“மார்க்சியத் தத்துவத்தின் அடிப்படைச் சிந்தனையான பொருள் முதல்வாதம் ஓர் அந்நிய நாட்டுச் சரக்கு; அது மேற்கத்திய நாடுகளிலிருந்து பிற்காலத்தில் இங்கே இறக்குமதி செய்யப்பட்டது; தொன்று தொட்டுக் கருத்து முதல்வாதம்தான் நமது நாட்டில் இருந்தது; இந்து மதத்தில் காணும் அடிப்படை தத்துவங்கள்தாம் இந்திய தத்துவ ஞானம்; இந்த இந்து மதத்திற்கு ஆதா ரமாக இருப்பது வேதங்கள், ஆத்மா, பரமாத்மா, ஊழ்வினை, மோட்சம், துவைதம், அத்வைதம், மறு பிறப்பு போன்ற ‘சிறந்த’ கோட்பாடுகள்! ஆரியர்கள் தாம் தத்துவ ஞானத்தின் முன்னோடிகளாக இருந்து வந்தவர்கள்.” -இவ்வாறு சில தத்துவ ஞானிகளும், வரலாற்று ஆசிரியர்களும் மார்க்சிய எதிர்ப்பாளர்க ளும் ஓயாமல் கூறி வருவதை நாம் பார்க்கிறோம். ஆனால் விருப்பு வெறுப்பின்றி இந்தியாவின் தத்துவஞான வரலாற்றை ஆராய்வோமானால் மேலே கூறிய கருத்துக்கள் அனைத்தும் முற்றிலும் தவறானது என்பதைக் காண முடியும்.
அநாகரீகமான ஆரியர்கள்
இந்திய தத்துவ ஞானத்தின் அடிப்படை நூலாக புகழ்ந்து பேசப்படும் ரிக் வேதத்தில் மோட்சம், ஊழ்வினை, துவைதம், மறு பிறப்பு போன்ற எந்தக் கருத்துக்களையும் எங்கும் பார்க்கவே முடியாது. இந்தியாவுக்குள் நுழைந்த ஆரியர்கள் சாஸ்வத உண்மையையும், மோட்சத்தையும் ஆராய்ந்தவர்கள் அல்லர் என்பதை ரிக்வேத பாடல்கள் நிரூபிக்கின் றன. அம்பையும் வில்லையும் யுத்தத்தையும் பாடிப் புகழ்ந்து பார்லி உணவும், மதுவும் அருந்தி சில சந்தர்ப்பங்களில் மாட்டு இறைச்சியைத் தின்று வாழ்ந்துவந்த அவர்களின் வாழ்க்கையைத் தான் அந்தப் பாடல்கள் எடுத்துக் காட்டுகின்றன. அக் காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த பூர்வ குடிகளின் நாகரீகத்தையும், கலாச்சாரத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது ரிக்வேத ஆரியர்களும், அவர்க ளைப் பின்பற்றிய ஆரியர்களும் அநாகரீகமானவர்கள் என்றே கூற வேண்டும். மொகஞ்சாதாரோ, ஹரப்பா போன்ற இடங்களில் தொல் பொருள் ஆராய்ச்சியினரால் கண்டுபிடிக்கப் பட்ட சிந்துச் சமவெளி நாகரீகத்தின் மிச்சசொச் சங்கள் இந்த உண்மையை எடுத்துக் காட்டு கின்றன. உழவுக் கருவிகள், ஆயுதங்கள், நகைகள், பித்தளைப் பாத்திரங்கள், எடைபோடும் கருவிகள், செங்கல்லினால் கட்டப்பட்ட கட்டிடங்கள், சாலைகள், சாக்கடை அமைப்புகள், நீர்த்தேக்கங்கள் போன் றவை இந்த நாகரீகத்தின் சிறப்பை எடுத்துக் காட்டு கின்றன. அக்காலத்திய ஆரியர்களுக்கு இவைய னைத்தும் விந்தையாகவே இருந்தன. அணைக் கட்டைப் பார்த்ததும், கருப்பு மனிதன் வருணபக வானைக் கைது செய்து சிறைப்படுத்தி இருக்கி றானே என்று அழுகுரலை எழுப்பியிருக்கும் வேதப் பாடல்களை நாம் பார்க்கிறோம். தத்துவஞான கோட்பாடுகளைப் பற்றி எடுத்துக்கூறும் நாகரீகமோ, சமுதாய வளர்ச்சியோ அந்த ஆரியர்களுக்கு அன்று இருந்ததில்லை. தொல்பொருள் ஆராய்ச்சி இதை மறுக்க முடியாத அளவுக்கு நிரூபித்திருக்கிறது.
பண்டைக் காலத்தில் பொருள்முதல்வாதத்தின் செல்வாக்கு
இந்நிலையில் கருத்து முதல்வாதம்தான் இந்தியா வின் ஆரம்பத் தத்துவ ஞானம் என்றும்; ரிக்வேதமும் இந்துமதக் கோட்பாடுகளும் அதை எடுத்துக் காட்டுகின்றன என்றும் கூறுவது வேண்டுமென்றே கூறும் பொய் என்பதில் சந்தேகமில்லை. இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பற்றியும், மனிதனின் உணர்வுகளைப் பற்றியும் உள்ள பிரச்சனைகளை பண்டைக்கால இந்தியாவில் பல முறைகளில் ஆராய்ந்து பார்த்ததாகத் தெரிய வருகிறது. உயிரும், உணர்வுமற்ற பொருள்களின் இயற்கை யான நீண்டகால மாற்றத்திற்குப் பிறகுதான் உயிர்த் தோற்றம் ஏற்படுகிறது என்று அக்காலத்தில் வாதாடிய வர்கள் உண்டு. இந்தப் பொருள்முதல்வாதிகளில் தலைசிறந்து நின்றவர்கள் ‘லோகாயதவாதிகள்’ ஆவர். அவர்கள் இயற்றிய நூல்களும், விளக்க உரைகளும் இன்று கிடைக்கவில்லை. கருத்து முதல்வாதிகளால் அவை அனைத்தும் பிற்காலத்தில் அழிக்கப்பட்டுவிட்டன. ஆனால் லோகாயதவாதிக ளின் கருத்துக்களுக்குப் பதிலளிக்கும் முறையில் கருத்து முதல்வாதிகளின் நூல்களில் காணப்படும் மேற்கோள்களும் விளக்கங்களும் லோகாயதவா தத்தைப் புரிந்துகொள்ள நமக்கு உதவியளிக்கிறது. மேலும் பண்டைக்கால தத்துவஞான பிரிவுகளில் சிறப்பு மிக்கவை என்று எண்ணப்படும் ‘மீமாம்சம்’, ‘சாங்கியம்’ போன்றவைகளில் பொருள்முதல்வாதக் கருத்துக்க ளின் செல்வாக்கைக் காண்பதிலிருந்தும்; பௌத்தம், சமணம் போன்ற பண்டைக்கால தத்துவஞான கருத்துக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இடத்தைப் பார்க்கும்போதும் அக்காலத்தில் பொருள்முதல் வாதம் எவ்வளவு செல்வாக்குடன் இருந்தது என்பதை நன்கு உணரலாம்.
கருத்து முதல்வாதத்தின் விதைகள்
ஆனால் கருத்து முதல்வாதத்தின் ஆரம்ப விதை கள் உபநிஷத்துக்களிலும், பிற்காலத்தில் வியாசர் இயற்றிய ‘பிரம்ம சூத்திரம்’ என்ற நூலிலும் விரிவா கக் காணக்கிடக்கின்றன. ‘பிரம்ம சூத்திரம்’ இயற்றப்பட்டதோ கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் தான். இந்த நூலுக்கு ஆதிசங்கரர் கி.பி.8ஆம் நூற்றாண்டில் விளக்க உரை எழுதினார். பிரம்ம சூத்திரத்திலும் சங்கரரின் விளக்க உரையிலும் பெரும் பகுதி பொருள்முதல்வாதத்தைத் தாக்குவதற்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்தும் அக்காலத் தில் பொருள்முதல்வாதத்திற்கு எவ்வளவு செல்வாக்கு இருந்ததென்பதைப் புரிந்துகொள்ள முடியும். சங்கர ருக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால், கி.மு.நான்காம் நூற்றாண்டில் ‘கௌடில்யன்’ இயற்றிய ‘அர்த்த சாஸ்திரம்’ என்ற நூலில் கற்றறிய வேண்டிய தத்துவஞானத்தில் ஒன்று ‘லோகாயதம்’ என்று குறிப்பிட்டுள்ளதைப் பார்க்கிறோம். ஆனால் பொருள் முதல்வாதத்திற்கும் கருத்து முதல்வாதத்திற்கும் நடைபெற்ற போராட்டம் தீவிரத் தன்மையை அடைந்த கட்டத்தில் லோகாயதத்தை கற்றறிவது சட்ட விரோதமாக்கப்பட்டது. லோகாயதவாதிகள், பௌத்தர்கள், சமணர்கள் போன்றோர்களை கருத்து முதல்வாதிகள் அழிக்கவும் அவர்களுடைய நூல் களை எரிக்கவும் செய்தனர்.
பொருள் முதல்வாதத்தைப் பற்றிய கருத்துக்கள்
கருத்துமுதல்வாதிகளின் நூல்களில் அக்காலப் பொருள் முதல்வாதத்தைப் பற்றி கூறும் கருத்துக்க ளை இனி ஆராய்வோம். இந்த உலகத்தைத் தவிர வேறு எதையும் லோகா யதவாதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று இவர்கள், லோகாயதவாதிகள் மீது சீற்றம் கொள்கி றார்கள். லோகாயதவாதிகள் பாமர மக்களிடம் செல்வாக்கு உள்ளவர்களென்றும், ஊழ்வினை, மறு பிறப்பு போன்ற கருத்துக்கள் பாமர மக்களை ஏமாற்றுவ தற்காகவே உண்டாக்கப்பட்ட கருத்துக்களென்றும் மக்களிடம் லோகாயதவாதிகள் திறமையாகப் பிரச்சாரம் செய்து வந்தனர் என்றும் ஒரு இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐம்புலன்களைத் தவிர அறிவுக்கு வேறு தோற்றுவாய் இல்லையென்றும்; கடவுள், ஆத்மா என்று கூறுவதெல்லாம் பொய் என்றும் பொருள் முதல்வாதிகள் பிரச்சாரம் செய்வதாக இந்த நூல்களில் நாம் காண்கிறோம்.எல்லாம் இயற்கை யைச் சார்ந்தது; இந்த இயற்கைக்கு அப்பாற்பட்டது எதுவும் இல்லை என்றும் இவர்கள் கூறியதாக நாம் பார்க்கிறோம். இயற்கையிலிருந்து அனைத்தும் தோன்றுகிறது என்ற இவர்களின் கருத்து உப நிஷத்துகளுக்கு எதிரான கருத்து என்றும், இவர்க ளுக்கு எவ்வித ஆதரவும் கொடுக்கக்கூடாதென்றும் இந்த நூல்களில் கருத்து முதல்வாதிகள் எச்சரித்தி ருப்பதையும் நாம் காண்கிறோம்.
இந்த நூல்களிலிருந்து லோகாயதவாதிகளின் கருத்துக்களை தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. உணர்வு என்பது பொதுவாக உடலின் இயற்கையான ஒரு குணம் என்றும் குறிப்பாக அது உடலின் பிரிக்க முடியாத ஒரு பகுதியான மூளையின் வேலை என்றும் அவர்கள் வலியுறுத்துகிறார்கள். உடல் அழியும்போது இந்த உணர்வும் அழியும். மரணத் திற்குப் பின்னரும் அழியாத்தன்மை கொண்ட உணர்வு அல்லது ஆத்மா என்ற ஒரு பொருளுக்கு இடமே யில்லை என்று லோகாயதவாதிகள் வாதாடினார்கள். தத்துவஞான உலகத்தில் கருத்து முதல்வாதத் திற்கும், பொருள் முதல்வாதத்திற்கும் இடையே நடை பெறும் மிகப்பெரும் போராட்டத்தின் உயிரான ஒரு பகுதி இதில் அடங்கியுள்ளது. உயிரின் தோற்றத்தைப் பற்றியும்; எவ்வாறு சூடும் வெளிச்சமும் நெருப்பின் பிரிக்க முடியாத குணமாக அமைந்திருக்கிறதோ அதைப் போல் உணர்வு என்பது உடலின் ஒரு சிறந்த குணமாகும் என்றும்; பரிணாம வளர்ச்சியைப் பற்றியும் நவீன விஞ்ஞானம் மறுக்க முடியாத அளவுக்கு இன்று எடுத்துக் காட்டும் இந்த உண்மையை இந்தியப் பொருள் முதல்வாதிகள் அன்றே கூறியுள்ளனரென்பது பெருமைக்குரியதே.
பூதவாதம்
லோகாயதவாதிகளின் ‘பூதவாதம்’ என்னும் கருத்தை ஆராய்வதும் நமக்குப் பயனளிக்கும். பூமி, நீர், நெருப்பு, காற்று ஆகிய நான்கு பூதங்களைக் கொண்டது இந்த உலகமென்று லோகாயதவாதிகள் கூறுகிறார்கள். சங்கரர் கூட இந்தக் கருத்தை மேற்கோள் காட்டுவதைப் பார்ப்போம்: “நான்கு பூதங்கள்தான் அடிப்படைப் பொருள்கள். தனித்தனியாகப் பார்த்தால் பொருள்களுக்குச் சிந்தனாசக்தி கிடையாது. ஆனால் உடல் என்னும் அமைப்பில் குறிப்பிட்ட அளவுக்கு அந்தப் பொருள் கள் சேரும்பொழுது உணர்வு தோன்றுகிறது. உதார ணமாக அரிசிக்கு போதை குணம் இல்லை. அவ்வாறு போதை குணம் இல்லாத ஏனைய சில பொருள்க ளையும், அரிசியையும் சேர்த்து ஊறப்போட்டு ஒரு குறிப்பிட்ட முறையில் பக்குவப்படுத்தும் பொழுது சாராயம் உருவாகிறது. தனித்தனியாக இருக்கும் பொழுது அப்பொருள்களில் இல்லாத ஒரு குணம் இப்பொழுது தோன்றியிருக்கிறது. இவ்வாறே உடலில் உணர்வு தோன்றியுள்ளது.”
உயிரின் தோற்றம் பற்றிய லோகாயதவாதிகளின் இக்கருத்தை மேற்கோள்காட்டிய பிறகு அதைத் திரித்துக் கூறவும், மறுக்கவும் சங்கரர் எழுதியுள் ளதை இங்கு குறிப்பிட அவசியமில்லை. எண்ணத் திற்கும் பொருளுக்கும் உள்ள உறவை விளக்குவதே தத்துவ ஞானத்தின் அடிப்படையான பிரச்சனை. பொருளா? அல்லது கருத்தா? எது முதன்மையானது? தத்துவஞான உலகில் பெரும்போர் நடைபெற்ற இந்த முதன்மையான பிரச்சனையில் தெளிவாக லோகா யதவாதிகளின் மேற்கூறிய கருத்துக்கள் அவர்கள் எந்தப் பக்கத்தில் நிற்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது. உயிரற்ற பொருள்களின் நீண்டகால மாற்றங்க ளுக்குப் பிறகுதான் உயிர் தோன்றியுள்ளது என்று லோகாயதவாதிகள் கூறினார்கள்.பூத உடலின் ஒரு விசேஷ குணம் தான் உயிர் என்றும், உடலின் அழிவிற்குப் பிறகு உயிர் என்பது தனியாக இல்லை என்றும் அவர்கள் தெளிவாக விளக்கம் கூறினார்கள். இக் கருத்துக்கள் லோகாயதவாதம் என்பது பொருள்முதல்வாத தத்துவ ஞானம் என்பதை எடுத்துக் காட்டுகிறது.
இயற்கையின் தோற்றம்
புத்தரின் வரலாற்றை எழுதிய ‘அசுவகோஷ்’ என்பவர் லோகாயதவாதிகளின் ‘எல்லாம் இயற்கை யின் தோற்றமே’ என்ற கருத்தைக் கொண்ட பாடலை மேற்கோள் காட்டுகிறார்.
“கூர்மையை முள்ளுக்கு கொடுத்தவர் யார்?
பறவைகளையும், மிருகங்களையும் பலப் பலவிதமாய் படைத்தவர் யார்?
கரும்பு இனிப்பதும் யாராலே!
வேம்பு கசப்பதும் யாராலே!
எல்லாம் அவற்றின்
இயற்கையால் ஏற்பட்டதே!”
-இதிலிருந்து பொருள்களில் ஏற்படும் மாற்றங்கள் இயற்கையானதே. என்னும் கருத்தை லோகாயதவாதி கள் கொண்டிருந்தனர் என்பது தெளிவாகிறது. ‘சுபாவ வாதம்’எனும் இந்த தத்துவத்தை அடிப்படை யாகக் கொண்டு பிரபஞ்சத்தில் காணப்படும் நிகழ்ச்சி களெல்லாம் இயற்கையானதென்றும், இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி செயல்படவில்லையென்றும் அவர்கள் வாதாடினார்கள். இயற்கையில் தோன்றும் மாற்றங்களை தற்செயலான நிகழ்ச்சிகள் என்று அவர் கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தோற்றமும்,மாற்றமும், அழியும் அனைத்தும், பொருள்களின் இயற்கையான குணங்களிலிருந்து தோன்றுபவையென்றனர் லோகாயதவாதிகள்.
சார்வாகர்கள்
பண்டைக்கால பொருள்முதல்வாதிகளில் தலை சிறந்து விளங்கியவர்கள் லோகாயதவாதிகளே. இவர்களை ‘சார்வாகர்கள்’ என்றும் அழைப்பதுண்டு. உபநிஷத்துக்கள், பாரதம், அர்த்த சாஸ்திரம், மனுநீதி நூல், பிரம்ம சூத்திரம், புத்த நூல்கள் போன்ற பல நூல்களில் இவர்களுடைய கருத்துக்களைப் பார்க்கலாம். பண்டைக்கால இந்தியாவில் பொருள் முதல்வாதத்திற்கு இருந்த செல்வாக்கை மீமாம்சம் எனும் தத்துவ ஞானத்தில் பார்க்கலாம். பிரபஞ்சத்தின் போக்கை நிர்ணயிக்கக்கூடிய, பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இல்லையென்று இவர்கள் வாதாடினார்கள். பிரபஞ்சம் சிருஷ்டிக்கப்பட்டது; இதை அழிக்கவும் கடவுளால் முடியுமென்ற கருத்தை அவர்கள் நிராக ரித்தார்கள். தோற்றமும், அழிவும் கொண்ட நிகழ்ச்சிகளின் தொடரே இந்த உலகம் என்பதை அவர்கள் வலியுறுத்தினார்கள். கி.பி.7ஆவது நூற்றாண் டில் வாழ்ந்த குமரிலர் என்பவர் உபநிஷத்து, ஊழ்வினை, மறுபிறப்பு, கடவுள் போன்ற கருத்துக்க ளை திறமையாக அம்பலப்படுத்தினார். இதிலிருந்து ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் இந்தக் கருத்துக்கள் பெரிய அளவுக்கு பிரச்சாரத்தில் இருந்தன என்பது தெளிவாகிறது. மீமாம்ச தத்துவ ஞானிகளான குமரிலரும் பிரபாகரரும் உபநிஷத் துக்களிலும், பிரம்ம சூத்திரத்திலும் காணப்படும் கருத்து முதல்வாதத்தை திறமையாக அம்பலப் படுத்தியுள்ளதை நாம் பார்க்கிறோம்.
மீமாம்சம்
பொருள் முதல்வாத தத்துவ ஞானத்தில் இடம் பெறும் தகுதியைப் பெற்ற ஒரு தத்துவ ஞானமாக மீமாம்சத்தை எண்ண இயலாது என்பது உண் மையே. மந்திரங்களின் திறமையை அடிப்படையாகக் கொண்ட ஒரு கொள்கைதான் இது. ஆனால் ஆரம்ப காலத்தில் பொருள் முதல்வாத கருத்துக்கள் அதிக மாக இருந்ததால் யக்ஞவல்கியர், வியாசர், சங்கரர் போன்ற கருத்து முதல்வாதிகள் இதை கடுமையாகத் தாக்கியிருப்பதைப் பார்க்கலாம். பிற்காலத்தில் இதை பலமுறைகளிலும் திரித்து எழுதினார்கள். மூல நூல்களை அழித்துவிட்டார்கள். கடவுளை அடிப்படை யாகக் கொண்ட மீமாம்சம் என்று ஒரு நூலையும் பிற்காலத்தில் எழுதினார்கள். கடுமையான தாக்குத லுக்கும், பலமுறைகளில் திரித்து எழுதுவதற்கும் இலக் கானதிலிருந்து இதன் ஆரம்பப்போக்கு எப்படியி ருந்ததென்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
சாங்கியம்
சாங்கியம் எனும் தத்துவஞானப் பிரிவிலும் இதே போக்குகளைப் பார்க்கலாம். கருத்து முதல்வாதிக ளால் பன்முறை திரித்து எழுதப்பெற்ற நூல்கள்தான் இன்று நமக்கு கிடைத்திருக்கின்றன. இந்த சாங்கி யத்தையும் சங்கரர் போன்ற கருத்து முதல்வாதிகள் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். சாங்கியம் கடவுளை நிராகரிக்கிறது. பொருள்களில் நிரந்தரமான மாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்றும் ஓர் உருவத்திலிருந்து மற்றொரு உருவத்தை அடைந்து கொண்டிருக்கின்றது என்றும் சாங்கியவாதிகள் வாதாடினார்கள். ‘அசேதன காரண வாதம்’ என்ற இந்தக் கொள்கைப்படி இந்த மாற்றங்களின் காரணம் பொருளே தான், கடவுளல்ல. பரிணாம வாதத்தின் நிழலை இந்தக் கோட்பாட்டில் காணலாம். ஆகவே தான் கருத்து முதல்வாதிகள் இதை கடுமையாக எதிர்த்தனர். இந்தக் கருத்திற்கெதிராக அவர்கள் “பிரம்மகாரண வாதம்” என்ற கொள்கையை உருவாக்கினார்கள்.
தொடரும்...