நிலம்பூர் இடைத்தேர்தல் : இடது ஜனநாயக முன்னணிக்கு பெருகும் ஆதரவு
கேரளாவில் ஜூன் 19 அன்று நடை பெற உள்ள நிலம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தல் அரசியல் பரபரப்பை அதிகரித்த வண்ணம் உள்ளது. இடது ஜனநாயக முன்னணி (LDF) சார்பாக போட்டியிடும் சுவராஜ், தொகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறார். இதனை எதிர்பார்க்காத காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) எப்படியாவது தேர்தலை வெல்ல வேண்டும் என்பதற்காக சிறுபான்மை மதவாத அமைப்பான ஜமாயத்-இ-இஸ்லாமி அமைப்பின் அர சியல் முகமான வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இண்டியா வின் ஆதரவை பெற்றுள்ளது. கேரளாவின் சமூகச் சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கும் ஆபத்து கொண்டது இது! மறுபுறத்தில் கிறித்துவ-இஸ்லாம் முரண்பாடுகளை முன்னிறுத்தி பா.ஜ.க. ஒரு கிறித்துவ வேட்பாளரை களம் இறக்கியுள்ளது. இடதுசாரி வேட்பாளரைத் தோற்கடிக்க பெரும்பான்மை- சிறு பான்மை இரு மதவாதங்களும் முன்னிறுத்தப்படும் ஒரு சூழ்ச்சியான சூழல் நிலம்பூரிலும் கேரளாவிலும் உருவாகியுள்ளது.
சுவராஜுக்கு மக்களின் ஆதரவு
2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் நிலம்பூரில் எல்டிஎப் ஆதரவுடன் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் பி.வி. அன்வர் தனது தவறான நடவடிக்கை காரணமாக எல்டிஎப் ஆதரவை இழந்தார். இதனால் அவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று. இதன் விளை வாகவே இடைத்தேர்தல். எல்டிஎப் சார்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சுவராஜ் வேட்பாளராக களம் இறங்கி யுள்ளார். நிலம்பூர் தொகுதி மக்களிடையே பெரும் ஆதரவும் உற்சாகமும் சுவராஜுக்கு கிடைத்து வருகிறது. இதனை UDF எதிர்பார்க்கவில்லை. UDF சார்பாக ஆர்யதன் சவுக்கத் என்பவர் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். இவர் நிலம்பூர் தொகுதியை 8 முறை பிரதிநித்துவப்படுத்திய ஆர்யதன் முகம்மது எனும் காங்கிரஸ் தலைவரின் மகன். ஆர்யதன் சவுகத் நன்கு அறிமுகமான திரைப்படக் கலைஞரும் ஆவார். 2023ம் ஆண்டு ஆர்யதன் சவுகத், பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்த முற்பட்ட பொழுது காங்கிரஸ் தலைமை அனுமதி மறுத்தது. அதனை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானார். அந்த பிரச்சனையில் எல்டிஎப் அவருக்கு ஆதரவு அளித்தது.
சிறுபான்மை மதவாதத்தின் ஆதரவைப் பெறும் யுடிஎப்
நிலம்பூர் தொகுதிக்கு அறிமுகமான ஆர்யதன் சவுக்கத்தை வேட்பாளராக களமிறக்கியும் வெற்றி கிடைக்காது என யுடிஎப் கருதுகிறது. ஏனெனில் பினராயி விஜயன் அரசாங்கத்தின் மக்கள் நலத் திட்டங்கள் அமலாக்கமும் வேட்பாளர் சுவராஜ் அவர்களின் செயல்பாடும் எல்டிஎப்-புக்கு மாபெரும் ஆதரவை மக்களிடம் உருவாக்கியுள்ளது. இதுவரை நடந்த தேர்தல்களில் நிலம்பூரில் 10 முறை யுடிஎப்பும் 4 முறை எல்டிஎப்பும் வென்றுள்ளன. தனது கோட்டை என கருதப்படும் நிலம்பூர் தொகுதியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் எனும் அரசியல் வெறி யுடிஎப்-க்கு குறிப்பாக காங்கிரசுக்கும் முஸ்லீம் லீக்குக்கும் உருவாகியுள்ளது. எதைத் தின்றால் பித்தம் தெளியும் எனும் நிலைக்கு தள்ளப்பட்ட யுடிஎப் சுவராஜையும் எல்டிஎப்-ஐயும் தோற்கடிக்க இறுதியில் ஜமாயத்-இ-இஸ்லாமிய அமைப்பின் ஆதரவைப் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. யுடிஎப்-பின் செயல் கண்டு மதச்சார்பின்மையை விரும்பும் கேரள மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஜமாயத்-இ-இஸ்லாமி அன்று!
1941ம் ஆண்டு அபுல் அலா மவுதிதி என்பவரால் ஒன்றுபட்ட இந்தியாவில் உருவாக்கப்பட்ட அமைப்புதான் ஜமாயத்-இ-இஸ்லாமி. மவுதிதி பகிரங்கமாக இஸ்லாமிய மதவாத கருத்துகளை முன்வைத்தவர். தேசப் பிரிவினைக்கு பின்னர் மவுதிதி பாகிஸ்தா னுக்கு புலம் பெயர்ந்தார். பாகிஸ்தான், ஷரியத்தை பின்பற்ற வேண்டும் எனவும் இந்துக்கள் வாழும் இந்தியாவுடன் நட்பு பாராட்டக்கூடாது எனவும் வலி யுறுத்தினார். பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜியாவுல் ஹக் தனது சர்வாதிகார ஆட்சியில் இஸ்லாமியக் கோட்பாடுகளை அமலாக்க முயன்ற பொழுது அதனை ஆதரித்தார். இன்று பாகிஸ்தானில் மதவாதம் வலுவாக உள்ளது எனில் அதில் மவுதி துக்கும் முக்கியப் பங்கு உண்டு. ஜமாயத்-இ-இஸ்லாமி பாகிஸ்தான்/ இந்தியா/ வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளிலும் செயல்படுகிறது. அந்தந்த தேசத்தின் தன்மைக்கு ஏற்ப சில கொள்கைகளை அறிவித்தாலும் அடிப்படைப் பிரச்சனைகளில் ஒரே நிலைதான் உள்ளது.
ஜமாயத்-இ-இஸ்லாமி இன்று!
இன்றைய ஜமாயத்-இ-இஸ்லாமி அல்லது அதன் அரசியல் முகமான வெல்ஃபேர் கட்சி நிலைப்பாடு கள் மாறியுள்ளன என காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் தலைவர்கள், தமது கூட்டணியை நியாயப்படுத்து கின்றனர். ஆனால் உண்மை அது அல்ல. புலி எப்படி சைவமாக மாறாதோ அப்படி எந்த மதவாத அமைப்பும் மத ஒற்றுமைக்கு ஆதரவாக மாறுவது இல்லை. ஜமாயத்-இ-இஸ்லாமியின் இந்தியப் பிரிவு தனது 2022ம் ஆண்டின் தீர்மானத்தில் மதச்சார்பின்மைக்கு எதிரான நிலைப்பாட்டையே விரிப்படுத்துகிறது. மதத்தை அரசியலுடன் கலப்பது என்பதுதான் பல அழிவுகளுக்கு வழி திறக்கிறது எனும் உண்மையை இந்திய அனுபவத்திலிருந்து கூட ஜமாயத் உள்வாங்கவில்லை. இந்தியாவில் சிறுபான்மை இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் உள்ளாகும் பல இன்னல்களுக்கும் தாக்குதல்களுக்கும் மதம் அரசியலில் கலக்க அனுமதிக்கப்பட்டதுதான் காரணம். பல மதங்கள் இயங்கும் ஒரு தேசத்தில் அனைத்து மதங்களையும் அரசே ஆதரிப்பது எனும் அணுகுமுறை நாளடைவில் பெரும்பான்மை மதம் நோக்கிய கூடுதலான சாய்மானத்துக்கு வழி வகுக்கிறது என்பதை ஜமாயத் அங்கீகரிக்க மறுக்கிறது. மதம் என்பது அரசியலிலிருந்து பிரிக்கப்பட்டு ஒருவரின் தனிப்பட்ட விழுமியமாக மாறும் பொழுது தான் சிறுபான்மை மக்கள் நிம்மதி பெருமூச்சு விட முடியும். அரசில் மதம் பங்கேற்க அனுமதித்தால் அது எப்பொழுதும் பெரும்பான்மை மதவாதத்தின் மூர்க்கத்தனத்துக்குதான் வழிவகுக்கும். இது இந்தியாவின் இஸ்லாமிய மக்கள் நேரடியாக கண்ணுறும் அனுபவம். பெரும்பான்மை மதவாதமும் சிறுபான்மை மதவாதமும் ஒன்றுக்கொன்று வளர்ந்து கொள்ள உதவுபவை என இடதுசாரிகள் கூறுகின்றனர். ஒரு சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக சிறுபான்மை மதவாதத்தின் ஆதரவை யுடிஎப் நாடுவது கேரள சமூகத்துக்கு மட்டுமல்ல; ஒட்டு மொத்த இந்தியாவுக்கே கேடுவிளைவிக்கும் ஆபத்து கொண்டது. யுடிஎப்-பின் செயலை பல தேவாலயங் களும் இஸ்லாமிய அமைப்புகளும் விமர்சித்துள்ளன.
பா.ஜ.க.வின் புதிய சூழ்ச்சி
மற்றொரு புறம் இந்திய அளவிலும் கேரளாவிலும் பா.ஜ.க.வும் சங் பரிவாரமும் ஒரு சூழ்ச்சியான அணுகு முறையை கடைபிடிக்கின்றனர். இஸ்லாமியர்களுக்கு எதிராக கிறித்துவர்களை அணிதிரட்டுவது என்பது அத்தகைய சூழ்ச்சி ஆகும். இந்த அணுகுமுறை அவர்களுக்கு 2024 நாடாளுமன்ற தேர்தலில் பலன் கொடுத்தது. அதனால்தான் திருச்சூர் தொகுதியில் சுரேஷ் கோபி வெல்ல முடிந்தது. தேவாலயங்களின் ஒரு சிறு பிரிவினர் மிரட்டல் மற்றும் தவறான கருத்தியலுக்கு பலியாகி சங் பரிவாரத்தை ஆதரித்தனர். வஃக்பு வாரிய சட்ட திருத்தத்துக்கும் ஆதரவுஅளித்தனர். ஆனால் சங் பரிவாரம் தேவாலயங்களின் சொத்துக்களையும் கைப்பற்ற வேண்டும் என கோரிய பொழுது அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த ஆண்டு மட்டும் 800க்கும் அதிகமான தாக்குதல்கள் கிறித்துவர்கள் மீது நடந்துள்ளது. இவற்றை புறம்தள்ளிவிட்டு கிறித்துவர்களில் ஒரு சிறு பிரிவினர் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிப்பது ஒட்டுமொத்த கிறித்துவத்துக்கு எவ்வித நன்மையையும் தராது. இந்த சூழ்ச்சியின் ஒரு பகுதியாகவே நிலம்பூர் தொகுதியில் மோகன் ஜார்ஜ் எனும் ஒரு கிறித்துவரை பா.ஜ.க. களம் இறக்கியுள்ளது. இவர் மர் தோமா எனும் தேவாலய பிரிவுடன் நெருங்கிய தொடர்பு உள்ளவர் என கூறப்படுகிறது. நிலம்பூர் தொகுதியில் பா.ஜ.க.வின் வாக்கு 6 முதல் 8% ஐ தாண்டியது இல்லை. இந்த முறையும் மக்கள் பா.ஜ.க.வை நிராகரிப்பார்கள் என்பது நிச்சயம். கேரளாவில் ஒரே சமயத்தில் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை மதவாதங்களை எதிர்த்து களத்தில் நிற்கும் இடதுஜனநாயக முன்னணி (எல்டிஎப்) நிலம்பூரில் மாபெரும் வெற்றி பெறும் என்பதையே சுவராஜ் பெறும் ஏகோபித்த ஆதரவு வெளிப்படுத்துகிறது.