articles

சாதி ஒடுக்குமுறை அற்ற வளாகம் காண்போம்! - க.சுவாமிநாதன்

சென்னையில் ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களில்  சாதியப் பாகுபாடு - இட ஒதுக்கீடு மீறல்கள் மீதான சிறப்பு கருத்தரங்கம்

“நான் எப்போதுமே எழுத்தாளர் ஆவதையே விரும்பினேன். கார்ல் சாகனைப் போல அறிவியல் எழுத்தாளராக... கடைசியில் இந்த கடிதத்தையே எழுத முடிந்திருக்கிறது... எனது பிறப்பு ஒரு அபாயகரமான விபத்தாகவே அமைந்து விட்டது. எனது குழந்தைப் பருவ தனிமையில் இருந்து என்னால் வெளியே வரவே முடியவில்லை. நான் பாராட்டப்படாத குழந்தையாகவேதான் கடந்த காலம் முழுவதும் இருந்துள்ளேன்.”  - ரோகித் வெமுலா ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட மாணவராக இருந்து தற்கொலை செய்து கொண்ட ரோகித் வெமுலாவின் கடைசிக் கடிதத்தில் உள்ள வரிகள் இவை. அந்த ஆங்கில கடிதத்தில் வெளிப்படும் எழுத்தாளுமை வியக்க வைக்கும். ஆனாலும் அவர் உயிரைக் குடித்து விட்டது சாதி. சென்னையில் செப் 3, 2023 அன்று ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் சாதியப் பாகுபாடுகள் - இட ஒதுக்கீடு மீறல்கள் மீதான சிறப்பு கருத்தரங்கத்தை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்துகிறது. இந்திய மாணவர் சங்கம், சிந்தாபார், அம்பேத்கர் பெரி யார் வாசகர் வட்டம், சென்னை ஐ.ஐ.டி எஸ்.சி, எஸ்.டி ஊழியர் சங்கம் ஆகிய அமைப்புகள் பங்கேற்க வுள்ளன. சென்னை ஐ.ஐ.டி, திருவாரூர் - புதுச்சேரி மத்தியப் பல்கலைக் கழக மாணவர்கள் அதில் பங்கேற்க வுள்ளனர். பல்கலை மானியக் குழு மேனாள் தலைவர் முனைவர் சுகதேவ் தோரட், தலித் சோஷன் முக்தி மஞ்ச் துணைத் தலைவர் சுபாஷிணி அலி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

தொடரும் தற்கொலைகள்

2014 - 21 க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் 68 ஒடுக்கப்பட்ட மாணவர்கள் ஒன்றிய அரசின் கல்வி நிறு வனங்களில் - ஐ.ஐ.டி, என்.ஐ.டி, மத்தியப் பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட - 68 தற்கொலைகள் நிகழ்ந்துள் ளன. ரோகித் வெமுலா தற்கொலை தேசத்தை அதிர வைத்தது. அண்மையில் மும்பை ஐ.ஐ.டி மாணவர் தர்ஷன் சோலங்கி தற்கொலை நிகழ்ந்தது. விசா ரணை துவங்குவதற்கு முன்பாகவே மும்பை ஐ.ஐ.டி நிர்வாகம் இங்கே சாதிய பாகுபாடுகள் இல்லை என மறுத்தது. இப்படி உண்மையை மூடி மறைக்கிற உத்திகள் காலா காலமாக உயர் கல்வி நிர்வாகங்களால் கடைப் பிடிக்கப்படுவது இன்றும் தொடர்கிறது.  தனிப்பட்ட மன அழுத்தம், தேர்வுகளை எதிர் கொள்ள முடியாமை என்றெல்லாம் திரையிட்டு உண்மைப் பிரச்சனைகளை விவாதத்திற்கு கூட கொண்டு வராமல் தடுத்தே வந்துள்ளன. இது தவிர இட ஒதுக்கீடு மீறல்கள் மாணவர் அனுமதியிலும், ஆசிரியர் நியமனங்களிலும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. எஸ்.சி, எஸ்.டி செல்கள் இல்லாத ஒன்றிய அரசின் கல்வி நிறுவ னங்கள் உள்ளன. இருக்கிற இடங்களில் அந்த குழுக்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பது வேறு கேள்வி. வளாகங்களில் உள்ள மற்ற மாணவர் குழுக்களில் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் இடம் பெறுவ தில்லை. வளாக சூழல் சாதிய மனோபாவங்களால் நிறைந்ததாக உள்ளது. பெண்களுக்கு எதிரான பாலி யல் துன்புறுத்தல் தடுப்பு குழுக்களின் செயல்பாடும் கேள்விக்குரியதாக உள்ளன. ஒன்றிய அரசின் நிறு வனமான சென்னை கலாச்சேத்ராவில் எழுந்துள்ள பாலியல் துன்புறுத்தல் பிரச்சனை ஒரு உதாரணம்.

இட ஒதுக்கீடு மீறல்கள்

ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு அமலாக்கத்திற்கு இரண்டு சட்டங்கள் உள்ளன.  ஒன்று, மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் (மாணவர் அனுமதி இட ஒதுக்கீடு) சட்டம் 2006 இரண்டாவது,  மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர் நியமனங்கள் இட ஒதுக்கீடு) சட்டம் 2019.  இரண்டு சட்டங்களும் அப்பட்டமாக மீறப்படுகின்றன. உதாரணமாக, முனைவர் பட்ட அனுமதிகளில் 2021 இல் இந்தியா முழுமையும் உள்ள ஐ.ஐ டி களில் பட்டியல் சாதி மாணவர்கள் 10 சதவீதம் மட்டுமே இடம் பெற்றனர். இட ஒதுக்கீட்டு விதிகளின்படி 15 சதவீத பட்டியல் சாதி மாணவர்கள் சேர்க்கப்பட்டு இருக்க வேண்டும். தகுதி உடைய மாணவர்கள் இல்லாமல் இல்லை. 17075 தகுதி பெற்ற பட்டியல் சாதி மாண வர்கள் விண்ணப்பித்து இருந்தும் 574 பேர் மட்டுமே தேர்வு பெற்றனர். இதே நிலைமைதான் பழங்குடி மாண வர்களுக்கும்..

. 2.38 சதவீதம் மட்டுமே இடம் பெற்ற னர். இட ஒதுக்கீட்டு விதிகளின்படி 7.5 சதவீத பழங்குடி மாணவர்கள் சேர்க்கப்பட்டு இருக்க வேண்டும். தகுதி உடைய மாணவர்கள் இல்லாமல் இல்லை. 3430 தகுதி பெற்ற பழங்குடி சாதி மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தும் 137 பேர் மட்டுமே தேர்வு பெற்றனர். சென்னை ஐ.ஐ.டி யில்  558 முனைவர் பட்ட அனுமதி களில் 53 பட்டியல் சாதி மாணவர்களே தேர்வு பெற்ற னர். இது 10 சதவீதத்திற்கும் குறைவு. 20 பழங்குடி மாண வர்கள் தேர்வு பெற்றனர். இது 3.6 சதவீதமே. தமிழ்நாடு சமூக நீதிக்கான முன்னெடுப்புகளில் முன் வரிசையில் நிற்கிற மாநிலம். ஆனால் இங்கே அமைந்துள்ள சென்னை ஐ.ஐ.டி யிலேயே இதுதான் நிலைமை. ஒன்றிய அரசின் சமூக நீதிக்கு எதிரான அணுகுமுறையின் பிரதிபலிப்பு இது.  முனைவர் பட்ட அனுமதிகளில் இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. ஒன்று, இந்த உயர்கல்வி நிறுவனங்களில் படித்து செல்பவர்கள்தான் ஒன்றிய அரசுத் துறைகளின் செயலாளர்கள் மட்டம் வரை உயர்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்கள், பெரு நிறுவனங்களில் தலைமை நிர்வாகிகளாக வருகிறார்கள். இரண்டாவது ஐ. ஐ.டி போன்ற நிறுவனங்களில் பேராசிரியர்களாகவும் வர முடிகிறது. ஆகவே முடிவெடுக்கும் இடங்கள், செல்வாக்கு மிக்க பதவிகள், கல்விப் புலத்தில் உயர் நிலைகளை எட்டுதல் ஆகியவற்றை இட ஒதுக்கீடு மறுப்பு மூலம் தடுக்கிறார்கள். வேரிலேயே வெந்நீர் ஊற்றுகிறார்கள்.

பேராசிரியர் நியமனங்களிலும் அநீதி

ஆசிரியர் நியமனங்களில் இட ஒதுக்கீடு அமலாவது 2019 இல் சட்ட பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டாலும் அம லாக்கத்தில் சட்டத்தின் எழுத்தும் எண்ணமும் ஒரு சேர சிதைக்கப்படுகிறது.  பல ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்கள் ரோஸ்டர் விவரங்களை அறிவித்து நியமன அறிவிக்கைகளை வெளியிடுவதில்லை. இதனால் எவ்வளவு ஒபிசி, எஸ்.சி, எஸ்.டி காலியிடங்கள் எவ்வளவு என்று பொது வெளியில் தெரிவதில்லை. அதன் மீதான கண்காணிப் பும் இருப்பதில்லை.  ரோஸ்டர் முறைமையில் சிக்கலை உருவாக்குகி றார்கள். நெகிழ்வான பதவி இட ஒதுக்கீடு கொள் கையை கடைப்பிடிக்கிறார்கள். இதன் மூலம் பேராசிரி யர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரி யர்கள் பதவிகளில் தனித் தனியாக இட ஒதுக்கீடு கடைப்பிடிப்பதற்கு மாறாக மொத்தமாக அவியல் போல கணக்கீடு செய்கிறார்கள். இதன் உள் குத்து என்னவென்றால் பேராசிரியர், இணைப் பேராசிரியர் மட்டத்தில் இட ஒதுக்கீடை மறுப்பது ஆகும். ஆனால் உதவிப் பேராசிரியர் பதவியிலும் கூட இட ஒதுக்கீடு ஒழுங்காக செய்யப்படுவதில்லை. கடும் எதிர்ப்புக்கு பின்னால் செப் 5, 2021 முதல் செப் 4, 2022 வரை ஓராண்டு காலம் இலக்கு இடப்பட்ட நியமனங்கள் என படாடோபமாக ஒன்றியக் கல்வி அமைச்சகம் அறிவித்தது.

ஆனால் ஓராண்டு முடிந்த பிறகு என்ன நிலைமை? உதாரணமாக 45 மத்தியப் பல்கலைக் கழகங்களில் 33 இல் 1097 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் 212 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன. 18 மத்தியப் பல்கலைக் கழகங்களில் ஒரு பட்டியல் சாதி, பழங்குடி, ஓ.பி.சி கூட பணி நிய மனம் பெறவில்லை. இட ஒதுக்கீடு காலி இடங்கள் அறி விக்கப்பட்டும் நிரப்பப்படவில்லை. (தி இந்து 21.12.2022). நிலுவை காலி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வந்தா லும் “போதுமான விண்ணப்பங்கள் வரவில்லை” என்று நேர்காணலே நடத்தப்படவில்லை. போதுமான விண் ணப்பங்கள் வந்தாலும் “யாரும் தகுதி பெற்றவர்க ளாக கண்டறியப்படவில்லை” என்று நிரப்பப்பட வில்லை. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகத்தில் இதே அநியாயம் அரங்கே றியது. ஒன்றியக் கல்வி அமைச்சகத்திடம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கொண்டு சென்றும் ஒவ்வொரு ஐ.ஐ.டியும், மத்தியப் பல்கலைக் கழகமும் சுயேட்சையான செயல்பாடு கொண்டவை என பதில் அளிப்பதே வழக்கம். அரசியல் சாசனத் திற்கும் அப்பாற்பட்டவையா ஒன்றிய அரசு கல்வி நிறு வனங்கள் என்ற கேள்விக்கு பதிலே இருப்பதில்லை.  வளாக சூழலே சாதி இந்துக்கள் நிரம்பியதாக இருந்தால் எப்படி சமூக நீதி சார்ந்த உணர்வுகள் அங்கு மலரும் என்பதே முக்கியமான பிரச்சனை.

சூழல் மாறாமல் தீர்வு இல்லை

2004 இல் “எய்ம்ஸ்” நிறுவனத்தில் ஒடுக்கப்பட்ட மாண வர்களின் தற்கொலைகள், எதிர்கொள்ளும் பாகுபாடு கள் வெடித்த போது முனைவர் சுகதேவ் தோரட் தலை மையிலான குழு அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் வளாக சூழலை மேம்படுத்த பல ஆலோசனைகளை கூறியது. ஆனால் அவை எல்லாம் காகித அளவி லேயே இன்று வரை உள்ளது.  21 ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களில் இது நாள்  வரை எஸ்.சி, எஸ்.டி செல்களே அமைக்கப்படவில்லை. அவற்றில் 4 ஐ.ஐ.டி கள் அடங்கும். 19 ஐ.ஐ.டி களில் அமைக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் அவற்றில் பெரும்பான்மை நிறுவனங்களில் தனி அறை கூட தரப் படவில்லை. அவற்றுக்கு இணைய தளப் பக்கமே இல்லை. இதுதான் அவை செயல்படும் லட்சணம்.  இது தவிர பல மாணவர் குழுக்கள் அங்கு செயல் படுகின்றன. மாணவர் நல மையம் போன்று... அவற்றில் எல்லாம் ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த மாணவர்கள் பெரும்பாலும் இருப்பதில்லை. பெண்க ளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழுக்களின் செயல்பாடுகள் பரிசீலனைக்குரியவை. கலாச்சேத்ரா பிரச்சனையில் அக்குழுவின் உறுப்பி னரே அப்பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டதை பார்த்தோம். சென்னை ஐ.ஐ.டியில் இஸ்லா மிய மாணவி தற்கொலை, ஒரு மேற்கு வங்க மாணவி பாலியல் வன்முறை குற்றச்சாட்டுக்கள் எழுந்த போதும் இப் பிரச்சனைகள் பரவலான விவாதத்திற்கு ஆளாயின.  சென்னை கருத்தரங்கம் இத்தகைய பிரச்சனை களை விவாதிக்கவுள்ளது. ஒன்றிய அரசு கல்வி நிறுவ னங்களின் மாணவர்களும் பங்கேற்று தங்கள் அனு பவங்களை பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.  இக் கருத்தரங்கம் முன் வைக்கும் முழக்கம் “சாதி, பாலின ஒடுக்குமுறையற்ற உயர் கல்வி வளாகங்கள்” என்பதே.