பிளாஸ்டிக் மாசுகளால் கடற்பறவைகளுக்கு ஏற்படும் ஒரு புதிய நோயை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது அப்பறவைகளின் செரித்தல் உறுப்புகளை பாதிக்கிறது. இந்நோயை கண்டுபிடித்த லண்டன் இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பிளாஸ்டிக்கால் மட்டுமே இது ஏற்படுவதால் இதற்கு பிளாஸ்டிகோசிஸ் (Plasticosis) என்று பெயரிட்டுள்ளனர். வன விலங்குகளில் பிளாஸ்டிக்கால் ஒரு நோய் ஏற்படுவது கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல்முறை.
உணவாகும் பிளாஸ்டிக் மாசுகள்
பிளாஸ்டிக் மாசு தீவிரமாக இருப்பதால் பல்வேறு வயதில் இருக்கும் பறவைகளிலும் இந்நோயால் பாதிப்பு ஏற்படுகிறது என்று கேடு தரும் பொருட்கள் (Journal of Hazardous Materials) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வுக்கட்டுரை கூறுகிறது. இளம் பறவைகளுக்கு பெற்றோர் பறவைகள் உணவுடன் தவறுதலாக பிளாஸ்டிக் பொருட்களையும் உணவாக ஊட்டும்போது இந்நோய் ஏற்படுகிறது.
உள்ளுறுப்புகளில் காயம்
அருங்காட்சியகத்தின் பறவைகள் பிரிவு தலைமை மேற்பார்வையாளர் டாக்டர் அலெக்ஸ் பாண்ட் (Dr Alex Bond) மற்றும் டாக்டர் ஜெனிஃபர் லேவர்ஸ் (Dr Jennifer Lavers) உள்ளிட்ட விஞ்ஞானிகள் ஆஸ்திரேலியா லாட் ஹவ் (Lord Howe) தீவில் வாழும் ஷியர்வாட்டர்ஸ் (Flesh-footed Shearwaters) என்ற கடற்பறவையினத்தை ஆராய்ந்தனர்.
பட்டினி கிடக்கும் பறவைகள்
இந்நோயால் பறவையின் வயிற்றில் உள்ள ப்ரோவென்டிரிக்குலஸ் (Proventriculus) என்ற முதல் செரித்தல் பகுதி மற்றும் உணவுப்பாதையில் பாதிப்பு ஏற்படுவதை கண்டறிந்தனர். பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாக உள்ளே சென்றால் அதனால் உண்டான காயமும் அதிகமாக இருப்பது தெரியவந்தது. இந்த நோயால் டிரிக்குலஸ் பகுதியில் உள்ள செரித்தலுக்கு உதவும் சுரப்பிகள் செயலிழந்து போகின்றன.
உயிருக்கே ஆபத்து
இது உணவு உன்பதையும், நீர் அருந்துவதையும் பாதித்து எளிதாக நோய்த்தொற்றை ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக் பொருட்களைத் தொடந்து இந்த உயிரினங்கள் உண்பதால் செரிமான உறுப்புகளில் வீக்கம் ஏற்பட்டு திசுக்கள் புண்ணாகிறது. செரித்தல் பாதிக்கப்படுவதால் வளர்ச்சி தடைபட்டு வாழ்வுக்கே ஆபத்தை ஏற்படுத்துகிறது. பறவைகளின் உடலில் இயற்கையாகக் காணப்படும் சிறிய கற்கள் போன்ற பொருட்கள் அவற்றுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.
வெளித்தோற்றமும் உள் தோற்றமும்
இப்பறவைகள் வெளிப்பார்வைக்கு உடல் நலத்துடன் இருப்பது போலத் தோன்றினாலும் அவற்றின் உள் உறுப்புகள் சரிவர செயல்படுவதில்லை என்று அலெக்ஸ் பாண்ட் கூறுகிறார். பறவையின் வயிற்றுப்பகுதியில் உள்ள முக்கிய செரித்தல் உறுப்புகள் இந்த முறையில் ஆராயப்படுவது இதுவே முதல்முறை. விஞ்ஞானிகள் பூமியின் ஒருபகுதியில் இருக்கும் ஒரு இனத்தை சேர்ந்த பறவைகளை மட்டுமே ஆராய்ந்தனர் என்றாலும் உலகம் முழுவதும் வாழும் பல பறவையினங்களையும் இந்த நோய் பாதித்திருக்கும் என்று நம்புகின்றனர்.
தீவிர ஆய்வுகள் தேவை
பூமியில் வாழும் எல்லா உயிரினங்களும் பிளாஸ்டிக் மாசுகளால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். பிளாஸ்டிக் மாசு என்ற ஆபத்தான பிரச்சனை சமீப பத்தாண்டுகளாக மட்டுமே அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இதனால் பல சூழல் பிரிவுகளிலும் இது குறித்த ஆழமான ஆய்வுகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்பதால் இது பற்றி மேலும் தீவிர ஆய்வுகள் நடத்தப்படவேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.