திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை பகுதியில் உள்ள அரசவெளி கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பலர் உடல் நலக்குறைவு பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
இதைத்தொடர்ந்து ஜூன் 26 அந்தப் பள்ளிக்குச் செய்தியாளர்கள் சென்றபோது அந்த பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்கள் யாரும் இல்லை. பள்ளி வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தி வைக்கப்பட் டிருந்தது.
விசாரித்தபோது கடந்த ஜூன் 21, 22 ஆம் தேதிகளில் மாணவர்கள் சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட தாகவும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, மற்ற மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
சிகிச்சை பெற்று வரும் மாண வர்கள் உடல்நலம் குறித்து அறிய ஜமுனாமரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றபோது, அங்கு பணியில் இருந்த மருத்துவர் நந்தினி சுகாதாரத்துறை உதவி இயக்குநர் அனுமதி பெற்று வந்தால் மட்டுமே சிகிச்சை பெறும் மாணவர் களை பார்க்க முடியும் என்று கூறி அனுமதிக்க மறுத்துவிட்டார். அப்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் அந்த பள்ளி மாணவி ஆனந்தி யுடன் மருத்துவமனையில் இருந்த அவரது தந்தை குப்புசாமியிடம் கேட்ட போது,
கடந்த புதன்கிழமை (ஜூன் 19) பள்ளியில் அசைவ உணவு சாப்பிட்ட மாணவர்கள் சிலருக்கு வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டதாகவும், அதைத்தொடர்ந்து தினசரி பாதிப்பு அதிகரித்ததால் தனது மகளுக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
ஜவ்வாதுமலை தாலுகா அரச வெளி கிராமத்தில் அரசு பழங்குடியி னர் நல உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 1984 ஆம் ஆண்டு ஆரம்பப் பள்ளியாக துவக்கப்பட்ட இந்த பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர் சேர்க்கை குறைந்தது. அதையடுத்து, சில தன்னார்வலர் களும், ஆசிரியர்களும் மாணவர் களை தேடி பள்ளியில் சேர்த்தனர். இதையடுத்து 2015 ஆம் ஆண்டில் நடுநிலைப் பள்ளியாகவும், 2019ஆம் ஆண்டில் உயர்நிலைப் பள்ளி யாகவும் தரம் உயர்த்தப்பட்டது. அப்போதைய மாவட்ட ஆட்சியர் க.சு.கந்தசாமி தலையீட்டின் பேரில், பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் பல்வேறு கட்டமைப்புகள் உருவாக் கப்பட்டது.
2019 ஆம் ஆண்டு பள்ளி கட்டிடத் திற்காக நிலம் ஒதுக்கப்பட்டது. முதன்மை கல்வி அலுவலர் பெயரில் நிலம் பதிவு செய்யப்பட்டது. அவ்வாறு ஒதுக்கப்பட்ட நிலத்தில் ஒரு பகுதியை மட்டுமே பள்ளி நிர்வா கம் பயன்படுத்தி வருகிறது. தற்போது அந்த பள்ளி கட்டிடத்தில் சுமார் 100 மாணவர்கள் மட்டுமே தங்கி பயில இட வசதி உள்ளது. ஆனால் 300 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் அங்கு தங்கி பயின்று வருகின்றனர். மாணவர் களுக்கும், மாணவிகளுக்கும் தனித்தனியாக விடுதிகள் இல்லை. ஒரே வளாகத்தில் மாணவர்களும், மாணவிகளும் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். போதுமான இடவசதி, கழிவறை வசதிகள் இல்லாததால் சுகா தாரக் குறைபாடு ஏற்படுவதாக மாண வர்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்ற னர். பெண்கள் தங்கும் பகுதிக்கு தனி யாக பாதுகாவலர் இல்லை. மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக இல்லை என மாணவர்களும் பெற்றோர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், இந்த பள்ளிகளை பாதுகாக்க திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் ஆட்சியர் ரிஷப் மற்றும் பழங்குடியினர் நல இயக்குநர் அண்ணாதுரை ஆகியோர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவ தாக, அப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் பள்ளியின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் மாணவர்கள் பல காலங்களாக அவதிப்பட்டு வருகின்றனர். 20 மாணவர்கள் தங்கி பயிலக்கூடிய ஒரு வகுப்பறையில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் இட நெருக்கடியில் தங்கி பயில்கின்றனர். மாணவர் களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மோசமாக உள்ளது. பல நாட்கள் வேகாத சாதம், பழைய புளியோதரை காலாவதியான இறைச்சி என மாணவர்களுக்கு வழங்கப்படுவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இத்தகைய குறைபாடுகள் இந்த பள்ளியில் மட்டுமல்லாது, ஜவ்வாது மலைப்பகுதியில் இயங்கி வரும், நம்மியம்பட்டு, கோயிலாண்டூர், ஆட்டியனூர், பட்டறை காடு உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் உண்டு உறைவிட பள்ளிகளிலும் அடிப்படை வசதிகள் போதுமான அளவு இல்லை. பெண்களுக்கு தனி யாக கழிவறை இல்லை என்ற குற்றச் சாட்டு மலைப்பகுதி மக்களிடம் எழுந்துள்ளது. இந்த அரச வெளி பள்ளி யில் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் உள்ள பல்வேறு ஊர்களை சேர்ந்த மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். உள்ளூர் மலை கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் சிலரும் (டேஸ்காலராக) வீட்டில் தங்கி இந்த பள்ளியில் பயின்று வருகின்றனர். மலை கிராமங் களில் போதிய கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம் இல்லாததால் கள்ளச்சாராயம், செம்மரம் வெட்டு தல் போன்ற செயல்களில் மலை கிராம மக்கள் ஈடுபட்டு வருவதாக கடந்த சில ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. இத்தகைய மோசமான நிலை களையப்பட வேண்டுமானால், மலை கிராம இளம் தலைமுறை யினருக்கு கல்வி அவசியமாகிறது.
கல்வி என்பது, கல்வி கற்கும் மாணவர்களின் தலைமுறைகளையும் கடந்து சமூக வாழ்க்கையை சீர்படுத்த உதவியாக இருக்கும் என்ற நோக்கில், அரசு மலை கிராம உண்டு உறைவிட பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு களை மேம்படுத்த வேண்டும், மாணவர்கள் ஆரோக்கியமாக கல்வி பயில தரமான உணவு வழங்கப்பட வேண்டும் என்பதே மலை கிராம மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கை யாக எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர், மற்றும் பழங்குடியினர் ஆன்றோர் மன்ற உறுப்பினர் இரா. சரவணன் விடுத்துள்ள ஒரு செய்தி குறிப்பில், ஜவ்வாது மலை அரச வெளி உண்டு உறைவிட பள்ளியில் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவி களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும், பாதிப்புக்கு காரணமான, சமையலர், வார்டன், பள்ளிக்கு மாமிசம் வழங்கிய கடைக்காரர் ஆகியோர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், பள்ளி விடுதியை மேம்படுத்த, தமிழக அரசு உரிய நிதி ஒதுக்க வேண்டும், கழிவறைகளை சீரமைக்க வேண்டும், கல்வி வளாகத்தில் கூடு தல் கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித் துள்ளார்.
- ஜெ.எஸ்.கண்ணன்