1918இல் மதராஸ் லேபர் யூனியன் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே முதலாவதாகப் பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கமாக மதராஸ் லேபர் யூனியன்தான் கருதப்படுகிறது. மதராஸ் லேபர் யூனியன் மிகவும் நெருக்கமாக ‘பின்னி’ என்று அழைக்கப்படும் பக்கிங்காம் மற்றும் கர்நாடிக் ஆலையுடன் தொடர்பு கொண்டிருந்திருக்கிறது. சென்னை மாநகரில் இருந்த மிகப்பெரிய டெக்ஸ்டைல் ஆலை இது. இவ்வாலை 1980களின் முற்பகுதியில் மூடப்பட்டது. 1918இலிருந்து ‘பின்னி’ ஆலைதான் சென்னை மாநகரில் தொழிற்சங்க இயக்கத்தின் மையமாக இருந்திருக்கிறது. பம்பாய் மற்றும் கல்கத்தா மாநகரங்களோடு ஒப்பிடும்போது அங்கே இருந்த அளவிற்குத் தொழிற்சாலைகள் நிறைந்த நகரமாக சென்னையைச் சொல்ல முடியாது. பிரிட்டிஷார், சென்னையை தங்களுடைய அரசியல், நிர்வாகம் மற்றும் வர்த்தக மையமாகத்தான் நீடிக்கவேண்டும் என்று விரும்பியதால், இங்கே தொழிற்சாலைகள் திறக்கப்படுவதை அவர்கள் ஊக்குவிக்கவில்லை. டெக்ஸ்டைல்கள், தோல் பதனிடும் தொழிற்சாலைகள், சில இன்ஜினியரிங் தொழில்பிரிவுகள், டிராம், பஸ் போக்குவரத்து ஆகியவைதான் இங்கே இருந்திருக்கின்றன.
மதராஸ் லேபர் யூனியன் எவரும் எதிர்பார்க்க முடியாத பின்புலத்திலிருந்து வந்துள்ள மக்களால் தொடங்கப்பட்டது. இந்த சங்கத்தைத் துவங்கிய தலைவர்களில் மிகவும் முக்கியமாகக் கருதப்படுபவர் ஒரு மத நிறுவனத்தை நடத்தி வந்தவராவார். அவரது பெயர் ஜி. செல்வபதி செட்டியார். செல்வபதி செட்டியார் 1985 வரை வாழ்ந்திருக்கிறார். மதராஸ் லேபர் யூனியன் உதயமானதை அடுத்து அது சென்னையைச் சுற்றியுள்ளள தொழிற்சாலைகளில் பணியாற்றிய தொழிலாளர்கள் மத்தியிலும் சங்கங்கள் தொடங்குவதற்கான தூண்டுதலை ஏற்படுத்தியது. சென்னையில் அப்போது ரயில்வே கம்பெனி ஒன்று உருவாகி இருக்கிறது. மதராஸ் மற்றும் தெற்கு மராத்தா என்று பெயரிடப்பட்டிருந்த அந்த ரயில்வே கம்பெனியில் இரண்டரை மாதங்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் நடைபெற்றிருக்கிறது. அந்த சமயத்தில் ரயில்வே தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தம் வீரம் செறிந்த ஒன்றாகும். வீரராகவன் மிகவும் அருமையான சித்திரத்தை வழங்கியிருக்கிறார்.
தொழிற்சங்க இயக்கத்தை செல்வபதி மற்றும் சுயாட்சி இயக்கத்தை (Home Rule Movement) சேர்ந்த பல தலைவர்கள் தலைமையேற்று நடத்தி இருக்கின்றனர். சென்னைதான் இந்திய பிரம்மஞான சங்கத்திற்கும், அன்னி பெசண்ட் அம்மையாரின் சுயாட்சி இயக்கத்திற்கும் தலைமையகமாக இருந்தது. இவர்கள்தான் தொழிலாளர்களின் இயக்கங்களுக்கு ஆரம்பகாலத்தில் தலைமை வகித்திருக்கிறார்கள். மிகவும் ஆர்வத்தை அளிக்கக்கூடிய நபரான பி.பி. வாடியா பிரம்மஞான சங்கத்துடன்தான் நெருக்கமாக இருந்து வந்தார். இவர்தான் மதராஸ் லேபர் யூனியனுக்கும் ‘பின்னி’ ஆலைத் தொழிலாளர்களுக்கும் தலைமை வகித்துள்ளார். 1933க்குப் பின்னர் தான் இடதுசாரி சக்திகள் முன்னுக்குவருகின்றன. தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று அழைக்கப்படும் தோழர் சிங்காரவேலர் தொழிலாளர்களின் சங்கங்களை அமைக்கிறார். தொழிலாளர் வர்க்கத்தின் பல போராட்டங்களு டன் தன்னை இணைத்துக் கொள்கிறார். ஆயினும் அவர் அந்த சமயத்தில் தொழிலாளர்களுக் கென்று ஓர் அமைப்பினைக் கட்ட இயலவில்லை. அவர் அந்நாட்களில் தமிழ்நாடு மற்றும் சென்னை மாநகரின் தொழிற்சங்க இயக்கத்தில் குறிப்பிடத்தக்க விதத்தில் பங்கேற்றிருக்கிறார். ஆயினும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியும், ‘தாதா’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட அலீம் ஹைதர் கான் முயற்சியால் முதல் கம்யூனிஸ்ட் குழுவும் உருவானபிறகுதான் தொழிற்சங்க இயக்கத்தில் இடதுசாரித் தலைமை வெளிப்படத் துவங்கியது. அதன்பின்னர் தோழர் பி.ராமமூர்த்தி மற்றும் பல தலைவர்கள் தொழிற்சங்க இயக்கத்துடன் அறிமுகமானார்கள்.
காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி தேசிய இயக்கத்திலும் அகில இந்திய அளவில் தொழிற்சங்க இயக்கம், விவசாய இயக்கம் ஆகியவற்றைக் கட்டுவதிலும் முன்னணியில் இருந்திருக்கிறது. ஆயினும் சென்னை மாநகரத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி அத்தகைய தொரு நிலையைப் பெற முடியவில்லை. உண்மையில் தோழர் பி.சுந்தரய்யா தன் கம்யூனிஸ்ட் பணியை சென்னையிலிருந்துதான் துவங்கினார். ஆயினும் தொழிற்சங்க இயக்கத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்பு என்பது துவக்கத்தில் இல்லை. மேலும் சென்னை, தொழிற்சங்க இயக்கத்தின் மையமாகவும் அப்போது மாற இயலவில்லை. பல சமயங்களில் ‘பின்னி’ தொழிற்சாலையில் வேலைபார்த்த தொழிலாளர்கள் கம்யூனிஸ்டுகளுக்கு முன்பு இருந்த சீர்திருத்தவாதத் தலைமையைவிட வேகமாக முன்னேறிச் சென்றிருக்கிறார்கள். தலைவர்களின் விருப்பங்களையெல்லாம் மீறி முன்னேறியிருக்கிறார்கள். வாடியா போன்று தலைவர்கள் தொழிலாளர்களின் வாழ்க்கை மீது அவர்கள் மனப்பூர்வமாகக் கரிசனம் கொண்டிருந்தார்கள். எனினும் அவர்கள் புரட்சியாளர்கள் அல்ல; புரட்சிகர தொழிற்சங்க இயக்கத்தின் சிந்தனைகளை அவர்கள் பெற்றிருக்கவில்லை. அன்றைய சென்னைத் தொழிற்சங்க இயக்கம் குறித்த நான்கு அம்சங்கள் முக்கியமானவை:
முதலாவதாக, அன்றைய தினம் காங்கிரஸ் கட்சியால் தலைமை தாங்கப்பட்ட தேசிய இயக்கம் குணாம்சத்தில் முதலாளித்துவ (பூர்சுவா) மனப்பான்மையைப் பெற்றிருந்தது. எனவே அது, பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டத்திற்குக் கொடுத்த முக்கியத்துவத்தை, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சனைகளுக்குக் கொடுக்காதது மட்டுமல்ல, அவற்றை மூடி மறைத்திடவும் முயற்சிகளை மேற்கொண்டது. தொழிலாளர்கள் மத்தியில் சோசலிச மற்றும் கம்யூனிச சிந்தனைகள் வளரத் தொடங்கியதைக் கண்டு அது அவர்களை அணிதிரட்டுவதையே குறைத்துக் கொண்டுவிட்டது. இரண்டாவதாக, இடதுசாரி சக்திகள் தலைமையில் இருந்த இயக்கங்கள் மீது பிரிட்டிஷ் அரசாங்கம் கடும் அடக்குமுறையை ஏவி அவற்றை நசுக்குவதில் வெற்றி கண்டன. இது சீர்திருத்தவாதத் தலைவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்ததோடு, தொழிலாளர்களைத் தங்கள் கீழ் வைத்துக்கொள்வதிலும், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் வெறும் பொருளாதாரக் கோரிக்கைகளை மட்டும் எழுப்புவதோடு தங்களைச் சுருக்கிக் கொள்வதிலும் நிறைவடைந்தனர்.
மூன்றாவதாக, காங்கிரஸ் சோசலிஸ்ட் தலைவர்களும் கம்யூனிஸ்ட்டுகளும் தொழிற்சங்க இயக்கத்திற்குள் தாமதமாக வந்தபோதிலும், அரசின் கடும் அடக்குமுறை காரணமாக அவர்களால் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை. சீர்திருத்தவாதத் தலைவர்களையும் அவர்களால் புறந்தள்ள முடியவில்லை. நான்காவதாக, இந்திய சமூகம் பல்வேறு கலாச்சாரங்களையும், பலவீனங்களையும் உள்ளடக்கிய ஒன்று. நிலப்பிரபுத்துவ, சாதிய மற்றும் வகுப்புவாத சிந்தனைகள் மிகவும் மோசமானமுறையில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு சமூகமாக இது இருந்ததால், தொழிலாளர்கள் மத்தியில் புரட்சிகர வர்க்க உணர்வு உருவாவதற்கு அவை மாபெரும் தடைக்கற்களாக அமைந்திருந்தன.
திலீப் என்ற வீரராகவன் எழுதிய ‘சென்னை பெருநகர தொழிற்சங்க வரலாறு’ (The Making of the Madras Working Class) என்ற நூல் வெளியீட்டு நிகழ்வின்போது பிரகாஷ் காரத் ஆற்றிய உரையிலிருந்து... தமிழில் : ச.வீரமணி