இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலையை இரு மடங்கு அதிகமாகக் காட்டி அதானி நிறுவனம் மோசடி செய்துள்ளதாகவும், கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை தங்கு தடையின்றி இந்த நிலக்கரி இறக்குமதி ஊழலை செய்து வருவதாகவும் ‘பைனான்சியல் டைம்ஸ்’ சில நாட்களுக்கு முன்பு அம்பலப்படுத்தியுள்ளது. 2019 மற்றும் 2021-க்கு இடையிலான 32 மாதங்க ளுக்குள் அதானி நிறுவனம் இந்தோனேசியாவி லிருந்து இந்தியாவிற்கு மேற்கொண்ட 30 நிலக்கரி ஏற்றுமதி வர்த்தகத்தை மட்டும் ‘பைனான்சியல் டைம்ஸ்’ ஆய்வு செய்துள்ளது. இதில், கடந்த இரண்டு ஆண்டுகளில், அதானி குழுமமானது, தைவான், துபாய் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உள்ள கடல் கடந்த போலி இடைத்தரகர்களைப் பயன்படுத்தி 5 பில்லியன் டாலர் (சுமார் 42 ஆயிரம் கோடி) மதிப்புள்ள நிலக்கரியை சந்தை விலையை விட இருமடங்கு விலையில் இறக்குமதி செய்துள்ளதாகவும், அனைத்து ஏற்றுமதி வர்த்தக சந்தர்ப்பங்களிலும், இறக்குமதி நிலக்கரி யின் விலையை அதிகமாகக் காட்டி, அதானி நிறுவனம் ஆதாயம் அடைந்துள்ளதாகவும் ‘பைனான்சியல் டைம்ஸ்’ கண்டறிந்துள்ளது.
சுற்றி வளைத்து விலையைக் கூட்டிய அதானி குழுமம்
உதாரணமாக, இந்தோனேசியாவின் போலி நிறுவனங்களிலிருந்து வாங்கப்பட்ட நிலக்கரியின் விலை 139 லட்சம் டாலர்கள் (சுமார் ரூ. 1160 கோடி). இதனுடன் கப்பல் போக்குவரத்து மற்றும் காப்பீட்டுச் செலவுகளாக 3.1 லட்சம் டாலர்கள் (சுமார் ரூ. 25 கோடி) சேரும்போது, இதன் விலையை 142 லட்சம் டாலர்கள் (தற்போதைய மதிப்பில் ரூ. 1185 கோடி) என்று நிர்ணயிக்கலாம். ஆனால், நிலக்கரியை இந்தோனேசியாவிலிருந்து நேரடியாக வாங்கியது போலக் காட்டாமல், அதனை சீன தைபே, துபாய், சிங்கப்பூரிலுள்ள நிறுவனங்களிட மிருந்து வாங்கியது போல அதானி குழுமம் கணக்குக் காட்டியுள்ளது. அதாவது 139 லட்சம் டாலர் (தற்போ தைய மதிப்பில் ரூ. 1160 கோடி) மதிப்பிலான நிலக்கரியை 215 லட்சம் டாலராக காட்டியுள்ளது. சுமார் 73 லட்சம் டாலர் (சுமார் 609 கோடி ரூபாய்) கூடுதலாக காட்டப் பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 52 சதவிகிதம் அள விற்கு, அதானி கொள்ளை லாபம் அடைந்துள்ளார். கடந்த 2019 ஜனவரியில், இந்தோனேசியாவின் கிழக்கு கலிமந்தனில் உள்ள கலியோராங் துறை முகத்திலிருந்து 74 ஆயிரத்து 820 டன் அனல் நிலக்கரி, டிஎல் அகாசியா (DL Acacia) என்ற கொள் கலனில் இந்தியாவிற்கு வந்தது. இந்த நிலக்கரியின் மதிப்பு 1.9 லட்சம் டாலர் (சுமார் 159 கோடி ரூபாய்). இதற்கான கப்பல் போக்குவரத்து மற்றும் காப்பீட்டுச் செலவான 42 ஆயிரம் டாலரைச் சேர்த்தால், மொத்த மதிப்பு 2.3 லட்சம் டாலர் (சுமார் 192 கோடி ரூபாய்). ஆனால், இந்தியாவின் மிகப்பெரிய வணிகத் துறை முகமான குஜராத்தில் உள்ள முந்த்ராவுக்கு (இந்த துறைமுகமே அதானிக்குச் சொந்தமானதுதான்) வந்தபோது, அறிவிக்கப்பட்ட இறக்குமதி மதிப்பு 4.3 லட்சம் டாலர்கள் (சுமார் ரூ. 359 கோடி ரூபாய்). நிலக்கரி யின் மதிப்பு அப்படியே இரட்டிப்பாகக் காட்டப் பட்டுள்ளது.
தரமான நிலக்கரியே ஆனாலும் ஒரு டன் 145 டாலர்தான்
நிலக்கரியின் விலை, அதன் தரம் மற்றும் எரிதிறன் மதிப்பைப் பொறுத்து பரவலாக மாறுபடும். 2022 ஆகஸ்டில், 5,004 கிலோ கலோரிகள் என அறிவித்து, கலோரிஃபிக் (எரிதிறன்) மதிப்புடன் ஏற்றுமதி செய்யப்பட்ட ஹை லிங்கோஸ் (Hi Lingos) நிறுவனத்தின் ஒரு ஏற்றுமதியானது, டன் ஒன்றுக்கு 179 டாலர்கள் என்ற விலையைக் கொண்டிருந்தது. இதன்படி பார்த்தாலும், அதற்கு “முந்தைய மூன்று மாதங்களில் ஆர்கஸ் 5000 (Argus 5000) கலோரி அளவுகோலின் அதிகபட்ச விலையே டன் ஒன்றுக்கு 145 டாலர்கள்தான்” (சுமார் 12 ஆயிரம் ரூபாய்) என்பதை பைனான்சியல் டைம்ஸ் சுட்டிக்காட்டுகிறது.
சிங்கப்பூர் நிறுவனத்தை நடத்தும் அதானியின் முன்னாள் ஊழியர்
நிலக்கரி இறக்குமதியை இந்தோனேசியாவி லிருந்து நேரடியாக மேற்கொள்ளாமல், சீன தைபே, துபாய் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உள்ள கடல் கடந்த இடைத்தரகர் நிறுவனங்களை பயன் படுத்தி அதானி குழுமம் மேற்கொண்டதிலும் ஊழல் புரிந்துள்ளது. சீன தைபேயில் உள்ள முகவரியைக் கொண்டு இயங்கும் ஹை லிங்கோஸ், துபாயைத் தளமாகக் கொண்ட டாரஸ் என்ற நிறுவனம் மற்றும் சிங்கப்பூ ரைச் சேர்ந்த பான் ஏசியா டிரேட்லிங்க் ஆகிய இந்த 3 நிறுவனங்களைத்தான் இந்தியாவிற்கு நிலக்கரியை இறக்குமதி செய்ய அதானி குழுமம் பயன்படுத்தியது. இதில், சிங்கப்பூரைச் சேர்ந்த பான் ஏசியா டிரேட் லிங்க் நிறுவனம், அதானி குழுமத்தின் முன்னாள் ஊழியரால் நடத்தப்படும் நிறுவனம் ஆகும். அதாவது, தனது பினாமி நிறுவனத்தைப் பயன்படுத்தி, அதனிட மிருந்து நிலக்கரி கொள்முதல் செய்தது போல அதானி குழுமம் மோசடியாக கணக்கு காட்டியுள்ளது. 2021 செப்டம்பர் முதல், 2023 ஜூலைக்கு இடையே அதானி குழுமம் 73 லட்சம் டன் நிலக்கரியை இறக்கு மதி செய்துள்ளது. இதில், 42 லட்சம் டன்கள் மதிப்புள்ள இறக்குமதியை அதானி குழுமமே நேரடியாகச் செய்துள்ளது. இதில் ஒரு டன் நிலக்கரியின் விலை சராசரியாக 130 டாலர் (சுமார் 10 ஆயிரத்து 800 ரூபாய்) என கூறப்பட்டுள்ளது. மீதமுள்ள 31 லட்சம் டன் நிலக்கரியை மூன்று இடைத் தரகர் நிறுவனங்களிடமிருந்து அதானி குழுமம் வாங்கி யுள்ளது. அவ்வாறு வாங்கப்பட்ட நிலக்கரியின் சராசரி விலை 155 டாலர் (சுமார் 11 ஆயிரத்து 260 ரூபாய்) என்று கூறியுள்ளது. இதன் ஒட்டுமொத்த வர்த்தகம் 800 லட்சம் டாலர் (சுமார் 660 கோடி ரூபாய்) - சுமார் 20 சதவிகிதம் கூடுதல் விலையாகும்.
கூட்டுக்களவாணி நிறுவனங்கள்
பான் ஏசியா டிரேட்லிங்க் நிறுவனம் தவிர்த்து அதானி குழுமம் தனக்கு இடைத்தரகராக பயன் படுத்திக் கொண்ட மற்ற இரண்டு நிறுவனங்கள், ஹை லிங்கோஸ் மற்றும் டாரஸ் ஆகியவை ஆகும். இதில், ஹை லிங்கோஸ் (Hi Lingos) நிறுவனம், ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவிலிருந்து 428 ஏற்றுமதிகள் மூலம் அதானி குழுமத்திற்கு 12.9 லட்சம் டன் நிலக்கரியை அளித்துள்ளது. இதற்காக, அதானி குழுமம் சுமார் 2 பில்லியன் டாலரை (இன்றைய மதிப்பில் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாயை) ஹை லிங்கோஸ் நிறுவனத்திற்குச் செலுத்தியுள்ளது. இந்த ஹை லிங்கோஸ் நிறுவனம், வேறு யாருமல்ல, கவுதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானியின் நெருங்கிய கூட்டாளியும் தைவான் தொழி லதிபருமான சாங் சுங்-லிங்கிற்குச் சொந்தமானது ஆகும். இதனை கடந்த ஆகஸ்ட் 31 அன்றைய அறிக்கை யிலேயே பைனான்சியல் டைம்ஸ் சுட்டிக்காட்டி யிருந்தது. இந்த சாங் சுங்-லிங்கின் கூட்டாளி எனக் கூறப்பட்ட வர் நாசர் அலி ஷபான் அலி என்று அழைக்கப்படும் ஐக்கிய அரபு அமீரக (UAE) தொழிலதிபர் ஆவார். இவர், அதானி நிறுவனங்களுக்கு மத்திய கிழக்கு பெருங்கடல் வர்த்தகம், மொரீஷியஸ் மூலம் நிதிகளை அனுப்பியவர். கல்ப் ஏசியா டிரேட் மற்றும் இன்வெஸ்ட் மெண்ட் நிறுவனத்தை (Gulf Asia Trade & Investment Ltd (BVI) நடத்தி வருபவர்.
டாரஸின் உண்மையான உரிமையாளர் யார்?
இவருக்கு உறவினராக இருக்கலாம் என்று கூறப்படும் முகமது அலி ஷபான் அலிக்கு சொந்த மான துபாய் நிறுவனம்தான் டாரஸ் ஆகும். இதனிட மிருந்து, 2021 செப்டம்பர் முதல் வழங்கப்பட்ட 11.3 மில்லி யன் டன் நிலக்கரிக்காக டாரஸ் நிறுவனத்திற்கு அதானி 1.8 பில்லியன் டாலரை செலுத்தியுள்ளார். இதேபோல பான் ஏசியா டிரேட்லிங்க் (Pan Asia Tradelink) நிறுவனம், 2021 செப்டம்பர் முதல் அதானி குழுமத்திற்கு 6.6 மில்லியன் டன் நிலக்கரியை 1.1 பில்லி யன் டாலர்களுக்கு வழங்கியுள்ளது. இந்த நிறுவனம் ஒரு டன்னுக்கு சராசரியாக 169 டாலர் விலை வைத்துள் ளது. இது அதானியின் நேரடி நிலக்கரி விலையை விட 30 சதவிகிதம் அதிகமாகும். இவ்வாறு குறைந்த விலையிலான நிலக்கரியை, அதிக விலைக்கு வாங்கியதாக அதானி கணக்கு காட்டி யதால் என்ன பிரச்சனை வந்துவிட்டது? என்ற கேள்வி எழலாம். உண்மைதான். அதானி தனிப்பட்ட தேவைக்காக வாங்கினால் அதில் பிரச்சனை ஒன்று மில்லை. மாறாக, அதானி இந்த நிலக்கரி மூலம் தயாரித்த மின்சாரத்தைத்தான் நாட்டு மக்களுக்கு விற்கிறார்.
இரட்டைக் கொள்ளை; பலமடங்கு லாபம்!
முதலில் நிலக்கரி கொள்முதலிலேயே, தனது மறைமுக இடைத்தரகர் (Offshore) நிறுவனங்க ளைப் பயன்படுத்தி பல ஆயிரம் கோடிகளை லாபமாக பார்க்கும் அதானி, பின்னர் மக்களிடம் அதிக விலைக்கு மின்சாரத்தை விற்று அதன்மூலமும் கொள்ளை லாபம் சம்பாதித்திருக்கிறார் என்பதுதான் பைனான்சியல் டைம்ஸ் முன்வைக்கும் குற்றச் சாட்டாகும். கடந்த ஆகஸ்ட் மாதமே இது குஜராத்தில் முக்கியப் பிரச்சனையாக எதிர்க்கட்சிகளால் எழுப்பப் பட்டது. நிலக்கரி விலையுடன் இணைக்கப்பட்ட மின் கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ், ஐந்து ஆண்டுகளில் அதானி பவர் நிறுவனத்திற்கு மாநில அரசு கிட்டத்தட்ட 500 லட்சம் டாலரை (சுமார் 417 கோடி ரூபாயை) அதிக மாக செலுத்தியது என்ற குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
குஜராத் மின் நுகர்வோரிடம் ரூ. 3 ஆயிரம் கோடி கொள்ளை
பிரீமியம் விலையில் வாங்கிய நிலக்கரிக்கான தொகையை அதானிக்கு செலுத்தியதாகவும், ‘அதானி குழுமம் ஆவணங்களை வழங்கவில்லை’ என்றும் புகார் கூறிய மாநில மின் விநியோக நிறு வனத்தின் (The Gujarat Urja Vikas Nigam Limited - GUVNL) கடிதத்தை அவர்கள் சுட்டிக் காட்டினர். “குஜராத் மாநில மின் விநியோக நிறுவனம் (GUVNL), எரிசக்தி கட்டணமாக ரூ. 13 ஆயிரத்து 802 கோடியை (அன்றைய மதிப்பில் சுமார் 2 பில்லியன் டாலர்) செலுத்தியது. ஆனால் ஆர்கஸ் குறியீட்டின்படி நிலக்கரி எரிதிறன் விகிதங்களைக் கருத்தில் கொண்டால், 9 ஆயிரத்து 902 கோடி ரூபாய் (1.5 பில்லியன் டாலர்) மட்டுமே செலுத்தப்பட்டிருக்க வேண்டும்” என்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் குறிப்பிட்டனர். அப்போது, இந்த குற்றச்சாட்டுக்கள் அடிப்படை யற்றவை என்று ஒரேயடியாக கூறி பாஜக ஆட்சி யாளர்களும், அதானி குழுமமும் மழுப்பின. இந்நிலையில்தான், ‘பைனான்சியல் டைம்ஸ்’ ஏடு, அதானி குழுமத்தின் நிலக்கரி இறக்குமதி ஊழலை யும், அதன்மூலம் அதிக மின்கட்டணம் வசூலித்து மக்களிடம் நடத்திய கொள்ளையையும் அம்பலப் படுத்தியுள்ளது.