articles

img

தைமஸ் சுரப்பியை அகற்றலாமா?

நமது உடலில் நெஞ்சுப் பகுதியில் தைமஸ் எனும் சுரப்பி உள்ளது. இது நிணநீர், நோயெதிர்ப்பு மற்றும் நாளமில்லா சுரப்பி மண்டலங்களின் பகுதியாகும். டி செல்கள் எனும் வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்து அவற்றை முதிர்ச்சி அடையச்செய்வதே இதன் பணியாகும்.  இந்த வெள்ளை  அணுக்கள் தொற்றையும் நோயயையும்  எதிர்க்க உதவுகின்றன. குழந்தைகள் மற்றும் சிறார்களில் தைமஸ் பெரிய அளவில் காணப்படும். பருவம் அடைந்த பின் இது சுருங்கிவிடுகிறது.  அறுவை சிகிச்சைகளின்போது இது அகற்றப்பட்ட 2300 நபர்களை ஆய்வு செய்ததில் இதனால் அடுத்த சில ஆண்டுகளில் புற்று நோய் மற்றும் மரணம் ஏற்படும் அபாயம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 3ஆம் தேதியிட்ட நியூ இங்கிலாந்து மருத்துவ இதழில் இது குறித்த ஆய்வு வந்துள்ளது. இதற்கு முன் இந்த உறுப்பானது பெரியவர்களுக்கு தேவையில்லை;ஆகவே அகற்றப்படலாம் என்று கருதப்பட்டது. தைமஸ் சுரப்பி  சிறு வயதில் டி செல்களை உற்பத்தி செய்து நோயை உண்டாக்கும் அந்நிய கிருமிகளை கண்டறிகின்றன. பெரியவர்களுக்கு இது குறைவாகவே உற்பத்தி ஆகின்றது.அதற்குப் பதிலாக மெமரி டி செல்கள் என்பவை சிறப்பு டி செல்களை உற்பத்தி செய்கின்றன. காலப்போக்கில் தைமஸ் சுருங்கி கொழுப்பாக மாறிவிடுகிறதாம்.

பெரியவர்களின் உடலில் தைமஸ் அளவுக்கு மீறி வளர்ந்திருந்தால் தன்னை தானே தாக்கும் ஆட்டோ இம்மியூன் கோளாறு வராமலிருப்பதற்காக அதை நீக்கிவிடுவதுண்டு. சில நேரங்களில் மார்புப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய இடையூறாக இருப்பதாலும் நீக்கப்படுவதுண்டு என்கிறார் பாஸ்டனிலுள்ள மாசாசூசெட்ஸ் பொது மருத்துவமனையை சேர்ந்த புற்று நோய் நிபுணர் டேவிட் ஸ்கேடன். அது முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை என்று கருதப்படுவதால் பல நேரங்களில் நீக்கப்படுகிறது என்கிறார் அவர்.

இந்த சுரப்பியை நீக்குவதால் என்ன விளைவுகள் என்று காண்பதற்காக ஸ்கேடன் மற்றும் அவரது குழுவினர் 1993இலிருந்து 2020 வரை தைமஸ் நீக்கப்பட்ட 1146 நோயாளிகளின் ஆரோக்கியத்தை பரிசீலித்தனர். இவர்களுடைய வயது,பால், இனம் ஆகியவற்றை ஒத்த அதே எண்ணிக்கையிலான தைமஸ் நீக்கப்படாமல் அறுவை சிகிச்சை செய்யப்பட நோயாளிகளின் ஆரோக்கியத்தையும் ஒப்பிட்டனர். அறுவை சிகிச்சைக்கு ஐந்து வருடங்களுக்கு பின் தைமஸ் நீக்கப்பட்டவர்களில் 8.1% உம் நீக்கப்படாதவர்களில் 2.8%உம் இறந்தனர். இதிலிருந்து  எந்த காரணத்தினால் ஆனாலும் மரணம் ஏற்படும் அபாயம் தைமஸ் நீக்கப்படும்போது 3 மடங்கு அதிகரிக்கிறது என்பது தெரிகிறது. இதேபோல் புற்று நோய் வரும் அபாயமும் தைமஸ் நீக்கப்படும்போது இரண்டு மடங்காக அதிகரிப்பதும் தெரியவந்துள்ளது. இது தற்காப்பு மண்டலத்தின் கண்காணிப்பு சக்தி குறைக்கப்பட்டதினால்  ஏற்பட்டிருக்கலாம் என்கிறார் ஸ்கேடன்.   

தைமஸ் நீக்கப்பட்ட பின் ஏற்படும் மரணம் அல்லது மற்ற எதிர்மறை விளைவுகள் டி செல்கள் உற்பத்தி செய்யப்படாததாலா அல்லது தைமஸ் சுரப்பியின் அறியப்படாத  பணிகள் காரணமாக என்பது தெளிவாகவில்லை. தைமஸ் சுரப்பி நீக்கப்படும் முறை கூட காரணமாக இருக்கலாம் என்கிறார் கொலம்பியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த நோய் எதிர்ப்பு துறை மருத்துவர் டோனா ஃபார்பர். எப்படியிருப்பினும் இந்த சின்னஞ்சிறு சுரப்பி ஏதோ ஒரு பங்கு வகிக்கிறது. என்கிறார் அவர்.