articles

img

சாதி மதம் கடந்து இணைந்து வாழும் பண்பாட்டை பாதுகாப்போம்!

திருப்பூர், ஆக.18- திருப்பூரில் வெள்ளியன்று, இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் க.நிருபன்சக்கரவர்த்தி - சத்யாராம் இணை யேற்பு விழாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். மணமக்கள் இருவரும் இணையேற்பு உறுதிமொழி ஏற்ற னர். இதைத் தொடர்ந்து கே.பாலகிருஷ்ணன் வாழ்த்திப் பேசுகையில் கூறியதாவது: 

முழுமையான சீர்திருத்தத் திருமணம்

இன்றைக்கு இருக்கிற சமூக சூழ்நிலையில் இந்த திருமணம் சடங்கு, சம்பிரதாயம் இல்லாத முழுமையான சீர்திருத்தத் திருமணமாக நடைபெற்றிருக்கிறது. இன்று முகூர்த்த நாள் அல்ல; இந்தியாவில், தமிழ்நாட்டில் நல்ல நாள், கெட்ட நாள் என்று வைத்திருக்கிறார்கள். கெட்டநாள், ராகு காலத்தில் ரூ.5 லட்சம் பரிசு விழந்தால், அந்த பரிசு வேண்டாம் என்று யாரும் சொல்வதில்லை. ஆனாலும் நல்ல நேரம், கெட்ட நேரம் பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். விஞ்ஞானம் வளராத காலத்திலே என்றைக்கோ யாரோ உருவாக்கி வைத்த இந்த பழக்கத்தை இன்றும் விடாமல் பிடித்துக் கொண்டிருக்கின்றோம். இது சாதி மறுப்புத் திருமணமாகவும் இருக்கிறது. ஒரு திருமணம் என்றால் நட்சத்திரம், சாதி, சாஸ்திரம் என எத்தனை பொருத்தம் பார்க்கிறார்கள்! பிறந்தது முதல் சாதியைப் பார்த்தே வளர்ந்திருக்கிற இந்த  சமூகத்தில், எந்த பொருத்தமும் பார்க்காமல் சாதி மறுப்புத் திருமணமாக இது நடைபெற்றி ருக்கிறது.

பெற்றோருக்குப் பாராட்டு

மேடைகளில் சிலர் சீர்திருத்தம், புரட்சி என கடல் மடை திறந்தது போல் பேசுவார்கள். ஆனால் வீட்டுக்குள் சென்றால் எல்லாவித சாதிய நியமங்கள், சடங்கு, சம்பிரதாயங்களை அப்படியே கடைப்பிடிப்பார்கள். ஆனால் இந்த  மணமக்களின் பெற்றோர் பெரிய மேடைப் பேச்சாளர்கள் கிடையாது, உலகுக்கு அறிமுகமான தலைவர்கள் கிடையாது. மக்கள் பிரதிநிதிகள் கிடையாது. எளிய உழைப் பாளிகளாக இருந்தாலும், தங்கள் பிள்ளைகள் ஒருவரை ஒருவர் விரும்பி திருமணம் செய்து கொள்ள நினைத்தபோது, அதை விட  நல்ல வாழ்வு கிடைக்காது. அதைச் செய்து வைப்போம் என்ற பெரிய மனதோடு இந்த திருமணத்துக்கு இசைவு தெரிவித்து இங்கு வந்திருக்கிற பெற்றோருக்கு பாராட்டுகள், வாழ்த்துகள். பெற்றோர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.

பிள்ளைகளைக் கொல்லும் சாதி ஆணவம்

பல பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு என்ன  கேட்டாலும் வாங்கித் தருவார்கள். ஆனால், திருமணம் என்று வரும்போது மட்டும் அவர்கள்  விரும்பிய தேர்வை ஏற்றுக் கொள்ளாமல், அதை ஒப்புக் கொள்ள முடியாது. நாங்கள் சொல்லும் நபரைத்தான் திருமணம் செய்து  கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்து வார்கள். எத்தனை திருமணங்கள் மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்கின்றன. வாழ வேண்டிய இளம்தளிர்கள் வாழ்க்கை எப்படி அழிக்கப்படுகிறது! சாதியை மறுத்து திருமணம் செய்து கொண்ட காரணத்தாலேயே எத்தனை உயிர்கள் இந்த மண்ணில் பறிக்கப் பட்டிருக்கிறது. அங்கேயும் பெற்றோர்கள்தான் இருக்கிறார்கள். பெண்ணையும், அந்த தம்பதி களையும் கொலை செய்து விட்டு வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கக்கூடிய பெற் றோர்கள் கூட இந்த நாட்டில் இருக்கிறார்கள்.

வளரும் வன்முறைக் கலாச்சாரம்

இன்று சமூகம் ஏராளமான சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இன்றைக்கும் சில மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும் சாதிய பதற்றம் அடங்கியபாடில்லை. தினம் தினம் பல உயிர்கள் பலி போகிற நிலைமை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியா ஒரு மிகச்சிறந்த நாடு. இது போன்ற அழகான நல்ல தேசத்தை உலகில் பார்ப்பது கடினம். பல மொழி பேசக்கூடிய, பல பண்பாடு, கலாச்சாரங்கள், பலவித இறை நம்பிக்கைகள், மதங்கள், பல இனங்களைக் கொண்ட அழகிய பூமாலை போன்ற நாடு இது. இந்த நாட்டின் சிறப்பே பன்முகத்தன்மை. வித்தியாசமான வேறுபாடுகளில் ஒற்றுமை காணும் பெருமை. ஆனால், பன்முகத்தன்மையை சீரழிக்கிற, ஒரே நாடு ஒரே மதம், ஒரே பண்பாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என்ற ஒற்றைக் கலாச்சாரத்தை திணிக்கும் ஆபத்தான நிலை  இந்தியாவில் ஏற்பட்டிருக்கிறது.   அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வரப்போவதாக சொல்கிறார்கள். இப்படியெல்லாம் வருவது ஒரு குறிப்பிட்ட மதத்தவரைத் தாக்குவது மட்டுமல்ல; இந்தியாவின் பாரம்பரியம், நம்மு டைய பன்முகத்தன்மை, பல கலாச்சாரத்தைக் கொண்ட மக்கள் இணைந்து வாழும் உணர்வைச் சிதைப்பதாகும். வன்முறைக் கலாச்சாரம் நாளும் வளர்ந்து கொண்டிருப்ப தைப் பார்க்கிறோம்.

இந்தியப் பண்பாட்டை பாதுகாப்போம்!

இத்தகைய ஆபத்தானச் சூழ்நிலையில் எதிர்கால நம்பிக்கையோடு முன்னேறுவதற்கு இளைய தலைமுறையினர் சாதி, மதங்களை, பண்பாடு, கலாச்சாரங்களைக் கடந்து நாம் எல்லோரும் இணைந்து வாழ்கிற பண்பாட்டை உயர்த்திப் பிடிக்க வேண்டும்; அத்தகைய சமூ கத்தை கட்டமைக்க, சாதிய பாகுபாடில்லாத சமத் துவ சமுதாயத்தைப் படைக்க சபதமேற்க வேண்டும்.