articles

img

மைதிலி சிவராமன்: வர்க்க சுரண்டல், சாதிய ஒடுக்குமுறை மற்றும் பாலின சமத்துவமின்மை ஆகியவற்றுக்கு எதிரான புரட்சிகரப் போராளி - வெங்கடேஷ் ஆத்ரேயா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், தோழர் மைதிலி சிவராமன், 2021 மே 30 அன்று காலை சென்னையில் மரணம் அடைந்தார்.  அவரது மரணத்தின் மூலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், ஜனநாயக இயக்கமும் வர்க்க சுரண்டலுக்கு எதிராக, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக மற்றும் பாலின சமத்துவமின்னைக்கு எதிராகப் போராடி வந்த ஓர் அர்ப்பணிப்புமிக்க போராளியை இழந்திருக்கிறது.

 

தோழர் மைதிலி சிவராமன், ஜனநாயக இயக்கத்தில் பெரிய அளவிற்குத் தனித்தன்மையுடன் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வந்தார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்திற்கும், குறிப்பாக சிஐடியு-விற்கும் குறிப்பிடத்தக்க அளவிற்குப் பங்களிப்பினைச் செய்திருக்கிறார்.

 

தோழர் மைதிலி சிவராமன், அவரது அயரா உழைப்பு, அவருடைய எளிமை, அனைவரையும் எளிதில் அரவணைத்துக்கொள்ளும் பண்பு, அனைத்துத்தரப்பு மக்களிடமும் பேசக்கூடிய வல்லமை மூலமாக, கட்சி மற்றும் அதனுடைய வர்க்க, வெகுஜன ஸ்தாபனங்களில் உள்ளவர்களிடம் மட்டுமல்ல, அதற்கும் அப்பால் உள்ள வெகுஜன மக்களின் அன்பையும், மரியாதையையும் பெற்றிருந்தார்.

 

தோழர் மைதிலி, 1960களின் முற்பகுதியில் முதுநிலை பட்டப்படிப்பைத் தொடர்வதற்காக அமெரிக்காவிற்குச் சென்றார். அதன்பின் அவர் 1968இல் சென்னைக்குத் திரும்புவதற்கு முன், பல ஆண்டுகள் அமெரிக்காவில் செலவழித்தார்.

 

தோழர் மைதிலி அமெரிக்காவில் வசித்த காலங்கள், அங்கே நிறவெறிக்கு எதிராக மக்கள் இயக்கங்கள் அலை அலையாக அதிகரித்துக்கொண்டிருந்தன. மேலும் இந்தக் காலத்தில் சின்னஞ்சிறிய சோசலிஸ்ட் கியூபா, பலம்பொருந்திய அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உறுதியுடன் நின்ற காலமுமாகும். (இப்போதும் அது தொடர்கிறது.) அமெரிக்கா, 1960களின் மத்தியில் வியட்நாமிற்கு எதிராக மிகவும் கொடூரமான முறையில் ஆக்கிரமிப்பு யுத்தத்தை ஏவியது.  அமெரிக்க அரசாங்கத்தின் யுத்தத்திற்கு எதிராக, அமெரிக்கப் பல்கலைக் கழக வளாகங்களில் மிகவும் விரிவான அளவில் யுத்த எதிர்ப்புக் கிளர்ச்சிப் போராட்டங்களுக்கு இட்டுச் சென்றது.  ஐ.நா. மன்றத்திலும் மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புகளிலும், சோசலிச நாடுகளும் மற்றும் அணிசேரா இயக்கமும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், நிறவெறிக்கு எதிராகவும் தங்கள் குரல்களை எழுப்பின. சமத்துவமின்மைக்கு எதிராகவும், பாகுபாடு காட்டப்படுவதற்கு எதிராகவும் ஏற்கனவே கூருணர்வுமிக்கவராக இருந்த தோழர் மைதிலி (இவர் தன்னுடைய பதின்பருவ வயதில், வீட்டில் தன் தாயாரிடம் சகோதரர்களுக்கு எல்லாம் எவ்வித வேலையும் அளிக்காது சும்மா அமர வைத்திருக்கும் அதே சமயத்தில், தன்னிடம் மட்டும் வீட்டு வேலைகளை வாங்குவதற்கு எதிராகக் குரல் எழுப்பியர்), ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சமத்துவம் மற்றும் நீதிக்காக நடைபெற்றுக்கொண்டிருக்கும் வலுவான இயக்கங்களால் இயல்பாகவே ஈர்க்கப்பட்டார். குறிப்பாக கியூபா மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோ அவருக்கு உத்வேகத்தை ஏற்படுத்தியவர்களில் மிகவும் முக்கியமானவர்கள்.

 

தோழர் மைதிலி, தன் படிப்பை முடித்தபின் சிறிது காலம், ஐ.நா.வில் காலனித்துவத்திற்கு எதிரான குழுவிற்கு (Committee on Decolonisation) ஓர் ஆராய்ச்சி உதவியாளராகப் பணியாற்றியது உட்படப் பல்வேறு பொறுப்புகளில் அமெரிக்காவில் பணியாற்றினார். இக்காலத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள்,  கல்வியாளரான இளம் மைதிலியை முற்போக்கான முறையில் சமூக மாற்றத்திற்கான பணிகளில் தன்னை அரிப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று உருக்கு போன்று உள்ள உறுதியை உருவாக்கும் விதத்தில் அமைந்திருந்தன.

 

தோழர் மைதிலியை அமெரிக்காவில் இருந்தபோது ஏகாதிபத்தியமும், நிறவெறியும் அவற்றுக்கு எதிரான ஒரு போராளியாக உருவாவதற்குப் பதப்படுத்தியது என்றால், அவர் சென்னை திரும்பியபோது தமிழ்நாட்டில் நடைபெற்ற நிகழ்வுகளும் அவ்வாறே அவரைப் போர்க்குணமிக்கவராக உருவாக்குவதற்குப் பதப்படுத்தின. காவேரி டெல்டா பகுதியில் உள்ள கீழ வெண்மணி கிராமத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 44 விவசாயத் தொழிலாளர்கள், கூலி உயர்வு  கேட்டார்கள் என்பதற்காகவும், செங்கொடியை இறக்க மாட்டோம் என்று மறுத்த காரணத்திற்காகவும், நிலப்பிரபுவின் குண்டர்களால் குடிசைக்குள்ளிருந்த அவர்களை வெளியே வரமுடியாமல் வெளியில் பூட்டிவிட்டு தீ வைத்துக் கொளுத்திக் கொன்றார்கள். 1970களில் சிஐடியு-வின் சார்பில் தொழிலாளர் வர்க்கத்தின் தீரமிகு போராட்டங்கள் பல, குறிப்பாக சென்னையைச் சுற்றி, நடந்துகொண்டிருந்தன. இவை அனைத்தும் தோழர் மைதிலியை உடனடியாகப் போராட்டப் பாதையில் இறங்க வைத்தது. கீழ வெண்மணி சம்பவம் தொடர்பாக அவர் மிகவும் கவனத்துடன் மேற்கொண்ட ஆய்வுகள், அவருக்கு விவசாயப் பிரச்சனை மீது ஓர் ஆழமான புரிதலை ஏற்படுத்தியது.

 

கீழ வெண்மணி சம்பவம் குறித்து தோழர் மைதிலி எழுதிய ஒரு கட்டுரையை சென்னையில் தொழிலாளர் வர்க்கத்தின் முதுபெரும் தலைவராக இருந்த தோழர் வி.பி. சிந்தன் படித்திருக்கிறார். பின்னர் அவர், தோழர் மைதிலியைத் தொடர்புகொண்டு, இது தொடர்பாக ஒரு விவாதத்திற்காகத் தன்னைச் சந்திக்குமாறும் கேட்டுக் கொண்டார். அதன்பின்னர் விரைவில் தோழர் மைதிலி, தோழர் வி.பி.சி-யைச் சந்தித்தார்.  எந்தப் பாதையில் செல்வது என்பதை விரைந்து முடிவெடுக்கும் தருணமாக அது அவருக்கு அமைந்திருந்தது. அதன்பின்னர் அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். வெகுவிரைவிலேயே அதன் முழுநேர உறுப்பினராகவும் மாறினார்.

 

கட்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் விரைவில் அவரை சென்னை மாவட்டக் குழு உறுப்பினராகவும், பின்னர் இருபதாண்டுகளுக்கும் மேலாக மாநிலக்குழு உறுப்பினராகவும் பணியாற்றுவதற்கு இட்டுச்சென்றன.

 

1970களில் தோழர் மைதிலியின் பிரதானமான அரங்கமாக, தொழிற்சங்க அரங்கமே விளங்கியது. அந்த சமயத்தில் சென்னையைச் சுற்றிலும் சிறிய மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள் ஏராளமாக இருந்தன. அவற்றில் பலவற்றில் பெண்கள் அதிக அளவில் தொழிலாளர்களாக இருந்தார்கள். இவர்களை அணிதிரட்டுவதில் முக்கிய பங்கினை வகித்தார். சிஐடியு தலைவர் என்ற முறையில் தோழர் மைதிலி பல தொழிற்சங்கப் போராட்டங்களை நடத்தி இருக்கிறார். இதில் குறிப்பிடத்தக்கவை டேப்ளட் (Tablet) என்னும் மருந்து நிறுவனத்தில் நடத்திய போராட்டம், பாலு கார்மெண்ட்ஸ் (Balu Garments) மற்றும் பல்வேறு ஆயத்த ஆடைகள் நிறுவனங்களில் நடத்திய போராட்டங்களைக் குறிப்பிடலாம். 

 

மேலும் தோழர் மைதிலி, கிரேட்டர் சென்னையின் பல பகுதிகளில் இருந்த குவாரி தொழிலாளர்களின் போராட்டங்களுக்கும் தலைமை வகித்தார். தோழர் மைதிலி, தன் வேலைகளை ஒருசில சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்பிரிவுகளுடன் தன்னைச் சுருக்கிக் கொள்ளவில்லை.  யூனியன் கார்பைடு, மெட்டல் பாக்ஸ் போன்ற பெறு நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்களின் பெரிய சங்கங்களிலும் தலைவராகவும், துணைத் தலைவராகவும் செயல்பட்டார். அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்ட சமயத்தில், வி.பி.சி. போன்ற முன்னணித் தலைவர்கள் தலைமறைவாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்ட சமயத்தில், தோழர் மைதிலி அவர்களுடைய பெரும் பொறுப்புகளையும் எடுத்துக் கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. அவற்றையும் அவர் சிறந்த முறையில் நிறைவேற்றினார். பல சங்கங்களில் அவர் நிர்வாகியாக இருந்ததுடன்,  வேறு பல தொழிற்சாலைகளில் போராட்டங்கள் நடைபெற்ற சமயங்களில் அவரை வந்துப் பேசுமாறு அழைப்பார்கள். அவரும் அங்கே சென்று போராடும் தொழிலாளர்கள் மத்தியில், ‘உங்கள் போராட்டம் நியாயமானவை என்றும் நிச்சயம் வெற்றி பெறும் என்றும்’ கூறி அவர்களுக்கு நம்பிக்கையை உருவாக்கும் விதத்தில் பேசுவார்.

 

1979இல் சென்னையில் சிஐடியு-வின் தேசிய மாநாடு நடைபெற்றபோது, அகில இந்திய உழைக்கும் மக்கள் ஒருங்கிணைப்புக்குழு உருவானது. தோழர் மைதிலி அதன் தேசியத் தலைமையில் ஓர் அங்கமாக மாறினார். அவர், தமிழ்நாடு ஒருங்கிணைப்புக்குழுவின் கன்வீனராகப் பல ஆண்டுகள் இருந்தார். சிஐடியு-வின் பதாகையின்கீழ் பல மத்திய மாநில அரசு ஊழியர் சங்கங்களின் கீழ் ஒருங்கிணைப்புக் குழுவை விரிவுபடுத்துவதில் குறிப்பிடத்தக்க அளவிற்கு அவர் வெற்றி பெற்றார். சிஐடியு-வின் செம்பதாகையின்கீழ் வருவதற்குத் தயங்கிக்கொண்டிருந்த பல மத்திய தர ஊழியர் சங்கங்களை தன்னுடைய இதமான ஆனால் உறுதியான பேச்சுத் திறமையினால் வெற்றிகொண்டார். 

 

தோழர் மைதிலி, 1974இல் தமிழ்நாட்டின் ஜனநாயக மாதர் சங்கத்தின் ஒரு நிறுவன உறுப்பினராகவும், தலைவராகவும் இருந்து முதுபெரும் தலைவர்களான தலைவர் கே.பி.ஜானகி அம்மா மற்றும் பொதுச் செயலாளர் பாப்பா உமாநாத் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டார். பின்னர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உருவானபோது, தமிழ்நாட்டின் ஜனநாயக மாதர் சங்கம் அதன் ஒரு பிரிவாக மாறியது. தோழர் மைதிலி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசிய அளவிலும், மாநில அளவிலும் முக்கியமான தலைவராக வெகு காலம் செயல்பட்டார்.

 

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின்கீழ் தேசிய அளவிலும் மற்றும் மாநில அளவிலும் செயல்பட்டபோது அவர் செலுத்திய பங்களிப்புகள் மிகவும் விரிவான அளவில் அங்கீகாரத்தைப் பெற்று, பாராட்டப்பட்டன. இவ்வாறு தோழர் மைதிலி ஜனநாயக மாதர் சங்கத்தின்கீழ் ஆற்றிய பங்களிப்புகள் நிகரற்றவை என்பது உண்மையே என்றாலும், குறிப்பாக தமிழ்நாட்டில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின்கீழ் அவர் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் மற்றும் குறிப்பிட்ட பாலினப் பிரச்சனைகள் தொடர்பாக பல்வேறு அரசியல் கண்ணோட்டங்களுடன் வரும் மாதர் அமைப்புகளின் கூட்டு மேடைகளில் அவர் ஆற்றிய உரைகளும் அனைத்துத் தரப்பினராலும் வரவேற்கப்பட்டு ஜனநாயக மாதர் சங்கத்தின் செயல்பாடுகளை அனைத்துத்தரப்பினர் மத்தியிலும் அளவிலும் சரி, குணாம்சத்திலும் சரி விரிவான அளவிற்குக் கொண்டுசெல்வதற்கு உதவியது.   எனினும், தோழர் மைதிலி எந்தச் சமயத்திலும் தன் தெளிவான வர்க்கக் கண்ணோட்டத்திலிருந்து நழுவியது கிடையாது. பாலின சமத்துவம் மற்றும் சமூக நீதி ஆகிய இரண்டிலுமே, கட்சித் திட்டத்தின் புரிதலுடன் அவர் ‘ஐக்கிய முன்னணி’ உத்திகளை மிகச்சிறந்த முறையில் முன்னெடுத்துச் சென்று நடைமுறைப்படுத்தினார். 

 

தோழர் மைதிலி, கீழவெண்மணி படுகொலைக்குப்பின்னர் மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகளில், கட்சி மற்றும் விவசாய சங்கங்களின் பணிகளில் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகவும், முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ அரசுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்பட வேண்டிய வர்க்கப்போராட்டத்தின் முக்கியத்துவத்தை மிகவும் விரிவான அளவில் தொழிலாளள்ரகள் - விவசாயிகள் மத்தியில் எடுத்துச் செல்வதில் அவர் முக்கியமான பங்கினை ஆற்றினார்.

 

வாச்சாத்தி என்னும் கிராமத்தில் பழங்குடியினப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் நடைபெற்ற கொடுமைகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில், அவர்களுக்கு நீதி கோரி, தோழர் மைதிலி, வழக்கின் விவரங்களைத் தொகுத்தும், அவற்றின்மீது புலனாய்வு மேற்கொண்டு நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும், பட்டியலின வகுப்பார் மற்றும் பழங்குடியினர்களுக்கான ஆணையருக்கு எழுதிய கடிதமும், அதனைத்தொடர்ந்து அவர் மேற்படி வாச்சாத்தி கிராமத்திற்கு உண்மை அறியும் குழுவின் ஓர் அங்கமாக நேரிடையாகச் சென்று விவரங்களைச் சேகரித்து வெளியிட்டதும், அதுவரையில் வாச்சாத்திக் கொடுமைகளை மூடிமறைத்திட மேற்கொண்ட மாநில அரசாங்கத்தின் இழிமுயற்சிகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து, வாச்சாத்தி மக்கள் மீது ஏவப்பட்ட பயங்கரமான சம்பவங்கள் மீது உரிய முறையில் புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அச்சம்பவங்களில் ஈடுபட்ட கயவர்கள் மீது முறையான புலனாய்வு மேற்கொள்ளப்பட்டு, அவர்கள்மீது விசாரணை நடைபெற்று, அவர்கள் தண்டனை பெறுவதற்கும் உதவியது.

 

தோழர் மைதிலி ஆங்கிலத்திலும், தமிழிலும் மிகச்சிறந்த பேச்சாளர், மிகச்சிறந்த எழுத்தாளர்.  மிகப்பெரிய கூட்டங்களில்கூட அவர் தான்கூறவரும் விஷயங்களை கூட்டத்தில் குழுமியிருக்கும் அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் எடுத்துச் செல்லும் திறமைபெற்றவர். அவருடைய பேச்சில் அவர் பயன்படுத்தும் வார்த்தைகளும், வாக்கியங்களும் மிகவும் எளிமையாக இருப்பதுடன், அவற்றை அவர்கள் மத்தியில் கொண்டு செல்லும் விதமும் மிகவும் பெருந்தன்மையுடன் இதமாகவும், அனைவரையும் ஏற்கச்செய்யும் விதத்திலும் அமைந்திடும். இவ்வாறு பெருந்தன்மையுடன் என்று கூறுவதை, பலவீனம் அல்லது ஒருவிதமான தயக்கம் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளக்கூடாது.  மைதிலி உருக்கு போன்று மிகவும் உறுதியான தோழர்.  அதேபோன்று கொள்கைசார்ந்த அனைத்துக் கேள்விகள் குறித்தும் தெள்ளத்தெளிவாகப் பதிலளிப்பார். அவர் கூட்டத்தினரிடையே கொண்டுசெல்லும் செய்தியில் எவ்விதமான சந்தேகமும் ஏற்படாது. கட்சிக் கல்விக்காக அவர் பல முக்கியமான குறிப்புகள் (எடுத்துக்காட்டாக, பெண்கள் பிரச்சனை குறித்து, கட்சி வகுப்புகளில் பயன்படுத்துவதற்காக அவர் எழுதியுள்ள குறிப்புகள்) எழுதியிருக்கிறார். இத்துடன் கிளர்ச்சிப் பிரச்சாரங்களில் பயன்படுத்துவதற்காகவும் பல சிறுபிரசுரங்களையும் அவர் எழுதியிருக்கிறார். அதேபோன்று ஆராய்ச்சி மாணவர்களுக்குப் பயன்பெறும் வகையில் எண்ணற்ற கட்டுரைகளும் அவர் எழுதியிருக்கிறார்.

 

செவ்வணக்கம் தோழர் மைதிலி! சோசலிசத்திற்கான மற்றும் சுரண்டலற்ற உலகை, சாதிய ஒடுக்குமுறையற்ற உலகை, பாலின சமத்துவமின்மைக்கு எதிரான உலகை உருவாக்கும் போராட்டத்தில் எப்போதும் நீங்கள் எங்களுக்கு உத்வேகம் அளிப்பவராக இருப்பீர்கள்.

பிரியாவிடை தோழர் மைதிலி!

 

(தமிழில்: ச.வீரமணி)

;