articles

img

20 ஆம் நூற்றாண்டின் மாபெரும் புரட்சி வீரர்...

கியூபப் புரட்சியின் நாயகன் பிடல் காஸ்ட்ரோ 1926-ஆம் ஆண்டு ஆகஸ்டு 13-ஆம் தேதி கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தை ஏஞ்சல் காஸ்ட்ரோ ஸ்பெயின் நாட்டுக்காரர். தாயார் லினா கியூபாவைச் சேர்ந்தவர்.வசதியான விவசாய குடும்பத்தில் பிறந்த பிடல் காஸ்ட்ரோ ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டம் மற்றும் சமூக அறிவியல் பட்டப்படிப்பு படித்தபோது அவருடைய சிந்தனை அமெரிக்காவுக்கு எதிராகத் திரும்பியது. அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்பட்ட சர்வாதிகாரி பாடிஸ்டாவின் ஆட்சிக்கு எதிராக புரட்சியாளராக மாறினார்.1953-ஆம் ஆண்டு இளைஞர்களைத் திரட்டிகிழக்கு நகரான சாண்டியாகோவில் அரசுக்கு எதிராகப் போராடினார். இதில் அவருக்குத் தோல்வியே கிடைத்தது. இதனால் பிடல் காஸ்ட்ரோவும் அவருடைய தம்பி ரவுல் காஸ்ட்ரோவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

நீதிமன்ற உரை
நீதிமன்றத்தில் ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’ எனும் புகழ்பெற்ற பிடல் காஸ்ட்ரோவின் ஆவேசமான உரை நீதிபதிகளின் மனதைக் கரைய வைத்தது. இதனால் 1955-ஆம் ஆண்டு அவர்விடுதலை செய்யப்பட்டார்.இதன்பிறகுதான் பிடல் காஸ்ட்ரோவின் வாழ்க்கையில் பல அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டன. மெக்சிகோ நாட்டில் அடைக்கலம் புகுந்த அவர் தென் அமெரிக்காவின் இன்னொரு புரட்சியாளரான சேகுவேராவுடன் இணைந்து புரட்சிக்கு குழு ஒன்றை உருவாக்கினார். 1956-ல் பாய்மரக் கப்பல் மூலம்நாடு திரும்பினார்.அவருடைய குழுவினர் திட்டமிட்டபடி கியூபாவுக்குள் ஒரே இடத்தில் கப்பல்கள் கரை சேர்ந்து தரையிறங்க முடியவில்லை. வெவ்வேறு திசைகளில் சென்று விட்டனர். எனினும், கியூபாவின் கிழக்குப் பகுதியான சியர்ரா மாஸ்ட்ரா மலைப்பகுதியில் பிடல்காஸ்ட்ரோவின் புரட்சிக் குழுவிற்கு அமோக ஆதரவுகிடைத்தது.3 ஆண்டுகள் பாடிஸ்டாவின் சர்வாதிகார ஆட்சிக்குஎதிராக காஸ்ட்ரோவின் கொரில்லாப் படைகள் போராடின. அவருடைய புரட்சிப் படைகள் தலைநகர் ஹவானாவை 1959-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி கைப்பற்றின. அதைத்தொடர்ந்து பிரதமர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்பு ஜனாதிபதியானார்.

அமெரிக்காவின் சீர்குலைவு வேலைகள்
நாடு ஜனநாயகப் பாதைக்குத் திரும்பும் என காஸ்ட்ரோ அறிவித்ததால் அமெரிக்கா முதலில் அவருக்கு ஆதரவு தெரிவித்தது. ஆனால் அடுத்த சில மாதங்களில் கடுமையான பொருளாதார சீர்திருத்தத்தை காஸ்ட்ரோ கியூபாவில் மேற்கொண்டார்.  கியூபாவின் வளர்ச்சியில் எரிச்சலடைந்த அமெரிக்க ஏகாதிபத்தியம் கியூபாவைக் கபளீகரம் செய்ய தொடர்ந்து முயற்சி செய்தது.பிடல் காஸ்ட்ரோவைக்கொல்ல சதித்திட்டங்கள் அரங்கேறின. கியூபாவில் இருந்து வெளியேறி நாடு கடந்த நிலையில் இருந்தவர்கள் அமெரிக்க உளவுநிறுவனமான சி.ஐ.ஏ.வின் உதவியுடன்  வளைகுடாவை ஆக்கிரமித்து நெருக்கடி கொடுத்தனர். அதை காஸ்ட்ரோ முறியடித்தார்.

அமெரிக்காவின் முக்கிய எதிரியான சோசலிச சோவியத் ரஷ்யாவின் பக்கம் சேர்ந்தார். விரைவிலேயே அமெரிக்காவுக்குச் சவாலாகவும் திகழ்ந்தார். ஆப்பிரிக்காவில் விடுதலைக்காகப் போராடிய புரட்சிக் குழுக்களுக்கு ஆதரவாக தனது நாட்டின் குழுக்களை இவரும் சேகுவேராவும் இணைந்து அனுப்பினர். இந்த ஆதரவு 1977-ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது.இதற்கிடையே, 1962-ல் சோவியத் ரஷ்யாவின்  அணுசக்தி ஏவுகணைகளைக் கியூபாவில் நிலை நிறுத்த உடன்பட்டதால் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப்.கென்னடி பகிரங்கமாகவே ரஷ்யா மீது குற்றம்சாட்டி கியூபா அருகே எந்த போர்க்கப்பலையும் நிறுத்தக் கூடாது என்று தடை விதித்தார். இதனால் பல வாரங்கள் கியூபா கடற்பகுதியில் பதற்றம் நீடித்தது.
பின்னர், அப்போதைய ரஷ்ய ஜனாதிபதி குருஷேவ், அணுசக்தி ஏவுகணைகளை கியூபாவில் இருந்து திரும்பப் பெற்றார். இதனால் அணு ஆயுதப் போர் மூளும் அபாயம் நீங்கியது. என்றபோதிலும் கியூபா மீதான அமெரிக்க வன்மம் அதிகரித்தது. தன்னை எதிர்க்கத் துணிந்ததால் பிடல் காஸ்ட்ரோவை பதவியில் இருந்து வெளியேற்ற அமெரிக்கா துடித்தது. முதல் நடவடிக்கையாக கியூபாவிடம் இருந்து சர்க்கரை கொள்முதலை நிறுத்திக் கொண்டது. பதிலுக்கு காஸ்ட்ரோ அமெரிக்கர்களின் ஒரு பில்லியன் சொத்துகளை முடக்கினார். இதனால்அமெரிக்கா- கியூபா மோதல் மேலும் அதிகரித்தது. கியூபா மீது அமெரிக்கா வர்த்தக தடைகளை விதித்தது.

638 சதித்திட்டங்கள்
அத்துடன் நில்லாமல் பிடல் காஸ்ட்ரோவைத் தீர்த்துக் கட்டுவதற்காக 638 சதித்திட்டங்களை தீட்டிஅதைக் கியூபாவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் வழியாக அரங்கேற்றவும் அமெரிக்கா முயற்சித்தது. என்ற போதிலும் சதிவேலைகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. அமெரிக்காவின் ஒவ்வொரு முயற்சியையும் அவர் துணிச்சலாக முறியடித்தார். பொருளாதாரத் தடைகளையும் கியூப மக்களின் ஒருமித்த ஆதரவால் வெற்றிகரமாக சமாளித்தார்.தனது ஆட்சிக் காலத்தில் 11 அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு சுமார் 50 ஆண்டுகள் அவர் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார்.

வெளிநாட்டு  முதலாளிகளையும், தனியார் நிறுவனங்களையும் கியூபாவில் தொழில் தொடங்க அனுமதித்தது கியூபா. இந்நிலையில்  கியூபாவிடம் இருந்துவிலகி நின்ற தென் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்களுடைய உறவை மீண்டும் புதுப்பித்துக்கொண்டன. 1998-ஆம் ஆண்டு போப் இரண்டாம்ஜான்பால் அந்நாட்டுக்கு பயணம் செய்தார். கியூபாவுக்கு சுற்றுலா வருவோரின் வெளிநாட்டு எண்ணிக்கைஅதிகமாகி அந்நாட்டின் பொருளாதாரம் வலுப்பெறத் தொடங்கியது. 2006-ல் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அதிகாரப் பொறுப்பை 2008-ஆம் ஆண்டு தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோ வசம் அவர் ஒப்படைத்தார். பொருளாதாரத் தடையையும் மீறி கியூபா அபரிதமான வளர்ச்சி கண்டது. கியூபாவின் ‘சோஷலிசம் அல்லது மரணம்’  எனும் லட்சியத்துடன் கியூபர்களின் அளப்பரிய உழைப்பாலும் உலகின் கொள்கை உறுதியாலும் உலகின் சர்க்கரைக் கிண்ணமான கியூபா நிகரற்று விளங்குகிறது. உலகின் மிகச் சிறந்த மருத்துவத்தை கியூபா அந்நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல் பிற நாடுகளுக்கும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது

பிடல் காஸ்ட்ரோ மரணமடைந்தபோது ஹவானாநகரில் வாழ்ந்த 22 வயது நர்சு தயான் மாண்ட்ல்வோகூறும்போது, “இது மிகப்பெரிய துயரம். நாங்கள் எல்லாம் அவருடைய காலத்தில் பிறந்து வளர்ந்தோம். அவருடைய மரணத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை” என்றார்.மெக்சிகோ ஜனாதிபதி என்ரிக் பெனா நியட்டோ டுவிட்டர் பதிவில், “பிடல் காஸ்ட்ரோவின் மரணம் என்னை நிலைகுலைய வைத்துள்ளது. 20-ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய புரட்சி வீரராக அவர் திகழ்ந்தார்” என்று குறிப்பிட்டார். கியூபாவின் விடுதலைக்கான அவருடைய இள வயது போராட்ட வாழ்க்கையும், அமெரிக்காவை எதிர்த்து நின்ற துணிவும் புரட்சிக்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்ததும் பிடல் காஸ்ட்ரோவின் பெயருடன் உலக வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்பது நிச்சயம்.

கட்டுரையாளர் : பெரணமல்லூர் சேகரன்

;