articles

img

தனியார்மயம் மாநில வளர்ச்சியை பாதிக்கும்; மக்களின் உரிமையைப் பறிக்கும்

தனியார்மயம், ஒப்பந்த முறை எதிர்ப்பு கருத்தரங்கம் செவ்வாயன்று (ஆக.6) சென்னையில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) நடத்திய இக்கருத்தரங்கில் தலைவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம்:        தொகுப்பு : செ.கவாஸ்கர்

தனியாரால் முடியும் என்றால் அரசால் முடியாதா?

உலகம் முழுவதும் பெருநகரங் களில் இயக்கப்படும் பேருந்து, மெட்ரோ லாபம் ஈட்டவில்லை. சமூக வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு அவை இயக்கப்படுகின்றன. போக்குவரத்துக் கழகம் லாபம் ஈட்ட வேண்டுமென்றால் பாதி வழித்தடங்களில் பேருந்துகளை நிறுத்த வேண்டும். இலவச பேருந்துகள் இருக்காது.

பொதுப் போக்குவரத்து வந்த பிறகுதான் கல்வி, தொழில் வளர்ச்சி, பெண்கள் வளர்ச்சி போன்றவற்றில் முன்னேற்றம் வந்தது. லாபத்தைக் குறிக்கோளாக கொண்டால்,  உ.பி., பீகாரை விட வளர்ச்சியில் பின்தங்குவோம்.

சமூக வளர்ச்சிக்காக 10ஆயிரம் வழித் தடத்தில் நட்டத்தில் இயக்குகிறோம். அதனால் மக்கள் பயனடைகிறார்கள். நட்டத்தைக் குறைக்க தனியார் பேருந்துகளை இயக்குவ தாக கூறப்படுகிறது. வருவாய் இல்லாத வழித்தடத்தில் தனியார் முதலாளிகள் ஒரே ஒரு பேருந்தையாவது இயக்குவார்களா?

முன்னாள் முதல்வர்

கலைஞர் கருணாநிதி 5 ஆயிரம் வழித் தடங்களில் மினிபஸ் இயக்க தனியாருக்கு ‘பெர்மிட்’ கொடுத்தார். லாபம் இல்லாததால் 3500 தடங்களில் முதலாளிகள் பேருந்து களை இயக்கவில்லை. தற்போது மீண்டும் 5 ஆயிரம் மினி பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி தர உள்ளனர். தனியாரால் முடியும் என்றால் அரசால் பேருந்துகளை இயக்க முடியாதா? போக்கு வரத்திற்கு செலவிடப்படும் தொகை சமூக வளர்ச்சிக்கான மூலதனம். பொதுப் போக்கு வரத்திற்கு செலவிடுவதை கணக்குப் பார்த்தால் அது மக்கள் நல அரசாக இருக்க முடியாது.

அணுகுமுறை ஏற்புடையதல்ல!

அரசு, தொழிற்சங்கங்களோடு பேசி தொழிலாளர்களுக்கான நிதிப்பயன்களை காலதாமதமாக வழங்கலாம். ஆனால், தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 20 ஆயிரம் கோடி ரூபாயை எடுத்து அரசு செலவு செய்துள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஓய்வுபெற்று 22 மாதங்களுக்கு பிறகு ஓய்வுக்கால பலன்களை பெற்றுக் கொள்வார்களா? வாரிசு வேலை மறுத்து விட்டு, ஒப்பந்த முறையில் நிரப்ப முயற்சிப்பது நியாயமா? ஒப்பந்த முறையில் சமூக நீதி, இட ஒதுக்கீடு எங்கே இருக்கும்? நிரந்தர தன்மை யுள்ள பணிகளில் நிரந்தர ஊழியர்களை நிய மிக்க வேண்டும் என்ற சட்டத்தை அமல்படுத்த வேண்டும். சட்டத்தின்படி ஆட்சி நடக்க வேண்டும் என்று கோரினால் அது தவறா? அரசின் அணுகுமுறை ஏற்புடையதல்ல.

தொழிலாளிக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாமா?

1989ஆம் ஆண்டு பால்பண்ணை தொழி லாளர் பிரச்சனை சம்பந்தமாக சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் கலைஞர், தொழி லாளிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் அற்பத்தனம் ஆட்சிக்கு இல்லை என்றார். இப்போது மாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஒப்பந்த முறையில் ஆள் எடுக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்கிறது என்றால், அது சரியா? ஒப்பந்த முறையில் ஆள் எடுப்பது அரசின் கொள்கை என்று சட்ட மன்றத்திலும், நீதிமன்றத்திலும் கூறியுள்ளது. அரசு திருத்திக் கொள்ள வேண்டும். 

தொழிற்சங்க உரிமையை நிலைநாட்டுவோம்!

ஒரு நிறுவனத்தில் 100 பேர் இருந்தால் 95 பேர் நிரந்தரம், 5 பேர் ஒப்பந்த தொழிலாளியாக இருப்பார்கள். தற்போது 5 பேர் நிரந்தரம், 95 பேர் ஒப்பந்த தொழிலாளியாக உள்ளனர். தொழிற்சாலையின் நிலையே தலைகீழாக மாறிவிட்டது. ரோம சாம்ராஜ்ஜியத்தின் கப்பல்  அடிமைகளை விட மோசமாக தொழிலாளர் கள் நடத்தப்படுவதை அனுமதிக்க முடியாது. மண்ணின் மைந்தர்களை விட, லாபத்திற்காக வருகிறவர்களுக்காக கண்ணீர் விடாதீர்கள். ஆலைகளில் சட்டப்படி தொழிற்சங்கங்களை அனுமதிக்க வேண்டும். தொழிற்சங்க உரிமை மறுத்தால் போராட்டம் நடக்கும். சென்னையைச் சுற்றி அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது. தொழிற்சங்கம் தொழிலாளிகளின் ஆயுதம். எந்த விலை கொடுத்தாலும் தொழிற்சங்கத்தை தொழி லாளி அமைப்பார். இதுதான் 200 ஆண்டு கால வரலாறு.

சாம்சங் நிறுவனம் தொழிற்சங்கத்தை அனுமதிக்காமல் அழித்துக் கொண்டு  இருந்தது. இப்போது அதன் தலைமையிட மான தென்கொரியாவிலேயே தொழிலாளி கள் வெற்றி பெற்றுவிட்டார்கள். நிர்வாகம் மண்டியிட்டுவிட்டது. தமிழகத்திலேயும் சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கத்தை அமைத்து விட்டோம். செங்கொடியை பறக்க விட்டுள்ளோம். மோதல் வந்தால் சந்திப்போம்.

ஆலைகளில் குறைந்தபட்சக் கூலியைக் கூட தர மறுக்கிறார்கள். குறைந்தபட்ச கூலி என்று வரையறுப்பதுபோல, குறைந்தபட்ச லாபம் என்று முதலாளிகளுக்கு அரசு தீர்மானிக்குமா? பாஜகவை எதிர்த்த சித்தாந்தப் போராட்டத்தில் தமிழக அரசோடு இணைந்து நிற்போம். அதிகாரிகளின் சொல்படி ஆட்சி நடக்கக் கூடாது. அரசுக்கும் தொழிலாளிக்கும் மோதல் வந்தால், தொழிலாளி பக்கம்தான் நிற்போம்.-அ.சவுந்தரராசன்
மாநிலத் தலைவர், சிஐடியு

திமுக அறிக்கையை அமலாக்கினாலே போதும்!

உலகில் 22 நாடுகளில் இலவச பொதுப்போக்குவரத்து உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மட்டுமல்ல, சமூக முன்னேற்றமும் அதில் அடங்கியுள்ளது. இலவச மகளிர் பயண திட்டத்திற்குப் பிறகு தமிழ்நாட்டின் ஜிடிபி அதிகரித்துள்ளது. தமிழ கத்தில் போக்குவரத்துக் கழகங்கள் மட்டுமல்ல வழித்தடங்களும் தேசியமயமாக்கப்பட்டு உள்ளது. அதன்படி 27 ஆயிரத்து 500 வழித் தடங்களில் பேருந்துகள் இயக்க வேண்டும். ஆனால் 19 ஆயிரத்து 500 வழித்தடத்தில்தான் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒன்றிய அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை ஒரு லட்சம் மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் குறைந்தது 50 முதல் 100 பேருந்துகளை இயக்க வேண்டும்  என்கிறது. அதன்படி, சென்னையில் மட்டும் 10 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். அதன்படி இயக்கப்படவில்லை.

இந்தியாவிலேயே கிராமங்களுக்கு அரசுப் பேருந்துகளை இயக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். மலைகள் மேல் அமைந்துள்ள இமாச்சல் பிரதேசத்தில் கூட இல்லாத வகையில் நீலகிரி மாவட்டத்தில் 450 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகளை அதிகரிக்க வேண்டிய நேரத்தில், பேருந்து வழித்தடங்களை குறைப்பது, என்பது உள்ளிட்ட அதிமுக ஆட்சியில் போடப்பட்ட 8 அரசாணைகளையும், திமுக அரசு மிக வேகமாக அமல்படுத்துகிறது.

போக்குவரத்து துறையில் காலிப்பணியிடங்களை 2 மாதத்தில் நிரப்புவோம்; ஒப்பந்த முறை தற்காலிக ஏற்பாடு தான் என்று துறை அமைச்சர் கூறுகிறார். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 1500 காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் 685 பணியிடங்களை நிரப்ப 2022ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. ஒன்றரை வருடத்திற்கு பிறகு 2024 மே மாதம்தான் பணி நியமனம் நடைபெற்றது. இந்த நிலையில் 25 ஆயிரம் காலிப் பணியிடங்களை இரண்டு மாதத்தில் நிரப்புவோம் என்று அமைச்சர் கூறுவதை ஏற்க முடியுமா?

900 காலிப்பணியிடங்களை ஓய்வுபெற்றவர்களைக் கொண்டு நிரப்ப அனுமதி கேட்டு, ஒன்றரை வருடத்திற்கு முன்பு மாநகர போக்குவரத்துக் கழகம் அரசுக்கு கடிதம் எழுதியது. காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்காமல் ஒப்பந்த முறை புகுத்துவதை எப்படி ஏற்க முடியும்?

தீர்வு என்ன?

2018ம் ஆண்டு அதிமுக பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியது. அப்போது, திமுக, முன்னாள் அமைச்சர்களை உள்ளடக்கிய குழுவை அமைத்து, போக்குவரத்து கழகத்தை  மேம்படுத்த, 32 பக்க அறிக்கையை தயாரித்து அரசுக்கு கொடுத்தது. அதில் ஊதிய ஒப்பந்த தொகை, வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு தர வேண்டும் என்று பரிந்துரைத்தது. இப்போதுள்ள திமுக அரசு அந்த அறிக் கையை அமல்படுத்தினாலே அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.

மினிபஸ்

மினி பேருந்தை தனியார் இயக்க கருத்துக் கேட்பு கூட்டத்தை அரசு நடத்தி யது. அதில் கலந்து கொண்ட 300 பேரில் 90 விழுக்காட்டினர் மினி பஸ் உரிமை யாளர்கள். அவர்கள் அனைவரும், மினி பஸ் தோல்வியடைந்த திட்டம்; அரசுப் பேருந்து வழித்தடம் இல்லாத இடம் எங்கே உள்ளது; எனவே தற்போதுள்ள மினிபஸ் வழித்தடங்களின் தூரத்தை அதிகப்படுத்த வேண்டும் எனக் கோரினர். இதனைச் செய்தால், அரசுப் போக்குவரத்துக் கழகம் என்னவாகும்?

மறைமுக தனியார்மயம்

தமிழ்நாடு அரசு ஜெர்மன் வளர்ச்சி வங்கியிடம் கடன் பெற்று, மின்சாரப் பேருந்துகளை வாங்கி, தனியாரிடம் கொடுத்து இயக்கும்; அரசு வழித்தடத்தில் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்படும் என்று கொள்கை விளக்கக் குறிப்பில் அமைச்சர் தெரிவித்துள்ளார். கடன் பெற்று, பேருந்து வாங்கி, தனியாரை இயக்கச் செய்தால் அரசு எதற்கு என்ற கேள்வி எழாதா? ஒரு கி.மீ. தூரம் பேருந்தை இயக்க அரசுக்கு 60 ரூபாய் செலவாகிறது. தனியாருக்கு எதற்கு 70 ரூபாய் கொடுத்து இயக்க வேண்டும்? இது மறைமுக தனியார்மயம் அல்லவா?

அதிமுக ஆட்சியில் ‘கிராஸ்ட் காஸ்ட் கான்ட்ராக்ட் திட்டம்’ கொண்டு வரப்பட்டது. ஒரு வழித்தடத்தில் பெர்மிட் வைத்துள்ளவர்தான் பேருந்தை இயக்க முடியும். இதை மாற்றி, பெர்மிட் யார் வைத்திருந்தாலும் அரசு வழித்தடத்தில் பேருந்துகளை இயக்க மோட்டார் வாகன சட்டத்தை திருத்தினார்கள். இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது. இன்றைக்கு அதையே அமல்படுத்துவோம் என்று கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியுள்ளது. அமைச்சரின் சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தம் இருக்கிறதா?

இந்தியாவிலேயே சிறந்த போக்குவரத்துக் கழகம் என்று 100க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளோம். பல மாநில அரசுகள் தமிழக போக்குவரத்துக் கழகத்திடம் வந்து ஆலோசனை கேட்டுச் செல்கின்றன. ஆனால், இங்கோ பிற மாநிலங்களில் தோற்றுப்போன திட்டங்களை செயல்படுத்த முனைகின்றனர். போக்குவரத்துக் கழகங்களை சீர்குலைப்பது மக்களின் பயண உரிமையை பறிப்பதாகும்.-கே.ஆறுமுகநயினார்
பொதுச்செயலாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்  சம்மேளனம்(சிஐடியு)

முதலாளிகள் வருவது சுரண்டுவதற்குத்தான்!

தொழிலாளர்கள் பிரச்சனையை பேசினால், வெளிநாட்டிலிருந்து தொழில்கள் வருவது நின்று விடும் என்கிறார்கள். அப்படியானால், முதலாளிகள் முதலீடு செய்ய வருவது அரசு, தலைவர்களின் சாதுரியத்தால் அல்ல. குறைந்தபட்ச கூலி தராமல், பல மணி நேரம் வேலை வாங்கி, சுரண்டி அதன் மூலம் லாபம் ஈட்டத்தான் முதலாளிகள் வருகிறார்கள். அரசாங்கத்தின் கடைநிலையில் உள்ள துப்புரவுப் பணியில் ஒடுக்கப்பட்ட மக்கள்தான் உள்ளனர். ஒரேஒரு தலைமுறைதான் அரசு வேலை செய்துள்ளார்கள். இன்றைக்கு அதில் 90 விழுக்காடு பேர் நிரந்தரமற்றவர்களாக உள்ளனர். இந்தப் பணியையும் அவுட்சோர்சிங் செய்துவிட்டனர். இந்த தொழிலாளர்களுக்கு குடிநீர் வடிகால் வாரியம், பொதுப்பணித்துறை, ஆட்சியர் நிர்ணயிக்கும் ஊதியம், இதில் எது குறைவோ அதற்கும் குறைவாக தரலாம் என்று அரசு உத்தரவு போட்டுள்ளது. இது, சமூகநீதிக்கு எதிரானது அல்லவா? வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் ஆயுத்த ஆடை தையல்காரருக்கு 15ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க வாரிய கூட்டத்தில் பரிந்துரைக்கிறோம். மாநில அரசு 11 ஆயிரம் ரூபாய் என நிர்ணயித்து அரசாணை வெளியிடுகிறது. இது என்ன நீதி? தனிநபர் வருமானத்தில் 126வது இடத்தில் தமிழ்நாட்டையும் உள்ளடக்கிய இந்தியா உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளை விட தனிநபர் வருமானம் குறைவாக உள்ளது. இது அரசுக்கு தெரியுமா? மோடி ஆட்சிக்கு மாற்றாக தமிழக அரசு செயல்பட வேண்டும்.-டி.எம்.மூர்த்தி மாநில செயற்குழு  உறுப்பினர், சிபிஐ

தொழிலாளியோடு நிற்போம்!

தீயணைப்பு துறை, சமூக நலத்துறை, கல்வித்துறை, சுகாதாரத் துறை ஆகியவை எப்படியோ அதேபோல போக்குவரத்து துறையும் லாபம் ஈட்ட முடியாது. 30 வருடம் உழைத்து வெளியேறுகிறபோது, தொழிலாளிக்கு சேர வேண்டிய பணத்தை கொடுக்காமல் வெற்றுக் காகிதத்தை கொடுத்து அனுப்புகிறார்கள். தொழிலாளிகள் உரிமையை கேட்கிறார்கள்; பிச்சை கேட்கவில்லை. என்எல்சி-யில் ஒரு நிரந்தர தொழிலாளிக்கு 1.50 லட்சம் ரூபாய் ஊதியம் தருகிறார்கள். அதே வேலையை செய்ய 12 ஆயிரம் ரூபாய் கூலிக்கு ஒப்பந்த ஊழியரை நியமிக்கிறார்கள். ஒன்றிய, மாநில அரசுப் பணிகள் அனைத்திலும் ஒப்பந்த முறையை புகுத்துகிறார்கள். தொழிலாளர் உரிமைக்காக ஒன்றுபட்டு நிற்போம். சித்தாந்தப் போரில் இணைந்து நிற்போம். வர்க்கப்போரில் தொழிலாளியோடு நிற்போம்.-மு.செந்தில் அதிபன் பொருளாளர், மதிமுக

இயக்குநர் பணியை ‘அவுட் சோர்ஸ்’ செய்வீர்களா?

அரசு நிரந்தரமானது. அதிகாரிகள் கொள்கை, திட்டங்களை உருவாக்கு கிறார்கள். அரசை வழிநடத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது திமுக அரசாங்கம். ஒப்பந்த முறை கொள்கை முடிவு என்கிறார்கள். கொள்கையை அதிகாரிகள் உருவாக்கினாலும், அதில் முடிவெடுக்க வேண்டியது அரசாங்கம். அதிகாரிகள் சொல்வதை அப்படியே சொல்ல அமைச்சர் எதற்கு? சமூக நீதி, மக்களின் நலனை காப்பார்கள் என்பதால் திமுக அரசை ஆதரிக்கிறோம். பணி நியமனம் செய்ய காலதாமதம் ஆவதால் ஒப்பந்த முறையில் ஆட்களை நியமிப்பதாக அமைச்சர் கூறுகிறார். துறைச் செயலாளர், இயக்குநர் பணி யிடங்களை அவுட்சோர்ஸ் செய்ய முடியுமா? வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய் அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதை அவுட்சோர்ஸ் செய்வீர்களா? ஏழை  மக்களின் வாழ்க்கையை பணயம் வைப்பதை எப்படி ஏற்க முடியும்? மகளிர் இலவச பயணத் திட்டம் கொண்டு வந்துள்ள சமூக பொருளாதார முன்னேற்றத்தை அடிப்படையாக வைத்து பெருமிதம் கொள்கிறோம். அதே அளவு கோலோடு போக்குவரத்து துறையை பார்க்க வேண்டும். ஒப்பந்த முறையை கைவிட வேண்டும். -எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ துணைப் பொதுச் செயலாளர், விசிக

கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஏஐடியுசி பொதுச்செயலாளர் எம்.ராதாகிருஷ்ணன், எம்எல்எப் தலைவர் இரா.அந்திரிதாஸ், ஐஎன்டியுசி தலைவர் புவனேஸ்வரி நஞ்சப்பன், டிடிஎஸ்எப் தலைவர் டி.திருமலைச்சாமி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைவர் சா.டேனியல் ஜெயசிங், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.வி. சிங்காரவேலன் மற்றும் ஆர்.ஆறுமுகம் (ஏஐடியுசி), கே.வெங்கடேசன் (எம்எல்எப்), வெ. அர்ச்சுணன் (ஏஏஎல்எல்எப்), நாகராஜன் (டிடிஎஸ்எப்) ஆகியோர் பேசினர். சம்மேளன பொருளாளர் வி.சசிக்குமார் நன்றி கூறினார். முன்னதாக சம்மேளன துணைப் பொதுச்செயலாளர் வி.தயானந்தம் வரவேற்றார்.