பொதுக் கல்வியில் பரிணாமவியலை நீக்குவது என்பது மிகப் பெரிய சதியாகும். உயிரிப் பரிணாமமும், மனிதப் பரிணாமமும் அறிவியல் ரீதியாகக் கற்பிக்கப்பட்டு சாதி, மத, இன வேறுபாட்டைக் களைவதற்கான அறிவியல் கல்வியாகும். தற்போது இதனை நீக்குவதன் மூலம் இது முற்றிலும் துடைத்தெறியப்பட உள்ளது வேதனைக்குரியது.
கொரோனா பெருந்தொற்றைப் பயன் படுத்தி தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில் (NCERT) பள்ளிப் பாடங்களைக் குறைக்கும் முயற்சியில் இறங்கியது. இதனை, தற்போதைய ஒன்றிய அரசு தனது இந்துத்துவா கொள்கையை அமல்படுத்தும் வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டது. ஏற்கனவே வரலாறு பாடத் திட்டத்தில் இஸ்லாமியர்களின் ஆட்சி, காந்தி படுகொலை நிகழ்வு, குஜராத் கலவரம் ஆகியன நீக்கப்பட்டன. தற்போது 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடத்திட்டத்தில் மரபியல் மற்றும் பரிணா மவியல் பாடப் பகுதியில் பரிணாமவியல் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. 2020-21 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் மரபியல் மற்றும் பரிணாமவியல் பாடப்பகுதி இருந்தாலும், தேர்வு பாடத் திட்டப் பகுதியி லிருந்து அதற்கு விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் 2022-23 கல்வியாண்டில் பாடப் புத்தகத்தில் இருந்தாலும் கற்பிக்கப்படவில்லை. 2023-24 கல்வி யாண்டில் மரபியல் மட்டும் உள்ளது. பரிணாமவியல் நீக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் எந்த வகையில் எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை. இந்தப் பாடத்திட்டத்தை உருவாக்கிய குழுவின் ஆலோசனை கேட்கப்பட்டதா அல்லது இது ஒரு மறைமுக முடிவா என்பது குறித்து அரசு விளக்கம் தர வேண்டும்.
நீக்கப்பட்ட பாடப் பகுதிகளின் முக்கியத்துவம்
பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் தற்போது நீக்கப்பட்டுள்ள பரிணாமவியல் பாடப்பகுதிகள் சுமார் 12 பக்கங்கள் ஆகும். நீக்கப்பட்ட பாடங்களில் ‘பரிணாமம் பற்றிய அறிமுகம்’, ‘பரிணாமமும் அதன் வகைகளும்’, ‘பரிணாமம் என்பது மென்மேலும் வளர்ச்சி என்பதல்ல’ போன்ற பெருந் தலைப்புகளில் கீழ்க்கண்டவை நீக்கப்பட்டுள்ளன. பரிணாமம் குறித்து ஒரு பட விளக்கம் குறித்த பகு தியும், வாழும் காலத்தில் பெற்ற குணாம்சங்களும் (லாமார்க்கின் கோட்பாடு) அதில் பரம்பரை பரம் பரையாகச் செல்வன எது என்ற பகுதியும், சார்லஸ் டார்வின் பற்றியும், புவியில் உயிர் எப்படித் தோன்றி யது என்பது பற்றியும் (Illustration, Acquired and inherited traits Acquired and inherited traits Charles Darwin & origin of Life on Earth); புதிய உயிரினங்கள் எவ்வாறு உருவாகின்றன என்ற பகுதியும் (Speciation); பரிணாமமும் அதன் வகைப்பாடுகளும் என்ற பகுதியில், பரிணாமத் தொடர்புகளை கண்டறிதல், தொல்படிவச் சான்றுகள், படிப்படியான பரிணாமம் ஆகியனவும் (Evolution and Classification, tracing evolutionary relationship, fossils, evolution by stages); பரிணாமம் என்பது மேம்பட்ட வளர்ச்சி என சம னப்படுத்துதல் கூடாது என்ற பகுதியும் (Evolution should not be equated with progress & human evolution) இடம் பெற்றிருந்தன.
மேற்கண்ட பாடக் குறிப்புகள் உயர்நிலை வகுப்பு முடித்துச் செல்லும் மாணவருக்கு பரிணாமம் பற்றிய அனைத்து அடிப்படைக் கருத்துக்களையும் அறிவியல் வழியில் புரிந்து கொள்ள வழி வகுக்கிறது. மேற்கண்ட பாடக் குறிப்புகள் உயர்நிலை வகுப்பு முடித்துச் செல்லும் மாணவருக்கு பரிணாமம் பற்றிய அனைத்து அடிப்படைக் கருத்துக்களையும் அறிவியல் வழியில் புரிந்து கொள்ள வழி வகுக்கிறது.
இந்துத்துவா அரசின் முயற்சி
கடந்த பல்லாண்டுகளாக இருந்து வரும் பரிணாமவியல், டார்வின் போன்ற பாடங்கள் ஏன் தற்போதைய ஒன்றிய அரசுக்கு ஏற்றதாக இல்லை. ஏனென்றால் தற்போதைய ஒன்றிய அரசு சனாதனக் கோட்பாடின்படி இயங்கத் துவங்கி இருக்கிறது. பரிணாமவியல் என்பது கடவுளின் படைப்புக் கோட்பாட்டிற்கு எதிரானது. உயிரினங்கள் படிப்படி யாக சிறிய சிறிய மாற்றங்கள் பெற்று நுண்ணுயிரிகள், தாவரங்கள், விலங்குகள் மனிதன் உட்பட எல்லா உயிரினங்களும் பரிணமித்துக் கொண்டு வருகின்றன என்கிறது பரிணாம அறிவியல். ஆனால் இது ஒன்றிய அரசின் இந்துத்துவா பார்வைக்கு ஏற்புடையது அல்ல. எப்படி முகலாயர்களின் ஆட்சி அவர்களுக்கு ஏற்புடையதாக இல்லையோ, அதைப் போன்றதுதான் பரிணாமவியலும். இந்துத்துவா கொள்கை-கோட்பாடுகளை தங்களது பேச்சின் மூலம் தொடர்ந்து பரப்பிக் கொண்டி ருக்கிறார்கள். பொது வெளியில் மட்டுமல்லாது, இந்திய அறிவியல் மாநாட்டிலும்கூட கல்வியாளர்கள் என்று பெயர் பெற்றவர்கள் பேசி இருக்கிறார்கள். 2019 இல் நடந்த 106-ஆவது இந்திய அறிவியல் மாநாட்டில் பேசிய ஆந்திரா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் ஜி.நாகேஸ்வர ராவ், பகவத் கீதையில் கூறப்படும் ‘தசாவதாரம்’ என்பது டார்வின் கொள்கை யைவிட மேம்பட்டது என்றார்.
டார்வின் கொள்கை என்பது கடலில் இருந்து உயிர் உருவாகி மனிதனாக உருவாவதை விளக்குகிறது. ஆனால் தசாவதாரமோ மேலும் ஒருபடி சென்று அறிவு, அரசியல் திறன் படைத்த அவதாரங்கள் மூலம் விளக்குகிறது என்றார். தசாவதாரப்படி நீரில் உருவான மச்ச அவதாரம், அதைத் தொடர்ந்து நீர் நில வாழும் ஆமை அவதாரம், பின்னர் தரையில் வாழும் பன்றி அவதாரம், பின்னர் சிங்கமுக மிருகமும் மனித னும் கொண்ட சிம்ம அவதாரம், அதன் பின் வந்த வாமன அவதாரமே சிறிய அறிவு பெற்ற முதல் மனிதன் என்றும் பின்னர் தோன்றிய அவதாரங்கள் (ராமன், கிருஷ்ணன்) மென்மேலும் அறிவுபெற்ற மனிதர்களாக பரிணமித்து உள்ளதை தசாவதாரம் விளக்குகிறது என வியாக்கியானம் தருகிறார். டார்வின் கொள்கை என்பது மதக் கோட்பாட்டில் இல்லாதது. ஆனால் தசாவதாரம் என்ற கோட்பாடு பரிணாமத்தை விளக்குகிறது என்று எல்லோர் நினைவிலும் உள்ளது. எனவே தசாவதாரத்தைத் தான் பயிற்றுவிக்க வேண்டும் என சுரேந்திர ஜைன் என்ற விஷ்வ இந்து பரிஷத்தின் துணைத் தலைவர் அல் ஜசிராவுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதே போல் கல்வித்துறையின் முன்னாள் இணையமைச்சர் சத்யபால் சிங், டார்வின் கோட்பாடு அறிவியல் ரீதியாகத் தவறானது. நமது முன்னோர்கள் வாய்மொழியாகவோ எழுத்து மூலமாகவோ குரங்கிலிருந்து மனிதனாக மாறுவதை பார்த்ததாகக் கூறவில்லை. அப்படி இருக்கும் போது, பள்ளி - கல்லூரி பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பது சரிதானே என அதிரடியாகப் பேசி யிருக்கிறார். இந்த இந்துத்துவா அரசியல் பின்னணியில்தான் என்சிஈஆர்டி (NCERT) அறிவியல் பாடப் புத்த கங்களில் பரிணாமவியல் நீக்கப்பட்டுள்ளன. அறி வியல் பாடப் புத்தகங்கள் சுமார் 24,000 சிபிஎஸ்சி (CBSE) பள்ளிகளில் நமது நாட்டில் பல லட்சம் மாணவர்களால் பயன்படுத்தப்படுகின்றன. இது மட்டு மல்லாமல் 26 மாநிலங்களில், 240 இணைப்புப் பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது என்பது குறிப்பி டத்தக்கது.
பரிணாமவியல் நீக்கப்பட்டதன் மூலம் பல லட்சக் கணக்கான மாணவர்கள் டார்வின் மற்றும் பரிணாமம் பற்றி தெரியாமலேயே உயர்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்து வெளி வருவார்கள் பொதுக் கல்வியில் பரிணாமவியலை நீக்குவது என்பது மிகப் பெரிய சதியாகும். உயிரிப் பரிணாம மும், மனிதப் பரிணாமமும் அறிவியல் ரீதியாகக் கற்பிக்கப்பட்டு சாதி, மத, இன வேறுபாட்டைக் களைவதற்கான அறிவியல் கல்வியாகும். தற்போது இதனை நீக்குவதன் மூலம் இது முற்றிலும் துடைத் தெறியப்பட உள்ளது வேதனைக்குரியது.
ஐக்கிய அமெரிக்க அனுபவம்
1987-லிலேயே ஐக்கிய அமெரிக்காவில் டார்வின் பாடத்தோடு படைப்புக் கொள்கையையும் கற்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை லூசியானா நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. அதேபோல் 2014-இல் இருந்து இண்டெலிஜெண்ட் டிசைன் (Intelligent Design) என்ற மத வழியிலான கோட்பாட்டைப் பாடப் புத்தகங்களில் புகுத்த வேண்டும் என்ற பிற்போக்கு வாதிகளின் கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டன. டார்வின் கோட்பாடு என்பது மத நம்பிக்கைகளை ஏற்க மறுக்கும் என்றும் மக்களின் சிந்தனையை முற்றி லும் மாற்றி அமைக்கும் என்று ரிச்சர்ட் டாக்கின்ஸ் கூறுவதை மனதில் கொண்டு, நாம் ஒன்றிய அரசின் மறைமுகமான இந்துத்துவா மதவாதக் கல்விக் கோட்பாட்டை தடுத்து நிறுத்தியாக வேண்டும்.
கட்டுரையாளர் : மேனாள் பொதுச் செயலாளர்,
அகில இந்திய அறிவியல் கூட்டமைப்பு