1940ஆம் ஆண்டில் காங் கிரஸ் தலைவர் ஜவ ஹர்லால் நேரு கோரக்பூர் நகரில் கைது செய்யப்பட்டார். இது நாடு முழுவதிலும் மக்களிடையே கோபத் தீயை மூட்டியது. மாணவர்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தன் சக மாணவத் தோழனாக இருந்த மஸ்தான் என்பவரை அழைத்துக் கொண்டு, தான் முன்பு படித்த தீர்த்தபதி உயர்நிலைப் பள்ளிக்குச் சென்று மாணவர்களை வெளியே வருமாறு அழைத்து, அம்பாசமுத்திரம் நகரில் பெரிய மாணவர் ஊர்வலத்தை நடத்தினார் தோழர் நல்லசிவன். இதுதான் தோழர் நல்லசிவனின் முதல் அரசியல் நடவடிக்கையாகும். நெல்லை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தனது அமைப்பை ஏற்கெனவே உருவாக்கத் தொடங்கியி ருந்தது. ஆனால் ஆங்கிலேய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டிருந்ததால் ரகசியமாக செயல்பட வேண்டி இருந்தது. விக்ரமசிங்கபுரம் ஹார்விமில் தொழிலா ளிகளான வ.மீனாட்சிநாதன், தளவாய், கே.பி.எஸ்.மணி, ஆர்.வி.அனந்த கிருஷ்ணன் போன்றோர் கட்சியின் முக்கிய ஊழியர்கள். விக்ரமசிங்கபுரம் பெ.சீனிவாசன், இலஞ்சி ஐ.வி.ராமகிருஷ்ணன், அம்பாசமுத்திரம் ஏ. சுப்பையா, ஏ.எஸ்.கந்தையா போன்றோரும் கட்சி உறுப்பி னர்களும் ஊழியர்களுமாவர். கட்சியின் மாநிலத் தலை மை தோழர் ராமச்சந்திர நெடுங்காடியை நெல்லை மாவட்டத்திற்கு கட்சியின் அமைப்பாளராக அனுப்பி யிருந்தது. விக்கிரமசிங்கபுரத்திலிருந்த பெ.சீனிவாசன், மீனாட்சிநாதன் ஆகிய தோழர்களோடு தோழர் நல்ல சிவனுக்கு தொடர்பேற்பட்டது. 1938ல் விக்கிரமசிங்கபுரம் பஞ்சாலையில் தொழிலாளி விமோசன லீக் எனும் அமைப்பு துவக்கப்பட்டது. 1940ல் பஞ்சாலைத் தொழி லாளர் சங்கம் துவக்கப்பட்டது.
தோழர் நல்லசிவன் 1940ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரானார். கம்யூ னிஸ்ட்டுகளின் ரகசிய நடவடிக்கைகளையும், பகிரங்கச் செயல்பாடுகளையும் கண்காணித்து வந்த ஆங்கிலேய அரசாங்கம் அவ்வாண்டின் இறுதியில் மீனாட்சிநாதன், பெ.சீனிவாசன், ராமச்சந்திர நெடுங்காடி போன்ற கட்சி ஊழியர்களை கைது செய்து முதல் நெல்லை சதி வழக்கு என்ற பெயரில் ஒரு வழக்கை நடத்தியது. இந்தத் தாக்குதலானது விக்ரமசிங்கபுரம் பஞ்சாலை தொழிலா ளர் சங்கத்தை செயலிழக்கச் செய்வதையும் உள்நோக்க மாகக் கொண்டிருந்தது. இச்சமயத்தில் சிறையிலிருந்த பெ.சீனிவாசன், தோழர் நல்லசிவனுக்கு ஒரு தகவல் அனுப்பினார். தோழர் நல்லசிவன் விக்ரமசிங்கபுரத்தி லிருந்து பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தை நடத்த வேண்டும் என்று அந்தத் தகவல் கூறியது. தோழர் நல்லசிவன் 1941 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தனது தொழிற்சங்கப் பணியைத் துவக்கினார். சங்க உறுப்பினர் அடிக்கட்டை, கூட்ட நடவடிக்கை குறிப்பு, லெட்டர்பேடு போன்றவற்றை முறைப்படுத்தி தன் முதல் தொழிற்சங்கப் பணியைத் துவக்கினார். மார்ச் மாதத்தில் அரசாங்கத்திற்கு அனுப்ப வேண்டிய உறுப்பினர் விபர அறிக்கையையும் தயாரித்து அனுப்பி சங்கத்தின் பதிவு ரத்தாகாமல் கவனித்துக் கொண்டார். எம்.கே.சாமி என்ற தோழர் நல்லசிவனுக்கு உதவி புரிந்தார். தினசரி விக்ரம சிங்கபுரம் போய் தொழிற்சங்க வேலையைச் செய்து வந்த தோழர் நல்லசிவனை திருமணம் செய்து கொள்ளும்படி பெற்றோர் நிர்ப்பந்திக்கலாயினர். தோழர் நல்லசிவன் அதை எதிர்த்தார். கல்யாணம் செய்துகொண்டால் இயக்க வேலை செய்ய முடியாது என்று தோழர் நல்லசிவன் கருதினார்.
மார்க்சியக் கையேடும் வேலை நீக்கமும்
குடும்பத்திலோ நிர்ப்பந்தம் அதிகரிக்கத் தொடங்கியது. எனவே அதைத் தவிர்க்க தோழர் நல்லசிவன் வீட்டை விட்டு வெளியேறினார். சாட்டுபத்து என்ற கிராமத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில் பயிற்சி பெறாத ஆசிரியராக மூன்று மாத காலம் வேலை பார்த்தார். மாதச் சம்பளம் 75 ரூபாய். இந்த வேலை கிடைத்ததால் வீட்டில் போய் தங்க ஆரம் பித்தார். 1942ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் திசையன் விளையில் இருந்த காதி விற்பனை நிலையத்தில் உதவி மேலாளர் பதவி தோழர் நல்லசிவனுக்கு கிடைத் தது. மாதம் 100 ரூபாய் சம்பளம். எனவே ஆசிரியர் வேலை யை விட்டுவிட்டு திசையன்விளைக்குச் சென்றார். வேலையில் சேர்ந்த போதிலும் கட்சித் தோழர்களுடனான தொடர்பை தொடர்ந்து வைத்துக் கொண்டிருந்தார். கட்சிப் பத்திரிகைகள், புத்தகங்கள் போன்றவை அவருக்கு தொடர்ந்து கிடைத்து வந்தன. 1943ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அவரது பணி, நிரந்தரமாக வேண்டிய நேரம். அப்பொழுது திருப்பூரிலி ருந்து கணக்குகளை பரிசோதிப்பதற்காக தணிக்கையா ளர் வந்திருந்தார். தோழர் நல்லசிவன் சரக்குகளை அனுப் புவதற்காக ரயில் நிலையத்திற்கு கிளம்பினார். தனது கையில் வைத்திருந்த மார்க்சீய கையேடு என்ற ஆங்கில நூலை தனது மேசை மீதே வைத்து விட்டுச் சென்றார். தணிக்கையாளர் பார்வை அந்தப் புத்தகத்தின் மீது விழுந் தது. கையில் அதை எடுத்துப் பார்த்த அவர், “அவன் என்ன கம்யூனிஸ்ட்டா” என்று மேலாளரிடம் கேட்டிருக்கிறார். மேலாளரும் ஆமாம், என்று பதில் கூறிவிட்டார். தணிக் கையாளர் தனது பணியை முடித்துச் சென்ற சில நாட்களில் தோழர் நல்லசிவனுக்கு வேலைநீக்க உத்தரவு கிடைத்தது.
வேலை பறிபோனதால் வேறு வழியின்றி தோழர் நல்லசிவன் வீட்டிற்குத் திரும்பச் சென்றார். அப்பாவுக்கோ கடுங்கோபம். நல்ல வேலையை தொலைத்துவிட்டு வந்து நிற்கிறானே என்று ஆத்திரமடைந்தார். திருமணம் செய் தால்தான் வீட்டில் தங்க முடியும், கட்சி வேலை செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அம்பாசமுத்திரம் தோழர் சுப்பையாவிடம் போய் தன் திருமணம் குறித்து யோசனை கேட்டார். திருமணம் செய்து கொள்வதால் கட்சி வேலை பாதிக்காது என்று சுப்பையா பதிலளித்தார். அச்சமயம் கட்சிப் பணிகளுக்காக தோழர் வி.பி.சிந்தன் நெல்லை மாவட்டத்திற்கு வந்திருந்தார். அவரிடமும் சென்று என் முடிவு சரியா என தோழர் நல்லசிவன் கேட்டார். இது குறித்து தோழர் விபிசி கூறுகிறார், “அவரின் இயக்கப் பற்று என்னை மெய்சிலிர்க்க வைத்தது. அவரின் வெள்ளை இதயம் என்னை வியக்க வைத்தது. ஒரு மனி தன் தன் மனைவியை சுமையாகவோ, விலங்காகவோ எண்ணக் கூடாது. அதுவும் உங்களைப் போன்ற ஒரு போராட்டக்காரனுக்கு மனைவி என்ற இனிய துணையால் உற்சாகம் கிடைக்கும். உங்கள் முடிவு சரியானது தான் என்றேன். மறுநாள் அந்த இளைஞரின் திருமணத்தி லும் கலந்து கொண்டேன். அந்த இளைஞர் தான் ஏ.நல்லசிவன்.”