சென்னை நகரின் தென்பகுதியில் அமைந்துள்ள பள்ளிக்கரணை நன்னீர் சதுப்பு நிலம், சென்னை மற்றும் அதைச் சுற்றி அமைந்துள்ள மூன்று மாவட்டங்களின் மழை வெள்ள நீரின் வடிநிலமாக உள்ளது. இப்போதும் மழை வெள்ளம் இவ்வழியை தேடியே வருகிறது. இச்சதுப்பு நிலம் சுருக்கப்பட்டதன் விளைவாகவே, சென்னைப் பெருநகரம் மழை நாட்களின் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கிறது.
6000 ஹெக்டேர் அளவிற்கு விரிந்து கிடந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தற்பொழுது 600 ஹெக்டேராக சுருங்கி விட்டது என அரசு ஆவணங்கள் தெரிவிக்கின்றன. உண்மை நிலை இதைவிட குறைவாக இருப்பதற்கே வாய்ப்பு அதிகம்.
பலவிதமான பறவைகளும் பாலூட்டிகளும் உணவு, தண்ணீர் மற்றும் தஞ்சம் ஆகியவற்றிற்காகவும், இடம் பெயர்வு இனப் பெருக்கத்திற்காக சதுப்பு நிலைகளை சார்ந்துள்ளன. சதுப்பு நிலைகளின் நுண்ணுயிர்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகள் நீர், நைட்ரஜன் மற்றும் சல்பர் ஆகியவற்றின் உலகளாவிய சுழற்சிகளின் பகுதியாக உள்ளன. வானிலை பராமரிப்பு கூட சதுப்பு நிலைகளின் கூடுதல் செயல்பாடாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர். மொத்தத்தில் ஈர நிலங்களை பாதுகாப்பது என்பது உயிர் பன்மையை பாதுகாத்திடவும் இயற்கையின் சமநிலையைப் பேணவும் உதவுகிறது.
நிலப்பரப்பு சுருங்க காரணம் என்ன?
வேகமான நகரமயமாதல் இதுபோன்ற சூழல் சீர்கேட்டிற்கு முக்கிய காரணமாக அமைகிறது. சுற்றுச்சூழலைக் பாதிப்புக்குள்ளாக்கி நடைபெறும இத்தகைய வளர்ச்சியும் விரிவாக்கமும் முதலாளித்துவ திட்டமிடலில் உள்ள தோல்வியை எடுத்துக்காட்டுகிறது. இந்த நிலப்பரப்பை பாதுகாக்க வேண்டிய அரசே இந்நிலத்தில் கனிசமான பகுதியை ஆக்கிரமிப்பு செய்துள்ளது.
தேசிய கடல் வள ஆய்வு நிறுவனம், காற்று சக்தி ஆராய்ச்சி நிறுவனம், உலக தமிழ் ஆய்வு நிறுவனம், ரயில் நிலையங்கள் என இந்நிலத்தில் உள்ள அரசு கட்டிடங்களின் பட்டியல் நீளும். தனியார் முதலாளிகளின் பொருளாதார சிறப்பு மண்டலங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் போன்றவையும் பெருமளவில் இந்த நிலப்பரப்பு சுருங்கியதற்கான காரணமாகும்.
மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பெருங்குடி குப்பை கொட்டும் வளாகம் சதுப்பு நிலத்தின் பகுதிதான். சதுப்பு நிலத்தின் குணாம்சத்தையே கெடுக்கும் வகையில் இதன் தாக்கம் உள்ளது. இங்கே கொட்டிய குப்பை ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நிலத்தடி நீரை மிக மோசமாக மாசடைய செய்துள்ளது. நிலத்தடி நீர் மாசின் காரணமாக இந்த பகுதியில் பிறக்கும் குழந்தைகளில் நீல நிற குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது.
குப்பை கொட்டுவதை நிறுத்த பசுமை தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை சூழல் அமைப்புகள், சூழல் ஆர்வலர்கள் நாடினர். உடனடியாக குப்பை கொட்டுவதை நிறுத்தி, சதுப்பு நிலத்தை மீட்டுருவாக்கம் செய்ய பசுமை தீர்ப்பாயமும், உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டன. மேலும், நிலத்தை உடனடியாக வனத்துறையின் கட்டுப்பாட்டிற்கு மாற்றவும் வழிகாட்டின.
இதனை மறுத்து சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணிகளை மாநகராட்சி செய்து வருகிறது. இதற்கான கருத்து கேட்பு கூட்டத்தில் கூட மாநகராட்சி ஆணையர், மேயர் பங்கேற்கவில்லை. அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும், பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மக்கள் கருத்தை புறந்தள்ளி மாநகராட்சி செயல்படுகிறது. பூங்கா அமைப்பது சதுப்பு நிலத்தை மேலும் சீரழிப்பதற்கும், ரியல் எஸ்டேட் மாஃபியாக்களுக்கு உதவி செய்வதாகவே அமையும்.
நீதிமன்ற உத்தரவுப்படி தேசிய கடல் வள ஆராய்ச்சி நிறுவனத்தை வேறு இடத்திற்கு மாற்றும் பணிகள் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தையும் சதுப்பு நிலத்திலிருந்து அகற்ற வேண்டும். எல்லா காலத்திலும் எல்லாவகையான நெருக்கடியின் போதும் ஆளும் வர்க்கம் நெருக்கடிக்கான தீர்வாக ஏழை எளிய உழைக்கும் வர்க்கத்தை பலி கொடுக்கிறது. இதனை மாற்றி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த சதுப்பு நிலத்தினை பாதுகாப்பதற்கான முயற்சியில் அரசு ஈடுபட வேண்டும்.
இதற்கு தேவையான தகுந்த அறிவியல் வழிமுறைகளையும் வல்லுனர்களையும் ஈடுபடுத்த வேண்டும். முதலாளித்துவ வளர்ச்சியின் உப விளைவாக உள்ள வாழ்விடம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளோடு இந்த சதுப்பு நில மீட்டுருவாக்கத்தை திட்டமிட வேண்டும்.
டி.சுந்தரராஜன்
துணைத்தலைவர்,
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
மற்றும் பாதுகாப்பு இயக்கம்