‘பனையேறி’ குறும்படம், துபாய் விழாவில் முதல் பரிசை வென்றுள்ளது. துபாயில் கல்ஃப்கட்ஸ் நடத்திய சர்வதேசக் குறும்பட விழாவில், சிறந்த குறும்படத்திற்கான விருதை “பனையேறி” குறும்படம் வென்றுள்ளதாக போட்டியின் நடுவர் இயக்குநர் சேரன் அறிவித்துள்ளார். துபாயில் கல்ஃப்கட்ஸ் நடத்திய குறும்பட விழாவில் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் மொத்தம் 138 படங்கள் திரையிடப்பட்டப்பட்டன. இதில் “பனையேறி” குறும்படம் சர்வதேச விழாவில் சிறந்த குறும்படத்திற்கான விருதை வென்றது. கலைமாமணி விருது பெற்ற தாமரை செந்தூர்பாண்டி எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்டு திசையன்விளையைச் சேர்ந்த கணேஷ் மூர்த்தி இயக்கிய குறும்படம் இது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் முக்கியத் துவத்தை உணர்த்துகிறது. பனையேறி குறும்படம் மொத்தம் 7.36 நிமிடங்கள் ஓடுகிறது. இதன் தயாரிப்பாளரான திசையன்விளையைச் சேர்ந்த டி.பி.சரவணன், பனை மரம் ஏறி பதநீர் இறக்கும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பனைமரம் ஏறுபவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் வாழ்க்கை முறை, கடின உழைப்பைச் சித்தரித்துள்ளார். டி.பி.சரவணனின் மனைவியாக நடித்துள்ள சிந்துஜா பனை தோப்பில் வெல்லம் காய்ச்சுபவராகத் தோன்றுகிறார்.
சரவணனின் மகனாக நடிக்கும் சுடலை “நீட்” தேர்வில் வெற்றி பெறுகிறார். வெற்றி பெற்றாலும் போது மான பொருளாதார வசதியில்லாததால் எப்படி படிக்க வைப்பது எனக் கலங்கி நிற்கும் நேரத்தில் சுடலைக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது என்ற செய்தி கணவன்-மனைவி இருவரையும் மகிழ்ச்சி கொள்ளச் செய்கிறது. குறும்படம் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய சரவணன், “இந்தப் படம் சர்வதேசப் போட்டியில் பரிசு பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். “பனையேறி” பெரிய திரையில் வர வேண்டும் என்றார். சரவணன் தற்போது திசையன்விளையில் அச்சகம் நடத்தி வருகிறார். 15 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் “வறுமையிலும் வாய்மை என வாழும் பனையேறும் மக்களின் வாழ்வியலை” நேர்த்தியாகப் படம் பிடித்து காட்டியதாகக் கூறும் படக்குழு வினர் முக்கியமான கருப்பொருளை மையமாக வைத்து குறும்படம் எடுத்தால் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளதாகத் தெரிவித்தனர். தகவல்: ச.நல்லேந்திரன்