வெண்மணி தீ வைப்பு கொ டூரம் நடந்து முடிந்து 55 ஆண்டு கடந்துவிட்டது. ஆனால் இன்றும் அந்த நிகழ்ச்சியின் கொடூரத்தை கேட்பவர்கள் மனம் அதிர்ச்சிக்குள்ளாகும். 1968இல் வெண்மணியில் 44 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்கள். இந்த சம்பவம் நடந்தபோது செய்திகள் பத்திரிகைகளில் உடனே வெளி வரவில்லை. அதற்கு காரணம் இந்த கொடுமைகளை நிலப்பிரபுக்களும், அவர்களுடைய கைக்கூலிகளும், காவல்துறையின் ஒத்துழைப்போடு இவைகளை செய்ததினால் அச்செய்திகளை வெளிவர விடாமல் தடுக்க முயற்சித்தார்கள். அதை மீறி அந்த செய்தி வெளியே கொண்டு வரப்பட்டது. அதற்கு செங்கொடி இயக்கத்தின் தலைவர்களுக்குதான் மிகப் பெரிய பங்குண்டு. தோழர்கள் பி.ராமமூர்த்தி போன்ற தலைவர்கள் இந்த கொடுமைகளை வெளியே கொண்டு வர பெரும் முயற்சி செய்தனர்.
நாடாளுமன்றத்திலும், சட்ட மன்றத்திலும் எதிர்க்கட்சி உறுப்பி னர்கள் எழுப்பிய கேள்விகளின் மூலம் தான் இந்த செய்தி தேசம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டது. அந்த செய்தியை படித்த மக்கள் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. ஏனென்றால் அந்த கொடூரம் எந்த இரும்பு இதயமாக இருந்தாலும் அதையும் உருகிடச் செய்திடும். அந்த விதத்தில் அந்த நிகழ்வுகளை நிலப்பிரபுத்துவ குண் டர்கள் செய்திருந்தார்கள். ஆனால் அந்த மிருகங்களுக்கு அப்படிப்பட்ட இதயமில்லை.
குழந்தைகள், வயது முதிர்ந்த பெண்கள், முதியோர் என 44 பேர். இவர்கள் யாராவது அடித்தால் கூட தப்பி ஓடுவதற்கு உடலிலே தெம்பு இல்லாதவர்கள். அடித்தால் அழு வதை தவிர வேறு எதுவும் செய்ய இயலாதவர்கள். நிலப்பிரபுத்துவ குண்டர்கள் தீப்பந்தங்களோடு, ஆயுதங்களோடு, பெரும் கூச்ச லோடு வீதியிலே ஓடி வந்த போது காவல்துறையும் அவர்களுக்கு பின்னால் பாதுகாப்பாக வருவதை கண்ட வெண்மணி கிராமத்து மக்கள் ஓட முடிந்தவர்கள் வயல்காட்டுக்குள் ஓடினார்கள். ஓட முடியாத அந்த 44 பேரும் ஒரு குடிசைக்குள் தஞ்ச மடைந்தார்கள்.
அவர்கள் தஞ்சம் புகுந்த வீடுதான் வெளியே தாழ்ப்பாள் போடப் பட்டது. கூரையின் மீது தீப்பந்தங்கள் வீசப்பட்டன. அவை பற்றி எரிவ தற்காக கூரையின் மீது வைக்கோல் கட்டுகளை போட்டார்கள். மண் ணெண்ணெய்யும் ஊற்றினார்கள். அது கொடூரமாக பற்றியெறிந்தபோது உள்ளே இருந்து குழந்தைகளும், பெண்களும், முதியவர்களும் கத்தி கூப்பாடு போடும் சத்தம் வெளியே வந்தது. அதைக்கேட்டு வெளியே இருந்த காலிக்கூட்டம் கெக்கலித்து எக்காளமிட்டுச் சிரித்தது. குழந் தைகள் பற்றியெரியும் நெருப்பில் கதறித்துடித்த போது தன் குழந்தை யை கையில் வைத்திருந்த தாய் மார்கள் பற்றியெரியும் கூரைக்கு வெளியே குழந்தையை தூக்கியெ றிந்தார்கள். தன் குழந்தையாவது பிழைத்துக் கொள்ளட்டும் என்று நினைத்து வெளியே எறிந்தார்கள். ஆனால் அந்த குழந்தையின் உடல்கள் நெருப்பை கடந்து வெளியே சென்ற ஒரு சில நொடி களிலே இரண்டு துண்டுகளாக்கப் பட்டு மீண்டும் அந்த வீட்டுக்குள்ளே வந்தன. பிஞ்சுக் குழந்தைகளை வெட்டி அந்த தீக்குள் போட்டது காட்டு மிராண்டிக் கூட்டம். மொத்த குடிசை யும் எரிந்து அழுகை ஒலி நின்று அடங்கிய பின்புதான் அந்த இடத்தைவிட்டு அந்த அயோக்கிய காட்டுமிராண்டிக் கூட்டம் கலைந்து சென்றது. காவல்துறையும் அவர்கள் பின்னே சென்றது.
தமிழகத்தின் அன்றைய தஞ்சை மாவட்டம் கீழத் தஞ்சையில் நிகழ்ந்த பண்ணையடிமைத்தனத்திற்கு எதிராக நடந்த தொடர் போராட்டத் தின் உச்சமே இந்த வெண்மணி தீவைப்பு. 1936,38 காலகட்டத்திலேயே கீழத்தஞ்சை பகுதியில் ஜமீன்தார் முறையை எதிர்க்கும் குத்தகை விவசாயிகளிடம் அதிகபட்சமான குத்தகை வாங்கினர். அந்த குத்த கையை அளப்பதற்கு அவர்கள் பெரிய மரக்காலை பயன்படுத்தினர். இவை அந்த குத்தகை விவசாயி களின் மொத்த உழைப்பையும், உற்பத்தி செய்த மொத்த நெல்லை யும் கொள்ளையடித்துச் செல்லும் நடைமுறையாக இருந்தது அதனால் அந்த சிறு குறு விவசாயிகள் ஒன்று பட்டு ஆங்காங்கே விவசாயிகள் சங்கம் என்ற பெயரிலே சில அமைப்பு களை உருவாக்கினார்கள். அந்த சங்கத்தின் பிரதான கோஷம் ஜமீன்தாரித்துவம் ஒழிக, நிலப்பிரபுத் துவம் ஒழிக, கூலி தொழிலாளிக்கு ஊதியத்தை உயர்த்திக் கொடு போன்றவையே. இதற்கு முன் முயற்சி எடுத்தவர் மணலூர் மணி யம்மை. அவருடைய வீட்டில்தான் இதற்கான அமைப்புக் கூட்டங்கள் நடந்ததாக தகவல்கள் உள்ளன. அவர் பல இடங்களில் சிறு, குறு, விவசாயிகள், குத்தகை விவசாயி களை திரட்டி ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளார். சில பகுதிகளில் மாநாடுகளையும் நடத்தியுள்ளார். தாலுகா, வட்டார அளவில் இந்த கூட்டங்கள் நடந்துள்ளன.
தோழர் ஜீவா, மணலி கந்தசாமி போன்ற செங்கொடி இயக்க தலைவர்களும் பங்கெடுத்துள்ளார் கள். ஆனால் அந்த மணியம்மை அவர்களை நிலப்பிரபுக்கள் கொன்றுவிட்டு மான் முட்டி கொம்பு கிழித்து செத்துவிட்டார் என்று கூறி விட்டனர். போலீசும் அப்படியே பதிவு செய்து வழக்கை முடித்தார் கள்.
ஆனால் கீழத் தஞ்சையில் நிலவிய பண்ணையடிமை முறையில் தலித் மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் எந்த மனித உரிமையும் இல்லாதவர்களாக, மிருகங்களை விட கேவலமாக நடத்தப்பட்டார்கள். குறிப்பாக தலித் மக்கள் சாதிய ஒடுக்குமுறை பாதிப்பின் உச்சத்தில் இருந்தார்கள் அவற்றை எதிர்த்து முதன்முதலில் குரல் கொடுத்தது செங்கொடி இயக்கம்தான். இந்தக் கொடுமைகளை தடுத்து நிறுத்திட பாதிக்கப்பட்ட மக்களையே தட்டி யெழுப்ப வேண்டுமென்று அன்று தமிழகத்தில் உருவாகியிருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை முடிவு செய்து தோழர் பி.சீனிவாசராவை அனுப்பி வைத்தது. 1942க்கு பின்பு தான் தலித் மக்கள் பண்ணையடிமை முறையை எதிர்த்து அமைப்பு ரீதியாக திரட்டப்பட்டார்கள்.
தஞ்சை தரணியில் தோழர் சீனி வாசராவ் காலெடுத்து வைத்தார். தென்பறையில் விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் செங்கொடி இயக்கத்தினால் உருவாக்கப்பட்ட விவசாயிகள் சங்கத்தின் மூலம்தான் தலித் மக்களை அணி திரட்டும் பணி துவக்கப்பட்டது. 1945லிருந்து 1952 வரையிலும் நிலப்பிரபுக்களும் பண்ணை முதலாளிகளும் இவர்களை பாதுகாத்து வந்த அன்றைய அதிகார வர்க்கமும், ஆட்சியாளர்களும் நடத்திய கொடுமைகளும் சொல்லில் அடங்கா தவை. அமைப்பு ரீதியாக பண்ணைய டிமைகளை திரட்டி போராடிய தலை வர்களை தேடி தேடிச் சென்று கொன் றார்கள். அதனால்தான் அந்த 1945-1952 வரையிலான அந்த காலத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். வெளியே தெரிந்த கொலைகள் சில. அடையாளம் காணமுடியாமலே கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட நிகழ்வுகள் பல. இந்த போராட்டங்கள் 1968 வரை தொடர்ந்தன.
அதன் உச்சகட்டமாக அறுவடை கூலி உயர்வு இயக்கம், அதையொட்டி வெளியூர் ஆட்களை கொண்டு வந்து அறுவடை செய்வதற்காக நிலப் பிரபுக்கள் எடுத்த முயற்சி, இதை எதிர்த்து செங்கொடி இயக்கம் நடத்திய போராட்டங்கள், இதன் ஒரு பகுதிதான் வெண்மணி.
வெண்மணி கூலித் தொழிலாளி களுக்கு வேலை தர மறுத்து வெளியூர் ஆட்களை கொண்டு வந்து அறு வடையை துவக்கியதை எதிர்த்ததி னால் தான் வெறிகொண்ட நிலப்பிர புத்துவ கூட்டம் கொடூரமான காட்டு மிராண்டித்தனத்தில் ஈடுபட்டு 44 பேரை உயிரோடு எரித்து சாம்ப லாக்கியது.
வெண்மணி எரிப்பை தொடர்ந்து நடந்த போராட்டங்கள் தஞ்சைத் தரணியில் அதிகரித்த காலத்தில், தமிழகம் முழுவதும் எதிரொலித்தன. இதையடுத்து அன்றைய திமுக அரசு சில நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இந்த பிரச்சனைகளை ஆய்வு செய்வதற்காகவும், அதுகுறித்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென்று ஐஏஎஸ் அதிகாரி கணபதியா பிள்ளையை தமிழக அரசு நியமித்தது. அவர்தான் கீழத் தஞ்சை விவசாய கூலித் தொழி லாளியின் வாழ்நிலை, அவர்களு டைய பிரச்சனைகள் குறித்து ஒரு விரிவான ஆய்வு செய்து தமிழக அரசுக்கு ஒரு அறிக்கையினை சமர்ப்பித்தார். ஆனால் அதற்கு முன்பே 1944லிலேயே பண்ணை யடிமை சமுதாயத்தில் அமல்படுத் தப்பட்ட சாணிப்பால் கொடுத்து சவுக்கால் அடிப்பது என்ற கொடூ ரத்தை நிறுத்தவேண்டும், அது சட்ட விரோதமானது என்ற ஒரு ஒப்பந்தம் மன்னார்குடியிலே நடந்த முத் தரப்பு பேச்சுவார்த்தையில் ஏற்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டி ருந்தது.
கணபதியா பிள்ளை ஆய்வு செய்கிற காலத்தில் ஏறத்தாழ செங்கொடி இயக்கத்தின் வலிமை மிக்க போராட்டம் பண்ணையடிமை முறையை முடிவுக்கு கொண்டு வந்திருந்தது. கணபதியாபிள்ளை கமிஷன்தான் கீழத் தஞ்சையில் விவசாய கூலித் தொழிலாளிகள் அரசு ஊழியர்களின் ஒரு கடை நிலை ஊழியர்களுக்கான உரிமை கள் கூட இல்லாதவர்களாக நடத்தப் படுகிறார்கள். இவர்களுக்கு என்று ஒரு வேலைநேரம், ஒரு நிர்ணயிக்கப்பட்ட கூலி, சட்டக்கூலி, ஆணுக்கும் பெண்ணுக்கும் சம்பளம் எவ்வளவு என்பதை அரசு தீர்மானிக்க வேண்டுமென்று சிபாரிசு செய்தது.
இன்று கீழத் தஞ்சை தொழிலாளி களோ, தலித் மக்களோ சுதந்திரமாக நடமாடக்கூடியவர்களாக, அமைப்பு ரீதியாக போராடக்கூடியவர்களாக தாங்கள் விரும்புகிற இயக்கங்களில் சேர்ந்து தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடியவர்களாக மாறியிருக்கிறார்கள்.
பொருளாதார சுதந்திரம், சமூக ஒடுக்குமுறை, வேலை போன்ற பிரச்சனைகள் பொதுவாக தேசம் முழுவதும் இருப்பதுபோல் கீழத் தஞ்சை பகுதியிலும் இருக்கிறது. ஆனால் பண்ணையடிமை முறை கொடுமை தகர்த்து நொறுக்கப்பட்டி ருக்கிறது. வெண்மணியே அதன் உச்சகட்ட தாக்குதலாக இருந்துள் ளது. அது நிகழ்ந்து 55ஆண்டுகள் உருண்டோடி விட்டன.
இன்று விவசாயத் தொழிலாளிக்கு கிராமப்புற உழைப்பாளிகளுக்கு வேலை, கூலி, சமூக ரீதியான புறக்கணிப்பு அரசின் நிதி ஒதுக்கீட்டில் கூட தலித்களுக்கான மேம்பாட்டு நிதிகள் முழுமையாக ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. செய்கின்ற நிதி ஒதுக்கீடும் அவர்களுக்கு முழுமையாகச் சென்றடையவில்லை என்ற பிரச்சனை முன்னுக்கு வந்துள்ளது.
இவைகளை இன்றைக்கு கையி லெடுக்க வேண்டிய அவசியம் கிராமப்புற உழைப்பாளிகளுக்கும், விவசாயத் தொழிலாளிகளுக்கும், தலித் மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. கிராமப்புற மக்களை அணிதிரட்டி போராட்டக் களங்களை விரிவுபடுத்து வோம்.
கட்டுரையாளர்: துணைத் தலைவர்,
அகில இந்திய விவசாயிகள்
தொழிலாளர் சங்கம்