விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகுத்த மாவட்டங்களில் ஒன்று கடலூர் மாவட்டம். சுதந்திரப் போராட்டம் வீறு கொண்டிருந்த நேரத்தில் பெண்களின் பங்களிப்பு மகத்தானதாக இருந்தது. துவக்கத்தில் பெண் விவசாய தொழிலாளர்களின் போராட்டமும், ரயில்வே தொழிலாளர்கள் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பும் மகத்தானது. இந்திய தேசிய விடுதலையோடு சேர்த்து பெண்களின் உரிமைக்கான கோரிக்கைகளும் முதன்மைப்படுத் தப்பட்டன.
கடலூர் மாவட்டத்தில் பெண்களைத் திரட்டி சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த நெல்லிக்குப்பம் ஷாஜாதி அவர்களின் பங்கு மகத்தானது. ஷாஜாதி என்று சொன்னால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ரயில் மறியல் போராட்டத்தை ஒரு முறை அறிவித்த போது, ரயில் மறியலை தடுப்பதற்கு காவல்துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது. போராட்ட நேரமும் இடம் நெல்லிக்குப்பம் ரயில் நிலையம் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. ஆனால் போராட்டத்திற்கு வந்திருந்த அனைவரும் ஆங்காங்கே தலைமறைவாக நின்றனர். சிக்னல் கொடுக்கும் வரை யாரும் போராட்ட களத்திற்கு வர வேண்டாம் என்று கூறப்பட்டது. காவல்துறையே போராட்டம் நடைபெறுமா இல்லையா என்று குழப்பத்தில் திக்குமுக்காடினர். குறிப்பிட்ட நேரத்தில் ரயில் வந்தவுடன் ஷாஜாதி சிக்னல் கொடுத்ததும், 150-க்கும் மேற்பட்ட பெண்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திணறிய காவல்துறை பின்னர் அனைவரையும் கைது செய்தது.
1973 டிசம்பர் 9-ல் திண்டுக்கல்லில் தொடங்கப்பட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அமைப்பு கூட்டத்திலும், 1974 டிசம்பர் 30, 31, 1975 ஜனவரி 1 ஆகிய தேதிகளில் திருவாரூரில் நடைபெற்ற முதல் மாநில மாநாட்டிலும் கலந்து கொண்ட தோழர் பி.ஜான்சிராணி அவர்களின் பணி இம்மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்ததாகும்.
நீதிக்கான போராட்டங்கள்
முத்தாண்டிகுப்பம் வசந்தா காவல் நிலைய பாலியல் பலாத்கார படுகொலை வழக்கில் சத்தியாகிரக போராட்டம், முற்றுகை போராட்டம் உட்பட பல போராட்டங்கள் நடத்தி காவல்துறையினரின் அராஜகங்களை வெளிக்கொணர்ந்தது. அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட இளம்பெண்ணிற்கு நீதி கேட்டு தொடர் போராட்டத்தை நடத்தி சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்குச் சென்று, ஆளும் அரசாங்கமும் நிலச்சுவான்தார்களின் அடக்குமுறைகளையும் மீறி காவல்துறையின் அராஜகத்திற்கு எதிரான போராட்டத்தில் ஏராளமான பெண்களை திரட்டி பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.
மாதர் இயக்கத்தின் எழுச்சி
கடலூர் மாவட்டத்தில் மாதர் இயக்கம் வளர்ந்தது. மாதர் சங்கம் துவங்கப்பட்ட காலத்திலிருந்து கிராம அளவில், நகர அளவில், மாவட்ட அளவில் குறிப்பிடத்தக்க போராட்டங்கள் நடத்தி பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக களம் கண்ட பெண்கள் இயக்கமாகும். தற்போது சிதம்பரம் வட்டம் தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 2 வயது குழந்தை பாலியல் வன்முறை செய்யப்பட்ட வழக்கில் தொடர் போராட்டங்கள் நடத்தி ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
விருத்தாச்சலம் சுலோச்சனா வரதட்சணை கொடுமை கொலை வழக்கில் தொடர் போராட்டம் நடத்தி நீதிமன்றத்தில் சாட்சிய மளித்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டது. நெய்வேலி கஸ்தூரி வரதட்சணை கொலை வழக்கில் நேரடியாக சென்று கள ஆய்வு செய்து அதிகாரிகளை சந்தித்து போராட்டங்கள் நடத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று கொடுக்கப்பட்டது.
குழந்தைகள் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கான நீதி
திட்டக்குடி பள்ளி மாணவிகள் இரண்டு பேர் பாலியல் வன்முறைக்கும் பாலியல் வணிகத்திற்கும் உள்ளாக்கப்பட்ட வழக்கில் தொடர் போராட்டங்களை நடத்தியதோடு, அந்த இரண்டு குழந்தைகளையும் சென்னைக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பில் வைத்து படிக்க வைத்து பாது காத்தது. இவ்வழக்கில் 17 பேருக்கு சாகும் வரை தண்டனையும் இரட்டை ஆயுள் தண்டனை உள்பட அபராதமும் விதிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பும் பெறப்பட்டது.
புடையூர் கிராமத்தில் தலித் சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட போதும், திட்டக்குடி வட்டாரத்திலும் பெண்ணாடம் அருகிலும் வாய் பேசாத மாற்றுத்திறனாளி பெண்கள் பாதிக்கப்பட்ட போதும், ஆதிக்க சாதிகளின் மிரட்டல்களை எதிர்கொண்டு வலுவான போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தொழிலாளர் நலனுக்கான போராட்டங்கள்
100 நாள் வேலைத்திட்டத்தில் கூலி உயர்வு, வேலை அட்டைகள் பெறுதல், முறைகேடுகளைத் தடுத்தல் ஆகியவற்றுக்காக பல இடங்களில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. மாவட்டம் முழுவதும் இலவச வீட்டுமனை பட்டாவிற்கான மனுக்கள் அளிக்கப்பட்டன. நுண்நிதி நிறுவனங்களின் அடாவடித்தனத்துக்கு எதிராக தொடர் ஆய்வுகளும் போராட்டங்களும் நடத்தப்பட்டன. இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளும் நேரடி களப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
கட்சியின் தொலைநோக்குப் பார்வை
வன்முறை அற்ற சமுதாயம் வேண்டும் என்ற நோக்கில் வன்முறை எதிர்ப்பு மாநாடு, வரதட்சணை எதிர்ப்பு மாநாடு, தலித் பெண்கள் மாநாடு என பல்வேறு நிகழ்வுகளை மாவட்டத்தில் நடத்தி, ஆக்கபூர்வமாக பெண்களை வளர்த்தெடுப்பதற்கு திட்டமிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாவட்ட மாநாடு 2024, டிசம்பர் 13, 14, 15 ஆகிய தேதிகளில் பெண்ணாடத்தில் நடைபெறுகிறது.
எஸ்.லாவண்யா