ஒருகோடி கிடைத்தால் நூலகம் கட்டுவேன்
ஓங்கி உரைத்தவர் உத்தமர் காந்தி!
இருளடர்த் தனிமைத் தீவினில் தள்ளிடின்
ஈடிலாப் புத்தகம் துணையென்றார் நேரு!
கல்றை தன்னில் புத்தகப்புழு உறங்குகிறது
கல்லில் எழுதச் சொன்னவர் பெட்ரண்ட்ரசல்
பல்வகைக் கண்டுபிடிப் புகளிலெல்லாம் புத்தகமே
பாராட் டுக்குரியது என்றார் ஐன்ஸ்டீன்!
சிறையில் புத்தகம் படிக்கக் கொடுங்கள்
சிறந்திடும் சிந்தனை என்றவர் மண்டேலா!
பிறந்த நாளில் புத்தகம் அளியுங்கள்
பிறந்திடும் மகிழ்ச்சி என்றவர் லெனின்!
நடிக்கக் கொடுக்கும் டாலர் நூறில்
நலம்தரும் புத்தகம் வாங்குவார் சாப்லின்.!
பிடித்த பரிசாய்க் குழந்தைக்குப் புத்தகம்
படிக்கக் கொடுங்கள் என்றவர் சர்ச்சில்!
பயங்கரப் போராட்ட ஆயுதம் புத்தகம்
பட்டென்று சொன்னவர் மார்ட்டின் லூதர்கிங்
பயமின்றி தூக்கில் இடும்வரைப் புத்தகம்
படித்தவர் பகத்சிங் பாரே போற்றும்.
நல்ல புத்தகம் பரிசாய் அளிப்பவர்
நல்ல நண்பன் என்றவர் லிங்கன்!
பல்லா யிரம்நூல் படித்தவனே வழிகாட்டி
பாரினில் ஏற்பேன் என்றவர் சீசர்!
உலகைச் சுற்ற நூலகம் செல்வாய்
உரக்கச் சொன்னவர் அறிஞர் டெஸ்கார்ட்ஸ்!
உலக வாழ்க்கை வெறுத்திடும் போது
உயர்ந்த நூலைப் படியென்றார் இங்கர்சால்!
உடலின் பயிற்சி உடற்பயிற்சி மனதுக்கு
ஊட்டிடும் புத்தகம் என்றவர் ஃபிராய்ட்
சுடரும் மாமனிதரைத் தேடி உரையாட
தேடிப்போ நூலகம் என்றவர் மாசேதுங்!
புத்தகம் படிப்பதால் முழுமனி தனாகலாம்
புத்தகம் வழியேதான் பலர்புகழ் அடைந்தனர்!
இத்தரை மீதில் மாமனிதர் பலரும்
ஈடிலாப் புகழைப் பெற்று உயர்ந்தனர்!