articles

img

துப்புரவுப்பணி : இழிவை அகற்றுமா அறிவியல்?-​​​​​​​கே.சாமுவேல்ராஜ்

142 கோடி மக்கள் தொகை கொண்ட சீனாவை விஞ்சி 144 கோடி மக்களுடன்  இந்தியா உலகின் முதல் மக்கள் தொகை நாடாக உருவாகி இருக்கிறது.

“தி எனர்ஜி அண்ட் ரிசோர்சஸ் இன்ஸ்டிட்யூட் ஆய்வு” ,2023 ஏப்ரல் நிலவரப்படி இந்தியாவில் நாளொன்றுக்கு 6.2 கோடி டன் திரவக் கழிவுகளும், 16 லட்சம் டன்  திடக்கழிவுகளும் உற்பத்தியாவதாகத் தெரிவிக்கிறது. கழிவு மேலாண்மை நவீனப்பட வேண்டியதன் அவசியத்தை இந்த அளவீடுகள் உணர்த்துகின்றன.

இன்று வரை அறிவியல் தொழில் நுட்பமும்,குறிப்பிடத்தக்க முதலீடுகளும் கழிவு மேலாண்மைத் துறையில் செய்யப்படாமல் இருப்பதன் காரணத்தை விளங்கிக் கொள்வது அவ்வளவு கடினமானதல்ல.  இங்கே கழிவுகளை அகற்றுதல் என்பது சில சாதிகளுக்கு விதிக்கப்பட்டதாக  இருக்கிறது.அது இன்றும் தொடர்கிறது.

குப்பைக்காரர்களா?

உடலால் கழிவு அகற்றுதல் என்பதற்கு எவ்வளவு நவீனமாக சொன்னாலும் இதற்கு வேறு வார்த்தை இல்லை. ‘ஆயரேநட ளுஉயஎநபேநசள’ என்கிற வார்த்தையை, விக்கிபீடியா இந்தியாவில் மட்டுமே பயன்படுத்தப்படுகிற சொல் என்கிறது. இந்தியாவிலும், இந்தியாவின் பகுதிகளாக இருந்த பாகிஸ்தான் உள்ளிட்ட  தேசங்களில் மட்டுமே இச்சொல் இருக்கிறது.

இந்தியாவைத் தவிர வேறு எங்கும் கையால் கழிவு அகற்றுபவர்கள் (ஆயரேநட ளுஉயஎநபேநசள) என்கிற சொல் புழக்கத்தில் இல்லை என்பதையும், இந்தியாவைத் தவிர தீண்டத்தகாதவர்கள் என்கிற மக்கள் பிரிவினர் வேறெங்கும் இல்லை என்பதையும்  இணைத்துப் பார்க்க வேண்டும்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் குப்பைக் குழியில் தள்ளிவிடப்பட்ட தீண்டத்தகாத மக்களில் ஒரு பிரிவினர் இன்னமும் அதற்குள்ளேயே அழுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் குப்பைக் காரன், குப்பைக்காரி,ஒடிசாவில் பெட்டிவாலி,கர்நாடகத்தில் ஒட்டிகார்,கான்பூரில் மர்டிவாலி என மாநிலத்திற்கு ஒரு பெயரில் ‘குப்பைக்காரர்களாகவே’  வாழ்வதற்கு ஒரு பகுதி மக்கள் நிர்பந்திக்கப்பட்டு இருக்கிறார்கள்.

துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்நிலை பற்றி பேசுவதற்கு முன்னால் குப்பைகளை உருவாக்குகிற ஒரு தேசம் அதனைத் தூய்மைப்படுத்துவதற்கு கையாளுகிற முறைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை.உண்மையில் கழிவு மேலாண்மை என்பது துப்புரவுத் துறையோடும் சுகாதாரத் துறையோடும் மட்டும் இணைத்துப் பார்க்கப்படுகிற ஒரு நடைமுறையே இந்தியாவில் இருக்கிறது. 

துப்புரவு பொறியியல்

ஆனால் உலகத்தின் பெரும்பான்மையான நாடுகளில் கழிவு மேலாண்மை என்பது உயர்கல்வித் துறையின் ஒரு பகுதியாக  மாறி இருக்கிறது. கட்டிடப் பொறியியல்,வாகனப் பொறியியல்,மின்னணுப் பொறியியல் போன்று துப்புரவுப் பொறியியல் துறையும் உயர்கல்வியின் ஒரு பகுதியாகவே  இருக்கிறது.

பிரபலமான  கொலம்பியா,ஹார்வர்டு, கலிபோர்னியா போன்ற பல்கலைக்கழகங்களில் கூட துப்புரவு பொறியியல் துறைக்கு என்று தனித்த பாடப்பிரிவுகள் இருக்கின்றன.இந்த பாடப்பிரிவுகளில் பயில்கிற  பொறியாளர்கள் வீடுகள் தொடங்கி மருத்துவமனைகள், தொழிற்சாலைகள்,வீதிகள்,பொது இடங்கள், கழிவறைகள் வரை திடக்கழிவு,திரவக்கழிவு மேலாண்மை செய்வதற்காக ஏராளமான இயந்திரங்களை , கருவிகளை வடிவமைக்கிறார்கள். அவை உற்பத்தி செய்யப்பட்டு அரசுத் துறையின் பயன்பாட்டிற்கும்,வீடுகள்,நிறுவனங்கள்,மருத்துவமனைகள்,விடுதிகள் என தனி நபர்களின் பயன்பாட்டிற்கும் மிக எளிதில் கிடைக்கிறது.

தொடர்ச்சியாக கழிவு மேலாண்மை குறித்த ஆய்வுகள், நடத்தப்படுவதும் அந்த ஆய்வுகளின் வழியே நவீன கருவிகள் உற்பத்தி செய்யப்படுவதையும் உலகம் தொடர்ந்து செய்து கொண்டேயிருக்கிறது.

கழிவு மேலாண்மை

ஆய்வுகள் நவீன கருவிகளையும் எந்திரங்களையும் வடிவமைத்து, உருவாக்குவதோடு நின்று விடுவதில்லை.கழிவு மேலாண்மையை கையாளக்கூடிய விதத்தில் கட்டிடங்கள் எவ்வாறு கட்டப்பட வேண்டும்.வீதிகளும் கழிவகற்றும் முறைமைகளும் எவ்வாறு மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பதையும் இலக்காகக் கொண்டு இருக்கிறது.

இதன் அடிப்படையிலேயே தான் கட்டிடங்கள் கட்டுவதற்கான அனுமதிகளும் உலகின் பெருவாரியான நாடுகளில் வழங்கப்படுகிறன. ஆனால் இந்திய நிலைமைகளில் ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்படுகிற கட்டடங்களில் கூட கழிவு மேலாண்மைக்கு பாரம்பரியமான முறைகள் மட்டுமே உள்ளன. எனவே தான் கழிவகற்றுதல் என்பது இந்திய சமூகத்தில் மனிதர்களின் தலையிலேயே சுமத்தப்பட்டிருக்கிறது.

லட்சக்கணக்கானோரின் அவலம்

2013  முதல் 2018 வரையிலான ஆண்டுகளில் ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் நடத்திய ஆய்வுகளை மேற்கோள் காட்டி மக்களவையில் அளித்த பதில் அடிப்படையில்  இந்தியாவில் 58,000 க்கும் அதிகமானோர் உடலால் கழிவு அகற்றும் பணியை செய்கின்றனர். இது மிக குறைவான மதிப்பீடு ஆகும்.துப்புரவுத் தொழிலார்கள் மறுவாழ்விற்காக  பணி செய்து வருகிற ‘சபாய் கரம்சாரி அந்தோலன்’ என்கிற மக்கள் அமைப்பு 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் துப்புரவுப் பணியிலும் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் உடலால் கழிவகற்றும் பணியிலும் உள்ளதாகக் கூறுகிறது.

மலக்குழி மரணங்கள்

இவ்வாறே மலக்குழி மரணங்களும் குறைத்துத்தான் தெரிவிக்கப்படுகிறது.அரசின் கணக்கின்படியே 2017 முதல் 2022  ஆண்டுகளில் தமிழ்நாடு 56 மரணங்களுடன் இரண்டாவது இடத்திலும், 61 மரணங்களுடன் உத்தரப் பிரதேசம் முதல் இடத்திலும்  இருக்கிறது. 2023 மே மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 5 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

1993,2013 ஆகிய ஆண்டுகளில் கையால் மலம் அகற்றுதல் தொழிலுக்கு தடை மற்றும் மறுவாழ்வுச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.ஆனால் சட்டத்தின் அமலாக்கத்தில் பெரும் குறைபாடுகள் இருக்கின்றன. 1993 சட்டத்தின் குறைபாடுகள் தவிர்க்கப்பட்டு 2013 சட்டம் இயற்றப்பட்டது உண்மை தான்.2013 சட்டம் பாரம்பரிய கருவிகளைக்கொண்டு இப் பணி நடைபெறுவதை தடைசெய்கிறது.அவ்வாறு செய்திட பணி அமர்த்துபவர்களை குற்றவாளிகள் என தண்டிக்கக் கூறுகிறது.இயந்திரங்கள் மற்றும் கருவிகளைப் பயன்படுத்துவதைக் கட்டாயமாக்குகிறது. குறிப்பாக கையால் மலம் அகற்றுவோரை அடையாளம் கண்டு அவர்களை அதில் இருந்து மீட்டு மறுவாழ்வு தர வேண்டும் என்கிறது.அவர்களின் சந்ததிகள் கல்வி கற்பதை உறுதி செய்ய வேண்டும் என்கிறது.

ஆனால் நடைமுறையில் சட்டத்தை செயல்படுத்த முடியாத அனைத்து வகை சூழல்களும் அப்படியே தொடர்கின்றன. தொழில்நுட்பமும் கருவிகளும்,இயந்திரங்களும் தானாக வளர்ச்சி பெறாது.அதற்கென நிதி ஒதுக்கீடுகளும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் உயர்கல்வி நிலையங்களிலும்,நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களிலும் துப்புரவுப் பொறியியல் துறை உருவாக்கப்பட வேண்டும்.இந்தியச் சமூகம் மாண்பு பெற்றிட வேண்டும். மனசாட்சியுடன் இயங்கிட வேண்டும்.

இன்று கோரிக்கை முழக்கம்

துப்புரவுப் பொறியியல் துறைகளை ஒன்றிய அரசு ஐ.ஐ.டி/ஐ.ஐ.எம்,மத்தியப் பல்கலைக் கழகங்களிலும்,தமிழ்நாடு அரசு அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உடனடியாக  துவக்கிட வேண்டும் என்று 19.7.24 அன்று தமிழ்நாடு முழுவதும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கோரிக்கை முழக்கப் போராட்டம் நடைபெறுகிறது.

கே.சாமுவேல்ராஜ்
பொதுச்செயலாளர் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி