articles

img

உயர்கல்வியை மடை மாற்றம் செய்ய தேசிய கல்விக் கொள்கை தீவிர முனைப்பு - பேரா.பொ.இராஜமாணிக்கம்

தேசிய கல்விக் கொள்கை 2020ஐ,  ஒன்றிய அரசு ஜூலை 2020 முதல் அமல்படுத்த தீவிரமாக முனைப்பு எடுத்து வருகிறது. குறிப்பாக கல்லூரிக் கல்வியில் அதன் திட்டங்களைச் செயல்படுத்த பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) என்ற அமைப்பைப் பயன்படுத்தி நேரடியாகக்  கல்லூரிகளுக்கும் பல்கலைக் கழகங்களுக்கும் சுற்ற றிக்கைகள்  அனுப்பி அதன் மூலம் அமல்படுத்தி வருகிறது.  தற்போது தேசியக் கல்விக் கொள்கையின் பல  பரிந்துரைகளை தனியார் பல்கலைக்கழகங்கள், சுய நிதிக் கல்லூரிகள், தன்னாட்சிக் கல்லூரிகள் அமல் படுத்தி வருகின்றன. பல தனியார் பல்கலைக்கழ கங்கள் மருத்துவம், விவசாயம், சட்டம், கல்வியியல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனக் கல்வியை வழங்கும் நிறுவனங்களாக மாறிவிட்டன. 

நான்காண்டு  பட்டப் படிப்புகளையும் துவக்கி இடை யிலேயே விலகி சர்ட்டிஃபிகேட், டிப்ளமோ, பட்டம் எனப் பெறலாம் என அறிவித்து பல துறைகளை நடத்தி வருகின்றன. தன்னாட்சிக் கல்லூரிகளிலும் இந்த முறை அமலாகி வருகிறது. தேசிய கிரெடிட் திட்டத்தையும் அமல்படுத்தி வருகின்றன. தமிழ்நாடு அரசோ, உயர்கல்வித் துறையோ, தமிழ்நாடு உயர்கல்வி மன்றமோ,பல்கலைக்கழகங்களோ இதனைக் கண்டு கொள்ளவில்லை  தற்போது நவம்பர் 18,2021 தேதியிட்ட 1-4/2021 நேரடிக் கடிதம் மூலம் கீழ்க்கண்ட திட்டங்களை அமல் படுத்த  பல்கலைக்கழகத் துணை வேந்தர்களுக்கு ஒன்றிய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தேசியக் கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கமான தரமான கல்வி மூலம் உலகளவில் அறிவு வல்லரசாக திகழ்வ தற்கு உயர்கல்வி நிறுவனங்கள் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். பல கல்வி நிறுவனங்கள் தாமா கவே முன்வந்து தேசிய கல்விக் கொள்கையினை அமல்படுத்தி அதன் நோக்கங்களை செயல்படுத்தி வருகின்றன. எனவே  தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த ஒரு சிறப்பு அமைப்பை உருவாக்கி தொடர்ந்து ஒரு கால அட்டவணையுடன் முன்னேற்றங்க ளை  கண்காணித்து வர வேண்டும் என அலுவலகக் கடிதம் அனுப்பியுள்ளது. இதில் முக்கியமான, ஆபத்தான பரிந்துரைகளைப் பார்ப்போம்:

தேசிய மதிப்பெண் வங்கி

மாணவர்களுக்குக் கிரெடிட் வழங்கும் முறையில்  தேசிய அளவில் ஒரு மதிப்பெண் வங்கி உருவாக்கி உள்ளனர். இந்த கிரெடிட் மதிப்பெண் முறை என்பது ஏற்கனவே பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் சுய தெரிவு மதிப்பெண் பெறும் முறை (சாய்ஸ் பேஸ்டு கிரெடிட் சிஸ்டம்) என்ற முறையில் அமல்படுத்தப்பட்டு வருகி றது. ஆனால் அது பெரும் தோல்வியைச் சந்தித்து  வருகின்றது. தற்போது அகில இந்திய அளவில் கிரெடிட் சேமிப்பு விநியோகம் என்பது பெரும் கேலிக்கூத்தாக அமையும். மேலும் அகில இந்திய அளவில் ஆன் லைன் மூலம் படிக்கும் படிப்புகளுக்கு அகில இந்திய கிரெடிட் கிடைக்கும். ஆன் லைன் வகுப்புக்களைப் படிப்பதற்கு பாடத் திட்டமும் அதற்குரிய கட்டணமும் பாடம் நடத்துபவரே தீர்மானித்துக் கொள்ளலாம் என்பதால்  கிராமப்புற மாணவர்களுக்கு இது பெரும் சவாலாக அமையும். மேலும்  ஸ்வயம் என்ற போர்டல் மூலம்  ஆன்லைன் கல்வி பெறுவதை  20 சதவீதத்தி லிருந்து 40%அளவிற்கு உயர்த்தலாம் என்ற பரிந்துரை  முறையான வகுப்பறைக் கல்வியை முடக்கும் முயற்சியாகும்.

சேர்தல்-விலகுதல்-சேர்தல் முறை '

பட்டப் படிப்பில்  பல முறை சேர்ந்து பல முறை விலகும் வாய்ப்பு மாணவர்களுக்குக் கொடுக்கும் கல்வி  என்பது செத்துச் செத்துப் பிழைப்போம் வா என்பது போன்றது தான். ஒரு முறை கட்டணம் செலுத்தி படித்து முடித்து வரும் முறையில் உள்ள வாய்ப்புகளை இது ஒழிக்க நினைக்கிறது. அதாவது இன்று தமிழ கத்தில் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி என்றி ருக்கும் போது அந்தக் கட்டமைப்பை இது சிதைத்து விடும். ஒவ்வொரு முறையும் சேர்ந்து விலகும் போதோ அல்லது வெவ்வேறு கல்லூரிகளில் விலகி விலகிச் சேரும் போதோ யார் கட்டணம் கட்டுவது? வெவ்வேறு படிப்புக்கும் உள்ள கட்டணங்கள் வெவ்வேறாகவும் உயர்த்தியும் அமைக்கப்படும் போது ஏழை மாணவர்களின் நிலை என்ன? விலகி விலகிச் சேர்ந்து படிப்பது என்பது உயர்கல்வியில் சுனாமி போன்று மாணவர்களின் இடை விலகல் நடைபெறும்.

தொலைதூர, ஆன்லைன்  கல்வி முறைத் தீவிரம்  

இன்னும் பத்து வருடங்களில் உயர்கல்வி சேர்க்கையை 50% உயர்த்த வேண்டும்  என மார்தட்டிக் கூறிவிட்டு இப்பொழுது அதற்குத் தேவையான உயர் கல்வி நிலையங்களை அதிகரிக்காமல் தொலை தூரக் கல்வி, ஆன்லைன் கல்வி எனப்பேசுவது ஒன்றிய அரசின் உண்மையான முகத்தைக் காட்டுகிறது. தொலை தூரக் கல்வி, ஆன்லைன் கல்வி மூலம் உயர் கல்வியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் குள்ள நரித்தனமான வேலை இது ஆகும். தேசிய கல்விக் கொள்கை தரமான கல்வியை வழங்கும், மனித வளக் குறியீட்டை அதிகரிக்கும் எனப் பேசும் இந்நாள், முன்னாள் துணைவேந்தர்கள் தான் இந்த முறையி லான உயர்கல்விச் சேர்க்கைக்குப்  பதில் சொல்ல வேண்டும்.

உயர் கல்வியை சர்வதேசமயமாக்கல் 

உயர் கல்வியை சர்வதேசமயமாக்க பல்கலைக் கழகங்களில் தனி அமைப்பை உருவாக்க வேண்டும் என்பது அந்நியப் பல்கலைக்கழகங்கள் உள்ளே நுழை வதற்குப் பச்சைக் கொடி காட்டப்படும் திட்டம் ஆகும். அந்நிய பல்கலைக் கழகங்களின் துறைகள் உள்ளே வருவதும், அதன் மூலம் உள்ளூர் துறைகள் மூடப்படு வதும் நடைபெறும். அந்நிய நாட்டுப் பேராசிரியர்கள் மூலம் வகுப்புகள் நடைபெறும், நம் நாட்டுப் பேராசிரி யர்கள் ஓரம் கட்டப்படுவர், அந்நிய நாட்டுப் பல்கலைக் கழகப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கும் அமைப்பாக உயர் கல்வி நிறுவனங்கள் மாறிவிடும். உயர் கல்வி நிலையங்களை சர்வதேசமயமாக்குதல் என்பது  உலக வர்த்தக நிறுவனத்தின் கட்டளை ஆகும். இதை ஒன்றிய அரசு அடி பணிந்து சாசனமாக நமக்குத் தருகிறது.

நிறுவனங்கள் தர மேம்பாடு

தர மேம்பாடு குறித்த வழிகாட்டலில் ஏன் இத்தனை வகையான சமஸ்கிருத வார்த்தைகள்? உயர் கல்வி நிறுவனங்கள் தாங்களாகவே தரம் உயர்த்தும் வழி காட்டுதலில் ஆசிரியர், மாணவர்களைத் தயார்ப்படுத்து தல் என்பது காலங்காலமாக எல்லா உயர் கல்வி நிலையங்களிலும் நடந்து கொண்டு தான் இருக்கின் றன. புதிதாகச் சேரும் ஆசிரியர்களுக்கு பல்கலைக் கழகங்களிலும்  மாணவர்களுக்கு கல்லூரிகளிலும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. ஒரு காலத்தில் இலவசமாக இது நடந்து கொண்டிருந்தன. தற்போது இதற்கென கட்டணம் கட்டும் நிலைக்குச் சென்றுள் ளது  தற்போதைய வழிகாட்டுதல் என்பது தர மேம் பாட்டுப் புள்ளிக்களுக்காக  என்பதால் இது கட்டண உயர்வுக்கு வழி வகுக்கும். 

சேவை மனப்பான்மை 

மாணவர்களுக்கு சேவை மனப்பான்மையை தேசிய சேவை திட்டம் மூலம் உருவாக்கி வந்தனர். தற்போது அது நிதிப் பற்றாக்குறையால் முடங்கியுள்ளது.ஆனால் இதை மாணவர்களுக்கு வழங்கவேண்டும் எனப் பரிந்துரைக்கிறது.

அனைத்தும் நிதி சார்ந்தது 

அடிப்படைக் கட்டமைப்பு உட்பட  சுயமான தர உயர்வு வழிகாட்டும் திட்டங்கள் யாவும் நிதி சார்ந்த செயல்பாடுகளாகும். இதனைப் பயன்படுத்தி சுய நிதிக் கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் கொள்ளை அடிக்கவும் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறு வனங்கள் பின்தங்கி தரந்தாழ்ந்து விட்டன என மதிப்பிடு செய்வதற்கு மட்டுமே உதவி செய்யும்.

மொத்தத்தில்  உயர்கல்வி கொடுப்பதில் இருந்து அரசு விலகிக் கொள்வதற்கும் முழுக்க முழுக்க வணிக மயத்திற்கும்,  சுயநிதிக் கல்லூரிகள் கொடி கட்டிப் பறப்ப தற்கும், பல்கலைக்கழக மானியக்குழுவின் பரிந்துரை ஆவன செய்கிறது. எனவே தமிழ்நாடு அரசு தேசியக் கல்விக்கொள்கையை நிராகரித்து உள்ள சூழலில்,  பல் கலைக்கழகத் துணைவேந்தர்கள் இதை அமல் படுத்தக்கூடாது எனவும் சுயநிதிக் கல்லூரிகளும், தன்னாட்சிக் கல்லூரிகளும் தனியார் பல்கலைக் கழகங்களும் அமல்படுத்தும் சூழலில் தமிழ்நாடு அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.

கட்டுரையாளர் : பொதுச் செயலர்,  அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு