articles

img

எல் நினோ வருகிறது - சிதம்பரம் இரவிச்சந்திரன்

சிதம்பரம் இரவிச்சந்திரன்  எல் நினோ (El-nino) என்ற நிகழ்வு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால் புவியின் வெப்ப உயர்வு பல மடங்காக அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று ஐநாவின் உலக வானிலை ஆய்வு நிறுவனம் (WMO) கூறுகிறது. 2023 ஜூலை இறுதிக்குள் இந்நிகழ்வு ஏற்படும் வாய்ப்பு 60 சதவிகிதம் உள்ளது. தவறினால் செப்டம்பர் இறுதிக்குள் எல் நினோ நிகழ 80% வாய்ப்பு உள்ளது என்று உலக வானிலை நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது. உலகக் கடல்களின் நீரோட்டங்களில் வழக்கமாக ஏற்படும் சுழற்சி மற்றும் மாற்றங்களால் எல் நினோ மற்றும் லா நினா எனப்படும் இந்த இரண்டு நிகழ்வுகள் தோன்றுகின்றன. எல் நினோ வெப்பநிலை உயர்வுடன் தொடர்புடையது. லா நினா குளிர்ச்சியுடன் தொடர்புடையது. இதனால் எல் நினோ நிகழும்போது பூமியின் வெப்பநிலை உயர்வது இயல்பு. உயர்ந்த புவியின் வெப்பத்தைக் குறைக்க லா நினா நிகழ்வு உதவுகிறது.

எல் நினோவால் என்ன நிகழும்?

இந்நிகழ்வு உலகளவில் வானிலை மற்றும் காலநிலை போக்கை மாற்றும் என்று பிராந்திய வானிலைப்பிரிவின் தலைவர் வில்ஃப்ரன் முஃபாமா ஓக்கியா  (Wilfran Moufouma Okia) கூறுகிறார். இந்நிகழ்வு வெப்பநிலை உயர்வுடன் தொடர்புடைய இயற்கை நிகழ்வு. இதனால் உலகளவில் வெப்பநிலை அதிகரிக்கும். சில பகுதிகளில் வறட்சி ஏற்படும். வேறு சில பகுதிகளில் பெருமழை பெய்யும். இதற்கு முன் இந்நிகழ்வு 2018-19இல் ஏற்பட்டது.

லா நினா

2024 முதல் உலகளவில் நீண்ட எல் நினோவிற்கு எதிர் நிகழ்வான குளிர்ச்சியை அதிகரிக்கும் லா நினா (La-nina) ஏற்படும் என்று கணிக்கப்படுகிறது. இந்த குளிர்ச்சி நிகழ்வு 2023 தொடக்கத்தில் முடிவு பெற்றது. இதுவே இப்போதைய உலகளவிலான நடுநிலை காலநிலை நிலவக் காறனமாக அமைந்தது. என்றாலும் கடந்த எட்டாண்டுகளே இதுவரை பதிவு செய்யப்பட்டதில் மிக வெப்பமான ஆண்டுகள் என்று உலக வானிலை நிறுவனம் கூறுகிறது. எட்டாண்டுகளில் பாதி கால அளவிற்கு லா நினா நிகழ்வின் தாக்கம் இருந்தாலும் இந்த வெப்ப உயர்வு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. புவியைக் குளிர்ச்சியூட்டும் விளைவு ஏற்படாமல் இருந்திருந்தால் இப்போதுள்ளதை விட புவியின் வெப்பநிலை பல மடங்காக அதிகரித்திருக்கும். இக்குளிர்ச்சி நிகழ்வு உலக வெப்ப உயர்வைத் தடுக்க உதவும் ஒரு தற்காலிக நிகழ்வாக அமைந்தது. இப்போது உலகம் வரப்போகும் எல் நினோ நிகழ்விற்காகத் தன்னைத் தயார் செய்துகொள்ளவேண்டும் என்று உலக வானிலை நிறுவனத்தின் தலைவர் பெட்டரி டாலஸ் (Petteri Taalas) கூறுகிறார். தலைக்கு மேல் தொங்கும் கத்தி போல பூமியை அச்சுறுத்தக் காத்திருக்கும் எல் நினோ நிகழ்வின் வலிமை அல்லது அதன் காலம் பற்றி இப்போது துல்லியமாகச் சொல்லமுடியாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  கடைசியாக வந்த எல் நினோ மிகப் பலவீனமானதாக இருந்தது. ஆனால் இதற்கு முன்பு  2014-16ல் நிகழ்ந்த முந்தைய எல் நினோ நிகழ்வு மோசமான பாதிப்புகளுக்குக் காரணமாக அமைந்த மிக வலிமையான ஒன்று. இந்த எல் நினோ மற்றும் மனிதச்செயல்களால் அதிகரித்த பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வு ஆகிய இரட்டைக் காரணங்களால் 2016 மிக வெப்பமான ஆண்டாக இருந்தது என்று உலக வானிலை நிறுவனம் கூறுகிறது. வழக்கமாக இத்தகைய எல் நினோக்கள் அவை உருவான ஆண்டில் மறைந்துவிடும் இயல்புடையது.

இந்த எல் நினோவால் சில நன்மைகளும் ஏற்படும் என்று டாலஸ் கூறுகிறார். லா நினாவால் உருவான தீமைகள் அகன்று ஆப்பிரிக்காவின் கொம்பு (Horn of Africa)என்று அழைக்கப்படும் அக்கண்டத்தின் முக்கியப்பகுதியில் நிலவும் வறட்சியை இது போக்கும் என்று நம்பப்படுகிறது. உலகின் இப்பகுதியில் கடந்த மூன்றாண்டுகளாக லா நினாவின் பாதிப்புகள் தொடர்ந்துவருகின்றன. கடந்த முப்பது ஆண்டு விவரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்நிகழ்வுகளின் பாதிப்புகள் கணக்கிடப்படுகின்றன. என்றாலும் உலக நாடுகளின் தேசீய வானிலை நிலையங்கள் எல் நினோ ஏற்படும் காலத்தில் பொதுமக்களுக்கு சரியான நேரத்தில் வானிலை முன்னெச்சரிக்கைகளை வழங்கவேண்டும் என்று டாலஸ் கூறுகிறார்.

நீடிக்கும் காலம்

இது மக்கள் மற்றும் உடமைகளின் பாதுகாப்பிற்கு வழிவகுக்கும். எந்த இரண்டு எல் நினோ நிகழ்வுகளும் ஒரே மாதிரியாக அமைவதில்லை. இவற்றின் விளைவுகள் அவை உருவாகும் ஆண்டின் எந்த நேரத்தில் அவை உருவாகின்றன என்பதைப் பொறுத்து அமைகின்றன. இந்நிகழ்வுகள் ஒவ்வொரு 2 முதல் 7 ஆண்டு காலத்தில் தோன்றுகின்றன. வழக்கமாக இவை 9 முதல் 12 மாதங்கல் வரை நீடிக்கின்றன.

மழையும் வறட்சியும்

இவை பசுபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு வெப்பமண்டலப் பிரதேசங்களில் ஏற்படும் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை உயர்வுடன் நெருங்கிய தொடர்புடையவை. எல் நினோ தென்னமெரிக்கா மற்றும் தெற்கு யு எஸ், ஆப்பிரிக்காவின் கொம்புப்பகுதி மற்றும் மத்திய ஆசியாவில் அதிக மழைப்பொழிவு, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, தெற்காசியாவின் சில பகுதிகளில் கடும் வறட்சியை ஏற்படுத்தும்.

இயற்கையின் எச்சரிக்கை

பூமியின் வட கோளத்தில் கோடைகாலமாக இருக்கும்போது எல் நினோவால் சூடாகும் கடல்நீர் மத்திய மற்றும் கிழக்குப் பசுபிக் பெருங்கடலில் ஹரிக்கேன் புயல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச்செய்யும். அட்லாண்டிக் பகுதியில் புயல்கள் இயல்பாக ஏற்படுவதை இந்நிகழ்வு பாதிக்கும். மனிதச்செயல்களால் ஏற்கனவே பூமி சூடாகிவரும் நிலையில் வரப்போகும் இந்த எல் நினோ இயற்கை மனிதருக்கு விடும் மற்றொரு முக்கிய எச்சரிக்கை என்றே வானிலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.