அவரைக் காணவும், தனது வசீகரக் குரலில் அற்புதமாக அவர் சொல்லிக் கொண்டே செல்லும் கருத்தாக்கங்கள் மிகுந்த உரையை கேட்கவும் சென்னை மாநகரத்தின் மூலை முடுக்குகளில் இருந்து அடித்துப் பிடித்து ஓடோடிச் சென்று பொதுக் கூட்டங்களில், கருத்தரங்க மண்டபங்களில் முன்னதாகவே இடம்பிடித்து அமரத் துடிக்கும் இயக்கத் தோழர்களைப் பல பத்தாண்டுகளாகக் கண்டதுண்டு. அவர் ஒலிபெருக்கி முன்பாக வந்து நிற்கவும், முதல் மூன்று நான்கு வாக்கியங்கள் தமிழில் பேசுவாரே என்று காத்திருந்து அவரும் அவ்வண்ணமே சுவாரசியமான தமிழில் ‘எல்லோருக்கும் வணக்கம்’ என்று சொல்லிவிட்டுத் தான் முழுதாகத் தமிழில் பேச இயலாத வருத்தத்தைத் தனது முத்திரைப் புன்னகையோடு தெரிவித்துவிட்டு ஆங்கி லத்தில் பேசத் தொடங்கிவிட்டாலும், தங்க ளோடு நேரடியாகத் தங்கள் மொழியில் தான் அவர் பேசிக் கொண்டிருக்கிறார் என்பதான பாவனையில் எளிய மக்கள் தங்களது வாய் மூடாதபடி கேட்டுக் கொண்டிருப்பதை நோக்கியதுண்டு. ஒற்றைக் கரவொலி யாரா வது எழுப்பினாலே அமோகமாக ஒரு சேர எல் லோரும் அதைப் பன்மடங்கு எதிரொலித்துப் பிறகு மொழி பெயர்ப்பாளர் எடுத்துச் சொல்கை யில் கருத்தூன்றி அந்த இடம் வரக் காத்திருந்து மீண்டுமொருமுறை கைதட்டி ஆரவாரித்து உற்சாகம் அடையப் பார்த்ததுண்டு. இந்த செப்டம்பர் 23 (திங்கள் கிழமை) அன்றும், ஆறு மணிக்குத் தொடங்க இருந்த கூட்டத்திற்கு ஐந்தே கால் மணிக்கே உட்கார இடமின்றி சென்னை தேனாம்பேட்டை காமராசர் அரங்கு நிறைந்துவிட்டிருந்தது. ஆனால் தாங்கள் கண்ணாரக் கண்டு காதார லயித்துக் கேட்டு மனதாரக் கொண்டாடிய அன்புத் தலைவரின் அலங்கரிக்கப்பட்ட படமே இருந்தது; அவர் இல்லை. இனி அவரை நேரில் பார்க்க முடியாதே என்ற ஒவ்வொரு வரின் பரிதவிப்பின் கனம் கண்களில் நீர் கசிய, பிரதிபலித்துக் கொண்டிருந்தது.
தீராத அமுத சுரபி
சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலை எல்லாம்’ தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்கள் நினைப்பாகவே கடப்பதாயிற்று. எந்த நாளேடு, எந்த வார இதழ், எந்த மொழியிலும், எந்த இணையப் பக்கங்களானாலும் அவரைக் கொண்டு தீட்டிய சித்திரங்களாகவே மலர்ந்து கொண்டிருக்க, பருகப் பருகத் தீராத சுவையாக அவரது பன்முக ஆளுமையின் அமுத சுரபி பொங்கிப் பெருகிக் கொண்டே இருக்கிறது. ‘அவர் ஒரு சிந்தனையாளர்... அவர் ஒரு போராளி’ என்று அவரது உருவப்படத்தைத் திறந்து வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் அசோக் தாவ்லே வருணித்தது, அறிஞர்களும் எளியவர்களும், மூத்தவர் களும் இளைஞர்களும், தலைவர்களும் ஊழி யர்களும், பொறுப்பாளர்களும், உழைப்பாளி களும், படைப்பாளிகளும் பாட்டாளிகளும் என பல்வேறு தரப்பட்டவர்களாக அரங்கில் குழுமி இருந்தோரை மிகச் சரியாகப் படித்தது போல் ஒலித்தது. உருவப்படம் திறந்து வைக்கப்பட்டுக் கொண்டிருந்த தருணத்தில் கணீர் என்று செவ்வணக்க முழக்கங்கள் எழுப்பப்பட்டன, சிரமத்தோடு தணித்துக் கொள்ளப் பார்த்த அவரது பிரிவின் துயரத்தை ஒருசேர மீண்டும் கிளர்த்துவதாக இருக்க அரங்கு முழுக்கச் சிறிது நேரம் எதிரொலித்துக் கொண்டே இருந்தன அந்த மகத்தான தோழருக்கான புகழ் முழக்கங்கள்.
நாத் தழுதழுக்க...
தான் பகிர்ந்து கொள்ள விரும்பியதை எடுத்துச் சொல்லவும் இயலாது நாத் தழு தழுக்கப் பொங்கிய துக்கத்தை ஒருவாறு கையாண்டு மேற்சென்று யெச்சூரி அவர்களது சிறப்பியல்புகளையும் அவர் கடந்த அசாத்திய மைல் கற்களையும் அடையாளப்படுத்தித் தலைமை உரையை நிறைவு செய்தார் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன். ‘ஜே என் யு பல்கலைக் கழகத்தை இடதுசாரி களின் கோட்டையாக உருவாக்கியதில் முக்கிய மானவர் சீத்தாராம் யெச்சூரி, அவரது மறைவு கருத்தியலுக்கான இழப்பு’ என்று குறிப்பிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘அவர் மார்க்சிஸ்ட் கட்சிக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல, எங்களுக்கும் சொந்தம், எல்லோ ருக்கும் சொந்தமானவர்’ என்று சொல்லவும் பெருமிதமிக்க கரவொலியால் தங்கள் அன்புத் தலைவரது புகழைக் கொண்டாடினர் அரங்கில் நிறைந்திருந்தவர்கள்.
அரிதினும் அரிய மனிதர்
‘இதுவரை எந்தவொரு முன்னாள் மாண வரது உடலுக்கும் ஜவஹர்லால் பல்கலைக் கழக வளாகத்தினுள் எடுத்துச் சென்று இறுதி மரியாதை செய்யப்பட்ட வரலாறு இல்லை...தோழர் யெச்சூரி, அரிதினும் அரிதான மனிதர்’ என்று காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை சொல்லவும் ஆமென்று கரவொலியால் ஆமோதித்தது அவை. ‘இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கலந்தா லோசனை கூட்டத்தில் அவரது உரைக்குப் பிறகு தான் கூட்டம் முழுமை பெறும். அவரது கருத்துகளால் தான் கூட்டம் வலிமை பெறும்’ என்று சிறப்பித்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன். செம்மா ந்து நிமிர்ந்து கேட்டனர் இயக்கத் தோழர்கள்.
சமூக விஞ்ஞானி
‘அவர் ஓர் அரசியல்வாதி மட்டுமல்ல, சமூக விஞ்ஞானி’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. ‘அனைவரிடத்தும் புன்முறு வல் பூத்து அரவணைத்து ஒற்றுமைப்படுத்தும் பேராற்றல் மிக்கவர் யெச்சூரி’ என்றார் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ.
இப்படி ஒருவரை உருவாக்க முடியாது
‘தீக்கதிர் ஏட்டில் கடந்த சில நாட்களாக வரும் அவரைப் பற்றி எழுதப்படும் கட்டுரை கள் எல்லாம் வாசித்தபடி இருக்கிறேன்... இப்படி யான ஒரு தலைவரை உருவாக்க முடியுமா என்று மூத்த தோழர் டி.கே.ரங்கராஜனிடம் கேட்டேன்; உருவாக்க முடியாது, இயல்பாக உருவாகி வரவேண்டும், அப்படியாக மலர்ந்த வர் தான் யெச்சூரி என்று அவர் சொன்னார்... கம்யூனிஸ்ட் இயக்கங்களில் வாழ்கிற போது யாரையும் முன்னிறுத்துவது இல்லை, மறை கிறபோது அரிய தலைவர்களது இழப்பை உணரும்போது பெரும் வேதனைக்கு உள்ளா கிறோம்’ என்று குறிப்பிட்டார் இந்திய கம்யூனி ஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்.
விவாதம் தூண்டிய நூல்
‘இந்தியாவை இந்து ராஷ்ட்டிரமாக உரு வகப்படுத்தி இந்திய மக்களை மத ரீதியாகக் கூறுபோட்டு ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் இரண் டாவது தலைவர் எம்.எஸ்.கோல்வால்கர் எழு திய, ‘நாம் அல்லது நமது தேசியத்தின் வரை யறை’ என்ற நூலின் மூலப் பிரதி ஒன்றைக் கண்டடைந்த யெச்சூரி அதன் அபாய நச்சுக் கருத்தியலை அம்பலப்படுத்திய போது அதிர்ந்து போனது சங் பரிவாரம்; அப்படி ஒன்று இல்லவே இல்லை என்று சாதிக்கப் பார்த்துத் திணறியது. அவர்களால் மறைக்க முடியாத அந்த வரலாற்றை முன் வைத்து ஒரு விவாத நூல் எழுதுமாறு மூத்த பத்திரிகை யாளர் என்.ராம் கேட்க, யெச்சூரி எழுதிய ‘இந்து ராஷ்ட்டிரம் என்றால் என்ன’ எனும் அந்தப் புத்தகம் ஃபிரண்ட்லைன் வெளியீடாக வந்து மிகப்பெரிய அளவில் மக்களைச் சென்றடைந்தது’ என்று நினைவுகளில் ஆழ்ந்தார் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. இராமகிருஷ்ணன்.
துல்லியமான ஆய்வு
மாணவப் பருவத்திலிருந்தே அவரது இயக்கத் துடிப்பைப் பார்த்ததுண்டு, தனக்கு இருந்த அறிவாற்றல், மேதைமையைக் கொண்டு அவர் அறிவுசார் வல்லுநராக வெவ்வேறு விதங்களில் தன்னை உருவாக்கிக் கொண்டு போயிருக்க முடியும்; ஆனால் அவர் உழைப்பாளி மக்களுக்கான விடுதலைக்காகவே தனது திறமைகளை அர்ப்பணிப்பது என்ற பாதையைத் தேர்வு செய்தார் என்று சுட்டிக்காட்டிய என்.ராம், சோசலிசத்தைத் தகர்க்கும் தீய எண்ணங்க ளோடு கோர்பச்சேவ் முன் வைத்த (பெரிஸ் த்ரோய்க்கா, கிளாஸ் நாஸ்ட்) தத்துவக் குள றுபடிகளை மிகத் துல்லியமாக கண்டுணர்ந்து நுட்பமாக அலசி ஆராய்ந்து மார்க்சிஸ்ட் கட்சி கடுமையாக விமர்சித்ததில் யெச்சூரியின் பங்களிப்பும் முக்கியமானது என்றார்.
ஆழமான அறிவு
‘சோவியத் சீர்குலைவுக்குப் பிறகு சோசலிசம் வீழ்ச்சி அடைந்தது, கம்யூனிசம் தோற்றுவிட்டது என்ற கூக்குரல்கள் உலகளாவிய அளவில் எழுந்த பின்னணியில் 1992இல் இதே சென்னையில் நடைபெற்ற 14வது அகில இந்திய மாநாட்டில், 40 வயது இளைஞர் ஒருவர், மிக மூத்த அறிவார்ந்த தலைவர்கள் நிறைந்து இருந்த மார்க்சிஸ்ட் கட்சி மத்திய குழுவின் சார்பில், “தத்துவத்தின் தோல்வியல்ல, நடைமுறைப்படுத்தியதன் சிக்கல்கள் தான்” என்று விளக்கிய தத்துவார்த்த பிரச்சனைகள் குறித்தான தீர்மானத்தை முன் மொழியத் தேர்வு செய்யப்பட்டார் என்றால் தோழர் யெச்சூரியின் அறிவின் ஆழத்தை உணர முடியும். சாதிய, பாலின ஒடுக்குமுறைக்கு எதிரான தீர்மானகரமான குரலில் அவரது உரைகள் இருக்கும்’ என்று விவரித்தார் அசோக் தாவ்லே.
முதலில் தேசத்தைப் பாதுகாக்க வேண்டும்
‘எதிர்பாராத நேரத்தில் எதிர்கொள்ள முடியாத சூழலில் ஏற்றுக் கொள்ளவே இயலாத இழப்பு’ என்ற அசோக் தாவ்லே அவர்களது தொடக்க சொற்கள் பெருந்துய ரத்தை மீண்டும் எழுப்பினாலும், ‘இந்தியா வை மாற்றி அமைக்க வேண்டுமானால், இந்தியாவை முதலில் பாதுகாக்க வேண்டும் என்று அவர் அடிக்கடி சொல்வதுண்டு... அதன் அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும், அதன் அடிநாதமாக விளங்கும் ஜனநாயகம், இறையாண்மை, மதச்சார்பின்மை, கூட்டாட்சி, சமூக நீதி பாதுகாக்கப்பட வேண்டும் என்பது அவரது தொடர் முழக்கமாக இருந்தது; தந்தை பெரியார், நாராயண குரு, ஜோதிராவ் புலே, சாவித்ரி பாய் புலே, ராஜா ராம் மோகன் ராய், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் என தேசத்தின் சமூக சீர்திருத்தவாதிகள் அனைவரையும் கொண்டாடியவர் யெச்சூரி; அம்பேத்கர் கிட்டத்தட்ட ஒற்றை மனிதராகவே முழு பொறுப்பைச் சுமந்து உருவாக்கிய அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பது என்பது ஆக முக்கியமானது, சோசலிச இந்தியாவை உருவாக்குவோம் என்ற இலட்சியப் பயணத்தைத் தொடர்வதே அவருக்கான புகழஞ்சலி’ என்ற தாவ்லேயின் உரை நிறைவு எழுச்சி மனநிலையை உருவாக்கியது.
கட்டுண்டு கிடந்த கூட்டம்
கூட்டத்தின் ஊடே அருகே அமர்ந்து இருந்தவர்களை எங்கிருந்து வந்திருக்கிறீர் கள் என்று கேட்க, புதுவையிலிருந்து கூட்டாக வந்திருக்கிறோம் என்றார் மாதர் சங்கப் பொறுப் பாளர் ஒருவர். தொலை தூரங்களில் இருந்தெல்லாம் சிரமம் பாராது வந்து திரண்டிருந்தனர் மக்கள் என்று புரிந்தது. நிற்கவும் இடமின்றிக் கடந்து போய்க் கொண்டிருந்தனர் மாணவர்கள் சிலர். உடல் உபாதைகளின் அழுத்தம், தொலை தூரப் பயணம், முதுமையின் தாக்கம் என்ன வாகவும் இருக்கட்டும், நகரப் போவதில்லை என்று எண்ணற்றோர் மூன்று மணி நேரத்திற்கு மேலாக இருக்கையிலேயே இருந்து கேட்டது, சீத்தாராம் யெச்சூரி எனும் அருமையான தலைவரது தியாக வாழ்க்கை யின் அர்ப்பணிப்பு குறித்த நினைவுகளில் கட்டுண்டு இருப்பதைப் புலப்படுத்தியது.