articles

img

மூச்சையடக்கி டைவ் அடிக்கும் சுறாக்கள்

சுறாக்களும் மற்ற மீன்களும் சுற்றியுள்ள நீரின் வெப்பத்தினாலேயே தங்கள் உடல் வெப்ப நிலையை கட்டுப்படுத்துகின்றன. பகலில் கடலின் மேற்பரப்பில் வெதுவெதுப்பாயிருக்கும். ஆனால் இரவில் இரை தேடி கடலின் அடியாழத்திற்கு செல்ல வேண்டியதிருக்கிறது. திமிங்கலங்களும் மற்ற ஆழ்கடல் செல்லும் பாலூட்டிகளும் தங்கள் மூச்சை  அடக்கி கொள்வது அறிந்ததே. ஆனால் சுத்தியல்தலை  சுறாக்கள் குளிர்ந்த ஆழ்கடலுக்குள் செல்லும் போது  தங்கள் மூச்சை அடக்கி தங்கள் உடல் வெப்ப நிலையை  தக்க வைத்துக்கொள்வது இப்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கடலினடியில் வெப்பம் 5டிகிரி சென்டிகிரேடிற்கும் குறைவாக இருக்கும். இந்த வெப்பநிலையை சுறாக்கள்  எவ்வாறு தாக்கு பிடிக்கின்றன என்பதை காண்ப தற்காக, ஹவாய் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சுறா உடலியல் அறிஞர் மார்க் ரோயர் சுறாக்களின் உடலில் சிறப்பு உணர்வுக் கருவிகளை பொருத்தினார். இந்த கருவி 23 நாட்களுக்கு சுறாக்களின் நடமாட்டம், அவை சென்ற ஆழம் மற்றும் அவற்றின் உடல் வெப்ப நிலை ஆகியவற்றை பதிவு செய்தது. அவை வி வடிவில் கடலின் ஆழத்திற்கு டைவ்  அடித்து இரையை பிடித்து,

பின் உடனே மேற்பாப்பிற்கு ஏவுகணை போல் திரும்பி வருகின்றன. ஆனால் வியப்ப ளிக்கும் வகையில், அவை குளிர்ந்த ஆழத்திற்கு செல்லும்போதும் அவற்றின் வெப்ப நிலை மாறுதல் அடையவில்லை. மேலே 290 மீட்டர் ஆழத்திற்கு வரும்போதுதான் அவற்றின் வெப்பம் 2.8டிகிரி சென்டி கிரேட் அளவு குறைகிறது. சுறாக்கள் கில்ஸ் எனப்படும் செதிள்கள் மூலம் சுவாசிக்கின்றன. செதிளுனுள் நீர் சென்று வரும்போது உடல் வெப்பத்தையும் வெளிக்கொண்டு வந்து விடுகின்றன. எனவே ஆழத்திற்கு செல்லும்போது, சுறாக்கள் செதிள்களை மூடிக்கொள்கின்றன. அதாவது மூச்சை அடக்கிக் கொள்கின்றன. இந்த விளக்கம் சரியாக இருக்கும் என்றாலும் புகைப்படம் போன்ற நேரடி ஆதாரங்கள் தேவை என்கிறார் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சுறா சூழலியலாளர் ஜூலியா ஸ்பயட். சில ஆண்டுகளுக்கு முன் டான்சேனியா அருகில் 1000 அடி ஆழத்தில் எடுக்கப்பட்ட சுத்தியல்தலை சுறா வின் காணொளியில் அவை தங்கள் செதிள்களை மூடிய நிலை காணப்பட்டுள்ளது. இதுவும் இப்போது நடத்தப்பட்ட சோதனை முடிவுகளும் சேர்ந்து அவை தங்கள் மூச்சை அடக்கி கொள்கின்றன என்பதை காட்டுகிறது என்கிறார் ரோயர். இந்த இனம் எவ்வளவு அசாதாரணமானது என்பதையும் இது காட்டுகிறது.