articles

img

சிறுமை கண்டு சீறுவதே பேரறத்தின் குரல்! - மதுக்கூர் இராமலிங்கம்

‘சிறுமைகள் அரியணை ஏறுகின்றன’ என்ற தலைப்பில் தினமணி ஏட்டில் (17.7.2024) பழ.கருப்பையா கட்டுரை ஒன்றை எழுதி யுள்ளார். மூன்றாவது முறையாக நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளதைத்தான் மூத்த தமிழ றிஞர் இவ்வாறு கூறுகிறாரோ என்று நினைத்துக் கொண்டு படித்தால் மோடிக்கு முரட்டு முட்டுக் கொடுக்கும் திருக்கோஷ்டியில் தாமும் இணைய விரும்புவதை பறைசாற்றும் வகையில் இந்தக் கட்டுரையை எழுதியுள்ளார் அவர். நதி மூலம், ரிஷி மூலம் பார்க்கக் கூடாது என்பார்கள். புகை கண்ட இடத்தில் எல்லாம் பழுக்கக்கூடியவர் இந்த பழ. கருப்பையா. இவர் இதுவரை இருந்த கட்சிக ளை பட்டியலிட்டால் அது மளிகைக் கடை சிட்டை யைவிட நீளமாய் நீளும். ஒரு கட்சியில் எந்த வேகத்தில் சேருகிறாரோ அதே வேகத்தில் சேற்றை அள்ளி வீசிவிட்டு வெளியேறுவார் இவர். இனி சேருவதற்கு வேறு கட்சியே இல்லை என்ற நிலையில் தமிழ்நாடு தன்னுரிமை கழகம் என்ற பெயரில் 2023ஆம் ஆண்டு இவரே ஒரு கட்சியைத் துவங்கி நடத்தி வருகிறார். அந்தக்கட்சியையே அநாதையாக விட்டுவிட்டு இவர் விரைவில் வெளியே போனாலும் ஆச்சரி யப்படுவதற்கு இல்லை.

முனியாண்டி விலாஸ் உணவகத்திற்கு கூட ஊர் ஊருக்கு கிளைகள் உண்டு. கிளையே இல்லாத ஒற்றை மரமாக இருக்கும் இவர், தன்னுடைய இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக அவ்வப்போது எதையாவது தடாலடியாக சொல்லும் வழக்கம் உடை யவர். இப்போது பாஜகவுக்கு பஜனை பாடுவதன் மூலம் ஏதாவது கிடைக்குமா என்ற ஏக்கத்தில் நரேந்திர நாமாவளி ஒன்றை எழுதி தினமணி ஏட்டில் அரங்கேற்றியுள்ளார்.  நாடாளுமன்ற மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் மற்றும் விருதுநகர் தொகுதி மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆகியோர் பேசியதை திரித்து பாலிமர் தொலைக்காட்சிக்கு துண்டுபோல பேட்டி ஒன்றை அளித்தார். அதையே வேட்டி போல விரித்து தினமணி ஏட்டில் எழுதியுள்ளார். ஆனால் அது பொருள் இல்லாத பொத்தல் வேட்டியாக மாறிப் போயிருப்பது தான் பரிதாபம்.  தன்னுடைய நேர்காணலில் தோழர் சு.வெங்கடே சனை ஒருமையில் வசைபாடியுள்ளார் பழ. கருப்பையா. அவருடைய வயதுக்கும், அவர் கற்ற தமிழுக்கும் இது தகுதியானதன்று என்பதை மட்டும்  சுட்டிக்காட்டுகிறோம். நாடாளுமன்ற உறுப்பினர் ஆனதன் மூலம் அவர் பூர்ஷ்வா ஆகிவிட்டார் என்றும், தமிழ் துரோகி என்றும் கூறியுள்ளார். கடந்த ஐந்தாண்டு காலமும் அவர் ஒரு கம்யூனிஸ்ட்டாகவே நாடாளுமன் றத்தில் குரல் கொடுத்துள்ளார். பொதுவுடைமை இயக் கத்தின் தமிழ்க் குரலாக முழங்கியுள்ளார். ஒருவர் எம்.பி., ஆவதன் மூலமே பூர்ஷ்வா ஆகிவிடுவ தில்லை என்கிற பாலபாடத்தைக் கூட இவர் அறியாதவ ராக இருக்கிறார். சென்னை மாகாணம் என்ற பெயரை  தமிழ்நாடு என மாற்ற வேண்டும் என்று மாநிலங்கள வையில் முதலில் தீர்மானம் கொண்டு வந்தவர் தோழர் பி.ராமமூர்த்தி. அதை முன்மொழிந்து பேசியவர் வங்கத்தைச் சேர்ந்த தோழர் பூபேஷ் குப்தா. 

இது ஒருபுறமிருக்க, கீழடி நாகரிகத்தை இவர் போற்றிப் பாராட்டும் நரேந்திர மோடி அரசு மூடி மறைக்க முயன்றபோதெல்லாம், உலக அரங்கில் அதன் பெருமையை எடுத்து முழங்கி போராடிய வர்களில் தோழர் சு.வெங்கடேசனும் ஒருவர். தமி ழுக்கும், தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கும் தொ டர்ச்சியாக போராடுபவர். தமிழ்நாட்டின் இளைஞர்க ளின் வேலை வாய்ப்பை மறுக்கும் வகையில் மோடி அரசு சதி செய்த போதெல்லாம் அதை கிழித்தெறிந்த வர். ஒரு எழுத்தாளராக என்ற முறையில் வேள்பாரி நாவல் மூலம் பாரியின் புகழை பாரெல்லாம் பரப்பிய வர். சங்க இலக்கிய மரபின் மீது இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தவர்.  உண்மையில் அவர் நாடாளுமன்றத்தில் என்ன  பேசினார் என்பதை பழ.கருப்பையா முழுமையாக படித்ததாகத் தெரியவில்லை. அண்ணாமலை வகை யறா அவிழ்த்துவிட்ட அவதூறு கதைகளை படித்து விட்டு பொருத்தமற்ற வகையில் பொங்கியுள்ளார். நாடாளுமன்றத்தில் சு.வெ. பேசும் போது, செங்கோல் என்பது ஒன்று மன்னராட்சியின் குறியீடு. இரண்டாவது நேர்மையின் குறியீடு. நேர்மைக்கும், பாஜகவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று தான் கேட்டார். இது நியாயமான கேள்விதானே. கடந்த பத்தாண்டு காலம் நேர்மையின் நிழல் கூட நெருங்காத வகை யில்தானே மோடி ஆட்சி நடத்தி வந்திருக்கிறார். இதை பழ.கருப்பையாவால் மறுக்க முடியுமா?  செங்கோல் அறத்தின், நேர்மையின் குறியீடு. அதிகாரத்தில் இருப்பவர்களை அறவழிப்படுத்து வதும், நீதியின்பால் ஆட்சி செய்ய வைப்பதும்தான் காலம் காலமாக இருந்து வரும் பெரும் பிரச்சனை.  அதனால்தான் அறத்தின் குறியீடாக செங்கோலைத் தமிழ் இலக்கியங்கள் பேசின என்றும், அறத்தின்  குறியீடாக செங்கோல் என்ற சொல் பயன்படுத் தப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

நாடாளுமன்ற வாசலில் இருந்த அண்ணல் காந்தி யின் சிலையையும், அண்ணல் அம்பேத்கரின் சிலையையும் அகற்றிவிட்டு அருங்காட்சியகத்திலி ருந்து செங்கோலை எடுத்து வந்து நிறுவுவது சரி தானா? நாடாளுமன்றத்தில் சாணக்கியனின் உரு வத்தை பொறிப்பது ஏன் என்றெல்லாம் அவர் அடுக்க டுக்காக கேள்வி எழுப்பியுள்ளார். பழ.கருப்பையா தன்னுடைய நேர்காணலிலும், கட்டுரையிலும் திரு வள்ளுவரை மேற்கோள் காட்டுகிறார். நாடாளு மன்றத்தில் அறநெறி போதித்த வள்ளுவரின் உரு வத்தை நிறுவ வேண்டும் என்று அவர் கேட்டிருக்க வேண்டாமா? ஆர்எஸ்எஸ்சின் குல குருவான சாவர்க்கரின் பிறந்தநாளில் நாடாளுமன்றத்தை திறந்து செங்கோலை நிறுவியது குறித்து இந்த முன்னாள் காந்தியவாதியின் கருத்து என்ன?  மோடி நாடாளுமன்றக் கட்டிடத்தில் தூக்கி நிறுத்தி யுள்ள சாணக்கியன் தன்னுடைய அர்த்த சாஸ்திரத்தில் “நேர்மையின்மை, ஆரோக்கியமின்மை, தந்திரம், முட்டாள்தனம், பேராசை, தூய்மையின்மை மற்றும் கொடூர எண்ணம் ஆகிய இந்த ஏழு குறைபாடுகள் பெண்களிடம் உள்ளன” என்று கூறியுள்ளதை பழ. கருப்பையா படித்திருக்கிறாரா? 

தன்னுடைய கட்டுரையின் துவக்கத்திலேயே பாஜகவால் பரப்பிவிடப்பட்ட செங்கோல் கதையை எடுத்தாண்டு இருக்கிறார். ராஜாஜியின் அறிவுரைப்படி தமிழ்நாட்டில் செய்யப்பட்டு ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக மவுண்ட் பேட்டன் கொடுக்க நேருவால் விடுதலையின் போது பெறப் பட்டது என்று கூறியுள்ளார். இதுதான் ராஜராஜ சோழன் கையில் வைத்திருந்த செங்கோல் என்றும்  அது திருவாவடுதுறை மடத்திலிருந்து கொண்டு செல்லப்பட்டு பின்னர் நேருவிடம் தரப்பட்டது என்று துவக்கத்தில் ஒரு கதையை பாஜக ஊதுகுழல் ஊட கங்கள் பரப்பிவிட்டன. ஆனால் அந்த செங்கோல் சென்னையில் உள்ள உம்மிடி பங்காரு செட்டியார் கடையில் ஆர்டர் கொடுக்கப்பட்டு எடுத்துச் செல் லப்பட்டது என்பது உடனே அம்பலமாகிவிட்டது. விடு தலையின் போது மவுண்ட் பேட்டன் எடுத்து கொடுத்து  அதிகார மாற்றத்தின் அடையாளமாக நேருவால் பெற்றுக் கொள்ளப்பட்டது என்பதெல்லாம் கதைகளே யன்றி உண்மையன்று என்று தெளிவாக நிரூபிக் கப்பட்ட பிறகும் பழ.கருப்பையா பாஜகவினரின் பழைய கதையை மட்டுமே நம்பக்கூடிய அளவுக்கு கருத்து மயக்கத்தில் இருக்கிறார்.  பெண்ணடிமைத்தனத்தை மோடி ஆதரிக்கிறாரா? என்று சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறு வும் விழாவின்போது, தமிழகத்திலிருந்து மடாதிபதி களை தனி விமானத்தில் பிரதமர் அழைத்துப் போ னார். ஆனால் பக்கத்து மாளிகையில் இருக்கும் இந்தி யாவின் முதல் குடிமகளான குடியரசுத் தலைவரை அழைக் காதது ஏன்? என்ற கேள்விக்கு இவர் பதிலளிப்பாரா? மோடி ஆட்சியில் கடந்த பத்தாண்டு காலத்தில் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்படவில்லையே என்ன காரணம்? மோடி வகை யறா பின்பற்றும் பிற்போக்கான வர்ணாசிரம சிந்தனை தான் முற்போக்கான இந்த நடவடிக்கையை எடுக்க விடாமல் அவர்களை தடுக்கிறது. 

மன்னர்கள் அரண்மனையில் அந்தப்புரமே இல்லை என்று ஆதாரத்தோடு நிரூபிக்க முடியாத பழ. கருப்பையா நேருவையும், மாவோவையும் வம்புக்கு இழுக்கிறார். மாவோவுக்காக ஒரு தொடர் வண்டி பெட்டி நிறைய இளம் பெண்களை அழைத்துச் சென்ற தாக எங்கேயோ படித்த அவதூறை தூக்கிக் கொண்டு வருகிறார். புரட்சியாளர்களுக்கு எதிராக இப்படி எத்தனையோ கட்டுக் கதைகளை ஆளும் வர்க்கம் உருவாக்கி வைத்திருக்கிறது. இதையெல்லாம் படித்து மூளையை குப்பைத் தொட்டியாக மாற்றி வைத்திருக்கிறார் இவர். இதுஒருபுறமிருக்க, செங்கோலுக்கு இலக்கணம் சொன்னவர் வள்ளுவன் என்கிறார். உண்மைதான் செங்கோன்மை என்று பத்துக் குறள் படைத்த வள்ளு வர்தான் கொடுங்கோன்மை என்ற தலைப்பில் ஓர்  அதிகாரமும் படைத்திருக்கிறார். அதில் உள்ள  பத்துக் குறள்களும் இன்றைய ஒன்றிய ஆட்சியாளர்க ளுக்கு அப்படியே பொருந்தும். “வேலோடு நின்றான் இடுவென்றது போலும் கோலோடு நின்றான் இரவு”என்பதும் ஒரு குறள். அரசன் குடிகளிடம் முறை  கடந்து பொருளைக் கேட்பது கையிலே வேலோடு நிற்கும் கள்வன் அனைத்தையும் பறிப்பதற்கு ஒப்பா கும் என்பது இதன் பொருள். மோடி அரசு கொண்டு  வந்த ஜிஎஸ்டி வரிதான் இதற்கு சிறந்த உதாரணம். இதுகுறித்து ஒரு வரியாவது பேசியது உண்டா பழ. கருப்பையா? திருக்குறளும், சங்க இலக்கியமும் அறத்தையும், நீதியையுமே செங்கோலாக சித்தரிக்கி றதேயன்றி வேறல்ல.

அரசியல் சட்டத்தையே அர்த்தமிழக்கச் செய்பவர், நீதித்துறையையும் வளைக்க முயல்பவர் வைக்கும் செங்கோல் ஒரு அலங்காரப் பொருளாகவும், அதிகா ரக் குரலாகவும் மட்டுமே இருக்கும் என்பதை அறியாதவரா இவர்? இதே பிரதமர் மோடி தமிழர்கள் மீதும், தமிழ்நாட்டின் மீதும் அவதூறுகளை அள்ளி வீசிய போது, பூரி ஜெகநாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் சாவியை தமிழர்கள் திருடிக் கொண்டு போய்விட்டார்கள் என்று திருட்டுப் பழி சுமத்திய போது இவருக்கு கோபம் வராதது ஏன்?  சிறுமைகள் அரியணை ஏறுகின்றன என்று இவர்  அங்கலாய்க்க வேண்டிய அவசியம் இல்லை. சிறுமை கண்டு பொங்குபவர்களையே நாடாளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளது தமிழ்நாடு. சிறியன சிந்தியாதான் என வாலியை கம்பன் பாடுவான். இவர் எதற்கு மோ டிக்கு வாளி தூக்குகிறார் என்றுதான் தெரியவில்லை.