குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் இயக்கத்தின் ஆணி வேர் தோழர் ஜி.எஸ்.மணி - எஸ்.நூர்முகம்மது
தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மக்கள் ஆதரவு தளம் வலுவாக உள்ள மாவட்டங்களில் ஒன்று குமரி மாவட்டம். தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை உருவான போது அக்கிளையின் உறுப்பினர்களில் குமரி மாவட்டத்தைச் சார்ந்த தோழர் சி.பி. இளங்கோவும் ஒருவர் என்பது வர லாற்றில் பதிவான ஒன்று. மேலும் தாய் தமிழ் நாட்டுடன் குமரி மாவட்டம் இணைவதற்கு முன்னர் ஒன்றாயிருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்ட கட்சி திருவிதாங்கூர் கொச்சி மாநிலக் குழுவின் கீழ் இருந்ததும், தோழர் ஜி.எஸ்.மணி அம்மாநிலக் குழுவில் உறுப்பினராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாழ்க்கை ஆரம்பம்
வீரமும், தியாகமும் நிறைந்த வாழ்க்கைக்குச் சொந்தக்காரரான தோழர் ஜி.எஸ்.மணி 1911 இல் மார்த்தாண்டத்தில் (அப்போது தொடுவெட்டி) பிறந்தார். தேவதாஸ் ஆசான் மற்றும் ஞான செல்வம் தம்பதிக்கு மூத்த புதல்வனாகப் பிறந்த அவர், ஒன்பதாம் வகுப்பு வரை படித்த பின்னர் ஓர் அச்சகத்தில் அச்சுக் கோர்ப்பவராக பணி புரியத் துவங்கினார். திருவிதாங்கூர் கொச்சி ஸ்டேட் காங்கி ரசில் உறுப்பினராகி, அதன் மாநிலக்குழுவிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் தனியாக ஓர் அச்சகம் துவங்கினார். கிடைக்கும் வருவாயைக் கொண்டு தினசரி பிற்பகல் தோட்டம் தொழிலாளர்க ளைச் சந்தித்துப் பேச தோட்டப் பகுதிகளுக்குச் செல்லத் துவங்கினார்.
கம்யூனிஸ்ட் கட்சியில் இணைவு
மன்னராட்சியை ஒழிக்கவும், மொழிவழி மாநி லங்கள் அமைக்கவும், உழைக்கும் மக்களின் உரி மைகளைப் பெறவும் வலுவான போராட்டங்களை நடத்தி வந்த கம்யூனிஸ்ட் இயக்கம் அவரது கவ னத்தை ஈர்த்தது. 1942இல் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை குமரி மாவட்டத்தில் உருவாக்கப் பட்டது. அதில் தோழர் ஜி.எஸ்.மணியும் ஓர் உறுப்பி னர். 1947 இல் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட் டக்குழு உருவாக்கப்பட்டு, தோழர் ஜி.எஸ்.மணி செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இக்குழு ஸ்தா பன விசயங்களில் திருவிதாங்கூர் கமிட்டியின் ஆலோசனைப் படியும், அரசியல் விசயங்களில் தமிழ்நாடு கமிட்டி ஆலோசனையின்படியும் செயல்பட்டது. தோழர் ஜி.எஸ்.மணி தமிழ்நாடு கமி ட்டியில் பார்வையாளராகக் கலந்து கொண்டார்.
உணவுப் பஞ்சத்தில் மக்களுக்கு உதவி
அக்காலத்தில் கடும் உணவுப் பஞ்சம் நிலவி யது. கள்ளச்சந்தைக்காக கடத்திச் செல்லப்படும் உணவு தானியங்களைப் பறிமுதல் செய்து தோழர் ஜி.எஸ்.மணி தலைமையில் விநியோகித்தது கட்சி யை மக்கள் மத்தியில் கொண்டு சென்றது. கம்யூ னிஸ்ட் கட்சியில் தனது சகோதரர்கள் டி.மணி மற்றும் பாக்கியதாசையும் இணைத்து செயல்பட வைத்தார். இந்த செயல்பாடுகளால் மக்களின் பற்று அதிகரித்தது.
தொழிலாளர் போராட்டங்கள்
தோட்டம் தொழிலாளர்களை தோட்ட உரிமை யாளர்களான ஆங்கிலேயர்கள் அடிமைகளாக நடத்தினர். சவுக்கடி கொடுப்பது, சாணிப்பால் கொ டுப்பது சகஜமாக இருந்த அக்காலத்தில் சுரண்டல் கடுமையாக இருந்தது. இந்நிலையில் ஜி.எஸ்.மணி உள்ளிட்ட தலைவர்கள் தோட்டம் தொழிலா ளர்களை வீடு, வீடாகச் சென்று சந்தித்துப் பேசி, தைரியமூட்டி சங்கத்தில் சேர்த்தனர். திருவிதாங் கூர் எஸ்டேட் தொழிலாளர் சங்கம் உருவாக்கப் பட்டு, தோழர் ஜி.எஸ்.மணி தலைவராக தேர்ந்தெ டுக்கப்பட்டார். தொடுவெட்டி சந்தையில் அதிக வரி வசூ லிப்பதை எதிர்த்து ஒரு மாத காலம் மறியல் போ ராட்டத்தை தலைமையேற்று நடத்தினார். மிரட்டல் களுக்குப் பணியாத போராட்டத்தினால், அரசு பின்வாங்கி அதிக வரி வசூல் முடிவுக்கு வந்தது. இத்தகைய வெற்றிகள் தொழிலாளர்களுக்கு புதிய நம்பிக்கையைத் தந்தன.
வீரத்துடன் தப்பி ஓடிய வரலாறு
‘இன்குலாப் சிந்தாபாத்’ முழக்கமிட்டதற்காக தோழர் ஜி.எஸ்.மணி உட்பட பல தோழர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, சிறையில் தள்ளப்பட்டனர். அவர்களை குழித்துறை சப் ஜெயிலுக்குக் கொண்டு வந்த போது காவலர்கள் கண் முன் னாலேயே தோழர் ஜி.எஸ்.மணி கரை புரண்டு ஓடிய தாமிரபரணி (குழித்துறை ஆறு) ஆற்றில் குதித்துத் தப்பிய வீர வரலாறு அன்றைக்கு அனை வராலும் வியந்து கூறப்பட்ட வரலாறாக மாறியது. அவர் தலைமறைவாக இருந்து கொண்டே தொழிலாளர் விரோத அடக்கு முறைக்கு எதிரான போராட்டங்களுக்குத் தலைமை தாங்கினார். 1949 அக்டோபர் 2இல் தோழர் ஜி.எஸ்.மணி, டி.மணி ஆகியோர் கைது செய்யப்பட்டு, கடும் தாக்குதலுக்கு உள்ளாகினர். 1951இல் தலை மறைவு மாநாடு வயலாறில் நடைபெற்ற போது தோழர் ஜி.எஸ்.மணி கட்சியின் திரு. கொச்சி மாநி லக்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவ் வாண்டு இறுதியில் திருவிதாங்கூர் கொச்சி சட்ட மன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் தோழர் ஜி. எஸ்.மணி அருமனை தொகுதியில் வேட்பாளரா கப் போட்டியிட்டார்.
தாய் தமிழகப் போராட்டத்தில் பங்கு
பட்டம்தாணுபிள்ளை ஆட்சியின் போது குமரி மாவட்டத்தில் நடைபெற்ற தாய் தமிழகப் போராட் டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டது. தோழர் ஜி.எஸ். மணி உள்ளிட்ட தோழர்கள் மக்களைத் திரட்டி ஐக்கிய தமிழகம் என்ற கோரிக்கைக்காக போரா டினர். இப்போராட்டத்தில் கடும் அடக்குமுறைகள் நடந்தன. துப்பாக்கிச் சூட்டில் பலர் இறந்தனர். இத்தகைய தியாகங்களால் 1956 நவம்பர் 1ல் தாய் தமிழகத்துடன் குமரி மாவட்டம் இணைந்தது.
மார்க்சிஸ்ட் கட்சி உருவாக்கத்தில் பங்கு
1964 இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட வலது திரிபுக்கு எதிராக போராடிய கம்யூ னிஸ்டுகளுடன் தோழர் ஜி.எஸ்.மணியும் சேர்ந்து கொண்டார். மார்க்சிஸ்ட் கட்சி உருவான போது குமரி மாவட்டத்தில் வலுவான மார்க்சிஸ்ட் கட்சி யை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். 1964 இல் பாதுகாப்பு சட்டப்படி கைதான தோழர் ஜி.எஸ்.மணி 16 மாத காலம் சிறையிலிருந்தார். 1976 இல் அவசர கால நிலையின் போதும் தேசிய பாதுகாப்பு சட்டப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
முந்திரி மற்றும் பனைத் தொழிலாளர் போராட்டங்கள்
பெரும்பாலும் இளம் பெண்கள் பல்லாயிரக் கணக்கில் வேலை பார்த்த முந்திரி ஆலைகளில் நடைபெற்ற கடும் சுரண்டலை எதிர்த்து, வீடு வீடா கச் சென்று இளம் பெண்களைத் திரட்டி முந்திரி தொ ழிலாளர் சங்கத்தை உருவாக்கினார். அவர் தலை மையில் நடைபெற்ற கடும் போராட்டங்களால் சம்பள உயர்வு, போனஸ், கிராசுவிட்டி போன்ற சலுகைகளைப் பெற்றனர். பனையேறும் தொழிலாளர்களைத் திரட்டி அவர்களுக்கான போராட்டங்களை நடத்தினார். விவசாயிகளைத் திரட்டி நில வெளியேற்றத்துக்கு எதிரான போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி னார். 1945 இல் நடைபெற்ற செண்பகத்தரிசு போராட்டம், 1954-56 இல் நடந்த குளப்பாறை விவசாயிகள் போராட்டம், 1966 இல் நடைபெற்ற மன்னூர் விவசாயிகள் போராட்டம் போன்றவை விவசாயிகளுக்கு நில உரிமையைப் பெற்றுக் கொடுத்தது.
சட்டமன்ற உறுப்பினராக பணி
1977இல் விளவங்கோடு சட்டப் பேரவைத் தொ குதியிலிருந்து சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார் தோழர் ஜி.எஸ்.மணி. குமரி மாவட்டத்தில் கட்சி முன்னதாக பல சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டிருந்தாலும் அப்போது தான் முதல் முறையாக கட்சி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது. குமரி மாவட்ட மக்களின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கத் துவங்கியது. 1978 இல் அகில இந்திய தோட்டம் தொழிலாளர் சம்மேளன மாநாட்டை நாகர்கோயிலில் வரவேற்புக்குழு தலைவராக இருந்து சிறப்பாக நடத்தினார். பல்லாயிரம் உழைப்பாளிகளின் பேரணியால் நாகர்கோயில் நகரமே சிவந்தது. 1979 இல் அவருக்கு புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது. திருவனந்தபுரத்திலும், பின்னர் சென்னையிலும் சிறந்த சிகிச்சை அளித்தும் காப்பாற்ற இயலவில்லை. 1979 அக்டோபர் மாதம் 5ஆம் தேதி இயற்கை எய்தினார். குமரி மாவட்ட உழைப்பாளி மக்களின் ஒப்பற்ற தலைவரான தோழர் ஜி.எஸ்.மணியின் நினைவு கள் இன்றும் நிலைத்து நிற்கிறது.