articles

img

பெண் வழக்கறிஞர்களும் ஆண் மைய நீதித்துறையும் - பா.ஹேமாவதி

“பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத் தின் அளவைக் கொண்டே ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை அளவிடு கிறேன்” என்கிறார் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர். சட்டத்தின் முன் சமத்துவம் மற்றும் சட்டத்தின் கீழ் சம பாதுகாப்பு; மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்தவொரு குடிமக்களுக்கும் எதிராக பாகுபாடு காட்டுவதைத் தடை செய்தல் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான விஷயங்க ளில் அனைத்து குடிமக்களுக்கும் சமமான வாய்ப்பை உறுதி செய்தல்- என அரசியலமைப்பின் 14, 15, 15(3), 16, 39(a), 39(b), மற்றும் 39(c) ஆகிய பிரிவுகள் வலியுறுத்து கின்றன. எனவே, இந்திய அரசியலமைப்பின்படி பாலின அடிப்படையிலான பாகுபாடு இருக்க முடியாது.  நீண்ட கால சட்டப் போராட்டங்களுக்குப் பின்னரே சட்ட அமைப்பில் பெண்களின் சேர்க்கை சாத்தியமா னது; அதன் பின்னரும் கூட, 20 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை, நீதிமன்றங்களில் பெண்களின் இருப்பு குறைவாகவே இருந்தது. இன்று நிலைமை மாறிவிட்டது போல முன்வைக்கப்பட்டாலும், பெரிய மாற்றமில்லை என்பதே உண்மை.

ஆண்கள் ஆதிக்கம் செய்யும் தொழில்

சட்டக் கல்லூரிகளில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக படிக்கின்றனர். ஆனால் ஆண்கள் ஆதிக் கம் செய்யும் தொழிலாகவே வழக்கறிஞர் தொழில் உள்ளது. பெண்கள் வழக்கறிஞர் தொழிலை திறம்பட செய்வதற்கு சட்ட பயிற்சி செய்து அவர்கள் தங்களை வடிவ மைத்துக் கொண்டாலும் தொடர்ந்து பல சவால்களை எதிர் கொள்ளும் நிலையிலேயே இன்றும் இருக்கிறார்கள்.  பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் அமைப்பாக உள்ள நீதித்துறையில் பாலினப்பாகுபாடு என்பது பச்சைத் துரோகம் என்னும் பெண்ணியவாதிகளின் குரலில் நியாயம் இல்லாமல் இல்லை. சட்டப் படிப்பு முடித்து வரும் பெண்களுக்கு பயிற்சி எடுக்க, ஆலோசனை வழங்க மூத்த வழக்கறிஞர்கள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. சட்ட நிறுவனங்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள், பெண் வழக்கறிஞர்களை வேலைக்கு சேர்க்க ஆர்வம் காட்டுவது இல்லை.  பெண் வழக்கறிஞர்கள், இந்திய சமூகம் கட்ட மைத்துள்ள வீட்டின் அனைத்துப் பொறுப்புகளையும் செய்துவிட்டுத் தானே வெளியேற முடியும்! அப்படி குடும்பத்தில் சமைத்துவிட்டு, குழந்தைகள் பள்ளி செல்ல ஏற்பாடு செய்துவிட்டு, மூத்த வழக்கறிஞர்களின் கட்டளைகளை நிறைவேற்ற நேரத்தை செலவிட வேண்டியுள்ளது. பெரும்பாலான ஆண்களுக்கு இது போன்ற எந்த பிரச்சனையும் இல்லாததால் பெண்களை விட ஆண்களையே பணி அமர்த்த மூத்த வழக்கறி ஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

வழக்காடிகளும் பெரும்பாலும் ஆண் வழக்கறி ஞர்களை நியமிப்பதில்தான் விருப்பம் காட்டுகிறார்கள். ஏனெனில் பெண் வழக்கறிஞர்கள் தங்கள் குடும்ப கடமைகள், தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக நீதிமன்றத்தில் முறையாக ஆஜராக மாட்டார்களோ என்கிற அச்சம்.  அதிகாரம், அச்சுறுத்தல், ஆணாதிக்கம் இவற்றை சவாலாக எடுத்து சட்டப் பயிற்சி செய்யும் பெண்களைத் தவிர பெரும்பாலான பெண் வழக்க றிஞர்கள் குடும்ப நல நீதிமன்ற வழக்கறிஞர்களாகவே உள்ளனர்.

கழிவறையை தேடும் அவலம்

நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பும் பெண்களின் தேவைக்கு ஏற்றதாக இல்லை. பல மாவட்ட நீதி மன்றங்களில் அலுவலக பணியாளர்களுக்காக ஒதுக் கப்பட்ட கழிவறைகளைத் தான் வழக்கறிஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர். பணியாளர்கள் கழி வறையைப் பூட்டி விடுவதால் பெண் வழக்கறிஞர்க கள் இயற்கை உபாதையை கழிக்க அப்பணியாளர்க ளைத் தேடி செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. உயர்நீதிமன்றம் முதல் கீழமை நீதிமன்றங்கள் வரை இதுதான் நிலை.

தொழிலா? குடும்பமா?

இந்திய சட்டத் தொழில் பற்றிய ஆய்வு, இந்திய பெண் சட்ட வல்லுநர்கள், பிற பணி புரியும் பெண் களைப் போலவே ஒரு கட்டத்தில் தொழிலா   அல்லது குழந்தைகளா என்று தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டா யத்தில் உள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகிறது. மேலும், மகப்பேறு விடுப்பு தங்கள் வாழ்க்கையை மோசமாக பாதித்ததாக பல பெண் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.  அதுமட்டுமல்ல; மற்ற வேலைக்குச் செல்லும் பெண்களிடமிருந்து மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை வருமானமாக வருவதால் குடும்பம், பொரு ளாதாரத் தேவைக்காக அனுமதிக்கிறது. ஆனால், வழக்கறிஞர் தொழிலில் முத்திரை பதிக்க சுமார் 10  வருடம் ஆகிவிடுகிறது. அதுவரை பொருளாதாரம் குறித்து யோசிக்கவே முடியாது என்பது பெரும் சவால்தான். இந்தியாவில் உள்ள வழக்கறிஞர்களில் 15 விழுக் காட்டினர் பெண்கள் என்று கடந்த 2022இல் சட்ட அமைச்சர் தனது உரையில் தெரிவித்தார். பல்வேறு பிரச்சனைகள் காரணமாக பெண் வழக்கறிஞர்கள் தொழிலை விட்டு விலகுவது குறித்து அரசு எந்த ஆய்வையும் நடத்தவில்லை. சட்டப் படிப்பில் நுழை வதும், தேர்வு செய்வதும், அதன்பிறகு கல்வியாளர் கள், வழக்கறிஞர் தொழில், நீதித்துறை போன்ற வற்றில் வேலையில் சேருவதும் முற்றிலும் அவரவர் சுதந்திரமான தேர்வு. ஆனால், நடைமுறையில் உள்ள சமூக மற்றும் குடும்ப சூழ்நிலையில் பெண் வழக்க றிஞர்கள் விரும்பினாலும், அவர்களின் தொழிலை தொடர முடிவதில்லை என்பதே வேதனை.

பெண் நீதிபதிகள் எங்கே?

இந்திய நீதிமன்றங்களில் பாலின பன்முகத் தன்மை குறித்து கேட்டபோது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அவர்கள், “பல்வேறு உயர் நீதிமன் றங்களில் நீதிபதிகள் மற்றும் தலைமை நீதிபதிகள் பதவிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாகவே உள்ளது; உச்ச நீதிமன்றக் கொலீ ஜியத்தின் அமைப்பிலும் பெண்களின் பற்றாக்குறை உள்ளதை வருத்தத்துடன் பார்க்கிறேன்” என்றார். தற்போதைய உச்சநீதிமன்ற நீதிபதிகள் 34 பேரில் 31 பேர் ஆண்கள்; மூன்று பேர் மட்டுமே பெண்கள் என்பதே பெரும் பாகுபாடு உள்ளது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. 1989ல் நாட்டிலேயே உச்சநீதி மன்ற முதல் பெண் நீதிபதியாக பாத்திமா பீவி அவர்கள நியமிக்கப்பட்டார். அதன் பிறகு இப்போது வரை மொத்தமே 11 பெண் நீதிபதிகள்தான் உச்ச நீதிமன்றத்தில் இடம் பெற்றுள்ளனர். இதுவரை நியமிக்கப்பட்ட உச்சநீதிமன்ற பெண் நீதிபதிகளில், பி.வி.நாகரத்னா அவர்களுக்குத்தான் நாட்டின் உச்சநீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதியா கும் வாய்ப்பு 2027ல் உள்ளது. ஆனால், ஒரு மாதத்திற்குள் அவரது பணி ஓய்வும் வருகிறது. இந்த அதிர்ச்சிகரமான உண்மைகள், பெண் சமத்துவம் நீதித்துறையில் முற்றிலும் இல்லை என்பதை அம்பலப்படுத்துகிறது.  இந்தியாவில் உள்ள அனைத்து உயர்நீதிமன் றங்களிலும் உள்ள 788 நீதிபதிகளில் 107 (13%) பேர் மட்டுமே பெண்கள். ஜூன் 2023 நிலவரப்படி, 25 உயர்நீதிமன்றங்களில் எதிலும் ஒரு பெண் தலைமை நீதிபதி இல்லை. 5 உயர்நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளே இல்லை. 

நாட்டில் ஒட்டுமொத்தமாக 17லட்சம் வழக்கறி ஞர்கள் பதிவு செய்துள்ளனர்.இவர்களில் வெறும் 15 சதவீதம் பேர்தான் பெண்கள்.  இந்தியத் நீதித்துறையில் நிலவும் இந்த பாலின பாகுபாட்டை முடிவுக்கு கொண்டு வருவது இந்திய சமூகத்தில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கும்.  

குரல் ஒலிக்கட்டும்!

2023 மே 11 முதல் 14 வரை சர்வதேச பெண் நீதிபதி கள் கூட்டமைப்பின் (IAWJ) 16 ஆவது  மாநாடு மொராக்கோ வில் நடைபெற்றது. “பெண்கள் நீதிபதிகள், சாதனை கள் மற்றும் சவால்கள்” என்ற தலைப்பின் கீழ் மொராக் கோ பெண் நீதிபதிகள் உட்பட ஐந்து கண்டங்க ளைச் சேர்ந்த பெண் நீதிபதிகள் கலந்து கொண்டு, நீதித்துறையில் பெண்களின் தலைமைத்துவம், பாலின பாகுபாட்டை ஒழித்தல்,  வன்முறை மற்றும் மனித கடத்தல் உள்ளிட்ட நீதித்துறையின் பன்முகத் தன்மை வாய்ந்த ஏராளமான பிரச்சனைகள் இம்மாநாட் டில் விவாதிக்கப்பட்டுள்ளன. இதுபோன்று தேசிய அளவிலும் மாநில அளவிலும் பெண் நீதிபதிகள், பெண் வழக்கறிஞர்களின் பிரத்யேக சந்திப்புகள், மாநாடு கள் நடைபெற வேண்டும். தற்போது இந்திய உச்சநீதிமன்றம், பாலின சொற் கள் தொடர்பான ஒரு கையேட்டை வெளியிட்டுள்ளது. அதில் பாலின நிலைப்பாடுகளை நிலைநிறுத்தும் வார்த்தைகளின் பட்டியலைக் குறிப்பிட்டுள்ளது. இனி தாக்கல் செய்யும் மனுக்கள், உத்தரவுகள், தீர்ப்புகளில் பெண்கள் குறித்த வார்த்தைகளை பயன்படுத்தும் போது பட்டியலில் உள்ள வார்த்தைகளையே பயன் படுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது என்பதே குறிப்பிடத்தக்க, வரவேற்கத்தக்க மாற்றம்தான்.

“பெண்களுக்கு எந்த ஒரு அடிப்படை வாய்ப் பும் அளிக்காமல், அவர்களின் வழக்கறிஞர் தொழி லில் ஏராளமான தடைகளை உண்டாக்கி, எல்லா வழிகளையும் இரும்புத் திரையால் மூடிவிட்டு,  எப்படி அவர்கள் ஆண்களை விடத் தகுதியற்றவர் கள் என்று அறிவிக்க முடியும்?” என, 100 ஆண்டு களுக்கு முன் வந்த இந்திய பெண் வழக்கறிஞ ரான மிதன் ஜாம்ஷெட் லாம், முதல் குரல் எழுப்பி னார். ஆண் மையச் சிந்தனையுள்ள பிற்போக்கான ஆணாதிக்க சமூகத்தின் தடைகளை உடைத்து முன்னேறிச் செல்லும் பெண் ஆளுமைகளின் காதில் இது ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும்.  இந்தக்குரலை வலுவாக எழுப்பும் விதமாகத் தான், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், ஆகஸ்ட் 26 அன்று திருச்சியில், பெண் வழக்கறி ஞர்கள் சிறப்பு மாநாட்டினை நடத்துகிறது.

கட்டுரையாளர்: இளம் வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்