மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் வாழ்க்கையையும், எழுத்துக்களையும் பற்றி பல ஆய்வுகள் நடந்து வருகின்றன. ஏராளமான நூல்கள் வெளியாகியுள்ளன. அதில் குறிப்பாக இந்து ஆங்கில நாளேட்டிற்கு மகாகவி பாரதியார் எழுதிய கடிதங்கள், அனுப்பிய செய்திகள் மற்றும் பாரதியின் வாழ்க்கை பற்றிய பதிவுகளை பேராசிரியர் ஏ.ஆர்.வெங்கடாசலபதி அவர்கள் தொகுத்து ‘பாரதி கருவூலம்’ என்ற தமிழ் நூலை வழங்கினார். தற்போது இந்து ஆங்கில நாளேட்டின் சார்பில், கூடுதலாக பாரதி பற்றிய செய்திகளுடன் ‘SUBRAMANIA BHARATI - Writings in The Hindu’ என்ற ஆங்கில நூல் வெளியாகியுள்ளது. இந்த நூலுக்கு பேராசிரியர் ஏ.ஆர்.வெங்கடாசலபதி விரிவான முன்னுரை எழுதியுள்ளார். இந்த நூலின் வழியாக, மகாகவி பாரதியாரின் அரசியல் எதிர்வினைகள் நன்கு புலப்படுகின்றன. அதில் காணப்படும் தெளிவான கருத்துக்கள் இளைய தலைமுறையினருக்கு முன் மாதிரியாக அமைந்துள்ளன. 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி பாரதி இறந்துவிட்டார் என்ற செய்தி ஆங்கில இந்து நாளேட்டில் வெளியானது. அவருடைய இறுதி நிகழ்ச்சி யில் 11 பேர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். தான் வாழ்ந்த காலத்தையும் தாண்டி அவர் புகழ் தொடர்வதற்கான முழுமுதற் காரணம் அவருடைய சிந்தனையும், செயல்பாடுகளுமே.
சீர்திருத்தத்தின் பக்கம்
1904 ஆம் ஆண்டு, ‘மெட்ராஸ் இந்து சீர்திருத்த சங்கம்’ சார்பில் சென்னையில் சமூக சீர்திருத்த மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் உரையாற்றிய வழக்கறிஞர் சங்கரன் நாயர் (பிற்காலத்தில் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியானவர்), சமூக சீர்திருத்தத்தின் அவசியம் பற்றி பேசியதை பாராட்டியும், ஆதரித்தும் ஆங்கில இந்து நாளேட்டிற்கு பாரதியார் கடிதம் எழுதினார் (27.12.1904). ‘சமூக சீர்திருத்தம் இல்லாமல் நமது அரசியல் சீர்திருத்தம் ஏற்படும் என்பது வெறும் கனவு, மாயை.’ மேலும், ‘தேசிய உணர்வு இல்லாமல் அரசியல் விடுதலை சாத்தியமில்லை... வர்ணமுறை அல்லது சாதி முறை நிலவும் இடத்தில் தேசிய உணர்வு தோன்ற முடியாது’. சாதி வேறுபாட்டை அகற்றிட, சமூக சீர்திருத்தம் தேவை என்பதை பாரதியார் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார்.
சாதிகளை பற்றி...
1915 ஆம் ஆண்டில், தி இந்து நாளேட்டில், பேரா சிரியர் கே.சுந்தரராமய்யரின் கருத்துவெளியாகிறது. அதில் சாதி கட்டமைப்புகள் பற்றி ரிக் வேதத்தில் எந்தக் குறிப்பும் இல்லை என்ற டாக்டர் பண்டார்க்கரின் கூற்றை அவர் மறுத்ததுடன், பாரசீகர்களிடையேயும் (இன்றைய ஈரான், ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான் பகுதிகள்) இந்து நால்வர்ணம் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இந்த பிரிவினை, இந்து சமூக வளர்ச்சியின் பிரத்யேக விளைவன்று; மிகப் புராதன இந்தோ-பாரசீக காலத்திலேயே இது நிலவியுள்ளது என்று ஒரு பிரெஞ்சு ஆசிரியரின் கூற்றை பேராசிரியர் சுந்தரராமய்யர் மேற்கோள்காட்டினார். பாரதியார் இதனை மறுத்து எழுதிய கடிதத்தில் (19.11.1915) இவ்வாறு குறிப்பிடுகிறார்:
‘‘தென்னிந்தியாவில் வைதீகத்தின் மிக உறுதியான சார்பாளராக விளங்கும் இப்பேராசிரியர் நவீன பிராமணர்களை பாரசீக மிலேச்சர்களின் உறவினர்களாக கருதுவது மிக வேடிக்கையாக உள்ளது. வைதீக சம்பிரதாயப்படி நாம் பிரம்மாவின் தலையில் இருந்து நேராக உதித்த வர்கள் என்றல்லவா இவ்வளவு காலமாக கருதி வந்தேன். சாதாரண பாரசீகர்களுக்கும் இதே உயரிய உற்பத்தியை பேராசிரியர் வழங்கமாட்டார் என்று நம்புகிறேன்” என்று எள்ளி நகையாடுகிறார். மேலும், “பேராசிரியர் குறிப்பிடும் ஐரோப்பிய அறிஞர்கள் எல்லாம் குடிபெயர்ந்து வந்த முழு மக்களையுமே ஆரியர் என்றுதான் கருதுகின்றனர். பேராசிரியர் இதை மறுக்கிறாரா?’’ என்றும் கேட்கிறார். வேதகாலத்தின் போது சாதிகள் இல்லை என்று பாரதியார் கருதுகிறார். கடந்த நூற்றாண்டின் முற்பகுதியிலேயே ஆரியர்கள் இந்தியாவின் பூர்வகுடி கள் அல்ல, வெளியில் இருந்து இந்தியாவிற்குள் குடியேறியவர்கள் என்பது குறித்த விவாதம் நடந்துள்ளது. இப்போது மரபணு ஆய்வுகளின் மூலம், ஆரியர்களின் குடியேற்றம் அறிவியல்பூர்வ மாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாரதியார் தன்னுடைய கடிதத்தின் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கிறார். பிரம்மனின் தலையில் இருந்து பிராமணர்கள் பிறந்ததாகச் சொல்லும் மனு நீதியைச் சாடுகிறார்; மறுபுறம் சாதிகள் வேத காலத்தில் அல்ல, இடைப்பட்ட காலத்தில்தான் உருவாகியுள்ளன என்பதையும் அழுத்தமாகச் சொல்கிறார். சாதி ஏற்றத்தாழ்வுகளை பாரதியார் எதிர்த்து தொடர்ந்து இயங்கினார் என்பதையே 1904 மற்றும் 1914 காலகட்டங்களில் எழுதப்பட்ட இருவேறு கடிதங்கள் காட்டுகின்றன.
புதுச்சேரியில் தஞ்சம்
1908 ஆம் ஆண்டு, வ.உ.சிதம்பரனாரும், சுப்பிரமணிய சிவாவும் கைது செய்யப்பட்டார்கள். இதனைக் கண்டித்து நெல்லை மாநகரமே கொந்தளித்தது. மக்கள் போராட்டம் வெடித்தது. வழக்கு விசாரணையில் நீதிமன்றம் வ.உ.சிதம்பர னாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், சிவாவிற்கு பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் அளித்தது. இதே காலத்தில் பால கங்காதர திலகருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அவர் பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார். ‘இந்தியா’ என்ற பத்திரிக்கையை நடத்திய பாரதியார் தொடர்ந்து இந்த செய்திகளை எழுதியும், பேசியும் வந்ததற்காக அவரை கைது செய்திட பிரிட்டிஷ் காலனியாதிக்க அரசு முயன்றது. இந்தப் பின்னணியில்தான் பிரெஞ்சு காலனியான புதுச்சேரிக்கு செல்கிறார் பாரதி. பிரிட்டிஷ் இந்தியாவில், “சட்ட ரீதியான இயக்கத்திற்கு தற்காலிகமான பின்னடைவு ஏற்பட்டிருந்ததால், பிரிட்டிஷ் ஆட்சிப் பகுதியில் இருந்துகொண்டு என் தேச மக்களுக்கு எந்தச் சேவையையும் செய்ய முடியாது. மாறாக எனது தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் பாதுகாப்புக்கும் ஆபத்து தான் ஏற்படும்”. “என்னுடைய தேசிய கருத்துக்கள் உறுதியானவை. மாற்றம் இல்லாதவை ... அதே வேளையில் அரசியல் போராட்டக் களத்தில் இருந்து வெகுதூரம் விலகி, அன்னியக் குடியின் கீழ் அமைதி யான, ஆனால் வெளிப்படையான வாழ்க்கையை வாழ்ந்து வருகையில், தெளிவற்ற சந்தேகங்களின் பேரில் என்மீது எடுக்கப்பட்ட கொடூரமான, அநீதி யான நடவடிக்கைகளுக்குத்தான் நான் எதிர்ப்பு தெரி வித்தேன்” என எழுதுகிறார்.
சாவர்க்கரைப் போல மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவர் அல்ல பாரதி. தன்னுடைய போராட்டம் தொடரும் என்றே உறுதியோடு இருந்துள்ளார். பிறகு பாரதி 1918 ஆம் ஆண்டு கடலூருக்கு வருகிறார். அப்போது அவரை கைது செய்கிறது காலனி ஆட்சி. கடலூர் சப் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அதன் பின் பிணையில் விடுதலையாகி நெல்லைக்குச் சென்றார். அவர் புதுச்சேரியில் இருந்த போதுதான் புகழ்பெற்ற அவரின் படைப்புகளான பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு ஆகியவற்றை உரு வாக்கினார். இந்த படைப்புகளை படித்து பாரதியாரு டன் கலந்துரையாடிய கனக சுப்புரத்தினம், தன்னு டைய இயற்பெயரை மாற்றிக் கொண்டு பாரதிதாசன் ஆனார். (அவர்தான் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான வி.பி.சிண்டனை, அழகுத் தமிழில் வி.பி.சிந்தன் என்று பெயர் மாற்றம் செய்து அழைத்தவர்)
மொழிக் கொள்கை
பச்சையப்பன் கல்லூரியில் ஜே.சி.ரோலோ என் பவர் ஆற்றிய உரையில் இந்திய மாணவர்களுக்கு பயிற்று மொழியாக ஆங்கிலத்தை மட்டும் பயன் படுத்துவது சரியே என்று வலியுறுத்தினார். இந்த உரையினைப் பற்றி பாரதியார் எழுதிய கடிதத்தில் (19.10.1914) “தாய் மொழியே ஒருவரது கல்விக்குரிய இயற்கையான, மனிதப் பாங்குடைய போதனா மொழியாகும் என்பதே நமது பிரதான வாதமாகும். இதில் எவருக்காவது சந்தேகம் இருப்பின் அவர்கள் ஜப்பான், ஸ்காண்டினேவியா, இங்கிலாந்து, இத்தாலி, மெக்சிக்கோ ஆகிய தேசங்களுக்கோ அல்லது மனி தர்கள் மனிதர்களாக வாழும் [கோபம் கொப்பளிக்க கூறுகிறார்] வேறு தேசங்களுக்கோ சென்று அங்குள்ள கல்விமான்களை விசாரித்துக்கொள்ளலாம். தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டோமானால் பிழையாக வேறொரு அயல் மொழியை போதனா மொழியாக கொண்டிருப்பது அதிர்ச்சிதரக் கூடியது. ஏனெனில் துல்லியமான விஞ்ஞான வெளிப்பாட்டி ற்கு ஆங்கிலத்தை விடவும் தமிழே சிறந்ததாகும்.” உலகெங்கிலும் தாய்மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என ஐ.நா., மன்றம் வலியுறுத்தி வருவதை அன்றைக்கே பாரதியார் பேசியிருக்கிறார்.
அரசியல் நிலைப்பாடு
ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு பிறகு விடுதலைபெற்ற பால கங்காதர திலகர் வெளியிட்ட அறிக்கை பற்றி இந்து நாளேட்டிற்கு பாரதி ஒரு கடிதம் எழுதியுள்ளார். (3.09.1914) அதில் அன்னியர் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் தனக்குள்ள மன உறுதியை வெளிப்படுத்தியுள்ளார். “எங்களை முட்டாள்தனமாக ஒடுக்குபவர்களுக்கு நாங்கள் சொல்ல விரும்புவதெல்லாம், சிறுமதியாளர்களே, சல்லித்தனமான விசயங்களில் எங்களுக்கு சில காலம் தொந்தரவு தரலாம். ஆனால் உங்களால் எங்களை ஒடுக்கிவிட முடியாது” என எழுதுகிறார். 1917 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு சென்னையில் நடந்தது. இந்த மாநாட்டிற்கு முன்னதாக, காங்கிரஸ் கட்சி கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறை குறித்து பாரதியார் ஒரு கடிதம் எழுதுகிறார், அதில் “மதப் பிரிவினைவாதத்தையோ அல்லது தீண்டத்தகாத / அணுகக் கூடாத சாதிகளை உருவாக்கிய உணர்வுகளையோ அரசியல் வாழ்க்கையில் கொண்டுவரும்போது, அவர்கள் அரசியல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.”
“நாட்டின் விவகாரங்களை வழிநடத்த விரும்பும் மனிதர்கள் தாங்கள் பரம்பரையாகப் பெற்ற அல்லது தமக்கென அமைத்துக் கொண்ட அனைத்து விதமான அடிமைத் தனங்களையும் கைவிட வேண்டும்”. தான் சார்ந்துள்ள அரசியல் கட்சி, சாதி மற்றும் மதப் பிரிவினைவாதம் குறித்து கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறையை பற்றி நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தெளிவான பார்வையுடன் இருந்துள்ளார் பாரதி. தற்போது காசியில் உள்ள பாரதியாரின் வீட்டை புனரமைத்து, பாரதியாரை கொண்டாடுகிறோம் என்கிறார்கள் மோடியும், யோகி ஆதித்யநாத்தும். ஆனால் பாரதியார் விரும்பிய, வலியுறுத்தி வந்த கொள்கைகளை அவர்கள் தகர்த்துக் கொண்டுள் ளார்கள். நாம் பாரதியை வழிபாட்டுப் பொருளாக்கு வதை அனுமதிக்க முடியாது. அவரின் விடுதலைக் கனலை நெஞ்சில் ஏந்தி, சமூக முன்னேற்றப் பாதையில் முன் செல்வோம். அதுவே பாரதியாரின் இலக்குகளை வெல்லச் செய்திடும்.