில் தொழிலே செய்யவே இயலாத நிலையை உருவாக்கி உள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாநில நலனில் மிகுந்த அக்கறை செலுத்தி கோடிக்கணக்கான மக்கள் நலம் பெறும் திட்டங்களை அறிவித்து அனைவரும்போற்றும் வகையில் நிர்வாகம் செய்து வருகின்றீர்கள். தொழில் முனைவோர்களின் ஒரே கோரிக்கை. நிலைக் கட்டணத்தையும் கூரையின் மீது அமைக்கப்பட்ட சோலார் நெட்வொர்க் கட்டணத்தையும் எல்டிசிடிஎச்டி (LTCT HT) என பாகுபாடு பார்க்காமல் முழுவதையும் ரத்து செய்து குறு சிறு நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு வாழ்வாதாரத்தை அளித்து பாதுகாக்க வேண்டுகின்றோம்.

மின் கட்டண ஒப்பீடு (11 கி.வா. சப்ளை லைன்) - 1.7.2024ல் கிலோ வாட் - மணிக்கு ரூ.
கட்டணம்                                   தமிழ்நாடு       ஆந்திரா        தெலுங்கானா    கர்நாடகா      குஜராத்       ராஜஸ்தான்     பஞ்சாப்       மகாராஷ்டிரா
மின் கட்டணம் 
(பீக் அவர் மற்றும்
இரவு நேர தள்ளுபடியுடன்)     7.75     6.37     7.65     6.9     45     63     6.46    8.14
தேவைக் கட்டணம் ரூ./கி.வா./ மாதம்     589.00     475.00     475.00       340.00       475.00  270.00      263.00      549.00
தேவைக் கட்டணம் / யூனிட்    0.91     0.73     0.73     0.52     0.73     0.42     0.41     0.85
மொத்தம்                                         597.66        482.10    483.38  347.42  480.23   276.72    269.87   557.99
எரிபொருள் சர்ஜார்ஜ்    0    0.52    0.3    0.5     2.85     0.22         0.05     0.65
இ-வரி     5%     1%     0.06%     6%    15%     0.65%         0.13%     9%    
இ-வரி (1 யூனிட்)    0.43     1.00     0.06     0.45    0.78        0.65     0.89    0.84    
மொத்தம்    9.09     8.62     8.74     8.37    8.87        7.59      7.81    10.47