இருவழிச்சாலை, நான்கு வழிச்சாலை, எட்டு வழிச்சாலை, பதினாறுவழிச்சாலை என சாலையின் அகலமே கிலோ மீட்டர் கணக்கில் இந்நாட்டில் அமைக்கப்பட்டு பயன்படுத்தி வரு கின்றனர். ஆனால் இன்னொரு பகுதி மக்கள் நடப்ப தற்கே ஒழுங்கான ஒற்றையடிப் பாதை கூட இல்லாமல் கஷ்டப்பட்டு வாழ்ந்து வரும் அவலம் நீடிக்கிறது. திருப்பூர் மாவட்டம், திருமூர்த்திமலைக்கு மேலே மேல்குறுமலை, குறுமலை, மாவடப்பு, குழிப்பட்டி, பூச்சி கொட்டாம்பாறை, காட்டுப்பட்டி, கருமுட்டி ஆகிய ஏழு செட்டில்மெண்ட்களில் சுமார் 3000 பேர் வசித்து வரு கின்றனர். 1300க்கும் மேற்பட்ட வாக்காளர்கள். இம் மக்கள் அனைவரும் சமவெளிப்பகுதிக்கு வரவேண்டு மென்றால் காட்டுவழியில், கரடுமுரடான பாறைகளின் வழியே நடந்து தான் வந்து செல்கின்றனர். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலை தான்.
இப்போது தான் 10ஆம் வகுப்பு...
எட்டாம் வகுப்பு வரை தான் மேலே பள்ளி உள்ளது. அதற்கு மேலே படிக்க வேண்டுமென்றால் உடுமலைப் பேட்டைக்கு தான் வரவேண்டும். அங்கு தான் மாணவர் விடுதி வசதி உள்ளது. முதன்முதலாக வரும் கல்வியாண் டில் தான் சில மாணவர்கள் 10ஆம் வகுப்பு செல்ல இருக் கிறார்கள் என்பதிலிருந்தே அந்த மலையில் உள்ள கல்வி நிலையை அறிந்து கொள்ள முடியும். ஆரம்பப் பள்ளி, நடுநிலைப்பள்ளி இருந்தாலும் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே ஆசிரியர்கள் தங்கிச் செல்லும் நிலை. இந்தச் சூழ்நிலையில், பட்டியலில் சுமார் 250 மாணவர் கள் இருந்தாலும் முறையாக பள்ளிக்கு வருபவர்கள் 50 பேர் தான் என்று சொல்கின்றனர். உடுமலைப்பேட்டையிலிருந்து ஆழியார், அட்டக் கட்டி வழியாக காடம்பாறை நீரேற்றுமின்நிலையம் வந்து அங்கிருந்து வனத்துறையினரால் ஒரு சாலை அமைக் கப்பட்டும் பராமரிப்பின்றி கிடக்கிறது. அதன் வழி யாகத் தான் வாகனங்கள் செல்லலாம். ஆனால் அதை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையிருந்தது. நான் 2011ஆம் ஆண்டு முதன்முதலாக அந்த வழியாகச் செல்ல முயற்சித்த போது அனுமதிக்கவில்லை. ஆம்பு லன்ஸை கூட அனுமதிக்கமாட்டார்கள் என்று மக்கள் சொன்னார்கள். நான் அங்கிருந்தபடியே அப்போ தைய மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு தொலை பேசியில் தொடர்பு கொண்டு சொன்ன பிறகு, அவர் மின்துறை அதிகாரியிடம் சொல்லி அதற்குப் பிறகே நான் செல்ல அனுமதிக்கப்பட்டேன். ஆனால், இந்த வழி பயண தூரம் மிக மிக அதிகம். எனவே, மக்கள் இந்த வழியை பயன்படுத்துவதில்லை.
3 நாள் இரவு பகல் போராட்டம்
இதில் இன்னொரு சிக்கல் என்னவென்றால், சாவி யை அங்கிருக்கும் ஊழியரிடம் பெற்று எதிர்ப்பக்கம் உள்ள கேட்டை திறந்து மீண்டும் அந்தப் பக்கமிருந்து வருபவரிடம் கேட்டை பூட்டி சாவியை கொடுத்தனுப்ப வேண்டும். யாரும் வரவில்லை என்றால் காத்திருப்ப தைத் தவிர வேறு வழியில்லை. எனவே, திருமூர்த்தி மலையிலிருந்து செல்வதே குறுகிய தூரம். அத னால், இங்கிருந்து ஒரு சாலை அமைக்க வேண்டுமென் பது அம்மக்களின் நீண்டகால கோரிக்கை. வனஉரிமைச் சட்டம் 2006இன்படி பள்ளிகள், மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சாலைகள், மருத்துவ மனை, தொலைத்தொடர்பு கோபுரங்கள் உட்பட அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு ஒரு கிராமத்திற்கு 2 1/2 ஏக்கர் வரை வனநிலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், அந்த நிலத்தில் 75 மரங்களுக்கு மேல் வெட்டக்கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டப்பிரிவைப் பயன்படுத்தி சாலை அமைத்துத்தர வேண்டுமென்று 2023 ஜுன் மாதம் உடுமலைப்பேட்டை வனச்சரகர் அலுவலகம் முன்பாக மூன்று நாட்கள் இரவு பகலாக ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன் பங்கேற்ற போராட்டம் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. வனத்துறை அதிகாரிகள் ‘பர்வேஸ் போர்ட்டல்’ மூலம் விண்ணப்பியுங்கள் என்றார்கள். அது தேவை யில்லை. கிராம சபை தீர்மானம் போட்டு, கோட்ட அளவி லான குழு, மாவட்ட வனஉரிமைக்குழு ஒப்புதல் கொடுத்தாலே போதுமானது என்று வலியுறுத்தினோம். நமது வாதத்தை ஏற்று மாவட்ட ஆட்சியர், மாவட்ட வன அலுவலர், மாவட்ட நல அலுவலர் உட்பட மாவட்ட வன உரிமைக்குழு ஒப்புதல் அளித்து போராட்டம் முடிக்கப் பட்டது.
மீண்டும் வேதாளம்... பொய் வழக்கு, சிறை
அரசாணை நிலை எண்.171 - 08.12.2023இன்படி 49 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தளி பேரூராட்சி நிர்வாகம் மூலம் 1.2.2024 அன்று சாலை அமைக்க ஒப்பந்தம் விடப்பட்டது. திருமூர்த்திமலை முதல் குறு மலை வரை 3150 மீட்டர் மண் சாலை அமைக்க அனும திக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு முறைப்படி அரசாணை வெளியிட்டு நிதி ஒதுக்கீடும் செய்து ஒப்பந்தமும் விடப்பட்ட பிறகு, வேதாளம் மீண்டும் முருங்கைமரம் ஏறிய கதை யாக வனத்துறையினர் அரசாணையை மதிக்காமல், பர்வேஸ் போர்ட்டல் மூலம் விண்ணப்பித்து தில்லியிலி ருந்து அனுமதி பெற்றுத்தான் சாலை அமைக்க வேண்டு மென்று பிடிவாதம் பிடித்து சாலை அமைக்கும் பணியை தடுப்பதுடன், சாலை அமைக்கும் வேலையில் ஈடு பட்டுள்ள மக்கள் மீது பொய்வழக்கும் போட்டு சிறையில் அடைத்துள்ளனர். பேரூராட்சி துணைத் தலைவரும் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் அந்த மலைச் செயலாளரு மான செல்வம் மீதும் பொய்வழக்கு போட்டு எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வனத்துறையினர் எந்த அள விற்கு அம்மக்கள் மீது கடும் கோபத்துடன் உள்ளனர் என்பதற்கு இது எடுத்துக்காட்டு. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் நேரில் புகார் தெரிவித்துள்ளனர். வனத் துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் பேசிய பிறகும் நிலைமையில் மாற்றமில்லை. தமிழ்நாட்டில் உள்ள வனத்துறை அதிகாரிகள் தமிழக அரசின் உத்த ரவை மதிக்கமாட்டோம் என்று நல்லதை தடுக்கும் நந்தி யாய் செயல்படுகின்றனர்.
பர்வேஸ் போர்ட்டல் - லட்சணம்
வனத்துறையினர் சொல்லும் பர்வேஸ்போர்ட்டல் மூலம் விண்ணப்பித்து அனுமதி பெறலாமே என்று சில ருக்கு தோன்றும்! ஆனால் அதன் லட்சணம் என்ன வென்று பாருங்கள். ஆனைமலையில் உள்ள எருமப்பாறை என்ற கிராமம். தெருவில் மின்விளக்கு வசதி உள்ளது. ஆனால் அங்குள்ள 24 வீடுகளுக்கு மின்சார இணைப்பு கொடுக்க வனத்துறை தடுக்கிறது. கோவை மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு மின்மாற்றி பொருத்தியாகி விட்டது. மாவட்ட அதிகாரிகள் துவங்கி வனத்துறைச் செயலாளர் வரை கையெழுத்திட்டு பர்வேஸ்போர்ட்டல் விண்ணப்பித்து நான்காண்டுகள் கழித்து விண்ணப் பம் நிராகரிக்கப்பட்டது என்று பதில் வந்துள்ளது. இந்தியா டிஜிட்டல்மயமாகிக் கொண்டிருக்கிறது என்று ஒரு பக்கம் பெருமையாகப் பேசப்படுகிறது. அதே நேரத்தில் குறைந்தபட்சம் தொலைத்தொடர்புக் கே வழியில்லாமல் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின் றனர். பி.எஸ்.என்.எல் நிர்வாகம் திருமூர்த்திமலைக்கு மேல் டவர் அமைக்க பர்வேஸ் போர்ட்டலில் விண்ணப்பித் தது. இரண்டு ஆண்டுகள் கழித்து விண்ணப்பம் நிராகரிக் கப்பட்டது என்று பதில் வந்துள்ளது. மின்சார வாரியம், தொலைத்தொடர்பு துறைக்கே இதுதான் கதியென் றால் சாதாரண மக்கள் அதில் விண்ணப்பித்து அனுமதி பெற முடியுமா என்ற கேள்வி எழுகிறது. மற்றொன்று தமிழ்நாட்டில் வனத்துறை சம்மந்தப்பட்ட அனைத்து மட்ட அதிகாரிகளும் ஒப்புதல் வழங்கிய பிறகு தில்லி யில் இருக்கும் அதிகாரிகள் எவ்வித நியாயமான காரண மும், ஆய்வும் இல்லாமல் நிராகரிப்பது முறையற்ற செயலாகும். எனவே, பர்வேஸ்போர்ட்டல் மூலம் விண்ணப்பித்து தில்லியிலிருந்து அனுமதி பெற வேண்டுமென்ற நிர்வாக உத்தரவை ரத்து செய்ய தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
தாங்களே சாலை அமைத்த மக்கள்...
இத்தகைய சூழ்நிலையில் தான் மே மாதம் 7ஆம் தேதி குறுமலைக்கு சென்று மக்களை சந்தித்து விட்டு சாலை போட தீர்மானிக்கப்பட்டுள்ள பாதை வழியாக இறங்கி வந்தோம். சுமார் 6 கி.மீ தூரம் நடந்து தான் தரைப்பகுதியை அடைந்தோம். அரசு உத்தரவுப்படி வனத்துறையினரின் பல இடையூறுகளுக்கு மத்தியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் அம்மக்களே சாலை களை அமைத்துள்ளனர். சுமார் 4000 மனித உழைப்பு நாட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பாறைகளை உடைக் கக்கூடாது, மரங்களை வெட்டக்கூடாது. எவ்வித யந்தி ரங்களையும் பயன்படுத்தக்கூடாது என்று பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மலைப்பகுதிகளுக்கு சாலை அமைத்தது போலவே இந்தக் காலத்திலும் முழுக்க முழுக்க மனித உழைப்பு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இருப்பி னும் மக்கள்ஒரு மாபெரும் சாதனையை, சரித்தி ரத்தை படைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியது, அரசு உத்தர வுப் படி நடைபெறும் சாலை அமைக்கும் பணியை தடுக்கும் வனத்துறையினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு உத்தரவுப்படி நடக்கும் சாலை அமைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ள அப்பாவி கூலியாட்கள் மீது போடப்பட்டுள்ள பொய்வழக்கை திரும்பப்பெறுவதுடன், இத்தகைய வன்கொடுமையில் ஈடுபட்ட வனத்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். எவ்வித இடையூறு மின்றி சாலை அமைக்கும் பணியை விரைவாக முடிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வசந்தத்தின் துவக்கமாகட்டும்
எந்தவொரு பகுதியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத் திற்கும் சாலை மற்றும் போக்குவரத்து வசதி அவசியம். தமிழ்நாட்டில் உள்ள யானைகள் சரணாலயம், புலிகள் சரணாலயம் பகுதிகளில் சுற்றுலா என்ற பெயரில் ஆயி ரக்கணக்கான வாகனங்களும், பல்லாயிரக்கணக்கான மக்களும் ஆண்டு தோறும் சென்று வருகின்றனர். திரு மூர்த்தி மலைக்கு மேலே இருக்கிற மலைப்புலையன் இன பழங்குடி மக்களுக்கு மட்டும் அந்த உரிமையை மறுப்பது நியாயமா? கல்வி, சுகாதாரம் போன்ற அடிப் படை உரிமைகள் மறுக்கப்பட்டு அம்மக்களை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பின் தங்கிய நிலையிலேயே வைத்திருக்கப் போகிறீர்கள்? இன்று தடுக்கும் வனத் துறையினரும் நாளை அந்தப் பாதையைத் தானே பயன் படுத்துவீர்கள். அந்தச் சாலை அம்மக்களின் வாழ்வில் வசந்தத்தை கொண்டு வர துவக்கமாக இருக்கட்டும்.