articles

img

மானுடத்தின் மாபெரும் நம்பிக்கை... சோசலிச கியூபா - எம்.கண்ணன்

மானுடத்தின் மாபெரும் நம்பிக்கை... சோசலிச கியூபா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் வரிவிதிப்பும், அதை தொடர்ந்து நடைபெறும் வர்த்தகப் போர்களும் உலக நாடுகளை நிலைகுலையச் செய்திருக்கின்றன. “உலகம் ஒரு புதிய பொருளாதார சிக்கலை நோக்கி செல்கிறதோ?” என்ற அச்சமும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இதே அமெரிக்காவின் 60 ஆண்டுகால கொடூரமான பொருளாதார தடை, 50-க்கும் மேற்பட்ட தடைச் சட்டங்கள், 11 அமெரிக்க ஜனாதிபதிகளின் சதித்திட்டங்கள் — எல்லாவற்றையும் தன் குருதியில் கரைத்து, உயிர்த்தெழுந்து ஒரு நாடு கம்பீரமாக நிற்கிறது. அதுதான் சோசலிச கியூபா. கியூபா ஒரு சிறிய தீவு. அதனைச் சுற்றி நான்கு புறமும் கடல் சூழ்ந்திருக்கிறது. அந்தக் கடல்களைச் சுற்றி இரும்பு வளையம் போல் அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் இறுக்கப்பட்டிருக்கிறது. உணவு, மருந்து, எரிபொருள் என உயிர்நாடியான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் அமெரிக்கா தடை செய்து, கியூபாவை துண்டித்திருக்கிறது.  தனது மக்களை பட்டினியால் வதைக்கும் விதமாக கடும் தடைகளை ஏகாதிபத்தியம், கியூபாவுக்கு எதிராக விதித்துள்ளது.  எத்தனை தடைகள் விதிக்கப்பட்ட போதிலும் சோசலிசத்தை உயர்த்திப் பிடித்து  மானுடத்தின் புதிய விடியலுக்கான நம்பிக்கை ஒளிக்கீற்றாக பிரகாசிக்கிறது கியூபா. புரட்சியின் தலைவர் பிடல் காஸ்ட்ரோவின் “சோசலிசம் அல்லது மரணம்” என்ற முழக்கம், கியூபாவின் ஒவ்வொரு இளைஞரின் இதயத்திலும் ஒலிக்கிறது. அதனை நேரில் காணும் நல்வாய்ப்பு சர்வதேச இடதுசாரி பத்திரிகையாளர்கள் மாநாட்டையொட்டி கிடைத்தது.

சர்வதேச மாநாடு

கியூபாவின் தலைநகரான ஹவானாவில்  2025 மார்ச் 17 முதல் 19 வரை ‘பாட்ரியா-4 (கொலோக்கியம்)’ என்ற சர்வதேச மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பத்திரிகையாளர்கள், ஊடக நிபுணர்கள், ஆய்வாளர்கள் என பலரும் பங்கேற்றனர். 40 நாடுகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளின் பங்கேற்போடு இந்த மாநாடு நடைபெற்றது. லத்தீன் அமெரிக்க இடதுசாரி நாடுகளை குறிவைத்து சமூக ஊடகம் மற்றும் கார்ப்பரேட் ஊடகங்கள் மூலம் தவறான தகவல்களை பரப்பி, மேலாதிக்க நாடுகள் குழப்பத்தை உருவாக்க தொடர்ந்து முயன்று வருகின்றன. ஒரு சிறு பகுதி குழப்பத்தையும் உருவாக்கியிருக்கின்றனர். அதனை எப்படி அதே தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் மூலம் எதிர்கொள்வது என இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. சமூக ஊடகம் உள்ளிட்ட நவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் மூலம் எப்படி சோசலிசத்திற்கு எதிராக ஒரு கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துகின்றனர் என்பது குறித்த ஆய்வு முடிவுகள் முன்வைக்கப்பட்டன. அதன் மீதான ஆழமான விவாதங்களும் நடைபெற்றன. தொழில்நுட்பங்களை மக்களை அடக்குவதற்கான கருவியாக மேலாதிக்க நாடுகள் பயன்படுத்துகின்றன. அதே தொழில்நுட்பங்களை நாம் விடுதலைக்கான கருவியாக மாற்ற முடியும் என்பதை பிடல் காஸ்ட்ரோவும், சாவேசும் இணைந்து உருவாக்கிய ‘டெலிசூர்’ செய்தித் தொலைக்காட்சியின் அனுபவத்தோடு முன்வைத்தனர். தொடர்ச்சியாக தொழில்நுட்ப, ஊடக மற்றும் அரசியல் மேலாதிக்கத்தை எதிர்க்க மக்கள் சக்தியை ஊக்குவிப்பது, உலகளவில் ஒருங்கிணைந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு வலைப்பின்னலை உருவாக்குவது என தீர்மானிக்கப்பட்டது.

சமூகப் புரட்சியின் அடித்தளம்

“கல்வி என்பது ஒரு தேசிய சுதந்திரத்திற்கான ஆயுதம். அது மக்களை ஏமாற்றாமல் பாதுகாக்கும்” — பிடல் காஸ்ட்ரோ அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதாரத் தடை, இராணுவ மிரட்டல்கள் மற்றும் கலாச்சார ஊடுருவல்களை எதிர்கொண்டாலும், கியூபா கல்வி என்ற ஆயுதத்தால் அதன் சுதந்திரத்தையும் சோசலிச முறையையும் பாதுகாத்து வருகிறது. கல்வியை ஒரு சமூகப் புரட்சியின் அஸ்திவாரமாக கொண்டு, ஏகாதிபத்தியத்தின் தாக்கங்களை முறியடித்து, உலகிற்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறது. 1959-ல் நடந்த புரட்சிக்குப் பிறகு கல்வி முறையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. 1961-ல் மக்கள் எழுத்தறிவு இயக்கம் தொடங்கப்பட்டது. அதன் முதல் படி: புரட்சி என்பது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது மட்டும் அல்ல. அனைத்து மக்களுக்குமான சமமான வாய்ப்போடு கல்வி, சுகாதாரம், வாழ்க்கைத் தரம் ஏற்படுத்தும் வரை அது தொடரும் எனும் சேகுவராவின் முழக்கத்தின்படி அந்த இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. 22 சதவிகித மக்களுக்கு மட்டுமே தரமான கல்வி வாய்த்திருந்த அக்காலக் கட்டத்தில், 1,28,000 கல்விப் புரட்சியாளர்கள் மூலமாக, 817 எழுத்தறிவு மையங்களில், ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்களுக்குக் கல்வி புகட்டியது அந்த இயக்கம். கிராம, நகரப் பெண்களுக்கு இடையே வாய்ப்பு வசதிகளில் நிலவும் இடைவெளியை கியூபா பெண்கள் கூட்டமைப்பு (Federation of Cuban Women) மூலம் களைந்து, அனைவருக்கும் சம வாய்ப்பு உத்தரவாதப்படுத்தப்பட்டது. சமூக மாற்றங்களுக்கான கல்வி (Education for Social Change) என்ற கொள்கையோடு காஸ்ட்ரோவின் 1981 இயக்கத்தின் வழியே சமூகநீதியும், சமத்துவமும், நவீனத்துவமும் முதன்மைப்படுத்தப்பட்டது. தொடக்கக் கல்வியில் நுழையும் 100 கியூபக் குழந்தைகளில் 99 பேர் உயர்நிலைப் பள்ளி இறுதிப் படிப்பை முடிப்பவர்களாக இருந்து வருகின்றனர். ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை அனைத்தும் இலவசம். அதனை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பாக இருக்கிறது. கியூபாவின் கல்வி முறை “அனைவருக்கும் இலவச, சமத்துவ மற்றும் தரமான கல்வி” எனும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. அதோடு இணைத்து உழைப்பின் மதிப்பு, கூட்டுறவு மனப்பான்மை, சமத்துவம் போன்ற கோட்பாடுகள் மாணவர்களிடம் வேரூன்றும் வகையில் கற்பிக்கப்படுகிறது. குறிப்பாக சோசலிசக் கொள்கையின் முக்கியத்துவத்தை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்கின்றனர். கல்வி, உழைப்பு மற்றும் சமூக மாற்றம் ஆகியவற்றை இணைக்கும் தனித்துவமான முயற்சியும் உள்ளடங்கியிருக்கிறது. கல்வியின் மூலம் சமூகத்தை மீண்டும் வடிவமைப்பதற்கான முன்மாதிரியாக உள்ளது.

பாடத்திட்டம்

பாடத்திட்டங்களிலும் சமூக மேம்பாட்டிற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக சோசலிச சிந்தனைகள் முதன்மைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதில் கியூபப் புரட்சியின் வரலாறு மற்றும் மார்க்சியம்-லெனினியமும் கற்றுத்தரப்படுகிறது. பாடத்திட்டத்தோடு இணைந்தே உடற்கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. விளையாட்டைப் பொறுத்தவரை, மாணவர்கள் உடற்கல்வி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும்; மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் விளையாட்டுகளில் முன்னேற அனைத்து வாய்ப்பு வசதிகளையும் கியூப அரசே அளித்து வருகிறது. மொழிகளைப் பொறுத்தளவில், தாய்மொழியான ஸ்பானிஷ் கட்டாயம். மூன்றாம் வகுப்பில் (8 முதல் 9 வயது வரை) தொடங்கி, அனைத்து மாணவர்களும் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறும் வரை ஆங்கில வகுப்புகளைப் பெறத் தொடங்குகிறார்கள். அறிவியல் & தொழில்நுட்ப பாடங்களில் கணிதம், உயிரியல், கணிப்பொறி அறிவியல் உள்ளிட்ட பிரிவுகளும் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன. பாடத்திட்டத்தில் எய்ட்ஸ் தடுப்பு, பாலியல் சமத்துவம் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி இசை, நடனம், ஓவியம் போன்ற கலைகளும் கட்டாயப் பாடங்களாக உள்ளன. தொடக்கப்பள்ளிக் கல்வி 12 ஆண்டுகள். அதில் இசை, சுகாதாரக் கல்வி, நடனம், நாட்டுப்பற்று, தோட்டடக் கலை  ஆகியவை அடிப்படை பாடப்பிரிவுகளாக உள்ளன. அனைத்து கல்வி நிலையங்களிலும் குழந்தைகளின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மருத்துவக் குழுக்கள் இருக்கின்றன.

ஆசிரியர்களின் பங்கு

ஆசிரியர்களுக்கு சோசலிசக் கல்விக் கொள்கைகள் உள்ளிட்ட பல்வேறு பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. மேலும், ஆசிரியர்கள் கிராமங்களில் குறைந்தது 2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். மாணவர்களின் குடும்பங்களோடு வாரந்தோறும் சந்திப்பு நடத்த வேண்டும். இது தவிர, பயிற்சியளிக்கும் முதன்மைப் பாடங்களில் புலமை பெற்றவர்களாக இருக்கும்படி சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. ஆசிரியர் பணி சமூகத்தில் மரியாதைக்குரியதாக இருக்கிறது. சம்பளமும் மற்றவர்களின் சராசரி ஊதியத்தைவிட அதிகமாக கொடுக்கப்படுகிறது. சிறந்த ஆசிரியர் பயிற்சி முறைக்கு கியூபா உலகிற்கு முன்னுதாரணமாக உள்ளது. வகுப்பறையில் கலந்துரையாடுதல்  விவாதித்தல் ஆகிய முறைகள் உறுதி செய்யப்படுகின்றன. ஆசிரியர்-மாணவர் உறவு குழுத் தலைவருக்கும் உறுப்பினர்களுக்கும் இடையிலான உறவைப்போல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர் பணியால் அமெரிக்கா உட்பட 62 வளர்ந்த நாடுகளில் குழந்தைகளின் அறிவுத் திறன் சராசரி 70 புள்ளிகளாக இருக்க, கியூபா குழந்தைகளின் அறிவுத் திறன் சராசரி 100 புள்ளிகளை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.