லில்லி பனிக்கொக்கம்மா தன் குஞ்சான லல்லியிடம், “ இன்னும் கொஞ்சம் நாட்களில் நாம் நீண்ட தூரம் வலசை போக வேண்டும் நீ நன்றாகப் பயிற்சி எடுத்துக்கொள் லல்லி....” என்று சொல்லி முடிக்கும் முன்னால், “ வலசைன்னா என்ன? “ என்று லல்லிக் குஞ்சு கேட்டது.
“ நாம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குப் போய் கொஞ்சநாட்கள் இருந்து விட்டு திரும்பி வருகிறோம்.. அதைத் தான் வலசை என்று சொல்கி றோம்..” என்று லில்லி பனிக்கொக்கம்மா விளக்கம் சொல்லியது. “ எவ்வளவுதூரம் நாம் பறந்து வருகிறோம்?
“ “ உன்னுடைய கேள்விகளுக்கு முடிவே கிடையாதா? கிட்டத்தட்ட பத்தாயி ரம் கிலோ மீட்டர்..” “ ஏயப்பா அவ்வளவு தூரமா? இங்கேயே இருந்துட்டா என்ன? “ “ அட என் லல்லிச்செல்லமே.. பூமியில் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு காலத் தில் ஒவ்வொரு விதமான தட்பவெப்பம் இருக்கும்டா..
எல்லாக்காலத்திலும் நம்மால் இருக்க முடியாது.. உணவு கிடைக்காது.. தண்ணீர் இருக்காது.. ஏன் குடும்பம் நடத்தவோ, முட்டையிட்டு குஞ்சுகள் பொரிக்கவோ முடியாது…” அதைக்கேட்ட லல்லி உடம்பைச் சிலிர்த்துக் கொண்டது. அம்மாவைப் பார்த்து, “அவ்வளவுதூரம் என்னால் பறக்க முடியுமா? “ “ ஏன் முடியாது..
நானும் உன்னை மாதிரி என்னுடைய அம்மா கூட பறந்து .. போனேன்..” “எனக்குப் பயமா இருக்கும்மா..” “பயந்தால் வாழமுடியாது.. லல்லி.. நீ இனிமே ரொம்பநேரம் பறக்கும் பயிற்சி எடுக்கணும்..” தினமும் லில்லி பனிக்கொக்கம்மா லல்லியையும் அழைத்துக் கொண்டு பறந்தது. காற்று வீசும்போது அதை எப்படி எதிர்கொள்வது?..
காற்றை எதிர்த்துப் பறக்கும் போது என்ன செய்யவேண்டும்?. காற்றுடன் பறக்கும் போது என்ன செய்ய வேண்டும்?” என்று ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொடுத்தது. ஆனாலும் லல்லிக்குப் பயம் போக வில்லை. அன்று அதிகாலை பனிக்கொக்குக் கூட்டம் வலசைக்குத் தயாரானது. கூட்டத் தின் தலைவர் முன்னால் போகப் பின்னாலே எல்லாப்பறவைகளும் பறந்தன.
லல்லியும் பறந்தது. பறக்கப் பறக்க பறத்தலின் ஆனந்தம் லல்லிக்குத் தெரிந்தது. உயரே உயரே பறந்தது லல்லி. இப் போது அதன் மூளையில் பறக்கும் திசை ஓவியம் போலத் தெரிந்தது. இதுவரை இந்தத் திசையில் பறந்ததில்லை. ஆனால் காலம் காலமாகப் பறந்ததைப் போல ஞாப கங்கள் பொங்கி வந்தன. அருகில் பறந்த மற்ற பறவைகளிடம், ” நான் சைபீரியப் பனிக்கொக்கு..” என்று கம்பீரமாக முழங்கிக் கொண்டே பறந்தது.
தேன்சிட்டு
புதுச்சேரி அன்பழகன்
தேன்சிட்டே! தேன்சிட்டே!
காற்றில் பறக்கும் தேன் சிட்டே!
காற்றில் நிலையாய் நிற்கின்ற
காரணம் என்ன தேன்சிட்டே!
வண்டைப் போல ரீங்கரிக்கும்
வலிமை கொண்ட தேன்சிட்டே
மேலே மேலே நிலையாக
மேவுவது எப்படி தேன்சிட்டே!
இதயம் துடிக்கும் வேகத்தில்
சிறகை நானும் அடிப்பதால்
பரவும் காற்றில் நிற்கின்றேன்
பார்க்க அழகாய் தெரிகின்றேன்!
விமானத்தின் எந்திரம் போல
எங்கள் இதயம் இருப்பதால்
வானில் நன்றாய் பறக்கின்றேன்
எங்கும் பாடித் திரிகின்றேன்!
என்னைப் போல் நீங்களும்
இன்பமாய் இருந்திடவே
எதையும் தாங்கும் இதயத்தை
வலிமையாக்கி வாழுங்கள்!
புகைவண்டி (குழந்தைப் பாடல்)
சிக்கு புக்கு சிக்கு புக்கு புகைவண்டி
சீமைக்காரன் கண்ட புகை வண்டி
விரைவாய் போகும் புகைவண்டி
விந்தைகள் நிறைந்த புகைவண்டி
(சிக்குபுக்கு)
தண்டவாளம் தன்னில் ஓடிடுமே
பல சக்கரம் கொண்டு இயங்கிடுமே
பலபெட்டிகள் கோர்த்து வந்திடுமே
ஒற்றுமை உணர்வுடன் திகழ்ந்திடுமே
(சிக்குபுக்கு)
நிலக்கரியாலும் இயங்கிடுமே
நீராவியாலும் இயங்கிடுமே
கூக்கூவெனவே கூவிடுமே
குபுகுபுவெனவே புகைந்திடுமே
(சிக்குபுக்கு)
மின்சாரம் கொண்டும் இயங்கிடுமே
மெட்ரோ என்றும் விரைந்திடுமே
உள்ளூரைச் சுற்றியும் வந்திடுமே
ஊரூராய் சுற்றியும் அலைந்திடுமே
(சிக்குபுக்கு)
பச்சைக் கொடி கண்டால் பாய்ந்தோடுமே
சிகப்புக் கொடி கண்டால் நின்றிடுமே
மஞ்சள் கொடிகண்டால் புன்னகைக்குமே
எங்களைச் சுமக்கும் புகைவண்டி
(சிக்குபுக்கு)
உண்மை பேசுவோம்!
அருப்புக்கோட்டை செல்வம்
உண்மையைப் பேசுவோம்
உணர்ந்துமே பேசுவோம்
உணராத பேர்களை
உண்மையில் ஏசுவோம்!
அண்மையில் இருப்பதால்
அதலைக்காய் இனிக்குமா?
அருகாமை என்பதால்
ஆப்பிள் கசந்து போகுமா?
பாகு - அற்றகாய் அதனை
பாகற்காய் என்கிறோம்
வாழவைக்கும் மரம் அதனால்
வாழைமரம் என்றனர்!
எண்ணுகின்ற செயலிலே
ஏற்றம் வரும் என்பதால்
உண்ணுகின்ற உணவில் கூட
உண்மை சொல்லித் தந்தனர்!
உண்மையால் உயரலாம்
பொய்மையால் தாழ்ச்சியே
திண்ணிய மனத்துடன்
திடமுடன் வாழலாம்!