சினந்தெழு! சிவந்தெழு!
நீரோடிய
வைகை நதியும்
தேரோடிய
சித்திரை வீதிகளும்
சிவக்குதய்யா
உழைக்கும் கரங்கள்
உயர்த்திய செங்கொடியால்...
போர்ப்பரணி பாடும்
பறையொலி தாண்டவத்தில்
திசைகளின் தசைகள் எல்லாம்
முறுக்கேறிக் கிடக்குதய்யா...
ஆண்டான், அடிமை
ஆணவவ் செருக்குகளை
உடைத்தெறிந்த
சுத்தியல் அரிவாள் சித்திரங்களை
ஊர்ச் சுவர்கள் எல்லாம் சுமக்குதய்யா...
சிலிர்த்தெழு
உழைக்கும் வர்க்கமே!
சுரண்டல் உலகத்தை
முதுகில் சுமந்ததுபோதும்...
எழு,
சினந்து சிவந்து எழு!
உன்
ரௌத்திரத்தின் நிறம்
சிவப்பாய் மாறட்டும்!
இருளின் திசைகளைக் கிழித்து
புறப்பட்டு விட்டது
மக்களை காக்க,
களத்தில்
உயிர் நீத்த
தோழர்களின்
நெருப்புக் கண்களாய்...
தியாகச்சுடர்கள்!
தேசத்தின்
பன்முகத் தன்மையை
சிதைக்கும் மத வெறியர்களின்
மனக்கோட்டையை
சிதைத்து,
சிந்து, கீழடியின்
சாதி மதமற்ற நாகரிகத்தை
நிலை நிறுத்துவோம்!
வா... வா...
நீரற்ற வைகையை
நிரப்புவோம்,
செந்தொண்டர்ப் படை கொண்டு!