இந்திய நாடு முழுவதும் சாதிய வன் கொடுமை தாக்குதல்களும், தீண்டாமை செயல்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வாக்குரிமையில் 18 வயது நிரம்பிய குடிமக்கள் அனைவரும் சமம் என்ற உரிமை கிடைக்கப் பெற்றுள் ளோம். ஆம், சாதிய அடையாளங்கள், சமய வேறுபாடு கள் ஆண், பெண் என பாலின பாகுபாடுகள் எதுவும் இல்லாமல் அனைவரும் வாக்களித்து நாடாளு மன்றத்தை, சட்டமன்றங்களை அமைத்து, மக்களாட்சி முறையில் அதிகாரத்தை வழிநடத்தும் அரசியல் உரிமை கிடைக்கப் பெற்றுள்ளோம். ஆனால், சமூக நிலையில் ஏணிப்படி முறை சாதிய கட்டமைப்பு இன்றும் தொடர்கிறது. இதன் காரணமாக பட்டியல் சாதியினர், பழங்குடியினர் அடுக்கிப் போடும் மூட்டைகளில் அடி மூட்டையாக சிக்கி சீரழியும் அவல நிலை மேலும், மேலும் அதி கரித்து வருகிறது.
சமூக வாழ்வில் மனிதனுக்கு மனிதன் சமம் என்ற சமத்துவ நிலை முழுமை பெறவில்லை. தீண்டாமை செயல்களால் பெரும்பகுதி மக்களுக்கு, சமூக அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் உணர்வுக்கு மாறாக சாதிய ஆதிக்க சக்தி களின் அடக்குமுறை ஆட்சி நடத்தி வருகிறது. விண்வெளி ஆய்வில் மகத்தான சாதனை படைத்த நாட்டின் சமூக வாழ்வில் நிலப் பிரபுத்துவ நீசத்தன சிந்தனைகள் செயல்படுகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் பட்டியலின மாணவன் சிறப்பாக படித்து, தேர்ந்து வந்ததை சகித்துக் கொள்ள முடியாத சாதி ஆதிக்க வெறி, அவரது வீட்டில் அத்துமீறி நுழைந்து பயங்கர ஆயுதங்களுடன் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தச் சாதி வெறி சக்திகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என சட்டங்கள் வலியுறுத்துகின்றன. ஆனால் அரசு பாதிக்கப்பட்ட மாணவனின் குடும் பத்தை புலம் பெயர்த்து, நகரத்துக்கு கொண்டு சென்று பாதுகாக்க முடியும் என்ற நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது. “பேட்டி பச்சாவோ -பெண் குழந்தைகளை பேணு வோம்” என்ற வாய்ச்சவடால் முழக்கம் தெரு வெங்கும் எதிரொலித்து வரும் நிலையில் சிறுமி களும், பெண் குழந்தைகளும் பாலியல் வன் தாக்குத லுக்கு ஆளாகி வரும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. “ஆண்டவன்” வாழும் கருவறையில் சிறுமி ஆஷிபா கதறக் கதற - மனித மிருகங்களால் கடித்து குதறப்பட்ட செய்தியால் நாடு தலை குனிந்து நின்றது.
ஆனால் பாஜவும், அதன் சங் பரிவார் கூட்டமும் குற்ற வாளிகளுக்கு ஆதரவாக தேசியக் கொடி ஏந்தி போராடிய வெட்கக்கேடும் நடந்தது. நாட்டிற்கு பெருமை சேர்த்து வரும் மல்யுத்த வீராங்க னைகள் பாஜக எம்.பி. ஒருவரால் பாலியல் தாக்குத லுக்கு ஆளான போது நாடு போர்க்கொடி உயர்த்தி யது. உலக நாடுகள் கூட உரத்த குரலில் கண்ட னம் தெரிவித்தன. பாலியல் வன்ம எண்ணம் கொண்டவர் எம்.பி.ஆக தொடர்வது குறித்து நாட்டின் பிரதமரோ, ஒன்றிய அரசோ சிறிதும் வெட்கப்படவில்லை. பட்டியலின மக்கள் சமூக ஒடுக்குமுறைக்கு இலக்காக இருப்பதற்கு அவர்களிடம் உடல் உழைப்பு தவிர வேறு வாழ்வாதார சாதனங்கள் எதுவும் இல்லை. மனு தர்மம், வேத, உபநிடதங்கள், மனு ஸ்மிருதி உள்ளிட்ட ஆதிக்க கருத்தியல் ஆயுதத்தால் அடிமை நிலைக்கு தள்ளப்பட்டனர்.
நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும், பட்டிய லின மக்கள் உழவடை நிலம் கேட்டு, வசிப்பிட வசதி கேட்டு, வாழும் இடத்திற்கு மனைப்பட்டா கேட்டுப் போராடி வருகிறார்கள். அரசியல் அமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு பொருளாதாரத் தளத்தில் சம வாய்ப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை ஆண்டு தோறும் குறைத்து வரும் பாஜக ஒன்றிய அரசு, அந்தத் திட்டத்தை அழித் தொழிக்கும் திசை வழியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. வேலை உறுதியளிப்புத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள ஆண்டுக்கு 100 நாள் வேலை பெறும் சட்டப்பூர்வ உரிமையை ஆண்டுக்கு 200 நாட்களாக உயர்த்த வேண்டும். குடும்பத்துக்கு தலா 100 நாள் வேலை என்பதை உடல் உழைப்புத் தொழிலாளர் ஒவ்வொரு வரும் தலா 200 நாட்கள் வேலை பெற உரிமை பெற்ற வர்கள் என்கிற முறையில் வேலை உறுதியளிப்புச் சட்டம் திருத்தம் செய்யப்பட வேண்டும்.
வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய மாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 700 என நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். இந்த ஊதியம் விலைவாசி நிலைக்கு தக்கபடி மாறுபடும் பஞ்சப்படி வழங்கும் வகையில் திருத்தி அமைக்கப்பட வேண்டும். இந்த வேலை உறுதியளிப்புத் திட்டம் முழுமை யாகவும், வெளிப்படையாகவும் ஊழல் முறைகேடு கள் இல்லாமல் செயல்படும் போது பட்டியலின மக்க ளும் சுயமரியாதை பெற்ற கண்ணியமான வாழ்க்கை நிலைக்கு நகர்வார்கள். இது தவிர சமூகத்தில் நிலவும் தீண்டாமைக் கொடுஞ் செயல்களை இரக்கமின்றி ஒடுக்க வேண்டும். அதற்கு பட்டியலின மற்றும் பழங்குடி யினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் அரசியல் உறுதியுடன் செயல்படுத்தப்பட வேண்டும்.
பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி மத்தியில் அமைந்த 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பலவீனப்படுத்த, பயனற்ற சட்ட மாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதில் மக்களின் விழிப்புணர்வும், உச்ச நீதிமன்றத்தின் தலை யீடும் பாஜக முயற்சிகளை முறியடித்தது. இந்துத்துவா அரசியல் கருத்தியலை வடிவமை த்து, அதில் இராமர் கோவில் உள்ளிட்ட இந்து மக்கள் நம்பியுள்ள கடவுள்களையும் பயன்படுத்தி, மதவெறி அரசியலை முன்னெடுத்து வரும் பாஜக ஆளும் மாநி லங்களில் சாதிவெறி ஆதிக்க சக்திகளுக்கு அரசு நிர்வாகம் ஆதரவாக செயல்பட்டு வருகின்றது. பிரதமர் நரேந்திர மோடியும் பாஜகவும் சாதிய வன்மத்துடன் மக்களை பிளவு படுத்தும் வெறுப்பு அரசியலை தீவிரமாக்கி வருகின்றனர். இந்த நிலையில் தான் இடதுசாரி விவசாயத் தொழி லாளர் சங்கங்களும் நாடு முழுவதும் பட்டியல் சாதி யினர், பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக போராடி வரும் அமைப்புகளும் ஒருங்கிணைந்து, சமூக நீதியும் சமத்துவ வாழ்வுரிமையும் கேட்டு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தில்லியில் கடந்த டிசம்பர் 4 அன்று விவசாயத் தொழிலாளர் இயக்கங்களும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகளும் இணைந்து மாபெரும் இயக்கத்தை நடத்தின. நாடாளுமன்றத் தேர்தல் களம் நெருங்கும் நிலையில் பட்டியலின மக்களின் உரிமைக் குரலை தேர்தல் களத்தில் எதிரொலிக்க; பட்டியலின மக்களின் நலனுக்கு எதிரான பாஜகவைத் தோற்கடிக்க மேலும் வலுவாக, கூட்டாகப் போராடுவோம்!
கட்டுரையாளர் : சிபிஐ மாநிலத் தலைவர்களில் ஒருவர், திருத்துறைப்பூண்டி