சுபொஅ. “நியூசிலண்டர் [ new zealender] ஒருவன் தன் நாயகி சோரம் செய்தாளென்று அவளைக் கொன்றுவிடுகிறான். இதனைக் கண்ட சோரநாயகன், மேலுலகத்தில் அவளுடன் தானும் போய்ச் சேர தற்கொலை புரிந்து கொள்கிறான். இவ்விருவரையும் அவ்வுலகில் சேரவொட்டாமல் தடுக்க நாயகனும் தற்கொலை புரிந்து கொள்கிறான்.இது என்ன பைத்தியம் என்று கேட்டால் ,நீயும் எங்களுடன் தற்கொலை புரிந்து கொண்டு எங்களுடன் வந்தால் உண்மை விளங்கும் என்றான்.” அதுபோல மூடநம்பிக்கைகளைப் பொய்நம்பிக்கை என்றால் நீங்களும் நம்புகளென்று பிடிவாதம் செய்கிறார்கள் . [ம.சிங்காரவேலர் சிந்தனைக் களஞ்சியம் .தொகுதி 2 .பக்கம் 608 ] இங்கே சனாதனத்தை தூக்கிச் சுமந்து வக்காலத்து வாங்குவோரும் அப்படித்தானே செய்கிறார்கள் . பழமைவாத புதை சேற்றுக்குள் மொத்த சமூகத்தையும் மூழ்கடித்துவிட்டு மேல்தட்டு மேட்டுக்குடிகள் மட்டும் ஆட்டம் போடலாம் என எண்ணி வஞ்சகமாய் சூதாட்டக் காயுருட்டுகின்றனர். அரசியல் அதிகாரத்துடன் சனாதனம் சகல அதிகார மையங்களிலும் கருத்தாதிக்கம் செலுத்த மநுவின் அடிப்பொடிகள் இராப்பகலாய் கண்விழித்து வேலை செய்கின்றனர் . இந்த வஞ்சகச் சதியை முறியடிக்க ஒரு புறம் அரசியல் போராட்டம் வீறுகொண்டெழ வேண்டும் .
அதற்கு தோள் கொடுப்பீர் ! ஆனால் அத்தோடு கடமை முடியாது .. உச்சி முதல் உள்ளங்கால் வரை ஏற்றப்பட்டுள்ள சனாதன விஷத்தை இறக்க மாபெரும் கருத்துப் போரில் இறங்கியாக வேண்டும். தனிமனித உளவியலிலும் சமூக உளவியலிலும் அடிப்படை மாற்றங்காண நெடிய தத்துவப் போரை நாம் துவங்கியாக வேண்டும். “பொது இடங்களில் ஜாதி இல்லை என்பான் ஒருவன் , நமது வீட்டிற்கு சென்ற மாத்திரத்தில் ,ஜாதி ஆசார விதிகளைக் கண்டிப்பாக அனுஷ்டித்து வருகிறான். இத்யாதி நடத்தைகளின் முரண் நம் சந்ததியார் கண்டால் நம்மை என்ன வென்று மதிப்பார்கள்? பொது வாழ்க்கை ஒரு பக்கமும், இல்லற வாழ்க்கை மற்றொரு பக்கமுமாக இருந்து வரும் காட்சியை, நமது சந்ததியார் நம்மில் காணுவாரே யானால், நம்மைப் பற்றி என்ன வென்று பேசுவார்கள் ? பொருத்தமில்லா மனத்தினர் என்பார்களா? அல்லது முரண்பட்ட வாழ்க்கை உடையவர்கள் என்பார்களா ?” [ம.சிங்காரவேலர் சிந்தனைக் களஞ்சியம். தொகுதி 3. பக்கம் 1427 ] இது 1935 ஜூனில் புது உலகம் ஏட்டில் சிந்தனைச் சிற்பி எழுதிய வரிகள். இன்றும் இதே கேள்வியைக் கேட்கலாம்தானே! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழர் பி.டி.ரணதிவே தொழிலாளர் கூட்டங்களில் பேசும் போது தவறாது ஒன்றை வேதனையோடு குறிப்பிடுவார் , “மேடையில் புரட்சிகரமான கம்யூனிஸ்டாக வீர உரை ஆற்றுகிறோம் .வீட்டுக்குள் போனதும் நேர் எதிராக “இந்துக் கணவனாக” மாறிவிடுகிறோம் .. இன்னும் எவ்வளவு காலம் இக்கொடுமை தொடர வேண்டும் ?” ஆம் . சனாதன எதிர்ப்பு என்பது மேடை முழக்கம் அல்ல ; வெறும் அரசியல் வியூகம் மட்டும் அல்ல ; நம் வாழ்நெறியாவது எப்போது ? பேரறிஞர் அண்ணா 1955இல் சொன்னதை இன்று நினைவூட்டுவது பிழையில்லை ; தேவையாக இருக்கிறது. “ தம்பி , ஆரியம், அனந்தாச்சாரியிடம் மட்டும் இல்லை, அம்பலவாண முதலியாரிடமும் இருக்கிறது; ஆதிசேஷ செட்டியாரிடமும் இருக்கிறது. நெய்யாடிவாக்கம் முதலியாரிடமும் இருக்கிறது. குன்னியூர் ஐயரிடமும் இருக்கிறது! விநாயகம் எடுத்துக் காட்டியபடி, உச்சிக் குடுமியும் பூணூலும் கூட ஆரியரிடம் மட்டுமல்லவே, படையாச்சிகளிடம் இருக்கிறது, நாயுடுகளிடம் இருக்கிறது; ஏன் நாடார் சமூகத்தில் கூட பழமை விரும்பிகளிடம் இருந்திடக் காண்கிறோம். எனவேதான் ஆரியரை ஒழிப்பது என்பது நமது திட்டமாகாமல், ஆரியத்தை ஒழிப்பது நமது திட்டமாக இருக்கிறது.
இதிலே நமக்குத் தெளிவும் நம்பிக்கையும் ஏற்படும் வகையில் பெரியார் அறிவுரை கூறியிருக்கிறார். நாம் அந்தப் பாதையில் செல்கிறோம். ஆரியம், ஆரியரிடம் மட்டுமல்ல, திராவிடரிடமும் புகுத்தப்பட்டிருக்கிறது; அதைப் புகுத்தி, பாதுகாத்துவரும் பணியில், ஆரியர், ஆரியக் கோலத்தில் இல்லாவிடினும்கூட ஈடுபடக் காண்கிறோம். எனவே, ஆரியம் களையப்படுவதற்கான அறிவுப் பிரச்சாரத்தைத் திறம்பட நடத்துவதுதான் முறையே தவிர அக்ரகாரத்தில் தீ மூட்டுவதல்ல என்று கூறுகிறோம். எனவே தம்பி! நாம் ஆரியத்தை, அறிவுச் சுடரால் அழித் தொழிக்க வேண்டும் - அந்த ஆரியம் அக்ரகாரத்தில் மட்டுமில்லை! எட்டிப் போடா சூத்திரப் பயலே! - என்று ஐயர் பேச்சும் ஆரியம்தான்! கிட்டே வராதே சேரிப் பயலே என்று பேசும் முதலியார் முடுக்கும் ஆரியம்தான்! படையாச்சிக்கு இவ்வளவு உயர்வா? என்று கேட்கும் பேச்சும் ஆரியந்தான்! மறவர் முன்பு மட்டு மரியாதையோடு நட! தேவர் வருகிறார், எழுந்து நில்! நாடார் அழைக்கிறார், ஓடிவா! செட்டியார் கேட்கிறார், தட்டாமல் கொடு! - என்று ஆரியம், பலப்பல முறைகளிலே தலைவிரித்தாடுகிறது, தம்பி, பல முறைகளில். -அறிஞர் அண்ணா, (9-10-1955, திராவிடநாடு ) ஆம். சனாதன எதிரிப்பு நம் அரசியல் வியூகமாகட்டும்! அத்தோடு ஓயாது … ஒவ்வொருவரும் தனக்குள்ளும்,தன் வீட்டுக் குள்ளும் சனாதன எதிர்ப்பு கருத்துப் போரை துவங்கட்டும்!