articles

img

அகில இந்திய மாநாடு 2

அகல்யா  ரங்கனேகர்  :  போராட்டக்  களத்தின்  ராணி - உ.வாசுகி

தந்தை திரிம்பக் ரணதிவே அவர்கள், ஜோதிபாஃபூலேயின் சமூக சீர்திருத்தக் கொள்கைகளை உயர்த்திப் பிடித்து, மதம் சாதி பாலினம் சார்ந்த பாகுபாடுகளை கறாராக நிராகரித்தவர். மூத்த சகோதரர் அருமை தோழர் பி.டி.ரணதிவே, கம்யூனிச இயக்கத்தின் முன்னணித் தலைவர். இந்தப் பின்னணியில் தான் நாட்டின் குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தின் மிகச்சிறந்த புரட்சியாளர்களில் ஒருவரான அகல்யாவின் இளமைக்காலம் கனவுகளுடன் மலர்ந்தது. 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதற்காக அகல்யாவும் அவருடைய சக தோழிகளும் சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கும் ஒடுக்குமுறைக்கு பணியாமல் புடவைகளால் தேசிய கொடியைத் தைத்து தாமே ஏற்றினார். அச்சமற்ற அந்தச் செயலுக்காக அவருடைய சிறை தண்டனை நீட்டிக்கப்பட்டது. அவர் படித்துக் கொண்டிருந்த ஃபெர்குசன் கல்லூரியிலிருந்தும் வெளியேற்றப்பட்டார். மாதர் ஒருங்கிணைப்பின் முன்னோடி 1943இல் தன் 21ஆவது வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, தேச விடுதலை போராட்டத்திலும், பெண் தொழிலாளிகளுக்கான போராட்டங்களிலும் தன் இளமையின் ஆற்றலை அர்ப்பணித்தார். பரேல் மாதர் சங்கத்தை உருவாக்கி பெண் பஞ்சாலை தொழிலாளர்களின் உரிமைகளுக்காக இதயம் கனிந்து குரல் கொடுத்தார். இதுவே பின்னர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமாக உருவானது. 1946இல் கப்பல் படை எழுச்சியின் போது, காங்கிரசும் முஸ்லிம்லீக்கும் போராட்டத்தைக் கைவிட்டு பிரிட்டிஷாரிடம் சரணாகதி அடைய வேண்டும் என்றே கூறினர். கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே முழுமையான ஆதரவை வழங்கியது. கட்சி மற்றும் ஏஐடியுசியின் தலைமையில் பம்பாயின் தொழிலாளி வர்க்கம் ஆயிரமாயிரமாய் வீதிக்கு வந்தது. மாதர் சங்கத்தின் சார்பில் போராடும் வீரர்களுக்கு உணவு வழங்கும் ஏற்பாட்டை அகல்யா முன் நின்று கவனித்தார். நெஞ்சுரத்துடன் பிரிட்டிஷ் ராணுவத்தின் துப்பாக்கி தோட்டாக்களை வீரமுடன் எதிர்கொண்டார். போராட்டக் களத்தின் ராணி சுதந்திரத்திற்குப் பின்னர் 1950களில் நடந்த, மொழி வழி மாநில கோரிக்கைக்கான சம்யுக்த மகாராஷ்டிரா இயக்கத்தில் அகல்யா முழுமையாக ஈடுபட்டார். கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட நான்கு கட்சிகள் இதற்கான ஒரு கூட்டு மேடை அமைத்துப் போராடின.

100க்கும் மேற்பட்ட தொழிலாளிகளும் விவசாயிகளும் மாநில காங்கிரஸ் அரசின் அடக்கு முறையால் கொல்லப்பட்டனர். பெருமளவில் பெண்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுத்தி சிறைச்சாலை, போலீஸ் தடியடியை துணிவுடன் சந்தித்தார். பிரபல பத்திரிகையாளர் ஒருவர் அவரை “ரணராகினி” - போராட்டக் களத்தின் ராணி என வர்ணித்தார். கட்சிக்குள் திருத்தல் வாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் மார்க்சிஸ்ட் கட்சி உதயமான போது அதில் தன்னை இணைத்துக் கொண்டார். 1970களில் கடும் விலைவாசி உயர்வுக்கு எதிராக அவர் தலைமையில் அனைத்து பெண்கள் அமைப்புகளும் இணைந்து நடத்திய “ரோலிங்பின்” (பூரி கட்டையைத் தட்டி சத்தம் எழுப்பும்) போராட்டம் நாடு முழுவதும் அலைகளை எழுப்பியது. மக்களின் நெஞ்சங்களில் நிறைந்தவர் நகராட்சி உறுப்பினர் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் வரை பல பொறுப்புகளை மக்கள் நலனுக்காக திறம்பட நிறைவேற்றினார். சிஐடியு மற்றும் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.

கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகவும், மகாராஷ்டிரா மாநிலச் செயலாளராக வும் பணியாற்றினார். பின்னர் அவர் எந்தப் பொறுப்பிலும் இல்லாத சூழலிலும், தினசரி அவரது வீட்டுக்கு முன்னால் மக்கள் கூட்டம் அலைமோதும். அவர்களது கோரிக்கைகளைப் பொறுமையாக உள்வாங்கி முடிந்த உதவிகளை தாய்மைப் பாசத்துடன் ஏற்பாடு செய்வார். மிகவும் நகைச்சுவையாக அரசியல் பேசக்கூடியவர். புதுக்கோட்டையில் நடந்த மாதர் சங்க மாநில மாநாட்டு பொதுக்கூட்டத்தில் அவரது உரையை மொழிபெயர்த்தேன். அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாயின் சிறுநீர் குடிக்கும் சிகிச்சையை கிண்டலடித்து அனைவரையும் சிரிக்க வைத்தார். 80 வயதைக் கடந்த பின்னும் களைப்பின்றி போராட்டங்களில் பங்கேற்ற இந்த அசாதாரணப் பெண்மணி, வாழ்நாள் முழுவதும் சாதியம், வகுப்புவாதம், ஆணாதிக்க ஒடுக்குமுறைகளுக்கு எதிராக உறுதியாக நின்றார். அவரது அன்புக்குரிய இணையராக மாணவர் இயக்கத் தலைவரான பி.பி.ரங்கனேகர் அமைந்தார். இருவருமே கட்சி மற்றும் வெகுஜன இயக்கங்களுக்காகத் தம்மை ஒப்புக் கொடுத்தவர்கள். “அகல்யாதாயி” என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட தோழர் அகல்யா ரங்கனேகரின் தன்னலமற்ற, பொருள் பொதிந்த பொது வாழ்க்கை நமக்கு என்றென்றும் உத்வேகம் அளிக்கும் ஒளிவிளக்காகத் திகழ்கிறது.